Wednesday, July 06, 2022

மரியாதி கலந்த அஞ்சலிகள் -தமிழ் ரைம் ராஜநாயகம் !!

 -கரவைதாசன்-


ஒரு அறிவிக்கப்பட்ட வர்க்க துருவப்பட்ட சமசமாஜ சொசலிஸ்டாக எங்களையெல்லாம் ஆகர்ஷ்சித்த தமிழ் டைம்ஸ் ராஜநாயகம் அவர்கள் இனி எங்களுடன் இல்லை. இறக்கும்போது இவருக்கு வயது எண்பத்தியாறு என்கிறார்கள் .இவர் தொழில்ரீதியில் மனித உரிமை சட்டத்தரணியாகத் தொழிற்பட்டவர். தொழிற்சங்கவாதி, நாலாமுலகச்செயற்பாட்டாளர் என அறியப்பட்டபோதும் பாட்டாளிவர்க்க துருவப்பட்ட ஊடகவியலாராக இவரை முன்தள்ளி நிற்பது TAMIL TIMES இதழே. இப்பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டுக்காக பல தலைமுறைகள் தாண்டியும் எங்களது சுவட்டினைத் தேடப்போகும் இனிவரும் தலைமுறைகள் இவரையும் இவர் விட்டுச்செல்லும் TAMIL TIMES ஆவணத்தினையும் நிச்சயம் படிப்பார்கள். இனிவரும் புகலிட தமிழ் தலைமுறைக்கு நேர்மையின் சுட்டியாக ஆங்கில மொழியில் அமைத்துள்ள TAMIL TIMES இதழ் இவரது தொலை நோக்கில் ஆங்கில வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட சமசமாசக் கட்சியின் உறுப்பினரான இவர் 1970 ஆம் ஆண்டு கட்சி அரசியலிருந்து வெளியேறியவர் பின் கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கவேயில்லை. ஆனால் அவர் அரசியலில் இருந்தார் .

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவரான அமரர் லண்டனில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் அனுபவத்தில் பழையமாணவர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினை உருவாக்கி புகலிடத்து கல்விசார் வளங்களை தாயகத்து எடுத்துச்செல்ல வழிகோலியவர்.


கன்பொல்லையில் எழுபதுகளில் சாதிய சமத்து வத்துக்காக வெடித்த குண்டுகளால் வடமாகாணமே அதிர்ந்தது. கொழும்பில் அந்நாட்களில் அது பெருவெடிப்பாக வியாபித்திருந்தது அதன் முன்னணிப் போராளிகளில் ஒருவராக எனது தந்தையார் இருந்தது எனது தந்தையாரை அறிந்த ராஜநாயகம் அவர்களுக்கும் எனக்கும் உறவாக அமைய எனக்கமைந்த பேறு. தொலைபேசியில் உறவாடி வந்த உறவு இவரது சகா சிந்தனைப் பரா (கு.பரராசசிங்கம் ) அவர்களது நினைவுக் கருத்தரங்குக்கு நான் லண்டன் சென்றவேளை நேரில் கண்டு உரையாடினேன். அதன் பின் பலதடவை சந்தித்துப் பேசும் வாய்ப்புகிட்டியது. ஒரு நல்ல லெஜனை இழந்துவிட்டோம். உங்களிடம் நானும் கற்றுக்கொண்டேன் சென்று வாருங்கள்! A MAN OF PRINCIPLE