
-கவிதா-
தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் ஏனோ நமது ஈழத்துப் படைப்புகளுக்கு போகும் போது ஏற்படுவதில்லை. கடமைக்காக போவது, அழைப்பின் கட்டாயத்தில் போவது, எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகப்போவது என்று இப்படி பல காரணங்களுக்காகவே ஈழத்துத்திரைப்படங்களுக்கு நாம் செல்கிறோம் என்பதுதான் உண்மை. இப்படித்தான் நானும் ஒரு ஈழத்து திரைப்படத்தைப் பார்ப்பதற்காக் சென்றேன். எமது கலைஞர்களின் படைப்பிற்கு சமூகமளிக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதுவும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கவில்லை. எப்படியோ அலுப்படிக்கப் போகிறது ஆனாலும் போய்வருவோம் என்ற மனநிலையில்த்தான் கிளம்பினேன்.