Showing posts with label ந.சுசீந்திரன். Show all posts
Showing posts with label ந.சுசீந்திரன். Show all posts

Thursday, August 27, 2015

"எம் சமூகத்திற்குச் சாபமா? தரித்திரமா? அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு!

-ந.சுசீந்திரன் -
சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. முதன் முதலில் நான் அவரைச் சந்தித்ததை இன்று எண்ணிப்பார்க்கிறேன். சில காலங்களுக்கு முன்னர் காலமாகிவிட்ட இன்னொரு ஆளுமைமிக்க பெண் சுனிலா அபயசேகர அவர்களது தந்தை சார்ள்ஸ் அபயசேகர, நான் கொழும்பில் நின்றிருந்த வேளை விபத்தொன்றில் காலமானார். அவரது மரணச் சடங்கில் தான் நாங்கள் பரஸ்பரம் அறிந்து கொண்டோம். அவரது கணவர் காலஞ்சென்ற மனோ ராஜசிங்கம் மற்றும் அமரர் நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் அன்று தான் அறிமுகமானேன். சர்வதேசப் பரிசொன்றினைக் கையேற்க அருந்ததி ராய் அவர்கள் பெர்லின் வந்திருந்தபோது நீலன் திருச்செல்வம் அவர்களோடு தனக்கிருக்கும் நட்பினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்பும் கவர்ச்சியும் ஆளுமையுங்கொண்ட சாந்தி அவர்களுடனான நட்பில் நான் எப்பொழுதும் பெருமை கொண்டிருந்தேன்.
வாழ்க்கை பற்றிய தீவிரமான விசாரணகள் கொண்டவர். பங்கேற்பு ஜனநாயகம், பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் முற்போக்கான கருத்துக் கொண்டிருந்ததோடில்லாமல் சிவில் சமூகச் செயற்பட்டாளராகவுமிருந்தார். சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் தன் அனுபங்களினூடு தனக்குச் சரியெனப் பட்டதை துணிவாக முன்வைத்துச் செயற்பட்டு வந்தவர்.
விழுது என்ற அமைப்பின் மூலம் சாந்தி அவர்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களில் எமது மக்கள் பலனடைந்தனர். இலங்கையின் பலவேறு சமுகப்பிரச்சினைகள் தொடக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் என்பது வரை விழுது வெளியிட்ட பல பிரசுரங்கள் மிகவும் பயன்பாடானவை. நண்பர் மதுசூதனன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அகவிழி” என்ற ஆசிரியத்துவத்துக்கான தரமான சஞ்சிகை பலகாலம் விழுது நிறுவனத்தினராலேயே வெளிக்கொணரப்பட்டது. “இருக்கிறம்” என்ற வெகுஜன சஞ்சிகை ஒன்றினையும் ஜனரஞ்சகமாகக் கொண்டுவர முயற்சித்தனர்.

Friday, January 02, 2015

செய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை.

-ந.சுசீந்திரன்- 
முற்கற்பிதங்களையும், விசமப் பிரச்சார உள்நோக்கங் கொண்ட வதந்திகளையும், தனித்த வெறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வுகள் புரிந்து கொள்ளப்படுகின்றன.
அப்படித்தான் ஜம்பவான்கள் போன்று தோரணைதரும் பலரது புரிதல்களும் காணப்படுகின்றன. அவ்வாறான புரிதல்களில் இருந்தே ஒரு கருத்துருவாக்கத்தை, அக் கருத்துருவாக்கம் நியாயமற்றது, எல்லாப் பரிமாணங்களில் நோக்கினாலும் தலைகீழானது, இயங்கா நிலைதேடிச் செயலிழக்கச் செய்வது என்பதை தெரிந்து வைத்திருந்தும், அக் கருத்துருவாக்கத்தைச் சிருஷ்டித்து விடுகின்றனர். பின்னர் அதனை நிலைநிறுத்த, மிகவும் மலினமான தர்க்கங்களை, அவசர அவசரமாக இறைத்து விடுகின்றனர்.
நாம் செயற்படுவதென்பது மற்றவர்கள் எதை விரும்புவார்கள், எவ்வாறு பொருள் கோடல் செய்வார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல, இப்படிப்பட்டவர்களது புறநிலைப் பார்வை சகிக்கமுடியாதபடி முற்றிலும் அபத்தமானதாக இருக்கின்றது, நாம் சற்றே குலைந்துவிடும்போது, எமக்கு பெரிய மனச் சோர்வினையையும் அவை தந்துவிடுகின்றன.
ஆனால் கிசுகிசுச் சமாச்சாரங்களில், கள்ளச் சந்தோஷமடைகின்ற பேர்வழிகள், பேரில்வழிகளுக்கு இவை உற்சாகத்தைக் கொடுக்கின்றன போலும்.
போருக்குப் பின்னர் புகலிடத்தில் இடம்பெற்ற பல சிறு-, பெருவிடயங்கள் குறித்து இலங்கை அரசுக்கு உளவுச் செய்தியாகச் சென்றுவிடச் சாத்தியங்கள் உள்ளதால் பலவற்றைச் சிலகாலங்கள் வரை எழுதமுடியாது. அப்படி எழுதுவது பொறுப்பற்றது. பல நண்பர்களின் பெயரைச் சொல்லமுடியாது.
முஸ்லிம் பெண்ணொருவர், இலங்கையின் வடபகுதியில் தமிழ்ப் பெண்கள், தமிழ் பெண் போராளிகள், போராளிகளின் விதவை மனைவிகள் எதிர்கொள்ளும் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, வெளிக்கொணர, அவர்களுக்கு வாழும் துணிவை ஏற்படுத்தத் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரது வழங்கும் தகவல்கள் எங்களை உறைய வைத்து விடுகின்றன.
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்துள்ளதா என்பதைக் கண்டறிய போர் நடந்த சில இடத்து மண் பரிசீலிக்கப்பட்டிருகின்றது.
நான் இலங்கை அரசினதோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினதோ ஆதரவாளானாக ஒரு போதும் இருந்ததில்லை. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சிறுபான்மை இனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடக்கம் அண்மைய, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலை வரை, அது எள்ளின் அளவேயாயினும், எமது சக்திக்கேற்பச் செய்து கொண்டிருகின்றோம். வண. நந்தன அவர்கள் கண்டியில் இருந்து சிறைக் கைதிகளுக்காக ஆற்றும் பணிக்கு நான் தலை வணங்குகின்றேன். எக்னாலிகொட காணாமற் போகச் செய்ததன் பின்னர், சந்தியாவின் போராட்டம் தொடர்கின்றதல்லவா, அவர் சந்திக்கும் அவதூறுகள், குழிபறிப்புக்கள் சொல்லி மாளாது. போர்க் குற்றவாளி ஜெனரல் டயஸ் ஜெர்மனியின் தூதுவராகச் சிலகாலம் இருந்தபோது அவரைக் கைது செய்து சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பங்களிப்புக்கள் எப்படி இருந்திருக்கும்!
அண்மையில் றுக்கி பெர்னாண்டோ ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். இனி, “ஐ.நா வை நம்பிப் பிரயோசனமில்லை.” அவரது அனுபவத்தில் சொல்கின்றார். இது எமக்கு எப்பவோ தெரியும் என்று இலகுவாகக் கூறிவிட எம்மால் முடியாது. இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த மேற்கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பலவகை அச்சுறுத்தல்கள் இலங்கையில் இருந்தபோதும் நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய, போன்ற சிங்கள இனத்தவர்களும் தான் என்பதை எத்தனை தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர் எனபது கேள்வியாகவே இருக்கின்றது. இவர்கள் செய்யும் எதிர்ப்பு அரசியலின் மதிபீட்டுக்காக எங்கள் அன்றாட வாழ்வும் இல்லை. சமூகமும் இல்லை.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எப்பொழுதும் வலியுறுத்தி, அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களின் சுயாட்சி போன்ற தீர்வுகளைப் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்தவர்கள், இலங்கையின் அரசியல் யாப்புக்கள் அதிலும் 1972, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள், எப்படி ஒரு சர்வாதிகார அரசினை உருவாக்கி நிற்கின்றது என்பது பற்றியெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியியவர்கள், இவற்றில் உரை நிகழ்த்தியுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உதாரணமாக வெலியமுன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, ஜயம்பதி விக்கிரமரட்ன, வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் எவ்வகைப் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று நோக்குகின்றோமா?

Thursday, February 20, 2014

லெனின் எம். சிவம் அவர்களின் A GUN & A RING


-ந.சுசீந்திரன்- 

லெனின் எம். சிவம் அவர்களின் திரைப்படம் A GUN & A RING 17.02.2014 அன்று ஜெர்மனியில் பெர்லினில் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களின் தரத்தில், இந்திய வணிக, வெகுஜன சினிமாக்களின் பாதிப்பு பெருமளவு இல்லாமல், தமிழ் வெகுஜனங்களுக்கு என்று இல்லாமல் உலகப்பொதுப் பார்வையாளரை நினைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது இத் திரைப்படம். 2013 இல் சீனாவின் சங்காய் சர்வதேச 16 ஆவது திரைப்பட விழாவிலும் அதே ஆண்டு கனடாவின் மொன்றியல் சர்வதேச 37 ஆவது திரைப்பட விழாவிலும் காட்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டதுடன் 2013 ஆண்டின் கோல்டன் கோப்பிலட் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

மிகக் குறைவான நிதி ஆதாரங்களுடன் அதேவேளை தொழில் நுட்பரீதியில் நிறைவாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும், அனேகமாக புகலிடத்தில் வாழும் ஈழத் தமிழர்களையே நடிக்க வைத்திருப்பதும், ஆர்ப்பாட்டம் இல்லாத கனேடிய நிலைக்களன்களும், காட்சிகளும் இயக்குனர் லெனின் எம். சிவம் அவர்களுக்கு பாரிய சவாலை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதையும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வந்து விடுவார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் முடிகின்றது. 

Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான். 

Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.

Monday, February 13, 2012

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்



உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும்

-ந. சுசீந்திரன்-

„ Ihr, die ihr auftauchen werdet aus der Flut 
 In der wir untergegangen sind 
 Gedenkt 
 Wenn ihr von unseren Schwächen sprecht 
 Auch der finsteren Zeit 
 Der ihr entronnen seid…“
                                  -Bertolt Brecht

‚தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்‘ என்னும் தொடரில் வருகின்ற தாயகம் என்ற பதம்  இக் கட்டுரையில் இலங்கையை மட்டுமே சுட்டுகின்றது. ‚தமிழ் மனம்‘ என்பது தமிழ் அடையாளம், தமிழ் நிலைப் பட்ட உணர்வு மற்றும் தமிழ் பண்பாடு, தமிழ்  மனப்போக்கு போன்ற கருத்தமைவுகளில் எழுதப்படுகின்றது.   
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உருவாகிய இலக்கிய முயற்சிகளை, குறிப்பாக இலக்கிய சந்திப்பு என்ற தொடர் நிகழ்வை முன்வைத்து,  அதனூடாக  தமிழ் மனம் என்பது  முற்றிலும் புதிய சூழலை எதிர் கொண்டு எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது? தன் சுயத்தை இப் புதிய சூழலுக்கேற்ப தகவமைப்பதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களைத், தன்  இருப்புக்கு எவ்வாறு  சீரமைத்துக்கொண்டது என்பதையும், புகலிடக் காலத்தின் பல்வேறு நிலைகளில்  அடையாளத்தின் மாறுபடு தன்மையை இலக்கியத்தின் துணைகொண்டு  இனங்காணமுனைவதுமே  இக்கட்டுரையின் நோக்கமாகும். கவிதைளே எடுத்துக் காட்டுக்களுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றன

Monday, December 12, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்”

 விமல் குழந்தைவேலின் "நாவல்"
-ந.சுசீந்திரன்-

 ”வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”
(க.கைலாசபதி, இலக்கியச் சிந்தனைகள், கொழும்பு 1983)

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது  நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து  இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான  2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில்  எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட  மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும்  இந் நவீனம் இருக்கின்றது. 

கதையமைப்பு: