Tuesday, December 31, 2013

தலைமுறைகள் விமர்சனம்

-உமா சக்தி -

நாம் விட்டு விலகிக் கொண்டிருக்கும் வேர்கள் மிக ஆழமானது. தொன்மையானது. ஆனால் வளர்ச்சி, தொழில்நுட்பம், சம கால வாழ்வியல் முறைகள் நம் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் மறைக்கும் மாயைகள். அது தற்காலிகமாக நமக்கு பெருமை தருவது போலத் தோன்றினாலும் நம்மை இழந்து, வேறு எதைப் பெறுவதற்காக இவ்வாழ்க்கை என்ற கேள்விக்கு உட்படுத்துவது தான் தலைமுறைகள் திரைப்படத்தின் மூலம் பாலுமகேந்திரா கேட்கும் கேள்வி. (ஆனால் சரியாகக் கேட்டிருக்கிறாரா என்பது தான் நம் கேள்வி) பணத்தின் பின் ஓடும் எந்த மனிதரையும் நிறுத்திக் கேளுங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்று அவர்களுக்கு பதில் சொல்லக் கூட நேரமிருக்காது. வாழ்க்கை அவர்களுக்கு பேப்பர்களால் ஆனது. வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம், அலுவலகப் பேப்பர்கள், பணத் தாள்கள். அவர்களுக்கு அதுவே உலகம். அதுவே வாழ்க்கை.
சுப்பு பிள்ளையின் மகன் பணத்தைத் தேடி ஓடுபவனாக இருந்தாலும் பாசத்துக்கும் கட்டுப்படுபவன். இத்திரைப்படத்தில் மூன்று தலைமுறைகள் பற்றி கோடிட்டுக் காட்டுகிறார். பழையவை, இடைப்பட்டவை, புதியவை. இவ்வளவு தான். தலைமுறை இடைவெளி என்பது அன்பில் உருகும் நெஞ்சங்களுக்கு இல்லை. புரிதல் இருந்தால் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் இந்த இடைவெளி சமன்படும் என்று இப்படத்தில் சொல்லாமல் சொல்கிறார்.இத்திரைப்படம் நேர்க்கோட்டில் ஒரே விஷயத்தை நோக்கி நகர்கிறது.

காவேரிக்கரை கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழ் வாத்தியார் சுப்பு (பாலுமகேந்திரா). அவருடைய மகன் சிவா சென்னையில் பெரிய டாக்டர் ஆனால் சாதி விட்டு கிருத்துவப் பெண்ணை மணம் முடித்ததால் பெரியவர் மகனை தன் சாவுக்குக் கூட வரக் கூடாது என்று விலக்கி வைத்துள்ளார். பெரியருக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இரண்டு மாதங்கள் கழித்துதான் சிவாவுக்குத் தெரிய வருகிறது.