Tuesday, June 09, 2026

பிரக்ஞை

 -கரவைதாசன்-

   நான், அம்மா, அக்கா, தங்கை, ஐயா எல்லாருமாக  வீட்டுக்குள்ள இருக்கிறம் . மூலையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருக்கின்றது. விளக்கு சின்னதுதான் ஆனால் அறையிலிருந்த இருட்டு முழுவதையும் விரட்டியடித்து விட்டிருந்தது. ஒரு கடகம் இல்லை! ஒரு மூடல் அதுவும் இல்லை! அப்படின்றால் அதனை எப்படி அழைப்பது? ஓ! ஒரு குஞ்சுப்பெட்டி இது தான் சரி. அது நிறைய இடியப்பம் இருக்கிறது. உடனே அம்மியில் அரைச்சு எடுத்து வந்த சம்பல் ஒரு கிண்ணத்திலும் சட்டி நிறைய  தக்காளியும் சிறு நெத்தலியும் போட்டு வைச்ச சொதியும் இருக்கிறது. இந்த நேரத்தில எங்கால நெத்தலி என்று கேட்கக் கூடாது. எங்கட ஊர்ப்பக்கம் பின்னேரம் கூடுகிற கோயில்ச் சந்தையிலிருந்து அது அம்மம்மா கொண்டு வந்தது. எல்லாருமாக சாப்பிடத் தொடங்கும்போது நான் மட்டும் குழப்படி செய்யிறன். 

  "எனக்கு இடியப்பம் வேண்டாம். எனக்கு ஐயா வாங்கி வந்த பணிஸ்தான் வேணும்." இதில் நான் பிடிவாதமாக நிற்கிறன். அம்மா எனக்கெதிராக ஏப்பையை தூக்குகிறா. திண்ணையில் இருந்து நிலைமைகளை  அவதானித்த அம்மம்மா   "நான் யாவாரத்துக்கு எடுத்துச்செல்ல அரிஞ்சு வைச்ச வாழைப்பழ சீப்புகளில் நாலு கரஞ்ச பழத்தை இப்ப சாப்பாட்டுக்கு எடுங்கோவன்" என்று கூறுகிறா.

    ஐயா  சொல்லுகிறார் "அதிலை பிள்ளை இரண்டு பழத்தைப் பிடுங்கி பணிசோட அவனுக்கு குடுங்கோவன்" ஐயா அம்மாவை எப்பவும் பிள்ளை என்றுதான் அழைப்பார். எனக்கு பணிசும் பழமும் அவைக்கு சம்பலும் சொதியும் இடியப்பமும். எனக்கு நிறைய சந்தோசம். நான் வீட்டில் எல்லாருக்கும் செல்லம், யாரென்றில்லை  ஒருவர் கோவித்தாலும்  வேறு யாராவது ஒருவரிடமிருந்து எனக்கு அரவணைப்பு கிடைக்கும்.  

   எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். "மாமி கொஞ்சம் காலைவில த்தணை"  தாழ்வாரத்துக்கு குனிந்தவாறு சொல்லிக்கொண்டு பெரியப்பா திண்ணைக்கு வருகிறார்...  பெரியப்பாவென்றால் அம்மாவின்ர சொந்த மச்சான். அவருக்கு நான் பெறாமகன். 

    "யார் வாத்தியாரே? வாங்கோ! வாங்கோ!" ஐயா சாப்பாட்டுக்குள்ளால கையை  எடுத்துக்கொண்டு செம்பையும் தண்ணியையும் தூக்குகிறார். "அவசரமில்லை,  நாங்கள் முற்றத்தில இருக்கிறம் . நீங்கள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வாங்கோ" என்று கூறிக்கொண்டு பெரியப்பா முற்றத்துக்கு திரும்புகிறார். 

    முற்றத்தில் இந்தியாவிலிருந்து வந்த நடிகர் கோபாலகிருஷ்ணர், அவர் கையில் ஒரு பருவ வயதை எட்டிய   பராயப் பெண் பிள்ளையுடன் நிற்கிறார். படங்களில் பார்த்த அதே முகம் , நல்ல நரைத்த வெள்ளைத்தலை, வெள்ளை அரக்கை சேர்ட் + வெள்ளை நாலுமுழம். அந்தப் பெண்கூட வடிவானவளாக இருக்கிறாள். அவளுக்கு இது புது இடம் தானே அவளது வண்டுக் கண்களால் உருட்டி உருட்டி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் எனக்கோ அவள் என்னை மட்டும் துரத்தித்  துரத்தி தேடுவது போல் மனதிற்குள் மத்தளம். 

    ஐயா  முற்றத்திற்கு வந்ததும் ஐயாவும் பெரியப்பாவும் கதைத்துக் கொள்ளு .கினம் சித்தப்பாவும் தங்கட வீட்டுத் தாழ்வாரத்துக்குள்ளால குனிந்து முற்றத்துக்கு வருகின்றார்.

    எங்களின்ர வளவுக்கு பெரிய முற்றம் அடுப்புக்கு  மூன்றுகால்    வைச்சது மாதிரி எங்கடவீடும் சித்தியின்ரவீடும் மாமாவின்ரவீடும். இந்த மூன்று வீடுகளையும் பிறவெட்டுத்தடிகளால் வளைச்சுப் போட்ட வேலி இருக்கு, ஆனால் படலை இல்லை. முற்றம் நிறைய வெள்ளை மணல். அன்று பௌர்ணமி, அதனால் முற்றம் முழுவதும் பால்போல் இருந்தது. வேலிகளுக்கேயிருந்த நந்தியாவெட்டையும் பட்டிப்பூவும் காற்றடிக்கும் போதெல்லாம்  சிரித்துக் கொள்கின்றன. மாலுக்குள்ள இலட்சுமி படுத்துக்கொண்டு பகல் மேந்த  புல்லின் சுவைதனை மீ ட்டு இரைகண்டது. 

    இப்ப எங்கள் முற்றம் நிறைய சனம். அந்தோனிமாமா, காதர்காக்கா, பியதாச ஐயே  இன்னும் நிறைய ஐயாவின் கட்சியாக்கள். பெரியப்பா கொண்டு வந்த அரிக்கன் லாம்பு இரண்டையும் அம்மாவிடம் நீட்டியவாறு "சிமிளினை மினுக்குங்கோ" என்று சொல்லுகிறார். ஆனால் ராணிச்சித்திதான் லாம்புகளை வாங்கிக்கொண்டு எரிச்ச உமி போட்டு மினுக்கிறாள். 

    அரிக்கன் லாம்பு இரண்டும் இப்போ முற்றத்துக்கு வந்தாச்சு எல்லாரது முகங்களும் இப்போ வடிவாகத் தெரிகிறது. வகுப்பு ஆரம்பமாகியாச்சு முதலில் பெரியப்பா, பிறகு ஐயா இப்போ கோபாலகிருஸ்ணர் பேசிக் கொண்ட்டிருகின்றார். நாட்டில் எல்லாரும் கட்சிக்காக கூட்டம் கூடுவார்கள். ஆனால் இவர்கள் வகுப்பு எடுக்கிறம் அல்லது வகுப்பு நடத்துறம் என்று தான் சொல்லுவார்கள். அவர் பேசுவது என் காதில் தெளிவாக விழுகிறது . ஆனால் அது பற்றி நான் யாருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையாம் . ஐயாவும் மாமாவும் கண்டிப்பான தொனியில் சொல்லிக்கொள்வார்கள்.   "நீயென்ன இப்போதும் குழந்தைதானே  இனி  வாலிபனாகி கமிட்டிக் காட்டெடுக்க இன்னும் காலங்கள் இருக்கு"  என்பார்கள்.    

      கோபாலகிருஸ்ணர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். "பேரினவாத அரசு அப்பாவி மக்கெளுக்கெதிராக அராஜகத்தினை" எல்லாரும் அவதானமாகக்  கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் வலு தெளிவாக என் காதில் விழுகின்றன. நவ குடியேற்ற வாதம் ,  இலுமினாட்டிகள், உலகமயமாதல், பேரினவாதம், குறுந்தமிழ் தேசியம், அராஜகம், கொடூரம், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, பங்கெடுப்பு சொற்கள் தொடர்கிறது  நான் அவற்றை அசை போட்டுக் கொண்டு உச்சரித்துப் பார்க்கிறேன். எனக்கு பக்குவம் வர, வாலிபக் கமிட்டிக் காட்டு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் தான்  இருக்கின்றன. நானும் ஐயா வைப்போல, மாமாவைப்போல, பெரியப்பாவைபோல, கோபாலகிருஸ்ணரைப் போல  பேச வேண்டும் ........ 

       (காகம் இதழ்:4  ஏப்ரல் 1995 )

 


Monday, February 09, 2026

"எம். சி.ஒரு சமுகவிடுதளைப் போராளி" நூல் ஆசிரியர் எம்.சி.சந்திர போஸ் காலமானார்...

 எம்.சி யின் மகன் சந்திர


-கரவைதாசன்-

அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது - ஆனால்
அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது, தாக்க ஆரம்பித்தால் அது தோற்காது .
-எம். சி. சுப்பிரமணியம்-


ஈழ தேசத்தின் மகாப் பெரிய அறவழிப் போராளி, பொதுமைச் சிந்தனையாளர், விம்புநிலை சமூகத்தின் கல்வியின் தந்தை, கறுப்பாகக் கிடந்த சமத்துவ மற்ற மூடத்தனங்களையே மூலதனமாக வைத்திருந்த தமிழர்களில் சாதாரணமானவர் தொடக்கம் சனாதனர்கள் வரை எடுத்துரைத்து கல்வியாளர் தசநாயக்க என்ற மகான் கல்வி மந்திரியாகவிருந்த கால கட்டத்தினிலே பருத்தித்துறைதொகுதி கம்யுனிஸ் கட்சி எம்பியாகவிருந்த தோழர் பொன் கந்தையாவையும் இணைத்துக்கொண்டு தமிழர்களே தமிழர்களின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது சுமார் இருபத்தைந்து அ.த.க பாடசாலைகளை நிறுவியவர்தான் எம்.சி. என அழைக்கப்படுகின்ற எம்சி சுப்பிரமணியம்.
1956 ம் காலப் பகுதியிநிலேயே ஆலயப் பிரவேசம் தேநீர்கடைப் பிரவேசம் மயானங்களில் சமத்துவத்துக்கான போராட்டம் எனத் தேதியிட்டு வரிசைப் படுத்திக் கொண்டே செல்ல நீண்ட பெரும் பக்க வரலாறு ஈழத் தமிழருக்கு உண்டு. இக் காலத் தேதிகளை தெரிந்து வைத்திருந்த காலக் கண்ணாடி சந்திர போஸ் அண்ணா அவர்களின் இறுதிப் பயண குறிப்பினை எழுதக் கிடைத்த இயற்கையினை வைகிறேன்.
எனில் ,
சந்திர போஸ் அண்ணா இன்னும் எழுதுவதுக்கு அவரது அப்பாவின் வரலாறு குறித்தும் அவரோடு ஒத்த தோழர்கள் குறித்தும் எழுவதுக்கான ஏதுக்கள் அவரிடம் நிறையவே இருந்தன, டென்மார்க்கில் என்னால் கொண்டுவரப்பட்ட “இனி “ சஞசிகையில் கே.டானியல் பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதிருப்பார் அதில் படைப்பாளிக்கு ஒரு சமூகப் பொறுப்புண்டு என்பதையும் படைப்புகளுக்கு ஒரு இலக்கும் பயன்பாடும் சமூகக்கட்டமைப்பும் உள்ளது எனக் குறித்துள்ளார். இத்தகைய ஆக்கச்செறிவும் அறம் சார்ந்து பார்க்கின்ற பக்கச் செறிவும் அவரிடமிருந்தது.
சந்திர போஸ் அண்ணா அவர்களின் அப்பா எம்.சி அவர்கள் காலமாகிய காலம். மிகவும் சிக்கலுக்குரிய ஒரு நேரமாகவிருந்தது. வலதுசாரிய சிந்தனையில் வெளிக்கிளம்பிய இளைஞர்கள் கையில் ஆயுத பெலம் இருந்தது. பேச்சுக்கு சோசலிசம் சமத்தும் பற்றிய பேச்சுக்கள் அவர்களது அரசியல் கடைகளிலே ஏலமிடப்பட்டபோதும் அவர்களிடம் காணப்பட்டதெல்லாம் சுத்த பாசிசப் போக்கே . இடது சாரிகள் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களது பாசிசப் பார்வையில் இடது சாரிகளின் சமூகப் பங்களிப்பு பற்றி பேசுவதும் குற்றமாகப் பார்க்கப் பட்டு வேட்டையாடப்பட்ட காலம்
எனவே சுமார் பத்து வருடங்கள் காத்திருந்து கதைகளின் உரையாடல்களிடையே ஒருவகை சமரச போக்கினை கையாண்டே எம் சி . ஒரு சமூகவிடுதலை போராளி எனும் ஒரு சிறு நூலினை 1999 ஆம் ஆண்டுசந்திர போஸ் அண்ணா வெளிக்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியே அதே பெயரில் பின்பு வந்த தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் அர்பணிப்பு மிக்க எழுத்தும் வாழ்வும் அவரிடமிருந்தபோதும் கன்னை கட்டி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டமற்ற போக்க்கினைத் தான் அவரிடம் காணலாம் .
அவ்வாறே தனது இறுதி நிகழ்வும் தனது பூதவுட லை டொராண்டோ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கியுள்ளார் . அந்த வரலாற்று மிக்க நிகழ்வின் ஒளித்தொகுப்பே இணைக்கப்பட்டது. டொராண்டோ பல்கலைக்கழகத்தினர் உத்தியோக பூர்வமாக அவரது உடலினை பெற்றுச் செல்கிறார்கள். ஆனாலும் அவரது குடும்பத்தினர் அவருக்குகான இரங்கல் உரைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்
அன்பு மறவா
சத்தியதாஸ்