Sunday, November 13, 2022

Tillykke ! Ratch

Tillykke ! Ratch டென்மார்க்கில் பிலுண்ட் நகரசபையின் இரண்டாவது பதில் நகரபிதா சமூக ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த நண்பர். ஜெயராஜா ராசையா Jeyarajah Rasiah er ny 2. viceborgmester i Billund kommune Nyheder november 10, 2022
 வருடங்களுக்கு முன்பாக அன்று எமது டென்மார்க் நாட்டின் Integrationsminister Mattias Tesfaye தனது Tweeter செய்து மூலம் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அச்செய்தியில் அவர் எழுதியிருந்தார் தாய்லாந்து, ஸ்ரீ லங்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து டென்மார்க்கிற்கு குடிபெறுபவர்களால் டென்மார்க்கில் பாரியளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்றும், மற்றும் இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே வருபவர்களால் தனக்கு இணைவாக்க அமைச்சர் என்ற முறையில் அவர்களை டென்மார்க்கில் ஒருங்கிணைப்பு செய்வதற்கு கூட தான் நேரம் பாவிக்கத்தேவை இல்லை என்றும், அதைவிட இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே அந்த மக்கள் வந்து குடியேறுவது டென்மார்க்கிற்கு மிகவும் நல்ல விடயம் எனவும் சொல்லியிருந்தார். இவர் இந்த அறிவிப்பில் இலங்கையனரான எங்களையும் சேர்த்ததை நினைத்து நாம் சந்தோசப்படனும். இலங்கையரை/ தமிழர்களை பல அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் இப்படியாக முன்பும் பலதடைவைகள் பாராட்டி இருக்கிறார்கள். ஆகவே இது முதல் தடவை அல்ல. என்றாலும் இன்றைய வெளிநாட்டவர் பற்றிய அரசியல் சூழ்நிலையில் இந்த அங்கிகாரம் எமக்கு தொடர்ந்தும் இருப்பது இலங்கையரான எமக்குப் பெருமை. இதை ஆங்கிலத்தில் Ethnic branding அல்லது ethnic profiling என்று சொல்லுவார்கள். இது ஐரோப்பாவில் இன்றைய சூழ்நிழையில் எமக்கு இந்த Ethnic branding மிக முக்கியம். இப்படிப்பட்ட அபிப்பிராயம் இருப்பது எமது வருங்கால சந்ததிகளுக்கு மேலும் நல்லது மற்றும் அவர்களுக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்புக்களை தொடர்ந்தும் கொண்டுவரும் மற்றும் முன்னேற்றும் வழியினைக் காட்டும் . இந்த அங்கீகாரம் எமக்கு கிடைப்பதற்கு முழுக்காரணம் நாம் நெகிழ்வான( fleksible ) முறையில் எமது கலாச்சாரம் மற்றும் எமது பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை டென்மார்க்கில் வாழும் வாழ்வில் ஒப்பீட்டளவில் கணிசமானவர் கொள்ளல் எனும் நிலையாகும் நாமும் எமது வரப்போகும் சந்ததிகளும் இன்னமும் பெரிய வெற்றிகளை பெறவேண்டும் என்றால் இரண்டாவது தலைமுறையை நாம் இன்னமும் கூட நன்றாகவும் இருமொழியிலும் தேர்ச்சியானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ராஜ்ஜைப்போல் வளர்க்க வேண்டும் . அவர்களுக்கு இன்னமும் கூட தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் வாழும் Dansk- tamil இணைவாக்கக் கலாச்சாரத்தை பெரிதும் நாம் ஆதரிக்க வேண்டும் . ராஜ்ஜை பவருடங்களாக நான் நன்கறிவேன் அன்புருகப் பேசுவதுக்கும் பழகுவதுக்கும் இனியவர். டென்மார்க் தொழில்க் கல்லூரியில் கல்வி பயின்ற தொழில்க் கல்விப் பட்டதாரியவர். இரண்டு மகள்களின் அன்பான அப்பா, அவரது வீட்டில் நான் குடும்பமாகச்சென்று விருந்துண்டுள்ளேன். மகிழ்ந்துபோயுள்ளேன் வாழ்த்துகள் ராஜ். அரசியல் வாழ்வில் உங்கள் நேர்மைக்கும் தகுதிக்கும் உழைப்புக்கும் இன்னும் இன்னும் கெளரவமிக்க பதவிகளும் பொறுப்புகளும் உங்களை நாடி வரும் ...

Wednesday, July 06, 2022

மரியாதி கலந்த அஞ்சலிகள் -தமிழ் ரைம் ராஜநாயகம் !!

 -கரவைதாசன்-


ஒரு அறிவிக்கப்பட்ட வர்க்க துருவப்பட்ட சமசமாஜ சொசலிஸ்டாக எங்களையெல்லாம் ஆகர்ஷ்சித்த தமிழ் டைம்ஸ் ராஜநாயகம் அவர்கள் இனி எங்களுடன் இல்லை. இறக்கும்போது இவருக்கு வயது எண்பத்தியாறு என்கிறார்கள் .இவர் தொழில்ரீதியில் மனித உரிமை சட்டத்தரணியாகத் தொழிற்பட்டவர். தொழிற்சங்கவாதி, நாலாமுலகச்செயற்பாட்டாளர் என அறியப்பட்டபோதும் பாட்டாளிவர்க்க துருவப்பட்ட ஊடகவியலாராக இவரை முன்தள்ளி நிற்பது TAMIL TIMES இதழே. இப்பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டுக்காக பல தலைமுறைகள் தாண்டியும் எங்களது சுவட்டினைத் தேடப்போகும் இனிவரும் தலைமுறைகள் இவரையும் இவர் விட்டுச்செல்லும் TAMIL TIMES ஆவணத்தினையும் நிச்சயம் படிப்பார்கள். இனிவரும் புகலிட தமிழ் தலைமுறைக்கு நேர்மையின் சுட்டியாக ஆங்கில மொழியில் அமைத்துள்ள TAMIL TIMES இதழ் இவரது தொலை நோக்கில் ஆங்கில வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட சமசமாசக் கட்சியின் உறுப்பினரான இவர் 1970 ஆம் ஆண்டு கட்சி அரசியலிருந்து வெளியேறியவர் பின் கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கவேயில்லை. ஆனால் அவர் அரசியலில் இருந்தார் .

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரான அமரர் லண்டனில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் அனுபவத்தில் பழையமாணவர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினை உருவாக்கி புகலிடத்து கல்விசார் வளங்களை தாயகத்து எடுத்துச்செல்ல வழிகோலியவர்.


கன்பொல்லையில் எழுபதுகளில் சாதிய சமத்து வத்துக்காக வெடித்த குண்டுகளால் வடமாகாணமே அதிர்ந்தது. கொழும்பில் அந்நாட்களில் அது பெருவெடிப்பாக வியாபித்திருந்தது அதன் முன்னணிப் போராளிகளில் ஒருவராக எனது தந்தையார் இருந்தது எனது தந்தையாரை அறிந்த ராஜநாயகம் அவர்களுக்கும் எனக்கும் உறவாக அமைய எனக்கமைந்த பேறு. தொலைபேசியில் உறவாடி வந்த உறவு இவரது சகா சிந்தனைப் பரா (கு.பரராசசிங்கம் ) அவர்களது நினைவுக் கருத்தரங்குக்கு நான் லண்டன் சென்றவேளை நேரில் கண்டு உரையாடினேன். அதன் பின் பலதடவை சந்தித்துப் பேசும் வாய்ப்புகிட்டியது. ஒரு நல்ல லெஜனை இழந்துவிட்டோம். உங்களிடம் நானும் கற்றுக்கொண்டேன் சென்று வாருங்கள்! A MAN OF PRINCIPLE 

Thursday, June 09, 2022

அருட்திரு.கீத பொன்கலன்

 


-மல்லியப்புசந்தி திலகர் -

தான் ஒரு மதகுருவானபோதும், மலையகத்தவர் அல்லாதபோதும் மலையக மக்கள் குறித்த அக்கறையாளராகவும் ஆய்வாளராகவம் திகழ்ந்த அருட்திரு.கீத பொன்கலனின் மறைவு மலையக அரசியல், சமூக ஆய்வுப்பரப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதத்தைக் கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர். அன்னாருக்கு மலையக மக்கள் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


பண்டாரவளை லியோ மார்கா ஆச்சிரமத்தைச் சேர்ந்த அருட்தந்தை கீத பொன்கலன் திருகோணமலை கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி மரணமானார். இவரது இழப்பு குறித்து அனுதாபச் செய்தியொன்றை வெளிளியட்டிருக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு ஆரம்ப கல்வியை கற்று, கண்டி குருநிலைக்கல்லூரியில் மறையியல் பட்டம்பெற்று பின்னர் பெல்ஜியம் லுவேன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றவரான சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் மதகுருவாக மலையகப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக வாழ்ந்தவர். இதனால் மலையக மக்கள் தொடர்பான பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மலையக மக்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் தொழில்நுட்ப கல்வி, ஆசிரியப்பயிற்சி என பல்வேறு செயற்றிட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர். பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை தனது ஆய்வின் மூலம் எழுதி வந்தார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் புலமையாளரான இவர் எழுதிய நூல்கள் பல்வேறு விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகளை; கொண்டதாக அமைந்துள்ளமை சிறப்பு. ‘மலையகத்தமிழரும் அரசியலும்’ எனும் இவரது நூல் காலனித்துவ காலம் முதல் 1990 கள் வரையான மலையக மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆவணமாகும். 

தனியே ஆய்வாளராக மாத்திரமல்லாது மலையக சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடல்கள் சந்திப்புகளில் பங்குபற்றி வந்த இவர் மலையக மக்களின் சுபீட்சத்துக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மலையகப் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டு திட்டத்தயாரிப்புகளின் போதும் இப்போது முன்வைக்கப்படவுள்ள ஐந்து ஆண்டு திட்டத் தயாரிப்புகளின்போதும் தனது கருத்துக்கள் மூலம் பங்களிப்பு செய்தவர். ‘பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவகம்’ (Trust) குறித்த அவரது ஆங்கில ஆய்வு நூல் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

மலையகப் பூர்விகம் அல்லாதவர்கள் மலையக இலக்கியத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்திருக்கும்போதும் கூட ஆய்வு மற்றும் செயற்பாட்டு பக்கங்களில் மிகக்குறைந்தளவினரே பங்களிப்பு நல்கியுள்ளனர். அந்த வகையில் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை, பாலசிங்கம், ஞானமுத்து போன்றவர்களின் வரிசையில் மலையக மக்களுடன் தொடர்புடைய ஆய்வு முயற்சிகளில் பங்கேற்ற பெருமை அருட்திரு.கீத பொன்கலன் அவர்களுக்கு உண்டு. மலையக தேசியம் குறித்த தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்த அன்னாரின் மறைவு மலையக ஆய்வு முயற்சிகளில் ஏற்பட்ட ஓர் இழப்பாகும். அன்னாரின் இழப்புக்கு மலையக மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். 

நன்றி: நமது மலையகம் 

Friday, May 27, 2022

இலங்கையின் தற்போதைய சூழல்

25.05.2022 புதன்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில்  *கலை இலக்கிய பெருமன்றத்தின்* தூத்துக்குடி மாநகர குழுசார்பாக முதலாம் கூட்டம் போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. க விழாவி்ல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்த முன்னாள் கல்வியியல் பேராசிரியர் தோழர் முனைவர் ந இரவீந்திரன் அவர்கள் கலந்த கொண்டு 'இலங்கையின் தற்போதைய சூழல்' என்ற தலைப்பில் பேசினார்..  

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று நகரக்குழுவின் தலைவர் மாடசாமி அவர்கள் நடத்தினார். வரவேற்புரையை மன்றத்தின் நகரக்குழு செயலர் சொ பிரபாகரன் நிகழ்த்த, அதன் செயற்குழு உறுப்பினர் சுந்தர் காந்தி முனைவர் ரவீந்திரன் அவர்களைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.   

உரையின் போது ரவீந்திரன் அவர்கள் தற்போது நடந்த இலங்கை போராட்டம் என்பது மக்கள் எழுச்சி என்று கூறமுடியாது என்றும், அது ஊடகங்கள் நாட்டின் சுயசார்பு தன்மையை இழக்க வைக்கும் முறையிலும், ஆதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைக்கும் வகையிலும், தகவல்களை தணிக்கை செய்து பரப்பியதின் விளைவு என்று கூறினார். ஆகவேதான் இப்போராட்டத்தின் பின்புலத்தில் எந்த அரசியல் தலைமையும், அரசியல் கட்சிகளும் ஈடுபடவில்லை என்றும் விளக்கினார்.. நமது சமூகத்தில் எந்த மேலாதிக்க சக்திக்கும் அடிபணியாமல், சமத்துவத்தைப் பேணுவதின் மூலம்தான் மக்களின் பொது நன்மையைப் பேண முடியும் என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார். 

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏதாவது ஒரு கேள்வி இருந்தது, அனைவரும் உரையை உள்வாங்கி உள்ளார்கள் என்பதற்கும், சிறந்த விவாதம் நடந்தது என்பதற்கும் எடுத்துக் காட்டாய் இருந்தது. 

பின்னர் கட்சியின் மாநகரச் செயலர் தோழர் ஞானசேகர் அவர்கள் முனைவர் இரவீந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கட்சியின் மாவட்ட பொறுப்பு செயலர் தோழர் கரும்பன் அவர்கள் மன்றம் இதுமாதிரி பல கூட்டங்களை நடத்தி, சிறந்த கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென கூறினார்.. மன்றத்தின் மாவட்ட தலைவர் அருட்சகோதரி எழிலரசி அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிமையாக முடிவுற்றது...

Sunday, May 22, 2022

தெணியான் மறைவு

தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் அவர்கள்  இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர் இன்று காலமான செய்தி கிட்டிக் கலங்கி நிற்கிறோம்.
தனது எழுத்துக்களால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை வரலாறாக்கிய தெணியான்
1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தொழில்ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம்பணியாற்றி ,யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமைஆசிரியர்உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில்  பகுதித்தலைவர்,கனிஸ்ட அதிபர்,உபஅதிபர்,தொலைக்கல்விப்போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு ஓய்வு பெற்றவர். முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்த தெணியான் கலகக்கார எழுத்தாளர்கள் அணியில் முதல் வரிசையினை சேர்ந்த  படைப்பாளி .
1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப்பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150  சிறுகதைகள் ,10 நாவல்கள்,3.  குறுநாவல்கள்,5 வானொலிநாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள்,செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.
இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கைஅரசு ‘சாகித்யரத்னா’(2013) ,வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’, (2008),இலங்கை இந்து கலாசார அமைச்சு’கலாபூஷணம்’(2003) போன்ற விருதுகளை  வழங்கி இவரைக்கௌரவித்துள்ளது.
இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’பரிசையும்,’மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும்,வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல்  இலங்கைஅரசின் சாகித்திய விருதையும்,’
‘குடிமைகள் ‘நாவல்  இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல்  தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும்,சுபமங்களா பரிசையும் ,சின்னப்பபாரதி 
அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும்  பெற்றுள்ளன.
சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச்செயலாளர் பொறுப்பினை வகித்தவர். சிறுபான்மைத்தமிழர் மகாசபையில்  இணைந்து சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப்போராளி.
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது.
எனக்கு தமிழ் கல்வியை புகட்டிய ஆசான். எனது தந்தையாரை அண்ணர் என அழைத்தாலும் அவரது நெருக்கமான தோழர்.  எனக்கு  சிறந்த வழிகாட்டியாகவும் ,ஆதர்சனமாகவும் விளங்கிய
 அவரது இழப்பு  பேரிழப்பாகும்.

Thursday, April 14, 2022

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞன் பாலசிங்கம்

 -பானு பாரதி-

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த மக்கள் கலைஞனுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்

பாலசிங்கண்ணனை நான் முதல் முதலில் பார்த்தது ஒரு நாடக மேடையில்தான். 75 காலப்பகுதி என நினைக்கின்றேன். எங்களது ஊர்க்கோவிலின் முன்றலில் அவரது நாடகக் குழுவினருடன் "சமுதாய மாற்றத்திலே" என்ற நாடகத்தை மேடையேற்றியிருந்தார். நாடகம் சாதி ஒடுக்குமுறையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. முழு நாடகமும் நினைவில் இல்லை என்றாலும், கிராமத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற இளைஞனாக மேடையில் தோன்றி, "சாதித்திமிருடன் வாழும் தமிழன் ஓர் பாதித் தமிழனடா" என கணீரென்ற குரலில் அவர் பாடியது இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது.
பின்னர் தொழில் காரணமாக எங்களது ஊரில் அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். இந்தக் காலப்பகுதிகளில்தான் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் தோழர்கள் கௌரி காந்தன், சின்னராசா, ராஜரட்ணம், ஜெகநாதன், சிறீதரன், மகாலிங்கம், தங்கராசா இவர்களுடன் இணைந்து யாழ் செம்மண் பிரதேசத்துக் கிராமங்கள் தோறும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சமூக மாற்றத்தை முன்னிறுத்தியும் மக்களை ஒன்று திரட்டி களப்பணிகளில் ஈடுபட்டார்.
பாலசிங்கண்ணன், சின்னராசா, ஜெகநாதன், ராஜரட்ணம் இவர்களுக்குள் நடக்கும் விவாதங்களை மிக அருகிருந்து பார்த்திருக்கிறேன். . உரத்த குரலில் மிகவும் காட்டமாக அந்த விவாதங்கள் நடந்தன. அந்தக் கோபமும், தீவிரமும், கருத்து மோதல்களும் விவாதங்களின் முடிவில் காணாமல் போய்விடும். இவர்களுக்கிடையேயான விவாதங்களின் தீவிரத்தைப் பார்த்துப் பயந்த அதேவேளைகளில் விவாதங்களின் முடிவில் அவர்களிடையேயான தோழமையையும், நேசிப்பையும் கண்டு வியந்தும் போயிருக்கிறேன்.
பின்னாளில், அவரோடு இணைந்து பணியாற்றும் போது கிடைத்த அநுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அவரிடமிருந்து கற்றுக் கொண்டவைகள் ஏராளம். கிராமியக் கலைக்குழுவோடு இணைந்து "சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்" நாடகத்தை கிராமங்கள் தோறும் மேடையேற்றினோம். அந்தப் பணிகளின்போது நீண்ட தூரங்கள் கிராமங்கள் தோறும் அவரோடு பயணித்திருக்கின்றேன். அந்தப் பயணங்களின்போது வேறு வேறு நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களினது வரலாறுகள் பற்றியும், எங்களது விடுதலைப் போராட்டம் பற்றியும் விபரித்துக் கொண்டே வருவார். அவரிடமிருந்து கற்றுக் கொண்டவை ஏராளம்.
அவ்வப்போது எனக்கு குழப்பங்கள், சிக்கல்கள் ஏற்படும்போது, சிறு குழந்தையைப் போல அடிக்கடி அவர் முன்பு ஓடிப்போய் நின்றிருக்கின்றேன். அவரும் ஒரு தந்தைக்குரிய அன்போடும் அக்கறையோடும் எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு எனது குழப்பங்களுக்கு பதிலளிப்பார். அவரது பாசறையில் வளர்ந்தவள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் எனக்கு எப்போதும் உண்டு.
சிறந்த நாடகாசிரியர், சிறந்த நெறியாளர். பல நாடகப் பிரதிகளை எழுதி மேடையேற்றி இருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் நாடகம் மேடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு பாத்திரங்களும் அவரது முகத்தில் மாறி மாறி பிரதிபலித்தபடியே இருக்கும். இந்த அதிசயத்தை ஒவ்வொரு முறையும் நான் அநுபவித்திருக்கின்றேன். அந்நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் அவரது முகத்தில் இடம் பெறுவார்கள். அவரே சின்னப்பண்னையாகவும், நாகலிங்கமாகவும், கந்தையாவாகவும், சின்னம்மாவாகவும், குமாராகவும் கணப்பொழுதில் மாறிக்கொண்டே இருப்பார்.
ஒரு சிறந்த நெறியாளனுக்குரிய பண்பு அது.

மிகவும் துயரமான விடயமென்னவெனில், சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் ஆவணப்பிரதியாக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் அப்போதிருந்த நாட்டு நிலமைகளால் செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அவரைப் புறந்தள்ளி ஈழத்துத் தமிழ் நாடக வரலாறு என்பது முழுமை பெற முடியாது.
2018ல் ஊருக்கச் சென்றிருந்த போது அவரைச் சந்தித்திருந்தேன். யுத்தகால நெருக்கடியான வாழ்வனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அத்தனை அவலங்களுக்கும் இழப்புக்களுக்கும் நேரடியாக முகம் கொடுத்திருந்தபோதும், அதே உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் அவர் காட்டிய அக்கறை என்னை ஆச்சரியப்பட வைத்தது.
மீண்டும் 2019ல் அவரைச் சந்தித்தபோது அவர் தளர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வழமையாக அவரிடம் இருக்கும் உற்சாகம் குன்றி மிகவும் தளர்ந்து போயிருந்தார். எதுவும் செய்ய முடியாத கையறு நிலமையில் இருப்பதாக மிகவும் வருத்தப்பட்டார்.
தங்கா அக்காவிற்கு எத்தகைய ஆறுதலைச் சொல்வதென திகைக்கிறேன். அவரது பயணத்தில் எல்லாக் காலமும், எல்லாத் துன்பங்களிலும்,எப்போதும் உடனிருந்தும், இணைந்து பயணித்தவர். எனது கண்ணீரையும் அன்பையும் அவரோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, January 25, 2022

"மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது."

-கரவைதாசன்- 


நஜா மார்ரி அட்ஸ் அவர்களின் சொந்த மகனை இழந்த அனுபவத்தில் எழுதப்பட்ட "மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது" என்ற அனுபவ சிறு கதையினை படித்துக் கொண்டிருந்தேன். கவிதையின் லயத்தில் அமைந்திருக்கும் அவரின் மொழி நடைக்குள் அமிழ்ந்து சாவும் வாழ்வின் ஒரு பகுதியே என்ற புதிர் அவிழ்புக்குள் பயணிப்பது ஒரு புரிதலைத் தந்திருந்தது.

அவர் மொழியில் புத்தகத்தில் குந்தியிருந்த வரிகள்

 ஒருமுறை நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்குள் இருக்கும் குழந்தை புலிக்குட்டி என்று கனவு கண்டேன். அப்படியே  அவன்  பிறந்தபோது வெளிர் பழுப்பு நிற கண்கள் மற்றும் தங்க நிற தோல் கொண்ட விளையாட்டுத்தனமான, மென்மையான ஆனால்  செல்லம் கொண்டவனாக  இருந்தான். அவன்  பசிய காட்டில் நடந்தான், காட்டின் பசுமையை விரும்பிக்கொண்டே ஆனால் சிங்கம் போல் நிமிர்ந்தான். எனினும் புலிகளின் தோலைப் போன்றே  நிறமுடைய அவனுடைய மயிர்களில் ஒளி தெறித்து மினுமினுப்பதைப் பார்த்தேன். அவன் தனியாக நடந்தான். அவன் ஏன் தனியாக இருக்கிறான் என்பது அவனுக்கு புரியவில்லை. நான் கனவு கண்டதுபோல் அவனிடம் புலியின் சாயலே உள்ளது. ஆனாலும் அவன் நிமிர்ந்த நடையுடனே காட்டுக்குள் மறைந்தான்.

விஷயம் என்னவென்றால், சிறந்த புத்தகங்கள் பெரும்பாலும் ஒருவரின் இதயத்தை உடைத்து விடுகின்றன. அதை படைப்பாளி  விரும்பலாம், இது படைப்பாளி மீதோ அல்லது படைப்பின்மீதோ உள்ளும் புறமுமாக பச்சாதாபத்தை ஏற்படுத்த கூடும். எதுவாயினும் சிறந்த புத்தகங்கள் தன்னையும் பிறரையும்  புத்திசாலி ஆக்கிக்கொண்டே  இருக்கின்றன.

உடைந்து போதல் என்பது  இயற்கையானது Breaking is natural.

Sunday, January 23, 2022

திச் நாட் ஹான் "மனம் கொண்டவர்களின் தந்தை" மறைவு

 -கரவைதாசன்- 

"மனம் கொண்டவர்களின் தந்தை. " எனஉலகறிந்த  திச் நாட் ஹான் காலமானார். 

போரும் அமைதியும் வாழ்வாகிப்போன உலகில் சாத்வீகப் போராட்டத்தினால் அமைதியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கற்பித்த மஹாத்மா காந்தி, மாட்டீன் லூதர் கிங்-யூனியர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்படும் ஒருவராக திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) இருந்தார்.

இவர் உலகின் மிகப் பெரிய ஜென் பௌத்தர் ஆவார்,
அவர் பௌத்தத்தைப் பற்றிய கோட்பாட்டுகளில் ஈடுபட்டிருப்பதை விட, பௌத்தத்தை நம் வாழ்விலும், அன்றாட வாழ்விலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதன் வெளிப்பாடாய் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவை மிகவும் நடைமுறைக்குரியவை என்பது எனது மனக்கணிப்பு. ஊடகங்கள் அவரை "நினைவின் தந்தை" என்றும் மனம் கொண்டவர்களின் தந்தை என்றும் அழைத்தன மற்றும் மார்ட்டின் லூதர்கிங்-யூனியர் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார்.

1926ல் வியநாமில்  பிறந்த  திச் நாட் ஹான் தனது பதினாறாவது வயதினில் துறவறம் பூண்டார்,  1960களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இங்கே அவர் கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார்.

அமெரிக்காவில் வாழ்ந்த காலங்களில் தான் அமெரிக்கா வியட்நாம் மேல் மேற்கொண்ட போருக்கு எதிரான பகிரங்க கடிதத்தினை மார்ட்டின் லூதர் கிங்- யூனியருக்கு எழுதினார். தொடர்ந்து பூமி எங்கள் தாய் எனும் பதாகையின்கீழ் மக்களைச் சேர்த்து உலகின் அமைதி வேண்டி அமைதியான ஊர்வலங்கள் செய்தார். இச்செயற்பாடுகளுக்காக அங்கிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார்.

பிரான்சில் உள்ள கான்வென்ட், பிளம் எனும் குக் கிராமத்தில் வசித்தார். அங்கே வசித்துவந்த வேளையில்த்தான் நூற்றுக்கணக்கான மனமும் பெளத்தமும் சார்ந்த புத்தகங்களை எழுதினார். அவரது 90வது வயதில் 2014 இல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது,பேச்சுத் தொடர்பற்றிருந்த அவர் செப்டம்பர் 2015 இல் திரும்பவும் தனது முதல் வார்த்தைகளைச் சொன்னார். 2018ல் திரும்பவும் தாயகம் திரும்பினார். அங்கே து ஹியூ கோவிலில் தனது இறுதி நாட்களைக் கழிக்க அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார்.
சனிக்கிழமை மற்றும் கடைசி ஐந்து நாட்களில் ஹியூவில் தொடங்கும் அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 இவரது  செய்தி எனது சிந்தையை எனதூரின் பக்கம் இழுத்துச் சென்றது. கடந்த 2012ல் நான் ஊர் சென்றபோது கன்பொல்லை  கிராமத்தின் தந்தை அதிபர் க. இராசரத்தினம் அவர்களுடன் சில நாட்களை செலவு செய்தேன். அவ்வேளை அவர் துறவி திச் நாட் ஹான் அவர்களை அவரது பெயரினை குறிப்பிடாது மஹாயானவகையைச் சேர்ந்த இந்த ஜென் பெளத்த துறவிஎன அவரைப் பற்றி  குறிப்பிட்டார். யாழ் கரவெட்டி கன்பொல்லையில் அமைந்துள்ள தமிழ் சிங்கள பெளத்த பாடசாலையான ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் தொடக்கத்துக்கு உறுதுணையாக அமர்ந்த வணக்கத்துக்குரிய நாரத தேரர் அவர்கள் 1966ல் வியட்நாமில் நடைபெற்ற போரை நிறுத்தக் கோரி வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று திச் நாட் ஹான் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து "போர் தவறு" எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொன்னார். இப்பேர்ப்பட்ட வரலாறுகளை சுமந்து நிற்கும் கிராமத்தினை நினைத்து மூச்செறிகிறேன்.