Wednesday, July 31, 2013

"உறவு " திரைப்படம்.ரசித்தது கவிதா.


-கவிதா-

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் ஏனோ நமது ஈழத்துப் படைப்புகளுக்கு போகும் போது ஏற்படுவதில்லை. கடமைக்காக போவது, அழைப்பின் கட்டாயத்தில் போவது, எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகப்போவது என்று இப்படி பல காரணங்களுக்காகவே ஈழத்துத்திரைப்படங்களுக்கு நாம் செல்கிறோம் என்பதுதான் உண்மை. இப்படித்தான் நானும் ஒரு ஈழத்து திரைப்படத்தைப் பார்ப்பதற்காக் சென்றேன். எமது கலைஞர்களின் படைப்பிற்கு சமூகமளிக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதுவும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கவில்லை. எப்படியோ அலுப்படிக்கப் போகிறது ஆனாலும் போய்வருவோம் என்ற மனநிலையில்த்தான் கிளம்பினேன். 

இந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிப்போட்ட «உறவு» திரைப்படத்திற்கு முதலில் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு முழுநீள ஈழத்துத்திரைப்படம் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக எம்மை நகரவிடாமல் உட்காரவைத்த பெருமை கனடாவைச் சேர்ந்த இயக்குர் திவ்யராஜனையே சாரும். 

Sunday, July 28, 2013

தேவதாசி முறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு

-அ.மார்க்ஸ்-
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System  and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி,  பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam' என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர்.  உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும்  சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு  'Devadasis - Wives of God' என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.

Thursday, July 25, 2013

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

Thursday, July 18, 2013

41வது இலக்கியச் சந்திப்பு - யாழ்ப்பாணம் 2013

ஊடக அறிக்கை:

41 வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை - யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 - 21ம்திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கைஇலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில்பேசுபொருளாக இருந்த - இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்புநிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.

 1.பாரம்பரியக் கலைகள் 
  மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும்அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.

 2.சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில்சாதியம்.

சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)

4.இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள்  மற்றும் கவின் கலைகள்.

தேசிய இனங்களின் பிரச்சினைகள் 
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.

மேற்கண்ட கருத்தாங்கங்களில் பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும்..

 *கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

- 41வது இலக்கியச் சந்திப்புஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம்.

Wednesday, July 10, 2013

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டுவிழா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டியூ குணசேகர, கட்சியின் உபதலைவரும் புனருத்தாபன அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நேபாள அரசின் முன்னைநாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் நேபாள முன்னைநாள் பிரதமரும், நோபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள் மற்றும் தோழர் டியூ குணசேகர ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.  

Tuesday, July 02, 2013

கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம்

sinthuja1
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சுவிஸ் சமஷ்டி அரசின் ஆதரவுடன் நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் உள்ள 22வயதுடைய சிந்துஜா என்ற தமிழ் பெண் தமது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். 16வயதில் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்ற போது தனது விருப்பத்திற்கு மாறாக தனது தந்தை தனக்கு தெரியாத ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அத்திருமணத்தை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் என்றும் சொண்டாக் பிளிக் பத்திரிகைக்கு சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோரை பிரிந்து தனது நண்பருடன் வாழ்ந்து வரும் சிந்துஜா பெரும்பாலான தமிழ் பெண்கள் பெற்றோர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் பெண்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோருடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து சுதந்திரமாக வாழ்வதாகவும் முன்னர் தனது தந்தை எல்லா விடயத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்து அடக்கி வைத்ததாகவும் 22வயதுடைய சிந்துஜா தெரிவித்துள்ளார்.