Thursday, February 15, 2024

தலைவராக டொமோகோ தமுரா (JCP)

-கரவைதாசன்- 

ஜப்பானிய கம்யுனிஸ் கட்சி ஜூலை 15ந் திகதி 1922ம் ஆண்டு பழமையான கிறித்தவ சமூகவாதிகளிளிருந்தும் சிந்திகட் சிந்தனாவாதிகளிலிருந்து பிரிந்து வந்த சோஷலிச சிந்தனாவாதிகளினால் டோக்கியோவில் தொடங்கபட்ட ஜப்பானிய தொன்மையான மாக்சிய சோஷலிச கட்சியாகும். அதன் ஆரம்ப காலங்களிருந்தே இக்கட்சியானது சோஷலிச முகாமினை சார்ந்தே வந்தது. 1960களில் சோவியத் சம்மேளன சமூகத்திலிருந்து சீனா தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறியபோது அணிசேரா சோஷலிசக் கொள்கையினை கடைப்பிடித்து ஜேசிபி தனி வழியாகப் பயணித்தது, ஆனாலும் சீனாவில் நடந்தேறிய கலாச்சாரப்புரட்சியினை அந்நாட்களில் ஜேசிபி ஆதரித்தது. எந்தவொரு நாடும், இராணுவ முகாம்களும் அணு ஆயுதங்களையும் வைத்திருப்பதை ஜேசிபி எதிர்க்கிறது அதன் போக்கில் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை முறைமையினை வன்மையாக கண்டித்து வருகிறது. உலகின் முதலாளித்துவ முகாம்களினால் ஏற்படுத்தப்படும் போட்டிச்சண்டைகளில் ஜப்பான் ஈடுபடக் கூடாது என்பதனை முதல்க் கொள்கையாகப் பிரகடணப்படுத்தி வருகிறது. மாறாக சர்ச்சைகளைத் தீர்ப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இராணுவத் தீர்வுகளுக்கு அல்ல என்று வாதிடுகிறது. ஐக்கிய நாடுகளின் சாசனத்தை ஜப்பான் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஜேசிபி கூறுகிறது. இதற்காக யப்பானின் அரசியல்ச் சட்டத்தில் 9வது பிரிவை திருத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஜேசிபி அதன் தொடக்கத்திலிருந்து ஜப்பானிய பெண்ணிய முகாமுடன் நட்புறவைப் பேணி வருகிறது, மேலும் ஜப்பானின் முக்கியமாக இன்னும் பெண்கள் உரிமைப் பிரச்சினைகளில் மிகவும் தீவிரமாக உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய இடைவெளியை நீக்குவதைக் கட்சி ஆதரிக்கிறது. மேலும் ஜப்பானிய சகல துறைகளிலும் குறிப்பாக அரசியல் வாழ்வில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது, அதன் உச்சமாக ஜேசிபியின் மத்திய குழுவின் செயற்குழுவின் தற்போதைய தலைவராக டொமோகோ தமுரா எனும் பெண் தோழரை தேர்ந்தேடுத்துள்ளது இவரது பொறுப்புக்காலம் (பதவிக்காலம்) 2-3 ஆண்டுகளைக் கொண்டது.

Friday, April 21, 2023

தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.

புதுயுகம் மலர்க!14.4.2023 கரவை செஞ்சுடர் விளையாட்டுக் கழக மைதானம் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும். இந்த 2023 நடப்பாண்டில் சில நிழல்கள். * கழகத்தின் கரப்பந்தாட்ட மைதானத்துக்கு மின்சார விளக்கமைத்து கொடுத்தல். *குடிநீர்தேவைக்காக குழாய்க் கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி தாங்கி வைத்துக் கொடுத்தல். *புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் விருந்தினர் அனைவருக்கும் மாலை நேர உணவு வழங்கல். என மூன்று விடயங்களுக்கும் தவம் அறக்கட்டளையினராகிய நாம் மகிழ்வுடன் பூரண அனுசரணை வழங்கியிருந்தோம் . இந்தாண்டின் சிறப்பு, 2023 விழாவில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பேச்சாளர்கள், விழாவுக்கான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுசரணை வழங்கிய வியாபாரவள்ளல்கள் அனைவருமே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள். இந்த மூச்சுடன் தொடர்ந்து பயணியுங்கள் நிறைந்த பயனைக் காணலாம்.

Monday, January 30, 2023

அன்று துரைராசா

அநுபவபகிர்வு....... அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்." என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன். நானும் அவரும் எமது பகுதியில் அருகருகே வாழ்ந்து வந்தோம் என்பதை கடந்து வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொண்டு எம்மை பொறுப்புடன் உருவாக்கி அசல் மனிதர்களாய் வாழ்வதற்கான முன்னெடுப்புகளை முன்செய்தோம் பாதியிலே படிப்பினை நிறுத்திய பல எமது கிராமத்து இளைஞர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடத்தினோம். திருக்கோணமலையிலிருந்து வந்திருந்த பொலிஸ் மார்க்கண்டு ராஜாஅண்ணாவிடம் மாலை நேரத்தில் ஆங்கில மொழியினை கற்றோம். இதன் தொடர்ச்சிதான் தனது பிள்ளைகளை ஆங்கில மொழிவழிக் கல்வியில் அவர் கற்பிக்கும் வழிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். மொத்தத்தில் கல்வியின் அவசியத்தினை உணர்ந்தவராக அவர் இருந்தார். எமது கிராமத்தின் மூத்த தலைமுறையினைச் சார்ந்த வ. தங்கமணி , க.இராசரத்தினம் , மு.தவராசா, வீ.எஸ். சிவபாதம், ஆ.சிவகுரு , ஆ.தங்கராசா இன்னும் சிலர் கிராமத்தின் கட்டுமானப் பணிகளான பாடசாலை , சனசமூகநிலையம் , கோவில்கள், சுடலை, தெருக்கள், சங்கக்கடை போன்றவற்றில் களப்பணியாற்றி அவற்றில் அபிவிருத்தியினையும் கண்டனர். இடதுசாரிகளான இவர்களிடையே ரசிய சார்பு ,சீன சார்பு எனத் துருவப்பட்ட நிலையும் இருந்து வந்தது . 1978ஆம் ஆண்டளவில் இத்துருவப்பாட்டு நிலையிலிருந்து விலகி அன்று இளைஞர்களாக இருந்த நாம் ஒரு நிலையில் நின்று உருவாக்கியதே கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகம். என்னிலும் மூன்று வயதுகள் குறைந்த துரைராசா என்னோடு வயதுகள் ஒத்த இளைஞர்களுடன் சேர்ந்து கழகத்தின் களப் பணியாற்றிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் . விளையாட்டுத் துறை , மலை நேர வகுப்பு , கரவை சகாதேவன் குடியிருப்பு ஞான வைரவர் ஆலயத்துக்கு மின் இணைப்பு என பல்வேறு ஆக்கப்பணிகளில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டு செயற்பட்டார். வந்துபோன நாட்களில் 1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம். குற்றப் புலனற்ற கிராமமாக அந் நாட்களில் நாம் கிராமத்தினை வழி நடத்தினோம். கிராமத்தின் வளர்ச்சி வலதுசாரிய அரசியல்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதன் உச்ச செயற்பாடாக ஆயுதாரி இயக்கங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக வந்து கன்பொல்லைதியாகிகளின் சிலைகளை உடைக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு ஊரவர்கள் திருப்பத் தாக்கவே அவர்கள் மறைந்தோடினர். தீ.ஒ.வெகுசன அமைப்பின் ஆயுதத்துக்கு அப்போது பொறுப்பாக சி. புலேந்திரன் இருந்தார். அவர் அந்த கைத்துப்பாக்கியினை வெளிக்கொணர்ந்து சத்தவெடி வைத்தது அப்போது ஆயுதாரி இயக்கப் பொடியளை அந்நாளில் கிலிகொள்ள வைத்தது. மறு நாள் ஊரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முடிவானது. ஆனால் எந்த நடவடிக்கையுமற்று நாட்கள் சென்றன. நானும் உலகனும் துரைராசவும் தோழர் சி.கா.செந்திவேலிடம் சென்று போராட ஆயுதம் கேட்டோம். செந்தில் தோழர் நாம் வந்த விடயம் எனது தந்தையார் தவத்துக்குத் தெரியுமா என என்னிடம் கேட்டார். தெரியாது எனச் சொல்லவே ,நீ போய் படியும் என அறிவு சொல்லி அனுப்பி வைத்தார். நல்லவேளை ஐயாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆயுதத்தினை எப்படி கையாள்வதென எங்களுக்கு மூன்றுநாள் வகுப்புகள் எடுத்தார். இத்தனைக்கும் கட்சியில் நாம் அங்கத்தவர்கள் இல்லை. அவரின் பொறுப்பினை இன்றும் நினைத்து மெச்சுகிறேன். ஆனால் நாம் ஓயவில்லை எங்கள் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் நான், நேசன்,ரங்கன்,உலகன்,துரைராசா,ரவி, எனது மச்சான் செல்வா இவ்வளவு பேருமாக சேர்ந்து கண்டன சுவரொட்டிகளை தயார் செய்தோம். பருத்தித்துறை ,மந்திகை, வல்வெட்டித்துறை, நெல்லியடி நகரங்களில் ஒட்டிவைத்தோம். நெல்லியடி மத்தியசந்தை சுவரின் மேற்பகுதியில் நேசனும் துரைராசவும் பெரும் கண்டனப் பதாகையை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது நான் கீழிருந்து டோச் வெளிச்சத்தினை சுவருக்கு பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை ரங்கன் சந்தியிலிருந்து சமிக்கை தந்தான் ஆமியின் டிராக் வண்டி வருவதாக நான் திருமகள் ஸ்டோர்ஸ் முன் ஒழுங்கைக்குள் இறங்கினேன் செல்வா என்னை பின் தொடர்ந்தான் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்தோம். வந்த டிராக் வண்டி துரைராசவையும் நேசனையும் நோக்கிச் சுடத் தொடங்கியது அவர்கள் இருவரும் கூரைக்கு தாவி பின்பக்கமாக மறைந்துவிட்டார்கள். அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும். எங்களது கண்ணீர்ப் பூக்களை மலர்க் காணிக்கையாக சாத்தியப்படுத்திய நண்பர் திலகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றிகள்...

Sunday, November 13, 2022

Tillykke ! Ratch

Tillykke ! Ratch டென்மார்க்கில் பிலுண்ட் நகரசபையின் இரண்டாவது பதில் நகரபிதா சமூக ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த நண்பர். ஜெயராஜா ராசையா Jeyarajah Rasiah er ny 2. viceborgmester i Billund kommune Nyheder november 10, 2022
 வருடங்களுக்கு முன்பாக அன்று எமது டென்மார்க் நாட்டின் Integrationsminister Mattias Tesfaye தனது Tweeter செய்து மூலம் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அச்செய்தியில் அவர் எழுதியிருந்தார் தாய்லாந்து, ஸ்ரீ லங்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து டென்மார்க்கிற்கு குடிபெறுபவர்களால் டென்மார்க்கில் பாரியளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்றும், மற்றும் இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே வருபவர்களால் தனக்கு இணைவாக்க அமைச்சர் என்ற முறையில் அவர்களை டென்மார்க்கில் ஒருங்கிணைப்பு செய்வதற்கு கூட தான் நேரம் பாவிக்கத்தேவை இல்லை என்றும், அதைவிட இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே அந்த மக்கள் வந்து குடியேறுவது டென்மார்க்கிற்கு மிகவும் நல்ல விடயம் எனவும் சொல்லியிருந்தார். இவர் இந்த அறிவிப்பில் இலங்கையனரான எங்களையும் சேர்த்ததை நினைத்து நாம் சந்தோசப்படனும். இலங்கையரை/ தமிழர்களை பல அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் இப்படியாக முன்பும் பலதடைவைகள் பாராட்டி இருக்கிறார்கள். ஆகவே இது முதல் தடவை அல்ல. என்றாலும் இன்றைய வெளிநாட்டவர் பற்றிய அரசியல் சூழ்நிலையில் இந்த அங்கிகாரம் எமக்கு தொடர்ந்தும் இருப்பது இலங்கையரான எமக்குப் பெருமை. இதை ஆங்கிலத்தில் Ethnic branding அல்லது ethnic profiling என்று சொல்லுவார்கள். இது ஐரோப்பாவில் இன்றைய சூழ்நிழையில் எமக்கு இந்த Ethnic branding மிக முக்கியம். இப்படிப்பட்ட அபிப்பிராயம் இருப்பது எமது வருங்கால சந்ததிகளுக்கு மேலும் நல்லது மற்றும் அவர்களுக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்புக்களை தொடர்ந்தும் கொண்டுவரும் மற்றும் முன்னேற்றும் வழியினைக் காட்டும் . இந்த அங்கீகாரம் எமக்கு கிடைப்பதற்கு முழுக்காரணம் நாம் நெகிழ்வான( fleksible ) முறையில் எமது கலாச்சாரம் மற்றும் எமது பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை டென்மார்க்கில் வாழும் வாழ்வில் ஒப்பீட்டளவில் கணிசமானவர் கொள்ளல் எனும் நிலையாகும் நாமும் எமது வரப்போகும் சந்ததிகளும் இன்னமும் பெரிய வெற்றிகளை பெறவேண்டும் என்றால் இரண்டாவது தலைமுறையை நாம் இன்னமும் கூட நன்றாகவும் இருமொழியிலும் தேர்ச்சியானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ராஜ்ஜைப்போல் வளர்க்க வேண்டும் . அவர்களுக்கு இன்னமும் கூட தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் வாழும் Dansk- tamil இணைவாக்கக் கலாச்சாரத்தை பெரிதும் நாம் ஆதரிக்க வேண்டும் . ராஜ்ஜை பவருடங்களாக நான் நன்கறிவேன் அன்புருகப் பேசுவதுக்கும் பழகுவதுக்கும் இனியவர். டென்மார்க் தொழில்க் கல்லூரியில் கல்வி பயின்ற தொழில்க் கல்விப் பட்டதாரியவர். இரண்டு மகள்களின் அன்பான அப்பா, அவரது வீட்டில் நான் குடும்பமாகச்சென்று விருந்துண்டுள்ளேன். மகிழ்ந்துபோயுள்ளேன் வாழ்த்துகள் ராஜ். அரசியல் வாழ்வில் உங்கள் நேர்மைக்கும் தகுதிக்கும் உழைப்புக்கும் இன்னும் இன்னும் கெளரவமிக்க பதவிகளும் பொறுப்புகளும் உங்களை நாடி வரும் ...

Wednesday, July 06, 2022

மரியாதி கலந்த அஞ்சலிகள் -தமிழ் ரைம் ராஜநாயகம் !!

 -கரவைதாசன்-


ஒரு அறிவிக்கப்பட்ட வர்க்க துருவப்பட்ட சமசமாஜ சொசலிஸ்டாக எங்களையெல்லாம் ஆகர்ஷ்சித்த தமிழ் டைம்ஸ் ராஜநாயகம் அவர்கள் இனி எங்களுடன் இல்லை. இறக்கும்போது இவருக்கு வயது எண்பத்தியாறு என்கிறார்கள் .இவர் தொழில்ரீதியில் மனித உரிமை சட்டத்தரணியாகத் தொழிற்பட்டவர். தொழிற்சங்கவாதி, நாலாமுலகச்செயற்பாட்டாளர் என அறியப்பட்டபோதும் பாட்டாளிவர்க்க துருவப்பட்ட ஊடகவியலாராக இவரை முன்தள்ளி நிற்பது TAMIL TIMES இதழே. இப்பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டுக்காக பல தலைமுறைகள் தாண்டியும் எங்களது சுவட்டினைத் தேடப்போகும் இனிவரும் தலைமுறைகள் இவரையும் இவர் விட்டுச்செல்லும் TAMIL TIMES ஆவணத்தினையும் நிச்சயம் படிப்பார்கள். இனிவரும் புகலிட தமிழ் தலைமுறைக்கு நேர்மையின் சுட்டியாக ஆங்கில மொழியில் அமைத்துள்ள TAMIL TIMES இதழ் இவரது தொலை நோக்கில் ஆங்கில வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட சமசமாசக் கட்சியின் உறுப்பினரான இவர் 1970 ஆம் ஆண்டு கட்சி அரசியலிருந்து வெளியேறியவர் பின் கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கவேயில்லை. ஆனால் அவர் அரசியலில் இருந்தார் .

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரான அமரர் லண்டனில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் அனுபவத்தில் பழையமாணவர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினை உருவாக்கி புகலிடத்து கல்விசார் வளங்களை தாயகத்து எடுத்துச்செல்ல வழிகோலியவர்.


கன்பொல்லையில் எழுபதுகளில் சாதிய சமத்து வத்துக்காக வெடித்த குண்டுகளால் வடமாகாணமே அதிர்ந்தது. கொழும்பில் அந்நாட்களில் அது பெருவெடிப்பாக வியாபித்திருந்தது அதன் முன்னணிப் போராளிகளில் ஒருவராக எனது தந்தையார் இருந்தது எனது தந்தையாரை அறிந்த ராஜநாயகம் அவர்களுக்கும் எனக்கும் உறவாக அமைய எனக்கமைந்த பேறு. தொலைபேசியில் உறவாடி வந்த உறவு இவரது சகா சிந்தனைப் பரா (கு.பரராசசிங்கம் ) அவர்களது நினைவுக் கருத்தரங்குக்கு நான் லண்டன் சென்றவேளை நேரில் கண்டு உரையாடினேன். அதன் பின் பலதடவை சந்தித்துப் பேசும் வாய்ப்புகிட்டியது. ஒரு நல்ல லெஜனை இழந்துவிட்டோம். உங்களிடம் நானும் கற்றுக்கொண்டேன் சென்று வாருங்கள்! A MAN OF PRINCIPLE 

Thursday, June 09, 2022

அருட்திரு.கீத பொன்கலன்

 


-மல்லியப்புசந்தி திலகர் -

தான் ஒரு மதகுருவானபோதும், மலையகத்தவர் அல்லாதபோதும் மலையக மக்கள் குறித்த அக்கறையாளராகவும் ஆய்வாளராகவம் திகழ்ந்த அருட்திரு.கீத பொன்கலனின் மறைவு மலையக அரசியல், சமூக ஆய்வுப்பரப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதத்தைக் கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர். அன்னாருக்கு மலையக மக்கள் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


பண்டாரவளை லியோ மார்கா ஆச்சிரமத்தைச் சேர்ந்த அருட்தந்தை கீத பொன்கலன் திருகோணமலை கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி மரணமானார். இவரது இழப்பு குறித்து அனுதாபச் செய்தியொன்றை வெளிளியட்டிருக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு ஆரம்ப கல்வியை கற்று, கண்டி குருநிலைக்கல்லூரியில் மறையியல் பட்டம்பெற்று பின்னர் பெல்ஜியம் லுவேன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றவரான சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் மதகுருவாக மலையகப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக வாழ்ந்தவர். இதனால் மலையக மக்கள் தொடர்பான பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மலையக மக்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் தொழில்நுட்ப கல்வி, ஆசிரியப்பயிற்சி என பல்வேறு செயற்றிட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர். பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை தனது ஆய்வின் மூலம் எழுதி வந்தார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் புலமையாளரான இவர் எழுதிய நூல்கள் பல்வேறு விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகளை; கொண்டதாக அமைந்துள்ளமை சிறப்பு. ‘மலையகத்தமிழரும் அரசியலும்’ எனும் இவரது நூல் காலனித்துவ காலம் முதல் 1990 கள் வரையான மலையக மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆவணமாகும். 

தனியே ஆய்வாளராக மாத்திரமல்லாது மலையக சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடல்கள் சந்திப்புகளில் பங்குபற்றி வந்த இவர் மலையக மக்களின் சுபீட்சத்துக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மலையகப் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டு திட்டத்தயாரிப்புகளின் போதும் இப்போது முன்வைக்கப்படவுள்ள ஐந்து ஆண்டு திட்டத் தயாரிப்புகளின்போதும் தனது கருத்துக்கள் மூலம் பங்களிப்பு செய்தவர். ‘பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவகம்’ (Trust) குறித்த அவரது ஆங்கில ஆய்வு நூல் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

மலையகப் பூர்விகம் அல்லாதவர்கள் மலையக இலக்கியத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்திருக்கும்போதும் கூட ஆய்வு மற்றும் செயற்பாட்டு பக்கங்களில் மிகக்குறைந்தளவினரே பங்களிப்பு நல்கியுள்ளனர். அந்த வகையில் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை, பாலசிங்கம், ஞானமுத்து போன்றவர்களின் வரிசையில் மலையக மக்களுடன் தொடர்புடைய ஆய்வு முயற்சிகளில் பங்கேற்ற பெருமை அருட்திரு.கீத பொன்கலன் அவர்களுக்கு உண்டு. மலையக தேசியம் குறித்த தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்த அன்னாரின் மறைவு மலையக ஆய்வு முயற்சிகளில் ஏற்பட்ட ஓர் இழப்பாகும். அன்னாரின் இழப்புக்கு மலையக மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். 

நன்றி: நமது மலையகம்