Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

Monday, May 20, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா

-இரா.வினோத்-


இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

கலைச்சங்மம்


Thursday, May 02, 2013

பு.ஜ.மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் யாழ்ப்பாணம் 2013

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.

Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான். 

Sunday, April 21, 2013

இளையதலைமுறைக்கு புதிய வாசல்






ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் நினைவாக


-இராகவன்-
காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தேவதாசன் ‘பாரதி’ திரைப்படம் குறித்து ஈழம் தமிழகம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதி - திரைப்பட விமர்சனத் திரட்டு’ என்ற நூலை சலன சித்திர வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அந்நூல் குறித்துக் காலச்சுவடில் கண்ணன் ‘சலனபாரதி’ என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தார். அக்குறிப்பு வெளியான இதழையே தேவதாசன் சலன சித்திரம் அலுவலகத்தில் பார்வைக்காக வைத்திருந்தார். அவ்விதழை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது வடிவமைப்பும் உள்ளடக்கமும் அதுவரை நான் பார்த்திருந்த இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் அவ்விதழை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கத் தேவதாசன் அனுமதிக்க வில்லை.2002 பிற்பகுதியில் பருத்தித்துறைக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் உமாகாந்தன் ஒருநாள் தமது அலுவலகத்திற்கு காணியுறுதி அலுவலாக ஒருவர் வந்ததாகவும் அவர் பெயர் குலசிங்கம் என்றும் அவர் தீவிர இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகத் தோன்றுவதாகவும் விரும்பினால் புலோலியிலுள்ள தனது வீட்டிற்கு வரும்படி சொன்னதாகவும் என்னிடம் கூறினார். ஒருநாள் சனிக் கிழமை நானும் உமாகாந்தனும் புலோலியிலுள்ள குலசிங்கம் வீட்டிற்குப் போனோம். வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். யாழ் மாநகரசபை நூலகத்தில் கூட இல்லாத நூல்கள் எல்லாம் அந்த நூலகத்தில் இருந்ததைக் கண்டு பிரமிப்பிலாழ்ந்தோம். அங்கே காலச்சுவடு இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அவ்விதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் குலசிங்கம் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் கையில் பணப்புழக்கமுமில்லை. ஆனால் உமாகாந்தனின் நிலமை வேறுவிதமானது. அதனால் 500ரூபா கொடுத்து 50 காலச்சுவடு இதழ்களைக் குலசிங்கத்திடம் வாங்கினார். காலச்சுவடு இதழொன்றில் குலசிங்கத்தின் நேர்காணலும் வெளியாகியிருந்தது. இவ்விதழை குலசிங்கம் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் வாங்கிய 50 இதழ்களையும் ஆளுக்கு 25 எனப் பிரித்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளத் தீர்மானித்தோம்.

Thursday, April 18, 2013

சீனா புதிய சவால்கள்- புதிய தலைவர்கள்


-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.

Sunday, April 07, 2013

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40 அமர்வு இரன்டு 7.04.2013

Wednesday, April 03, 2013

மெளனக்கடலில் ஒரு கல் -ஆனந்தவிகடன்


-டி.எல்.சஞ்சீவிகுமார்-


ஒரு படைப்பாளியின் பார்வையில்... ஒரு சாமானியனின் பார்வையில்... ஓர் இயலாமைவாதியின் பார்வையில்... ஈழ மக்களின் வலியை, தனுஷ்கோடி மீனவனின் துயரத்தை ஆவணப்பட மாக்கி இருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேலை. 



ஈழப் போரின் இறுதியில் உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பி வரும் ஈழத் தமிழர்கள் ஒரு பக்கம், இந்தியாவிலேயே இருந்தும்கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத மீனவத் தமிழர்கள் இன்னொரு பக்கம் என இரு நிலப்பரப்பு மக்களின் வாழ்வும் வலி யும்தான் கதை. ஈழத் தமிழனின் ரத்தமும் தனுஷ் கோடி மீனவனின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நீலம் மறைந்து நிறம் மாறும் வங்காள விரிகுடா தான்... 'செங்கடல்’!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு, சென்சார் பிரச்னை என பல பிரச்னைகளைத் தாண்டி மேல் முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால், 'பொது இடங்களில் திரையிடலாம்’ என்று அனுமதி வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

Monday, April 01, 2013

BBC சுசரித்த கம்லத் அவர்கள் மரணம்


இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் அவர்களின் மரணம் இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு என்று பலரும் கூறியுள்ளனர்.
சனிக்கிழமையன்று காலமான அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஆங்கில-சிங்கள மொழி அகராதியை மேம்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
மார்க்ஸிய இலக்கிய திறனாய்வை சிங்கள் மொழியில் அறிமுகம் செய்தவர் இவரே என்று கூறுகிறார் அவருடன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்ததால், அவர் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பையும் சந்தித்திருந்ததாகவும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கூறியுள்ளார்.
சுசரித்த அவர்களால், பிபிசி சிங்கள சேவையில் 15 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்ட ''ஹீ மினி ஆர'' என்னும் சிங்கள பாடல் வரிகளின் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக திகழ்ந்த ஒன்றாகும்.

சாதியமைப்பு பற்றிஓர்ஆவணப்படம்

-மாதினி -விக்னேஸ்வரன்- 

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பு பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவ்வேறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பல்கலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது


 Religion is for man Man is not for religion this documentary film is based on caste system & Hinduism.

லண்டன் இலக்கியச்சந்திப்பு40


Sunday, March 31, 2013

தோழர் சீனிவாசனுக்கு எம் அஞ்சலி.



தோழர் சீனிவாசன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று 5.5.2012, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61.

எழுபது களின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.
பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காமை, அர்ப்பணிப்பு உணர்வு, உழைப்பு ஆகியவை அவர் வெளிப்படுத்திய சிறந்த பண்புகள். 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவரிடமிருந்த ஒரு இளைஞனுக்குரிய சுறுசுறுப்புடனும், உற்சாகமும் எள்ளளவும் குன்றவில்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் தான், அவரை கணையப் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இது ஆட்கொல்லி நோய் என்று மருத்துவர்கள் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட பின்னரும், கடும் வலியால் வேதனைப்படும் நிலையிலும் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிதல், நமது பத்திரிகைகளைப் படித்தல், தன்னை சந்திக்க வருகின்ற தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடுதல் என உறுதியையைம் உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தி வந்தார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

அவரது உடல் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலை 8 மணிக்கு புறப்படும்.
தொடர்புக்கு: செல்பேசி: 99411 75876


தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

Saturday, March 30, 2013

புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இறப்பெய்தினார்


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர தோழர் இ.கா சூடாமணி இயற்கை எய்தினார் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்பவுத்தகாங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும்இருந்து போராட்ட தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமேந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் புதிய பூமி புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஜம்பத்தைந்து வருட கால அரசியல் பணியில் பல போராட்டங்களில் பங்கு பற்றி முன்னெடுத்த முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்ட் போராளியுமாவார் 29.03.2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார் அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01.04.2013 புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கடசியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம்பெற்று பூந் தோட்டம் மயானத்தில் புகளுடல் தகனம் செய்யப்படும்.

Sunday, March 24, 2013

பரதேசி-திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா- 

 நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை ‘பரதேசி’. பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத் தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாய கன்(அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட் டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக்க நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் தொடர்ந்து கொள்ள... கொத்து கொத்தாக மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் ‘நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாக வேதிகா வும் வந்துசேர ‘ஓ’வென வானம் பிளக்கும்படி ‘இந்த நரகுழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது. இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.

Thursday, March 14, 2013

சசிபாரதி என்கிற அற்புத மனிதன்.


வாழ்வது   அர்த்தமுள்ளதாய்  வாழ்தல்  வேண்டும். குறைந்த  பட்சம்  மனிதனாய் வாழவேண்டும். அப்படி  வாழ்கின்றவர்கள்  குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே  கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.
புறூப் ரீடராக வீரகேசரி,ஈழநாடு ஆகியவற்றில் கடமை ஆற்றியவர். இ.நாகராஜன், பேராசிரியர்.சு.வித்தியானந்தன் போன்றோரிடம் மதிப்பு வைத்திருந்தவர். இவரின் படைப்புக்கள் யாழ்/ஈழநாடு,விவேகி, ஐக்கியதீபம், வீரகேசரி, சிரித்திரன், மல்லிகை போன்ற ஊடகங்களில் வெளி வந்து பலரின் கவனிப்புக்குமுள்ளானார். சிறப்பான கதை சொல்லும் பாங்கு அவருக்கே உரித்தானது. ஈழநாட்டில் கடமை புரிந்த போது சக நண்பர்களுடனும் அனபாக இருந்ததை அடிக்கடி சொல்வார். நாட்டின் அமைதியின்மை காரணமாக திருச்சியில் வாழ்ந்தாலும் நினைவுகள் ஊரின் நினைவுகளுடனேயே வாழ்ந்தார் என்பது அவருடன் பேசுகையில் சொல்வார். அதிகமாக எழுதாவிட்டாலும் அர்த்தமுள்ள எழுத்துக்களையே தந்திருக்கிறார். இவரின் கதைகளை கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் சங்கம் ஊடாக 1986 இல்வெளி வந்தது. அசுர பசி தொடங்கி கலக்கம் கதைவரை தொகுக்கப்பட்ட அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுதி  சசிபாரதி கதைகள் எனும் தொகுப்பாக 1986 இல் வெளி வந்து பலரின் பாராட்டையும் பெற்றன. பேராசிரியர் சு.வித்தியானந்தன் கூட சிறப்பாக பாராட்டியிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் கூட- லண்டனில் வாழும் ஈழத்து எழுத்தாளர்  உதயணன் அவர்களின் முயற்சியால் அவருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பலரையும் நெசிக்கின்ற ஒருவரை பலரும் கண்டு கொள்லாமல் இருந்தது அவருக்கும் வருத்தம் இருந்தது. இனிய நந்தவனம் சஞ்சிகை சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தது.

Friday, March 08, 2013

எங்கள் தோழர் எம்மில் வாழ்வார் என்றும்.



எங்கள் காலத்து
நாயகனே......
ஏகாதிபத்திய கதவுகளை
இடித்து..
புரட்சிப் புயலாய் பூத்த
செம்மலரே.
சோசலிசத்தின் நம்பிக்கையாய்
புன்னகையாய் நீ.......
உன் வழி தொடரும்
சிவந்து விடியும் இவுலகம்
தோழனே சென்று வா....

Wednesday, February 27, 2013

என்றும் எதற்கும் விலைபோகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம்


- கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)
008சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .
கனடாவிற்கு புலம்பெயர்ந்த தோழர் சண் அவர்கள் ,தானும் தன்பாடும் என்றிருக்காமல் தன்னலமற்ற தனது சமூக அரசியல் செயற்பாடுகளை  பற்றுறுதியுடன் தொடர்ந்தார்  .இவ்வகையில் ரொறன்ரோ தேடக அமைப்பு  தமிழ் சமூகத்தில் ஜனநாயகம், சமத்துவம், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் பன்முகத்தன்மை போன்ற நோக்கங்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்  தோழர் சண் அவர்கள் மிகுந்த அர்ப்பணத்துடன்     அவ்வமைப்பில் செயற்பட்டார் . கனேடிய  தமிழ் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கான இடைவெளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார் . சகல விதமான சமூக அநீதிகளுக்கெதிராக தர்மாவேசத்துடன் போராடிய சண்  சில சமயங்களில் தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி இருந்தது . இப்படிப்பட்ட தாக்குதல்களை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் எவ்வித குரோதமோ, சலனமோ, பயமோ இன்றி தனது பணியை தொடர்ந்தார் .

Sunday, February 24, 2013

அன்பும் மதிப்பும் மிக்க தோழர் சண் அண்ணா அவர்கள் காலமானார்

இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினரான தோழர் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 22-02-2013 இரவு 10:30 மணியளவில் காலமானர் என்ற தகவலை உங்கள் அனைவரோடும் தேடகம் பகிர்ந்து கொள்கிறது. தோழர் சண்முகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி இன்று ஞாயிறு 24-02-12013 நடக்கவிருந்த தோழர் சண்முகதாசன் 20வது ஆண்டு நினைவும் நூல் வெளியீடும் பின்போடப்பட்டுள்ளது. Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335 http://www.trcto.org/

Friday, February 08, 2013

காலம் சஞ்சிகை லண்டனில் அறிமுகம்


“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும் செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
“காலம்” சஞ்சிகை லண்டனில் அறிமுகமும் கலந்துரையாடலும்.

09.02.2013 யன்று மாலை 3.30 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காமில் “காலம்” சஞ்சிகை 40வது இதழ் அறிமுகமும் கலந்துரையாடலும்  செய்யப்படுகிறது. “விம்பம்” ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Sunday, February 03, 2013

புகைப்படம் + கவிதை = புதிய அனுபவம்


 -ப்பிரஸ்த்தன்-
14, 15 நவம்பர் 1986ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமயந்தியின் புகப்படக் கண்காட்சி பற்றி 07.12.1986ம் ஆண்டு வெளியான ஈழமுரசு பத்திரிகையில்  ப்பிரஸ்த்தன் என்ற பெயரில் நிலாந்தன் எழுதிய விம்ர்சனம். ஒரு மீள் நினைத்தல்.

வெறுப்பு வளர்கிறது.
தோலுக்கு மேல் தோலொடு
ஒவ்வொரு அடி விழும் போதும்
தோல் மேல் தோலோடு
வெறுப்பு வளர்ந்து வருகிறது.
-பாப்லோ நெரூடா-

இந்த வரிகளினூடாக தமயந்தி எங்களிடம் சொல்ல முயலும் விசயம் என்ன...?
கரடு முரடான, முட்கள் மலிந்த எம்முடைய நாட்கள், வெறுமனே வெடிச் சத்தங்களுக்கும், வெற்று ரவைகளுக்கும் நடுவே நகர்ந்து கொண்டிருப்பவை மட்டும்தானா? இல்லை துயரங்களை மாற்றி எழுத நினைத்து, தூக்கிய துவக்குகளும் கழுத்தைத் திருகும் புதிய துயரங்களாய் மாறிய நிலைமை! இது தமயந்திக்கும் தெரிகிறது.

கடற்கரை வரையும் நடந்து பிறகு அலைகளுக்கிடையில் "காணாமல்" போய்விட்ட காலடித் தடங்களினூடாக- எமது போராட்டங்களுக்குள்ளேயே போராடி வெல்லப்பட வேண்டிய ஏதோ ஒன்றைப் பற்றி (மீண்டும் அவனைக் காணவில்லை என்று சொல்லி) எங்களையும் கவலைப்படச் செய்கிறார். அவரைப் பொறுத்தவரை எம்முடைய நாட்கள் அப்படித்தான் இருக்கின்றன.

Sunday, January 13, 2013

மத்திய கிழக்குநாடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களின் அவலம்


-உமா-(ஜேர்மனி) 


குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும் , ஒன்று இவரது காலிலும் ஏற்றப்பட்டிருந்தன. இவர் சென்ற ஆண்டு டிசம்பரில்  சவுதி அரேபியாவிற்கச் சென்றதாகவும், ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் மீண்டும் சென்ற கிழமை நாடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.




11.12.2010 அன்று பேர்லினில் நடைபெற்ற 29வது பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை, சில புதிய தகவல்களை உள்ளடக்கி இங்கே பதிவாகிறது.

Sunday, December 16, 2012

தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் மணிமேகலையுடன்-நேர்காணல்

-ஜெயச்சந்திரன் ஹஸ்மி-

தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து....
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?

தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.

Friday, December 07, 2012

உடுப்பிட்டிமகளிர் கல்லூரியும் தீட்டும்

-வி.அப்பையா-
இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.
மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.
மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட "விதிமுறைகளை£" மீறி "அதிகாரம்" படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் "நிர்வாக செல்வாக்கை" புரிந்து கொள்ள இயலும். இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள், உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

Tuesday, November 27, 2012

கே.ஏ.சுப்பிரமணியம் சில நினைவுப் பதிவுகள்


- லெனின் மதிவானம் -
 தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசுஇ ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு இசெம்மைப்படுத்தப்பட்ட  'தாயகம்''இசெம்பதாகை'இ புதியபூமி' போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் இசில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர் த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.    கூடவே  தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும்  'விடை பெறுகிறேன்' கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் 'அரிவாளும் இ சம்மட்டியும்' தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமானஅந்தச் சிறிய  'சத்தியமனை'  கதவுகள் அற்று 'அடையா நெடுங்கதவும்இ அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் ' என்று  சொல்லி திறந்தே இருந்திருகிறது.

Saturday, November 03, 2012

அன்புள்ள சின்மயிக்கு

 -ஞாநி-
அன்புள்ள சின்மயிக்கு வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.
அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில்

Friday, November 02, 2012

நூல் அறிமுகம்

Præsentation af bogen
இலங்கை அரசியல் வரலாறு - இழப்புக்களும் பதிவுகளும்

Tid:
Lørdag, den 3. november 2012, kl. 15:00

Sted:
Overlundhallen
Toftegårdsvej 8
8800 Viborg
[Vedlagt er et kort, som viser placeringen]


Vært:
Selvakumar Thuraisingam

Programmet for dagen:
  • Velkomst
  • Anmeldelser:
    • Loganadan Chellathamby
    • Rajagopalan Sinnathambi
    • Sathyadas Thavarasa
    • Sri Kathirgamanathan Veeravagu
  • Svar fra forfatteren
  • Takketale
Programmet vil desuden indeholde lykønskninger.

Aftenen afsluttes med aftensmad.

Friday, October 19, 2012

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

தோழர் சண்முகதாசன் அவர்களின்
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு

காலம் - 20th October 2012 , 3.00 P.M

இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU

 தலைமை – தோழர் வேலு அவர்கள்


மேலதிக விபரங்கட்கு :தோழர் பாலன் - 00447753465573
tholar2003@hotmail.com

----------------------------------------------------------------------

மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்

Thursday, October 18, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

-ந.இரவீந்திரன்-
பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.

Thursday, October 04, 2012

Why Socialism?..........

Why Socialism?
(Albert Einstein)
Translated By: Sivalingam M.

சோசலிஷம் எதற்காக?
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
தமிழாக்கம்: சிவலிங்கம்.மு

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

Sunday, September 30, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்

ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு 

-கார்த்திகேசு  சிவத்தம்பி -

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

Saturday, September 29, 2012

இப்பெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான் ?

Aadhavan Dheetchanya, one of the astonishing writers for reformative thoughts in Tamil, has composed this thoughtful song sung by Vaikarai Govindan troup. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது! பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் வி படம் பிடித்துக் காட்டுகின்றன! An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Saturday, September 22, 2012

டேனிஸ் தலைவர்கள்… தமிழ் தலைவர்கள் இணைந்து நடாத்தும் வெற்றிப் பிரகடனம்..



டென்மார்க் மண்ணில் நின்று கடந்த 25 வருடங்களாக கலைப்பணியாற்றி வரும் அத்தனை கலைஞர்களும் பாராட்டப்படும் பெருவிழா.
அனைத்துக் கலைஞர்களும், படைப்பாளிகளும், சமுதாய சிற்பிகளும் மக்களால் கௌரவிக்கப்படும் பொன்னாள்.
ஒருவர் வெள்ளிவிழா கொண்டாடினால் அது அவருக்கு பெருமை ஆனால் அனைவரும் இணைந்து கொண்டாடினால் நம் அனைவருக்கும் பெருமை.
கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.. alaikal@gmail.com
மேலதிக விபரங்கள் வெகு விரைவில்…
காலம் : 22.09.2012 சனிக்கிழமை மாலை
இடம் : கேர்னிங் கலாச்சார இல்லம் Kulturallen – Herning

Wednesday, September 12, 2012

கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக கூட்டறிக்கை


 கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை.
’’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய  இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும்  கடும் கண்டனத்துக்குரியது.

Tuesday, September 04, 2012

கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடி

-மெலிஞ்சி முத்தன் -


ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.




ஈழத்துக் கூத்தில் தென்மோடி,வடமோடி,காத்தவராயன், பேய்க்கூத்து, வசந்தன் கூத்து என்று பலவகைக் கூத்துகள்  இருந்தாலும். நான் இங்கு பேசுபொருளாகக் கொண்டிருப்பது ‘தென்மோடிக் கூத்து’ என்ற வகையிலான கூத்தையும், அக்கூத்தின் சமூகப் பின்னணி பற்றியுமேயாகும்.
 தென்மோடிக் கூத்தினை இன்று பெரும்பாலும் கடலோரப் பகுதிகளிலேயே  காணக்கூடியதாக இருக்கின்றது மாதகல், மெலிஞ்சிமுனை, பாசையூர், குருநகர், நாவாந்துறை, சில்லாலை, போன்ற இடங்களில் ஆடப்படும் இக்கூத்து ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான பாங்கினைக் கொண்டதாகவே இருக்கின்றது,


Saturday, August 25, 2012

கவிதாவின் கறுத்தப்பெண்

“கறுத்தபெண் - நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்"
 பேராசிரியர் சண்முகரட்ணம் அணிந்துரை:-
"இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்."

தாழ் உடைக்கும் கவிதைகள்
கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக் கூறத்தேவையில்லை. கவிதாவின் கவிதைகள் அழகானவை, அவற்றில் பெரும்பாலானவை ஆழமானவை. அழகும் ஆழமும் மிக்க கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பினைப் படித்து மகிழும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தமைக்காகக் கவிதாவிற்கு எனது நன்றிகள். ”கறுத்தபெண்”  கவிதைகளை இயற்றிய கவிதாவிற்கு எனது பாராட்டுக்கள்.
தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர்.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.
’நான் பெய்யெனப் பெய்யும் மழை’ எனும் தலைப்பினைக் கொண்ட முதலாவது கவிதை பல்லாண்டு காலமாகத் தமிழராய் புனித கோபுரத்தில் வைத்துப் பூசிக்கப்படும் திருக்குறள் மீது ஒரு போர் பிரகடனத்தை வீசுகிறது.
வள்ளுவா!
உன்னுடன் கொண்ட
முரண் பாடொன்று
முறிந்து விட்டது
உண்மைதான்
ஓம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழை!
என ஆரம்பிக்கும் கவிதை தொடர்கிறது
கலைந்த கூந்தலோடு
உம்மையும்
பெண் கற்பைப்பாடும்
உம்மொத்த புலவர்களையும்
பிடுங்கியெறிய
என் மழை எழுகிறது
எனச் சவால்விட்டுப்; பின் வருமாறு முடிகிறது இந்தக் கவித்துவப்போர் பிரகடனம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழையாய்
கட்டுக்கடங்பாதென் கவிதை
நான் பாயெனப் பாயும்
இந்தக்கவிதையின் நோக்கம் திருக்குறளை அவமதிப்பதெனப் பார்ப்பதைவிட அது நியாயப்படுத்தும் ஆண்-பெண் அசமத்துவ விழுமியத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்கிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும். ஆணாதிக்கம் நமது சமூகத்தில் நிறுவன ரீதியில் தொடர்வதை மறுக்க முடியாது.
புனிதப்படுத்தப்பட்ட தொன்மைமிகு ஒழுக்கவியல் நூல்களும் மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது திணிக்கப்படும் சடங்குகளும் கட்டுப்பாடுகளும் விமர்சிக்கப்படுதல் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் விழுமியங்களின் பரிணமிப்புக்கும் முற்போக்கான சமூக மாற்றத்தின் நகர்ச்சிக்கும் அவசியமான செயற்பாடாகும். இந்தச் சிந்தனைப்போக்கு இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் இழையோடக் காணலாம். இது ஒரு அரசியல் சுலோகமாகவோ அல்லது அறிக்கை ரீதியான வாசகமாகவோ வரவில்லை. கவிதைகளைப் படித்து சற்று ஆழச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்கள் தோன்றலாம். இது எனது வாசிப்பு.
பெண்ணின் சமூக நிலை, காதல், கற்பு நிலைபற்றி மீண்டும் அதே கருத்துக்களை வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது ”சொன்ன சொல் மாறாமல்” என்ற கவிதை. இதன் இறுதி வார்த்தைகளைப் பாருங்கள்
தயவுசெய்து
காலாகாலமாய் கட்டிவரும்
கற்பு என்றால் என்ன, என்பதை
கறுத்தபெண் என்ற
என் முகவரிக்கு
வந்து சொல்லுங்கள்
இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு கறுத்தபெண் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் எனக் கூறுகிறது. அதே நேரம் கறுத்தபெண்ணாயிருந்தால் மட்டுமல்ல இந்த மறுப்பு அவள் அவள் சிவப்புப் பெண்ணாக மாறினாலும் கட்டுப்பாடுகள் மாறுவதில்லை எனும் உண்மையையும் காட்டுகிறது.
இதை மேலும் ஆழப் புலப்படுத்துகிறது “நாங்கள் காவும் பெட்டகம்” எனும் கவிதை. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என ஆணாதிக்கம் வரித்த நாற்குணங்களும் பெண்மையின் ஒருமித்த இலக்கணமென்று அவளை அதன் பெட்டகமாக்கிப் பொன்விலங்கு பூட்டியுள்ளது சமூகம். காதலாக ஆரம்பிக்கும் உறவும்
படிப்படியாக ஆக்கிரமிப்பாக மாறலாம் என்பதை நயம்படக் கூறுகிறது இன்னொரு கவிதை.
இந்தத் தொகுப்பில் வேறு விடயங்களும் கையாளப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘சித்தப்பாவும் சில கேள்விகளும்’ எனும் கவிதை வாசகரை தாயகத்தின் போர்க் கொடூரங்கள் மிகுந்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சித்தப்பாவிற்கு நடந்தது என்ன.
..
ஈரம் சொட்ட சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின் கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் எதுமில்லை
இந்தக் கவிதையின் முடிவு மனதை
மிகவும் தொடுவதாயுள்ளது
எந்த மதிலையும்
பழஞ் சுவரென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்கவேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்
என்னைக் கவர்ந்த வேறு பல கவிதைகளும் இங்கே உண்டு. இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம். இந்த வகையில் ஒருவரின் ஆக்கம் சமூகத்தில் வெளிவந்ததும் அது தனக்கென ஒருவாழ்வைப் பெற்றுக் கொள்கிறது என்பதை மறந்திடலாகாது. அதன் பிரசுரம் அதை ஆக்கியவரிடமிருந்து விடுவித்து விடுகிறது என்றும்
அர்த்தப்படுத்தலாம்.
கவிதாவின் கவிதைகள் வாசகர்களுக்கூடாக ஒரு திறந்த அரங்கிற்குள் வந்துவிட்டது. அங்கே அவை பற்றிய விளக்கங்களும் விவாதங்களும் தொடர வேண்டும் என வாழ்த்தி கவிதாவுக்கு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.
நன்றி:பேராசிரியர் ந. சண்முகரத்தினம்

Thursday, August 23, 2012

நூல் அறிமுகம்

தோழர் MC லோகன் இன் கவிதை தொகுப்பு வெளியீடும் - அரசியல் நிகழ்வும் டென்மார்க் இல் நடக்கவிருக்கிறது .
 

Wednesday, August 08, 2012

உயிர் நிழல் 35வது இதழ் வெளிவந்துள்ளது

, சுல்பிகா இஸ்மாயில், பா. துவாரகன், சேரன், இராகவன், ஆழியாள், றியாஸ் குரானா, லஷ்மி, வி. சிவலிங்கம், ரிஷான் ஷெரீப், ஜிஃப்ரி ஹாசன், ரதன், எம்.பௌசர், ஸர்மிளா செய்யித், சு. குணேஸ்வரன், அஜாதிகா, ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.