Sunday, September 30, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்

ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு 

-கார்த்திகேசு  சிவத்தம்பி -

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.



சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத வெளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.

உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப் பண்பினவாக இருக்கவில்லை.

இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.

அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.

அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்தது, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.

அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.

தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.

காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.

சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.

தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திலிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.

அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.

சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.

அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.

சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அம்சங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.

நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத் தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.

மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.

சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப் பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.

சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.

'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.

தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.

தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.

சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற் சீரமை'யிலும் தங்கியிருந்தது.

இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.

சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.

சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.

தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.

சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.

அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.

நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச் சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.

பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.

நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.

சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.

சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.

பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.

அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று.

தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.

நன்றி:தினகுரல் 29.07.2001.

No comments: