Monday, January 24, 2011

பிரகித் எக்னலிய கொட

பிரகித் எக்னலிய கொட இலங்கை அரசால் 


கடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது.



-உமா-  
ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது.

இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader   ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன.

ஊடகவியலாளரும், கேலிச்சித்திரகாரருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன்(24.01.2011) ஒரு வருடமாகிறது. பிரகித் பல ஆண்டுகாலமாக தனது செயற்பாடுகள் மூலம் இலங்கையில் நிலவும் அரசபயங்கரவாதத்திற்கும், மனிதவுரிமை மீறல்களிற்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். இவரது மனைவி சந்தியாவிற்கும், அவரது இரண்டு மகன்மாருக்கும் இவர் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரை கிடைக்கவில்லை. இவரது மனைவி சந்தியா, தனது கணவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேசமயம்;, யுத்தத்தத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களினதும் உரிமைகளிற்காகவும்;, யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் உறவுகளுடன் இணைந்து பல போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தியாவிற்கு . .

எங்கோ தொலைவில் கேட்கும்
துப்பாக்கிச் சன்னம்,
திடீரென்று ஒலிக்கும் தொலைபேசி
வாசலில் கேட்கும் வாகனச்சத்தம்,
அச்சம் தரும் நிகழ்வுகளாக . .
வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும்
எழுதப்படும் ஒவ்வொரு வரியும்
கீறப்படும் ஒவ்வொரு சித்திரமும்
மௌனிக்கப்படும்
துர்ப்பாக்கிய தேசத்தின்
புதல்வி நீ

உனது கனவுகள் நொருக்கப்பட்டு
உனது சிறு குருவிக்கூட்டின் அழகு சிதைந்தது.
துயரும், கண்ணீரும் கலந்த
வெறுமையும் உன்னை நெருக்க,
அப்பாவைப் பற்றிக் கேட்கும்
உன் குழந்தைகளிற்கு பதில்களைத் தேடும்
உன் பிரயத்தனங்கள்.

உனது கணவனைத் தேடியும்
உன்னைப் போன்ற தோழிகளின்
சுமையையும் சுமந்து
நீ எடுக்கும் எத்தனங்கள்,
சீற்றத்துடனும் நம்பிக்கையுடனும்
எழுந்து வரும் அலையென
அதிகாரப ;பாறையிற்;பட்டு
நிசப்தமாய் மீளவும் தொடர்கின்றன.


உனது உறுதியும்,
நம்பிக்கையும, கோபமும்
நீதித் தாயின் கண்கட்டைக்
கிழித்தெறிந்து
அசமத்துவ தராசுகளை
உடைத்தெறியும்.


அந்தப் பொழுதில்
உதிக்கும் சூரியனின் கதிர்களின் வெப்பம்
விழிநீர் பொசுக்கி
உனது முகத்தில்
புன்னகையின் சித்திரங்களைக் கீறிச் செல்லும்.

24 .11 .2011











Thursday, January 20, 2011


வாழும், வாழவிடும்

-வ.அழகலிங்கம்-


துனெசியாவில் தற்கொலை செய்த மாணவனான மோகமட் பவ்ஆசிசி இனிமேல் வறுமையும் இல்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை' என்ற தனது மரணசாசனத்தை எழுதி வைத்துவிட்டே தற்கொலை செய்தார். படித்துவிட்டு வேலையில்லாமல் றோடுடோக அலைந்து திரியும் உலகம் முழுதுமுள்ள இளைஞர்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது இவ்வாசகம்.
2010.12. 17 ந்தேதி படித்த பட்டதாரியான 26 வயதேயான மொகமட் பவ்ஆசிசி பலநூறு தடவை வேலைகளுக்கு மனுப்போட்டுக் கிடைக்காததால் ஈற்றில் தெரு ஓரத்தில் காய்கறி பழங்கள்விற்று அதால் கிடைக்கும் சிறு வருவாயால் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்தார். பொலீஸ் அவர் சரியான அனுமதிப் பத்திரம் பெறமால் தெருவியாபாரம் செய்தார் என்ற பேரில் அவரது அற்ப தளபாடங்களையும் அவரது காய்கறி பழங்களையும் பறித்துவிட்டது. இந்தக் கொடுமையைத் தாங்காத அந்த இளைஞன் உள்துறை அமைச்சின் காரியாலயத்திற்கு முன்னால் தனக்குமேல் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தித் தற்கொலை செய்து கொண்டான். உலகிலுள்ள லட்சோப லட்சம் இளைஞர்கள், இந்த நிலமையானது தங்கள் எல்லோருக்கும் உள்ள பரிதாப நிலமை என்றே உணருகின்றனர்.
துனெசியாவில் 17 வீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. வேலையில்லாத படித்த பட்டதாரிகள் மட்டும் 200000 பேர் ஆகும். புதுமை என்னவெனில் இன்றய துனேசிய எழுச்சியில் இஸ்லாம்வாதம் முன்னணிக்கு வரவில்லை.
'சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
வேலையற்றதுகளின் சிந்தையிலே விபாரீத எண்ணங்கள். இது தான் காலக் குறி'
சி.என் அண்ணாத்துரையின் பிரபல்யமான அடுக்குமொழி இதுவாகும்.
மோகமட் பவ்ஆசிசியின் தற்கொலைச் சம்பவத்தை அடுத்து மடைஉடைத்த காட்டாற்று வெள்ளம்போல மாணவர்கள் றோட்டுக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தலைப் பட்டனர். அவர்கள் போராடத் தயாராக இருப்பதிலும்பார்க்கச் சாவதற்குத் தயாராக இருந்தனர். இதுவே புரட்சியின் காலக் குறியாகும்.
துனேசியாவை விட்டோடிய ஜனாதபதி 23 வருடமாக ஆட்சியில் உள்ளார். கடைசியாக வந்த 1990 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவர் 90 வீதப் பெரும்பான்மையால் வென்றார். 13 ஜனவரியில் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது பொலீஸ் ஒடுக்குமுறைக்காக மன்னிப்புக் கேட்டதோடு மக்களின் வேதனைகளைத் தான் செவிமடுத்ததாகவும் தான் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தலி;ல் நிற்கப்போவதில்லை என்றும் கெஞ்சினார்.
சர்வாதிகாரியை அகற்றுவது போல சர்வாதிகார ஆட்சியதிகாரத்தை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்றுவது இலகுவானதல்ல. அதற்கு மிக அரசியல் உணர்மையுள்ள சமுதாயம் ஒன்று உருவாக வேண்டும். புரட்சி ஒன்றன் குழப்பம், நிலநடுக்கத்தைப் போன்றோ, பெரு வெள்ளப் பெருக்கைப் போன்றோ, சுனாமியைப் போன்றோ இருந்தாலும் அதையடுத்து புதிய ஒழுங்குமறையொன்று உடனடியாக உருவாகத் தொடங்கும். மக்களும் கருத்துக்களும் இயற்கையாகவே தம்மைப் புதிய செல்வழியில் செலுத்திக் கொள்வர். பாட்டாளி வர்க்கம் எதிரியை மிதித்துத் துவைத்துத் தூளாக்கித் தூர எறிய ஓர் இறுக்கமான ஸ்தாபனமும் இரக்கமற்ற முயற்சியும் தேவை என்பதைக் கண்டறிவதற்கு முன்னர் பிற்போக்குவாதிகள் ஆழம்வர்க்கத்தின் மற்றொரு கன்னையை அல்லது கட்சியை ஆட்சியில் அமர்த்திவிடுவர். ரூசிய ஒக்டோபர் புரட்சி ஒன்று விதிவிலக்காக இதுவே மீண்டும் மீண்டும் நடந்தேறிய வரலாறாகும்.

துனெசியவின் நோய் முழு மத்திய கிழக்கிலும் தொற்றுகிறது. இதுவே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ்சவுக்கும் ஓர் எச்சரிக்கையாகும். அவர் அண்மையில்தான் 18 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து தான் காலம் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கக் கனவு கண்டார். ராஜபக்ஸ்சவின் ஆட்சியை ஏதோ அசைக்க முடியாத பலமான ஆட்சி என்று புழுகுகின்ற ஒரு தமிழர் கூட்டத்திற்கு துனெசியாவின் நிகழ்ச்சியை ஞாபகப் படுத்துகின்றோம்.
உலகத்திலே இப்படிப் பல பலமான ஆட்சிகளை மக்கள் வெள்ளம் துடைத்தெறிந்துள்ளது.
1905 இல் ரூசியாவின் சாருக்கு கிறீஸ்தவப்பாதிரி கோபன் என்றவரின் தலைமையில் ஒரு மகயரை மக்கள் கொண்டு சென்றார்கள். ஊர்வலத்தில் சென்றவர்கள் பைபிள் நூல்களையும் போகும்பொது கிறீஸ்தவ கீதங்களையும்தான் பாடிக் கொண்டு சென்றனர். சாரின் அருண்மனைக்கு முன்னால் போலீஸ் மக்களைச் சுடவே முதலாவது றைஸ்சியப் புரட்சி வெடித்தது. ஊர்வலத்தைத் தயாரிக்கும்போது பாதிரியார் கோபன் சொன்னார், சார் நல்ல மனிதர். உங்களது துன்பங்களை அரச அதிகாரிகள் சாருக்குச் சொல்வதில்லை. ஆதலால் சார் மன்னனுக்கு அது தெரியாமல் இருக்கிறது. தான் போய் நேரில் மன்னனைப்பார்த்து உங்களது துன்பங்களை எழுதிய இந்த மகயரைக் கையளிக்கிறேன் எனறு சொல்லியே ஊர்வலம் தொடங்கப் பட்டது.
1953 இல் ட்டலி சேனனாயக்காவின் ஆட்சி பலமான ஆட்சியாக இருந்தது.
1952 தேர்தலில் யூ.என். பி மிகப்பெரும்பான்மையால் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசியல் அமைப்புச்சட்டத்தையே மாற்றக் கூடிதாக இருந்தது. ஆனால் தேர்தலிலே நாட்டின் பொருளாதார நிலமையை மறைத்துத் தன்னால் நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது யூ.என்.பி. அன்றய இலங்கைமக்கள் பொய்களைச் சகிக்காத கலாச்சார மேன்மை உடையவர்களாக இருந்தார்கள். தேர்தலிலே தமது ஆட்சிக்காலம் முழுவதும் அரிசி விலையை 25 சதமாக வைத்திருப்பதாக உறுதி கூறியது.
ஆட்சிக்கு வந்ததும் அரிசி விலை 72 சதமாகவும் சீனியின் விலை 15 சதத்தாலும் கூட்டப்பட்து. 1953 ஆகஸ்ட் 12 இல் சமசமாஜக்கட்சி இந்த நடவடிக்கையை எதிர்க்க கர்த்தாலுக்கு அறை கூவியது.
கர்த்தாலிலே முதலாளி வர்க்கத்தைத் தவிர எல்லா வர்க்கங்களும் பங்குபற்றின. எல்லாத் தேசிய இனங்களும் பங்கு பற்றின. எல்லா மதங்களும் பங்கு பற்றின. எல்லாச் சாதிகளும் பங்கு பற்றின. எல்லா மனிதசமுதாய ஓடைகளும் சிற்றாறுகளும் வர்க்கப்போராட்டம் என்ற பேராறாக நீக்மறக் கலந்து ஏகவினப் பெருக்காகப் பெருக்கெடுத்து டட்லி சேனனாயக்காவையும் அவரது மந்திரி சபையையும் வாரிக் கொண்டுபோய் கொழும்புத் துறைமுகத்தில் தயார் நிலையில் நங்கூரமிட்டிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பலினுள் போட்டது.
அவர்கள் அவசரகாலச் சட்டப் பிரகடனத்தையும் நாட்டின் எல்லாச் சட்டங்களையும் துச்சமாகத் தூறு செய்தனர். வரலாற்றில் ஒரேயொரு தடவை அதில் யாழ்ப்பாணமும் பங்கு கொண்டது. மந்திரி சபைக் கூட்டம் கப்பலிலேயே நடைபெற்றது. இன்று பென் அலி துனேசியாவை விட்டுப் பறந்தது போல அன்று திடீரென்று பறப்பதற்கு விமான வசதி இருக்கவில்லை. துர் அதிஷ்டம் அன்று சமசமாயக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் முன்னோக்கு அற்று இருந்தது. வர்க்கமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் முன்னேறி இருந்த மட்டத்திற்கு சமசமாஜக் கட்சி முன்னேறி இருக்கவில்லை. புரட்சிக்குத் தலைமைதாங்கும் தகுதியையும் அது அதனோடு இழந்துவிட்டது.

பென் அலியின் விமானத்தை அவரின் எஜமான நாடான பிரான்சில் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் வெகு சீக்கிரத்தில் ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. 1953 போல அல்ல. 1917 ஒக்டோபர் போல.
1968 மே 10 இல் அன்றய பிரெஞ்சு ஜனாதிபதி மாணவர் போராட்டத்தின் மடைதிறந்த காட்டாற்றுக்குப்  பயந்து பறந்தோடி ஜேர்மனியில்; அன்று நிலைகொண்டிருந்த பிரெஞ்சுப் படைத்தளத்தில் ஒழித்துக் கொண்டார்.
1979 டிசெம்பரில் ஈரானின் பல்லவி ஷ நாட்டைவிட்டு ஓடினார். அவரை அவரது எஜமான நாடான அமெரிக்கா அனுமதிக்க மறுத்தது.
1986 இல் பிலிப்பைன் ஜனாதிபதியாக இருந்த பேர்டினன் மார்க்கஸ் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். அவரும் சர்வாதிகாரியாக ஊழல் நிறைந்து மனித உரிமைகளை மீறுபவராக இருந்தார். ஈற்றிலே நாட்டிலே இருக்க முடியாமல் ஹவாய்தீவில் தஞ்சம் புகுந்து கொண்டார். அவரதும் அவரது மனைவியின்பேரிலும் பில்லியன் கணக்கான டொலர் நாட்டுச் செல்வங்கள் சூறையாடப்பட்டு அமெரிக்காவிலும் சுவிற்சலாந்திலும் மற்றும் 20 நாடுகளிலும் இருந்தது பின்னாளில் அம்பலமானது.
இதுவே வெகு சிக்கிரத்தில் மிகப்பலசாலி ராஜபக்ஸ்சவுக்கும் நடக்க இருக்கிறது. ராஜபக்ஸ்சவையும் அவரது குடும்பப் பரிகலங்களையும் ஏற்றிக் கொண்டுபோக இலங்கையிலுள்ள விமானங்கள் காணுமோ தெரியாது. அவர் இன்று ஆசியாவின் முதலாவது பணக்காரராகிவிட்டார் என்று பலரவலாக இலங்கை மக்கள் கதைக்கிறார்கள். அவரது ஊழலின் கணக்கு வழக்குகழும் எதிர்காலத்தில் வராமல் போகாது. பிரபாகரனுக்ககு அமைந்தது பொலவே ராஜபக்ஸ்சவுக்கும் உடன் பிறந்த பகையாளியாகத் தன்னைப் பற்றி மிகைப்படுத்திக் கொள்ளும் கர்வம் இருக்கிறது. அழிவின் தேவதூதன் மேட்டுமையாகும். ராஜபக்ஸ்சவின் தன் மூப்பாட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மக்களின் கருத்தாணையையும் அவர் சட்டைசெய்வதில்லை.
பென்னலி விழுவதற்குச் சிலநாட்கள் முன்னரே அமெரிக்கா துனேசியாவுக்கு 12 மில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கி இருந்தது. அது உள் நாட்டு யுத்தத்தை முடுக்குவதற்காகும்.
துனேசிய சம்பவம் காட்டுத் தீயாக உலகம் முழுவதும் தொற்ற இருக்கிறது. அரபுத் தேசங்களில் ஆட்சிக்கு வாற சர்வாதிகாரிகள் ஒரு நாளும் தாங்களாக விலகுவதில்லை. விலகுவதற்கு அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களும் அனுமதிப்பதில்லை. துனேசியாவின் பக்கத்து நாட்டு அல்ஜீறியாவில் வியாதி ஏற்கனவே தொற்றிவிட்டது. அங்கே வேலையில்லாத்திட்டத்திற்கு எதிராகவும் உணவு விலையேற்றத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துவிட்டன. அங்கே 5 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள். சீனிவிலையும் சமையல் எண்ணெய் விலையும் திடீரெனக் குறைக்கப் பட்டுள்ளது.
எகிப்திலே 'பென்னலியெ சொல்லு முபாரக்குக்காகவும் விமானம் ஒன்று காத்திருக்கிறதென்று.
துனேசிய எழுச்சியானது உலக அரசியலின் திருப்பு முனையாகும். 2008 ஆகஸ்ட் வங்கி நெருக்கடி தோற்றுவித்த அதிர்ச்சியின் முதலாவது எதிரொலியாகும். இந்த அதிர்ச்சியானது பூகோளம் முழுவதையும் அதிர வைத்தது. பூகோளம் முழுவதுமே நெருக்கடிகள் ஏற்பட்டன. பூகோளம் முழுவதுமே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. பூகோளம் முழுவதுமே நிதிமந்திரி  கடன்  சுமையைப் பெருக்கினார்கள். ஏல்லாமே வோல்ஸ்றீற என்ற ஒரு நிதிநிறுவத்தால் ஏற்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் சூறாவளியாகப் பரவியது. பூகோளம் முழுவதுமே நிதிச் சூதாட்டங்கள் நிகழ்ந்தன.
அண்மையில் ஊலகச் சந்தையில் உணவு விலையோ உயர்ந்தது. சோழத்தின் விலை 60 வீதத்தால் உயர்ந்தது. சோயாவின் விலை 45 வீதத்தால் உயர்ந்தது. எண்ணையினதும் சீனியினதும் விலை அரிசிவிலை என்று கட்டுக் கடங்காமல் உயர்ந்தன. மனிதர்களின் உழைப்பின் 60 தொடக்கம் 70 வீதமானது உணவுப்பொருட்களை வாங்கச் செலவாகிறது. இந்தியா சீனா முழு ஆபிரிக்காவும் இந்தோனெசியா என்று பலநூறு மில்லியன் மக்கள் வரலாறு கண்டு கேட்டிராத வறுமையில் வாடுகிறார்கள். இலங்கையில் இது சொல்லும் தரமன்று. அதன் மத்தியில் இயற்கை அனர்த்தம். ராஜபக்ஸ்சவின் கொண்டாட்டத்திற்கோ  குறைவில்லை.

இந்த சர்வவியாபக நெருக்கடியை எப்படித்தீர்ப்பதென்று எவருக்கும் தெரியாத போதும் பிஸ்னெஸ் ஆஸ் யூசுவல் (Buissiness as usual) என்றே முதலாளித்துவ உலகம் மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக 2010 இல் மட்டும் அமெரிக்காவில் 157 வங்கிகள் வங்குறோட்டு அடைந்துள்ளது என்று அமெரிக்கசேமிப்பக் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. சராசரி மாதத்திற்குப் 13 வங்கிகள் வீதம் மூடப் பட்டுள்ளன. நிதி நெருக்கடிக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று அந்தச் செய்தி கூறியுள்ளது.
இந்தியாவிலே ஜி2 ஸ்பெக்றம் 8 பிலியன் அமெரிக்க டொலர் ஊழலையடுத்து பாராளுமன்றம் மூன்றுமாதத்திற்கு மேலாகக் கூட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழலை விசாரிக்க ஒரு பாராளுமன்றக் கொமிசனை ஏறபடுத்தும்படி கேட்டதை மன்மோகன் அரசாங்கம் மறுத்து வருகிறது.
இலங்கையில் 34 வருடம் அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்த்தின் கீழும் ஆட்சி நிலவுகிறது. துரையப்பா கொலையையடுத்து 1979 இல் பண்ணைப்பாலத்தின் கீழ் இன்பம் விசுவசோதிரத்தினம் என்ற இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடக்கம் இன்று வரைக்கும் இரண்டு  லட்சம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்ட போதும் இன்றுவரை கொலைஞர் ஒருவராவது சட்டத்தின் முன் நிறுத்தப் படவில்லை.  இதுதான்  இன்றய இலங்கையின் ஜனனாயகம். தமிழ் அரசியற் கட்சிகளோ தேர்தற் கும்மாளத்தில் குதூகலிக்கின்றன.
எந்த மேற்கத்தைய, தம்மை ஜனனாயக நாடென்று சொல்லி மார் தட்டுகின்ற நாடோ அன்றேல் ஐக்கிய நாடுகள் சபையோ இந்தியாவோ இலங்கையின் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படி கோரியது கிடையது. அண்மையில் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பட்டும் படாததுமான ஒரு கருத்தைத் தெரிவித்து ஓய்ந்து விட்டார். மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளுக்கும் எல்லைகள் அற்ற சுறண்டலுக்கும் இலங்கையில் முடிவில்லாத காலத்திற்கு அவசரகாலச் சட்டம் நிலவ வேண்டும். நித்திய நிரந்தர கொலை நிகழ்வுகளும் நீடிக்க வேண்டும்


பூகோளமயமாக்கல் என்ற நிகழ்வுப்போக்கானது உற்பத்தி வளர்ச்சியையும் வாழ்க்கைத்தர உயர்ச்சியையும் மாத்திரம் தந்ததல்ல. அது கட்டுக்கடங்காத முட்டிமோதல்களையும் பொருளாதார அரசியல் ராஜதந்திர நெருக்கடிகளையும் தந்துள்ளது.

பாராழுமன்ற ஜனனாயகமானது தவிர்க்கமுடியாதபடிக்கு சுதந்திரமான போட்டி என்ற பாதுகாப்பு அரணாலும் சுதந்திரமான சர்வதேச வர்த்தகம் என்ற பாதுகாக்கப்பு அரணாலும் பாதுகாக்கப் படுவதாகும். இது தங்குதடையின்றி நடைபெறும் காலங்களில் முதலாளித்துவமானது வேலைநிறுத்தம் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் கூட்டம் கூடும் சுதந்திரம் போன்றவற்றைச் சகிக்கும். உற்பத்திச் சக்திகள்மேலும் வளரக்கூடிய சூழலும் விற்பனைச் சந்தையானது தொடர்ந்து வளர்ந்தும் கொண்டு போனால் மாத்திரம்தான் முதலாளித்துவ தேசங்கள் வெகுசனங்களின் கல்வி, வைத்தியசேவை, ஓய்வுசூதியம் ஊனமுற்றோர்உதவி போன்ற சமூகசேவைகளைப் பாதி அழவுக்காவது அனுமதிக்கும். அப்பொழுது முதலாளித்துவம் தானும் வாழும். மக்களையும் வாழவிடும். இப்பொழுதோ இந்த நிலமைகள் முற்றாக மாறி விட்டன.
துனேசியாவில் ஒரு இளைஞன் தன்னை எரித்ததைத் தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியோ விட்டோடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. அவனது சுலோகத்திலே மற்றய சக மனிதன் எவனுக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. எத்தனை புலிகள் எரிந்தார்கள். வெடித்துச் சிதறினார்கள். ராஜபக்ஸ்ச இன்னும் நாட்டைவிட்டு ஓடவில்லை. காரணம் துனேசிய இளைஞன் எரியும்பொழுது அவன் எழுதிவிட்டுப்போன சுலோகம் 'இனிமேல் வறுமையும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை.' இதையடுத்து வேலயற்றவர்களும் வறுமையில் வாடுபவர்கள் நாம் எல்லோரும் ஒருமித்துத் தற்கொலை செய்வதா? என்ற கேள்வியை எழுப்பி ஈமெயில் மூலமும், இண்டர் நெற்மூலமும் சர்தேச வலத்தளங்கள் மூலமும், பேஸ் புக் மூலமும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். கட்சியும் இல்லை. இயக்கங்களும் இல்லை. ஆயுதமும் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமூகப் பிரச்சனையை மையமாகவைத்து அறைகூவல் விடுத்தார்கள. நாமோ, நமது தமிழர்களது சுலோகமோ, 'தமிழரது தாகம் தமீழத்  தாயகம் இன்றுவரை இலங்கை அரசு ஒரு மில்லிமீட்டரால் கூட அசையவில்லை.  இலங்கையில் மொத்த சமூகங்களின் தலையாய உடனடி வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக வைத்துப் போராடும் காலம் அதாவது மீண்டும் 1953 கர்த்தால் போன்ற கர்த்தாலை அறைகூவுவதற்கான அத்தனை புறநிலைச் சூழல்களும் கணனிபோன்ற தொழில் நுட்பமும் தயாராகவே உள்ளது. அந்தக் கட்டுப்படுத்த முடியாத வெகுசனக் காட்டத்தீயைப் பற்றவைப்பதற்கு ஒரு பொறி தேவைப் படுகிறது.
வாழு!வாழவிடு!!
2011.01.18

Sunday, January 16, 2011

மாட்டுப்பொங்கல் நினைவாக 
-ஜீவமுரளி -


தடைசெய்தல், நிராகரித்தல் என்ற உளவியல் மூலங்களை கண்டடைதல்



எல்லாவற்றையும் நிராகரித்தல் என்ற அரசியல் உளவியலின் மூலங்களும், எல்லாவற்றையுமே தடைசெய்தல் என்ற அரசியலின் மூலகங்களும், எங்கிருந்து தொடங்குகின்றன என்ற கேள்விகள் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

கண்ணை மூடினால் போதும் மாடுகள் மட்டும்தான் என் கனவில் அடிக்கடி வந்து போகின்றன. அவைகள் ம்ம்மா என்று மட்டுமே தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ம்ம்மா என்று மட்டுமே கதறுகின்றன. ம்ம்மா என்றுமட்டுமே தங்கள் பசியை வெளிப்படுத்துகின்றன. ம்ம்மா என்ற மாடுகளின் மொழி இனிமையாகவும் வாஞ்சையாகவும் முன்னொருகாலத்தில் என் காதுகளில் ஒலித்தன. இப்பொழுதெல்லாம் கனவுகளில் வந்துபோகும் மாடுகளின் "ம்ம்மா" என்ற மொழி குரூரமாகவும், ஈனமாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என் பொருங்குடலையும், சிறுகுடலையும் வாயால் வாந்தி எடுப்பது போல் உணர்கிறேன்.

மாடு ஒரு சாதுவான பிராணி
மாடு ஒரு தாவர பட்சணி
மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு
ஒரு வால் உண்டு
இரண்டு காதுகள் உண்டு
மாடு புல் தின்னும்
மாடு அசை போடும்
மாடு குட்டி ஈனும்
மாடு பால் தரும்
மாடு அம்மா என்று கத்தும்
என முதலாம் வகுப்பிலிருந்து ஆசியர் சொல்லித்தரவும் அதையே மனப்பாடம் செய்து முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை கட்டுரையாக எழுதி சித்தியடையும் பாடசாலைக் கலாச்சாரத்தை தமிழர்கள் கொண்டிருநதனர். ஆறாவது வகுப்பில் புலிகள் எங்களுக்கு ஆசிரியர்களாயினர். அதன்பின்பு புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனவும் சிங்கம் பதுங்கி நின்று பாயும் எனவும் மனப்பாடம் செய்து பல்கலைக்கழகம் வரை கட்டுரைகள் எழுதி சித்தியடையும் பாய்க்கியத்தை தமிழர்கள் பெற்றனர். ஆனல் மனிதர்களின் வரலாற்றோட்டத்தில் புலி புல் தின்றது. சிங்கம் பதுங்காமல் பாய்தது. பழமொழிகள் ஏன் மனிதர்களிடம் தோற்று போகின்றன என யோசிக்கும் பொழுதெல்லாம் ம்ம்மா என்ற மாடுகளின் மொழி ஈனக்குரலாகவும் கடூரமாகவும் குரூரமாகவும் கலந்து ஒலிக்கின்றன.

ஒரு சனநாயக அரசியல்ச் சூழல் எப்படி இருக்க வேண்டும்? ஒரு மாற்றுக்கருத்தை, கருத்தை தெரிவிப்பதற்கான அல்லது எதிர் கொள்வதற்கான அரசியல் சூழல் எப்படி இருக்கவேண்டும்? ஒரு ஒற்றைத்தனிமனிதன் தனக்குத்தானே சுயதணிக்கை செய்து கொள்ளாமல் தும்மலும் கொட்டாவியும் விடுவதற்கான ஒரு சனநாயகச்சூழல் எப்படி இருக்க வேண்டும்? என்ற கனவும் ஏக்கமும் விருப்பமும் ஆசையும் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கின்றன.

ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் பாடுகிறமாட்டை பாடித்தான் கறக்கவேண்டும் என்ற புகழ் பெற்ற தமிழ்ப்பழமொழி ஒன்று உண்டு. ஒரு மாட்டினுடைய சனநாயக உரிமைகள் குறித்தும் அடிப்படை வாழ்வுரிமை குறித்தும் முன்னொரு காலத்திலே தமிழ்பேசும் சமூகம் சிந்தித்தும் பேசியுமிருக்கிறது. இந்தப் பழமொழியை நான் மனதில் மீட்கும் பொழுதெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இவ்ளவு செளிப்பான சிந்தனைமுறையும் உறவுமுறைகளும் இருந்திருக்கின்றனவா? என ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகின்றன.

ஒருமாட்டினுடைய அடிப்படை வாழ்வுரிமையை மதித்த ஒரு சமூத்தினது, கன்றுக்குட்டி பால்குடித்த பின்தான் மாட்டிலிருந்து தன் தேவைக்காக பால் கறந்த ஒரு சமூகத்தினது மனித விழுமியங்கள் எப்படி காணமல்போய்விட்டது? யாரால் இல்லாது ஒழிக்கப்பட்டன? என்ற கேள்விகளை நாம் திரும்பத்திரும்ப கேட்பதன் மூலம் இல்லாதொழிக்கப் பட்டவையை மீட்டெடுக்கவும் காணாமல் போனவையை கண்டடைவதற்குமான வாய்ப்புக்களை ஒருக்கால் பெற்றுத்தரலாம் என்றே நம்புகிறேன்.

இலங்கையில் தமிழ் சிங்கள தேசியவாத அரசியலின் எழுச்சியின் பின்னால்தான் ஆடுகிறமாட்டை அடித்துக் கறக்கின்ற, பாடுகிற மாட்டை பயமுறுத்திக் கறக்கின்ற அரசியல்கலாச்சாரம் தொடங்குகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாலை உதாசினப்படுத்திவிட்டு தமிழ்மொழி பேசுபவர்களுக்கு தமிழ்ப்பாலும் சிங்களவர்களுக்கு சிங்களப்பாலும் அருந்தக் கொடுக்கப்பட்டது. பாலுக்கு பிரதியீடாக தமிழும் சிங்களமும் இரு தேசியவாதிகளினால் பரிந்துரைக்கப்பட்டன. பாலுக்கு பாலகர்கள் அழுதிட பாற்கடலை புலிகளும் சிங்கங்களும் கடைந்து கொடுத்தன. பாலுக்குப் பதிலாக விசத்தைதான் இரு தேசியவாதிகளும் அருந்தக்கொடுத்தார்கள் என்பதை இன்றுள்ள இனமுரண்பாட்டு அரசியலின் தலைகீழ்வளர்ச்சி மிகத் தெளிவாக காட்டியிருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இலங்கையிலுள்ள சிறுபான்மை இன மக்கள் எல்லோரும் இன்று நன்றாகவே அனுபவித்து உணர்ந்திருக்கின்றார்கள்.

புலிகளுக்கான புதைகுழியை தமிழ்த் தேசியவாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்தே வெட்டிக் கொடுத்தார்கள். ஆடுகிறமாட்டை அடித்தும் பாடுகிறமாட்டை பயமுறுத்தியும் பால்கறந்த புலிகளை விசிலடித்தும் கைதட்டியும் காசும் கொடுத்த தமிழ் அரசியல் கலாச்சாரம் கடைசியில் பாலே குடிக்காத பலவீனமான அரசியற் குழந்தைகளை சர்வதேசமெங்கும் பிரசவித்திருக்கின்றது. ஆடுகிற மாட்டையோ பாடுகிற மாட்டையோ இவர்கள் தங்களின் வாழ்நாளில் பார்த்தே இருக்க மாட்டார்கள். ஆடுகின்ற பாடுகின்ற மாடுகள்பற்றிய பழமொழியின் அந்த அற்புதமான எல்லாச் சாத்தியங்களையும் புலிகளும் சிங்கங்களும் நஞ்சை உண்ட பாலகரை வைத்தே இலங்கையில் இல்லாதொழித்துவிட்டன.

இந்த வரலாற்று சூழலில்தான் கொழும்பில் சர்வதே தமிழர் மாகாநாடு நடந்து முடிந்திருக்கின்றது. சர்வதேசத்தமிழரை முதலில் குத்தகைக்கு எடுத்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த மு.கருணாநிதி என்பவர். அதற்குபோட்டியாக குத்தகை எடுத்தவர் வே பிரபாகரன். கருணாநிதி தனது பங்குக்கு தமிழ் உணர்வுமாடுகளை உருவாக்கினார். பிரபாகரன் தனது பங்கிற்கு தமிழ் வெறிமாடுகளை உருவாக்கினார். இதில் நகைச்சுவை என்னவென்றால் உலகத்தில் உள்ள எல்லா மாடுகளாலும் ஒரு பொதுவான மொழியே பேசப்படுகின்றது. அவை பாலைமட்டுமே மனிதர்களுக்கு கொடுக்கின்றன விதிவிலக்காக கருணாநிதியும் பிரபாகரனும் மட்டுமே தமிழ்மொழி பேசும் மாடுகளையும் தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் மாடுகளையும் உருவாக்கிக் காட்டினார்கள். இப்படி உருவாக்கப்பட்ட மாடுகளால்தான் ஆடுகிற மாடும் பாடுகிற மாடும் ஆடிபாப்பாடி பால் கறக்கின்ற சனநாயக விழுமியங்களும் அடியோடு இல்லாததொழிக்கப்பட்டன. ஆடுகிற மாட்டை ஆடிக்கறத்தல், பாடுகிறமாட்டை பாடிக்கறத்தல் என்பது தந்திரம் என்பதன் குறியீடாக கற்பிக்கப்பட்டது. ஆடுகிறமாட்டை அடித்துக் கறத்தல் பாடுகிறமாட்டை பயமுறுத்திக் கறத்தல் வீரத்தின் குறியீடாக கொள்ளப்பட்டது.

இந்தத் தமிழ் தலைமாடுகளால் உருவாக்கப்பட்ட தமிழ்க்குத்தகை உளவியல் நோய்தான் இன்றுள்ள சர்வதேசத்தழிழர்கள் ஒவ்வொருவரையும் பீடித்திக்கின்றது. இந்த நோயின் முதன்மையான அறிகுறி என்னவென்றால் எவற்றையுமே வரவேற்காது. ஒரு ஒற்றைத் தமிழனுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அது சர்வதேசத் தமிழர்களின் சிந்தனைகளை தடைசெய்யும் அல்லது நிராகரிக்கும்.

தமிழனெண்டு சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வசனமும், புலிகளின் துப்பாக்கிகளும் முள்ளிவாய்காலில் தமிழ்போசும் மக்களுக்கெதிராக திரும்பிய பின்னர், கருணாநிதி தனது தமிழ்ப்பற்றையும், சர்வதேசத்தமிழ் குத்தகையையும் மறுஉறுதி செய்வதற்காக உலகத் தமிழர் மாநாட்டை கூட்டினார். உடனேயே சர்வதேசத் தமிழ்புலிகள் நிராகரித்தனர்.

நிராகரிப்பு அரசியல் தடைசெய்யும் அரசியல் என்பது புலிகளின் காலத்தில் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனைகளையும் அசைவுகளையும் நிராகரித்தது. அடிப்படை வாழ்வுரிமைகளான தொழில்செய்தல், கல்வி கற்றல், ஓட்டுப்போடுதல், கட்சி கட்டுதல், கூட்டம் போடுதல், மறுவார்த்தை பேசுதல் எல்லாவற்றைம் நிராகரித்தது. தடைசெய்தது.

ஒவ்வொரு தனிமனிதனின் அசைவியக்கத்தையும் புலிகள் கட்டுப்படுத்தினார்கள். அது தன்னை மையப்படுத்தியே உலகத்தை பார்த்தது.
சுயாதீன இயக்கங்களை சுயாதீனக்கூட்டத்தை எல்லாவற்றையுமே நிராகரித்தது.
இந்த நிராகரிப்பு தடை அரசியலில் புலிகள் கொடிகட்டிப்பறந்த காலங்களில் எதிர்ப்பரசியலும் எதிர்ப்பிலக்கியங்களும் மக்கள் மத்தியில் தோன்றத் தொடங்கிவிட்டன. இவ்வளவுகால எதிர்பிலக்கியத்தினது ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொழும்பில் நடந்த இன்னுமொரு சர்வதேச தமிழ்மாகாநாட்டை பார்க்கமுடிகிறது.

தமிழ்ப்பால் குடித்த பண்டிதர்களென்ன, தமிழ்பால் குடித்த புலிகளென்ன யார் நிராகரித்தாலும் தடைசெய்தாலும் மாநாட்டை நடத்திக் காட்டுவேன் என்ற எதிர்ப்பரசியலுக்கான முருகபூபதியின் அறைகூவல் ஒரு வரலாற்று பதிவு.
அதை ஒருவர் வரவேற்பது சர்வதேச தமிழ் குத்தகை நோய் பீடிக்காதவர் என பொருள்படும். முருக பூபதி மகிந்தவிடம் காசுவாங்கி மாநாட்டை நடத்தியிருந்தால் அதன் பலாபலன்களை எப்படி திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது மகிந்த அரசுக்கு நன்றாகவே தெரியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். புலிகளுக்கு மகிந்த அரசு கொடுத்த கோடி ரூபாய்களை வட்டியும் முதலுமாகச் சேர்ந்து பெற்றுக்கொள்ளவில்லையா??

எதிர்காலத்தில் சிறூபன்மை மக்களை மீள உறவுகொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த மாநாடு கொள்ளப்படவேண்டும் என்ற கோட்பாடு சாத்தியமாக்கப்பட வேண்டுமென்றால், இந்த தமிழ்ப்பற்றாளர்கள் முதலில் ஆறுமுகநாவலரையும், தமிழ்மொழி வெறியையும், சாதித்திமிரையும், திருநீற்றுப்பட்டையையும், கோமணத்தையும், கோமணத்தின் உள்ளே இருப்பதையும் தூக்கி குப்பைக்குள் போடவேண்டும். யாழ்மையவாத அரசில் சர்வதேசத் தமிழர்களையும் தமிழையும் குத்தகைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள சிறபான்மையினங்களை யாழ்மையவாதம் துருப்புச்சீட்டாக பாவித்து அரசியலாட்டம் போடாத வரைக்கும் தமிழ் தண்ணி ஊற்றாமல் தானக வளரும்.
என் கனவு கூட நீர்மேல் எழுதிய எழுத்துப்போல் தொடர்கிறது.
மாடு ஒரு சாதுவான பிராணி என்ற பழமொழி ஒருநாள் பொய்த்துப் போய்விட்டது என்ற கனவின் வருகைக்காகவும், அவை ஆடிப்பாடும் காலத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன்.

Wednesday, January 12, 2011

Ranjith Heneyaka வின் நாவல் பற்றி



இருப்பை தொலைத்தல் Ranjith Heneyaka வின் நாவல் 


Mit dem Wind fliehen
தேவா- ஜேர்மனி

அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி -ரஞ்சித் 

ரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுரஞ்சித் Henayaka அவர்கள் முதன்முதலாய் ஜெர்மன் மொழியில் எழுதிவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1968லிருந்து அரசியல்தீவிரசெயற்பாட்டயளராய் இருந்தவர். 1971யிருந்து ஜே.வி.பியின் இளைஞர்அணியில் பங்குபற்றியிருந்ததால் 1977வரை சிறைவாசத்தில் இருந்தது மட்டுமல்லாமல் சித்திரவதைகளையும் அனுபவித்தவர்.திவெளிவந்திருக்கும் முதல்நாவல் இது. இவர் ஏற்கனவே சிங்களத்திலும் ஜெர்மன் மொழியிலும் ஆயஇந்த நாவல் உருவத்தில் ஒரு கற்பனைக்கதையை முன்வைத்திருக்கிறது. யதார்த்தத்தை அது தன்னுள் கொண்டி ருக்கிறதை ஒரு வாசகனுக்கு எளிதில் புரியும். கற்பனைக்கும், நிஐத்துக்கும் இடையில் சங்கிலித்தொடர் இருப்பதாலேயே எழுத்தாளனுக்கு -கலைஞனுக்கு படைப்பு சாத்தியமாகிறது.

1980க்குப் பின்னான இலங்கை அரசியல் நிலைவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறது; இந் நெடும்கதை. கதைநாயகனோடு-நாயகியோடும் பயணிக்கும் கதை ஐரோப்பாவரை நீண்டு பின்னர் தொடர்ந்தும் அதனுடைய அரசியல் பார்வையோடு வாழ்தல்தான் இதன் சிறப்பு. பொதுவாகவே அரசியல் நெடுங்கதையாடல்களின் வாசிப்பில் ஒரு மந்தநிலைமை உள்ளது;. சிக்கலான அரசியல் சம்பவங்கள்-நிலைமைகளை ஒரு கோர்வைக்குள் கொண்டுவருவதற்கு விசேடமாய் வாசகன் புரிந்துகொள்ளக்கூடிய இலகுமொழி அவசியமானது. கரடுமுரடான வார்த்தைகளை கொடுத்து வாசிப்புக்கு ஒரு எரிச்சலை தரக்கூடாது. ஒரு கதைக்குள் இன்னொரு கதையைப்பொருத்தி அதற்குள் வேறொன்றை புகுத்தி உருவாக்கும் ஒரு மகாபாரத சிக்கலை ரஞ்சித் புனையவில்லை. தன்னுடைய பிரச்சார தொனியை புகுத்தவில்லை.

ஒரு அமைதியான வேகத்தோடு அதேசமயம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கையோடு கொஞ்சமும் விட்டுக்கொடுத்தல் இன்றி இந்நெடுங்கதை நகர்கிறது. நாவலின் இறுதியிலும்  கூட அது தொடர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதான உணர்வே மேலோங்கி நிற்கிறது.

கதை இதுதான்,

இனத்தின் உரிமைக்காக ஆயதமேந்தி போராடும் தமிழ்இளைஞனாக நாதன் அறிமுகப்படுத்தப்படுகின்றான். பல்வேறு இயக்கங்களும் தமக்குள் மோதி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருக்கும் காலகட்டத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. இவன் சார்ந்த குழுவும் நாதன் நேசித்த விடுதலையை நோக்கி நகரக்கூடவில்லை என்பதை புரிந்துகொள்ள நேர்கிறது. ஆனால் இயக்கங்களின் மூர்க்கமான அதிகாரவெறி இவனது தாமதமான புரிதலுக்காக காத்திருக்கவில்லை. சொந்த ஊரிலிருந்து தப்பிஓடவேண்டியதான கட்டாயம் நாதனுக்கு ஏற்படுகிறது. தோழன் கண்ணிவெடியால் உயிர் இழக்கின்றான். காட்டிக்கொடுப்புகளின் கோரம் நாதனை துரத்துகிறது. தன் உயிரையும் காப்பாத்திக்கொள்ளவேண்டி அவனது முதலாவது தப்பியோடுதல் தலைநகரைநோக்கி ஆரம்பிக்கிறது. கொழும்புக்கு போகிறான். அங்கு தன் மனைவியையும்  குழந்தையையும் அழைப்பித்து ஒரு நிம்மதியான வாழ்வு தொடரலாம் என்றால் அது தொடரு முன்னமேயே நாதன் இலங்கை ராணுவத்தால் வீதிச் சோதனையிடும் ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படுகின்றான். சித்திரவதைமுகாமுக்கு கொண்டு போகப்படுகின்றான்

இங்கு நடைபெறும் கற்பனைக்கு  கூட எட்டமுடியாத பயங்கரங்களை வாசிக்க ரஞ்சித்தின் நாவலுக்குள் நுழைந்துபாருங்கள். சித்திரவதைமுகாமின் குரூரங்கள் நம் நினைவிலிருந்து கழற்ற முடியாதவையாகின்றன.

அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.
ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அதாவது உயிரைப்பணயம் வைத்து தப்பிஓடவேண்டும் இதுவும் அதிட்டம் இருந்தாலே முடியும். இது நடக்காவிட்டால் சித்திரவதைமுகாமிலே இறுதிமூச்சை விடவேண்டும்.

தன் இளமைக்காலத்திலேயே அதிகாரவர்க்கத்தின் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருந்த ரஞ்சித் இந்த  நாவலை எழுதுவதற்கு மிகதகுதியானவர். காயம்பட்டவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை. வேதனையின் முனகல்களை துயரங்களின் இறுதிமூச்சுகளை நாவலில் உணரக்கூடியவாறு மிக அருகாமையில் அல்ல உங்களுக்குள் கேட்கின்றது. இம்மரணவேதனைகள் எதற்காக? ஏன் இந்த துன்பங்கள்? காரணங்களே இல்லாமல் ஒருமனிதனை அதிகாரவர்க்கம் காவுகொண்ட நிஐங்களை; இங்கு மிகநெருக்கத்தில் உணரலாம்.. வக்கிரபுத்தி கொண்ட அடக்குமுறையாளர்கள் கைதுசெய்திருந்த ஆண்பெண்பாலாருக்குமேல் நடாத்திய பாலியல்வன்முறைகளை; வாசிக்கும்போது மனிதக்கொடூரங்கள் இப்படியும் நடக்கின்றனவா-நடைபெற்றதா-நடைபெறுமா-என உயிர் கலங்குகிறது.

நாதன் என்கிற இலங்கை இளைஞன் ஒரு கேவலம்கெட்ட அரசியல் சகதியில் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து அவன் மீட்டெழுந்தாலும் அந்த சாக்கடை அவனை அதிலேயே புரட்டி எடுக்கிறது. அதிலிருந்து தப்புதல் என்பதாவது இறுதியில் நாட்டைவிட்டே தப்பியோடுதலில் முடிகிறது. நாவல் இத்தோடு; முற்றுப்பெற்றிருந்தால் அதனுடைய அரசியல் நுணுக்கமே அரைகுறையாய் போயிருக்கும். 315பக்கங்களை தன்னுள் கொண்டுள்ள இந்நாவலின் தனித்தன்மையே அரசியல் பேசுவது. மனிதவாழ்வே அரசிய்ல் நீரோட்டத்தில் சுழல்வது;; அதிலிருந்து அவன் விடுபடமுடியாதபடி போராட்டங்கள் தொடருகின்றன..

ஈழத்தில் தமிழினத்துக்கென்று பொதுவான பயங்கரமொன்று நடைபெற்றதும்-பெறுகிறதும்-பத்திரிகைசுதந்திரமறுப்பு;- அரசுக்கு எதிரான கருத்துமறுப்புகளையும் தன்னுள் கொண்டு இந்த நாவல் ஆவணமாக உங்கள் முன்னே விரிகிறது.

வாழ்வுக்கும் எழுத்துக்கும் கொண்ட கொள்கைக்கும் இடையே முரண்பாடற்ற ஒரு பாதையை ஒரு எழுத்தாளன் கொண்டிருந்தால் அது அவனின் படைப்பாற்றலுக்கு குறுக்கே வராது. ரஞ்சித் நாவலில் விபரித்துக்கொண்டுபோகும் சம்பவங்களை; சம்பவங்கள் என்பது சரியான வார்த்தையில்லை. அவைகள் வரலாறு.

கிட்லருடைய ஆட்சியின் இனஅழிப்பை மறுக்கிறவர்கள் மறைக்கமுயல்பவர்கள் அதன் தடயங்களை திரிபுபடுத்துபவர்கள் இன்னும் தர்க்கரீதியும் நியாயமும் இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்துபோனாலும் இனஅழிப்பு வேறொரு கோணத்தில் கையாளப்படுகின்றது என்கிற உண்மை எமக்கு முன்னாலிருக்கும் யதார்த்தம். எல்லாதரப்பிலுமே அடாவடித்தனமாக நிகழ்த்தப்பட்ட கொலைகளுக்கும் கைதுகளுக்கும் பாலியல்சித்திரவதைகளுக்கும் யார் பொறுப்பு? ஆயுதம்-அதிகாரங்களின் சுவடுகளை- அதன் கொடுமைகளை எதிர்காலசந்ததிக்கு அறிவிப்பதில் ஒரு முக்கிய பொறுப்பு சமூகநலனில் அக்கறை கொண்டவர்களுக்கு உண்டு.

ரஞ்சித்துடைய நாவல் ஈழத்தின் தற்போதய நிலைப்பாட்டை புரிந்துகொள்வதற்கு ஒரு புரிதலை தருகிறது.

சுவிசின் சிலமாநிலங்களிலேயும் ஜெர்மன் ஆசுரேலிய்நாடுகளிலே வளரும் இளைஞருக்கு அவர்களுடைய தாய்மொழியான ஜெர்மன் மொழியில் ;(இந்தமொழியில்தான் அவர்களால் சிந்திக்கிறார்கள் என்பது தெரிந்தவிடயமே)வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதன் மூலம் இவர்களுக்கு பெரியவர்கள் தெரியப்படுத்தும் அவர்களது தாய்நாட்டுஅரசியல்-சமூகபார்வைகளை பிறிதொரு கோணத்தில் பார்ப்பதற்கு வழிசமைத்திருக்கிறது. இங்குவாழும் இளம் சந்ததி இந்நாவல்பற்றி தங்கள் கருத்துபரிமாறலை செய்வது ஆரோக்கியமானது. பாடசாலைகளில்- கருத்தரங்குகளில் இப்புத்தகம் பற்றிய விமர்சனம் மேற்கொள்ளப்படவேண்டும். இவர்கள் உலகில் சந்திக்கும்- சந்திக்கப்போகும் இனத்துவேசரீதியான நடைமுறைகளை எவ்வாறு கையாளலாம் என்கிற சிந்தனைக்கும்- செயல்பாட்டுக்கும் வழிஏற்படுத்தலாம். தவிரவும் வாழும்நாட்டின் மொழிப்யிற்சி இல்லாத பெற்றோரிகளிடத்தும் கலந்துரையாடலும்-விழிப்புணர்வு நிகழ்வுகளும்கூட ஒழுங்குசெய்யலாம். புகலிடங்களில் நடாத்தப்படும் தமிழ்பாடசாலைகள் மூலம் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்துவதற்கு வாய்ப்புண்டு.

இந்நாவலின் கதாநாயகன் வடகிழக்கை தாயகமாக கொண்டு வாழந்தபோது இவனிடம் இருந்த இனஉணர்வு தலைநகரில் வாழநேர்கையில் அவனுக்கு கிடைக்கும் நட்புகளால்- பெரும் உதவிகளால் அவன் தலையில் திணிக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு எதிராக நடைமுறை இருப்பது புலனாவது மட்டுமல்ல. இனத்துவேசம் பரப்பப்படும் அரசியல் ஆதாயங்களின் நச்சுக்கொள்கையை வெளிச்சமாக்குகிறது. மனிதநேயம் இனம்-மொழி-சாதி என்பவைகளை கடந்து நிற்பது. நாதனை இலங்கையிலிருந்து தப்பிக்கவைப்பதற்காக சிங்களநண்பர்கள் செய்யும் செயற்கரிய உதவிகள் செய்கின்றனர். தம்முடைய உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் நாதனை தப்பிக்க வைக்கின்றனர். காலம்காலமாய் இவ்விரு இனங்களும் ஒற்றுமையோடு வாழ்ந்ததும்-இன்னும் வாழுவதும் நாவலில் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளாதார கேந்திர நிலையமாக தலைநகர் இயங்குவதால் பல்லினமக்களும் ஒன்றுகூடும்- பழகும் வாய்ப்பினை அது பெற்றுத்தருகிறது. பெருநகரங்களில் வாழ்வோர் எல்லாவர்க்கத்திலும்- பல்கலப்பினமக்களோடும் நெருக்கமாய் வாழ்வதை பார்க்கலாம். ஒருஇனத்தோடு இன்னொருஇனம் சேர்ந்து வாழவோ பழகவோ வாய்ப்பில்லாததையும்-இன-மத-சாதிவெறியையும் இத்தோடு கலந்து பயன்படுத்தி-அரசியல்ஆதாயம் பெறுவதற்காக எதிரியாக மற்றவனை கொல்வதற்கான சாணக்கியங்களை இனவெறிஅரசுகள் மேற்கொள்ளும் தந்திரங்களை உலகம்பூராக உதாரணங்களாக காட்டலாம்.

இனக்கலவரம் என்ற நச்சுஅரசியல்கொள்கையால் மக்கள் தூண்டிவிடப்படுகின்றனர். இனவெறி மனிதனிடத்து பரம்பரைபரம்பரையாய் ஊட்டபட்டிருக்கும் ஒரு விசம் என்றே புரியப்படவேண்டும். தாயகத்திலே 55.னதும் 83னதும் கலவரங்களின்போதான அட்டூழியங்கள் இந்த விசத்தினால் கக்கப்பட்டவை.

மனிதஉரிமை என்பதை அடிப்படையான சட்டமாக உருவாக்கிவைத்திருக்கும் ஜெர்மன் நாட்டிலே இனத்துவேசம் தொடர்ந்து வளர்க்கப்படுகிறது என்பதற்கு போதிய சாட்சியங்கள் உண்டு. நீறுபூத்த நெருப்பாய் இவ்வரசு கொண்டிருக்கும் நிலைப்பாட்டை 90களில் இங்கு அரசியல் அகதியாய் வாழநேர்ந்திருக்கும் நாதனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்பாடுகளில் இருந்து வெளிச்சமாக்கப்படுகிறது. நிறத்தில்- மொழியில்- இனபாகுபாட்டில் வேறுபட்ட அனைவருக்குமே; இந்நாடு கொண்டிருக்கும் சூழ்ச்சியான அரசியலை புரிந்துகொள்ளமுடிகிறது. மேலும் இக்காலகட்டத்தில் அகதிமுகாம் தீ வைக்கப்பட்டது- அகதிகள் உயிர்தப்பமுயன்றபோது சொந்தநாட்டின் இனவெறியின் குரூரமுகம் வேடிக்கை பார்த்தது- இத்தீவைப்பை கைகொட்டி சிரித்து வரவேற்றது ஆகியவை செய்திகளில் இடம்பெற்றன. இவ்வுண்மைநிகழ்வுகளை மீண்டும் வாசிக்கும்போது இனவெறி தன் முகத்தை வேறொருகோணத்தில் வெளிப்படுத்துவதை கவனிக்கமுடிகின்றது. ஈழத்திலே 83களில் நடைபெற்ற இனக்கலவரத்தையும் யூதர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு- இரவுக்கொடுமைகளையும் இவைகள் நினைவுபடுத்துகின்றன.

பொதுவாகவே வளர்ந்த நாடுகளிடம் தம்மிடம் அகதியாய் வந்துசேரும் அகதிகளைப்பற்றி வஞ்சனையான கருத்துக்கள் உள்ளன.அரசியல் அகதி அல்ல.பொருளாதாரஅகதி,எங்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது,எங்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது, எங்கள் கலாச்சாரம் அழிந்துபோகிறது,, என இனவாதமொழி கூப்பாடு போடுகிறது. இனவாத அரசியல்பின்னணி பற்றிய கேள்வி எழுப்பப்படவேண்டும். என்ற சிந்தனைகளை, இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கிற உள்ளூர்-வெளியூர் அமைப்புக்களின் முன்னெடுப்புக்களையும் நாவல் முன்வைக்க தவறவில்லை.

ரஞ்சித்தின் மொழியில் சம்பவங்கள் நேர்மையோடு பேசப்பட்டுள்ளன.

வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேறும் நிர்ப்பந்தமே கொடூரமானது. அதுவும் தாய்நாட்டிலிருந்து உயிர் தப்புவதற்காக வெளிநாடொன்றுக்கு எப்பாடுபட்டாவது வந்துசேர (இந்தப்பாட்டை அனுபவித்தோருக்கு தெரியும!) என்னென்ன மனிதக்கொடுமைகள் வழிநெடுக காத்திருக்கின்றன என்பவைகளும் தப்பிக்கிறவரை மன-உடல்ரீதியாக அழிக்கிற ஆக்கினைகளும் அகதிகளை துரத்திக்கொண்டே இருப்பவை. ஈழஅரசியல் பெண் அகதிகளின் அகதிப்பயணத்தின்போதான பாலியல்வன்முறைகள் பெண்ணின் உயிரையே உறிஞ்சுபவன. நாதனின் மனைவி கமலாவும் மிகமோசமானபாலியல் வன்முறைக்குள்ளாகுகிறாள். இயக்கங்களின் அதிகாரபோட்டியின்போதும் இவள் உடல்மீதான வன்முறை ஆயதமாக்கபட்டுள்ளது. போரற்ற சூழ்நிலையிலும்கூட இவளும் இன்னும் ஆயிரமாயிரம் பெண்களும் தம்முடல்களை வன்முறைக்கு காவு கொடுத்திருப்பதை-இன்னும் கொடுப்பதை நாவல் தோல் உரித்துக்காட்டுகிறது. நாவல்பாத்திரங்களாக நம்முன்னே தோன்றியிருக்கும் இபபெண்களுக்கு மேல் நிகழ்த்தப்படும் பாலியல்கொடுமைகள் இதயத்தை வருத்துகின்றன.

ரஞ்சித்தின் இவ்ஆக்கம் மிக இலகுவான நடையில்-மொழியில்; உருவாக்ப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் ஆரம்பவாசிப்புடையோராலும் இந்நூல் கவனம் பெறவேண்டும்.

நாவலாசிரியர் தன் ஆக்கத்தை தன்சொந்தமொழியிலும் அதேசமயம் தமிழிலும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. இது ஒரு பாரிய வேலை. சிலவேளை இப்பணி ஒரு மொழிபெயர்ப்புமாதிரி தோற்றம் கொள்ளக்கூடியதாக தெரியப்படலாம். பல்வேறு பரிமாணங்களுடைய இந்நாவல் புகலிட- அரசியல் -விவாதங்களுக்கு பலதிறப்பட்ட கருத்தாளர்களையும் ஈர்க்க முனைகிறது.


கதை சொல்லும்பாணி-வேடிக்கை உரையாடல்-சொந்த நாட்டுப்பண்புசார் ஒழுக்கம்- ஒரு ஆற்றங்கரையோடு நடந்துசெல்லல் போன்ற நிதானமான வேகம்- ஆகியவைகள் ஒரு ஆசிய எழுத்தாளக்குரிய தனித்தன்மையாக(முத்திரையாக) நாவலில் புரியப்பட்டுள்ளது.

தாய்நாட்டை துறந்து காற்றில் - வானத்தில் தத்தளித்து திரியும் காற்றாடி போல கடைசியில் எங்கோயோ விழுந்து வாழ நேர்ந்த அகதியின் வாழ்வுப்பயணம்-எதிர்கொள்ளும் அவலம்-அனுபவம் புகலிடத்திலும் (தாயகத்திலும்தான்!) பேசப்படவேண்டிய அவசியம் உண்டென்பதை மறுக்கமுடியுமா?.

நாவலிலே உண்மைகள் உருவம் பெற்றிருக்கின்றன என்பதுதான் உண்மை.


Thursday, January 06, 2011

தினக்குரல், வீரகேசரி செய்தி

சர்வதேசதமிழ்  எழுத்தாளர் மகாநாடு 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்புத் தமிழ்ச் சங்க ‘தமிழ்த்தூது’ தனிநாயகம் அடிகளார் அரங்கில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.
வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்களின் பதிவினைத் தொடர்ந்து காலி வீதியிலிருந்து தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதமாக எழுத்தாளர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் கலாசார நடனங்களுடனும் பக்திப் பாடல்களுடனும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற வாசகம் பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தியுடன் ஒற்றுமையுடன் பேராளர்கள் திரண்டிருந்ததைக் காணுகையில் மனம் பூரிப்படைந்திருந்தது.

யுத்தத்தால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை தாங்கினார்.

தமிழ்மொழி வாழ்த்து, மாநாட்டுக் கீதம், அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவியரின் வரவேற்பு நடனம் ஆகியன ஆரம்ப நிகழ்ச்சிகளாக இடம்பெற்றன.

மாநாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் டாக்டர் தி.ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

“உலகின் முதலாவது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் நாம் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இந்த மாநாடு இந்த மண்ணிலே தான் முதன்முதலாக நடைபெற வேண்டும் என்பதற்குப் பலதரப்பட்ட காரணங்களும் கட்டாயங்களும் இருக்கின்றன.

தமிழ் இலக்கியம் பயில்கின்ற ஏனைய நாடுகளான இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் கடந்த காலங்களில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

போரின் காரணமாக பல கலை இலக்கியவாதிகள் புலம்பெயர்ந்தார்கள். தாம் பிறந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இவர்கள், தாம் பிறந்த மண்ணை, இரத்த உறவுகளை, தமது சமூகத்தை தேடிவைத்த செல்வங்களை, இன்னோரன்ன பலவற்றை விட்டுப்பிரிந்த ஏக்கத்தை இலக்கியங்களாக்கினர்.

இந்த இலக்கியங்கள் புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் எனப்பட்டன.

அதேவேளையில், போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு உள்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர்களும் புலம்பெயர்ந்து சென்ற எழுத்தாளர் சிலரும் போரின் அனர்த்தங்கள் பற்றி இலக்கியம் படைத்தனர். இவை போர்க்கால இலக்கியங்கள் எனப்பட்டன.

இவற்றையெல்லாம் வெளிக்கொணரக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இலங்கை மண்ணில் இந்தச் சர்வதேச மாநாடு முதன்முதலில் நடைபெறுகிறது.

இந்த மண்ணில் மூன்று தசாப்த காலம் போரின் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ்பேசும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டவும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது தொப்புள் கொடி உறவுகளோடு கலந்து பேசவும் உறவாடவும் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழர்களோடு கலந்து பேசவும் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் தம்மைக் கட்டியெழுப்பவும், வீழ்ச்சியுற்ற மன நிலையிலிருந்து எழுச்சி பெறவும் ஓர் ஆரம்பமாக இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு அமையும் என எதிர்பார்க்கலாம்” என அவர் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து மாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி தொடக்கவுரை நிகழ்த்தினார்.

“செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் - மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து - இடம்பெயர்ந்து – புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா,அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில், பனிபெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொடிய யுத்தத்திலிருந்தும் எண்ணிலடங்கா இன்னுயிரிழப்புக்களிலிருந்தும் மீண்டெழுந்து உயிர்ப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரையில் பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்து காத்திரமான உரையாடல்களை ஆரோக்கியமான திசைநோக்கி வளர்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் முருகபூபதியின் உரையில் காணப்பட்ட தெளிவும் ஆணித்தரமான கருத்துக்களும் அவையினரை சிந்திக்க வைத்தது எனலாம். (தொடரும்…)

-இராமானுஜம் நிர்ஷன்
படங்கள் - ஜே.சுஜீவ குமார்



சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளின் சங்கமம்

-தினக்குரல் செய்தி-

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு இன்று காலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகிறது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவொன்றை இலங்கையில் நடத்துவது தொடர்பிலான ஆலோசனையைப் புலம்பெயர்ந்த தமிழ் கலை இலக்கியவாதிகள் கடந்தவருடம் இதே காலப்பகுதியில் முன்வைத்ததையடுத்து அமைக்கப்பட்ட மேற்படி ஒன்றியம் ஒருவருடகாலமாக முன்னெடுத்த அயரா முயற்சிகளின் விளைவாகவே இந்த நான்கு நாள் மகாநாட்டை நடத்துவது இயலுமாகியிருக்கிறது.
இலங்கையின் தமிழ் கலை இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலதுறைகளையும் சார்ந்த கலைஞர்கள் எவ்வளவுதான் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்த போதிலும், தங்களது ஆத்மாவைத் தொலைத்துவிடாமல் இடையறாது தங்களது எழுத்தூழியத்திலும் கலைப்பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் பல தளங்களில் இருந்தும் வெளிக்கிளம்பிய வண்ணமேயிருக்கின்றன. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தொடர்ச்சியான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணமேயிருக்கிறார்கள் என்பதற்கு கலை இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பெருக்கம் பிரகாசமான சான்றாகும்.
மூன்று தசாப்த காலமாக நீடித்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த உள்நாட்டுப் போர் தமிழ் மக்களைப் பெரிதும் அவலத்துக்குள்ளாக்கியிருந்தது. அந்த அவலத்தில் இருந்து இன்னமும் கூட பெருமளவுக்கு விடுபட முடியாதவர்களாகவே அந்த மக்கள் இன்றும் விளங்குகிறார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்குப் புறம்பாக, இலட்சக்கணக்கானவர்கள் தாய்நாட்டில் இருந்து வெளியேறி உலகின் பல பாகங்களுக்கும் சென்று புலம்பெயர் வாழ்வைத் தொடங்க வேண்டியதாயிற்று. அந்த வாழ்வில் இருக்கக்கூடிய சஞ்சலங்களுக்கு மத்தியிலும் தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களது ஆற்றல்களைக் கனதியுடன் பதிவு செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். புலம்பெயராமல் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு இத்துணை காலமும் கலை இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வருபவர்களை உண்மையில் போராளிகள் என்றுதான் அழைக்க வேண்டும். உள்ளார்ந்த கலை இலக்கிய, ஊடகத்துறை ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எத்திசையில் வாழ நேரிட்ட போதிலும், தங்களது படைப்புகளை வெளிக்கொணர்ந்த வண்ணமேயிருக்கின்றனர். கலை இலக்கிய முயற்சிகளுக்கு ஓய்வோ ஒழிவோ இல்லை என்பதே இந்தச் செயற்பாடுகள் எல்லாம் பிரகாசமாக வெளிப்படுத்துகின்ற செய்தியாகும்.
போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயமொன்று இல்லாதவர்களாக வெற்றிடமொன்றில் விடப்பட்டிருக்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்மான அரசியல் அபிலாசைகளுக்காக புதிய சூழ்நிலையின் கீழ் குரலெழுப்புவதற்கான களமொன்றுக்காக ஏங்கித் தவித்த வண்ணமிருக்கின்றனர். கடந்த கால அனுபவங்களில் இருந்து முறையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காமல் அத்தகைய களமொன்றை உருவாக்குவதற்கு பயனுறுதியுடைய செயன்முறைகளில் ஈடுபடக்கூடியதாக இருக்குமென்று நாம் கிஞ்சித்தும் நம்பவில்லை. அரசியல் வெற்றிடத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு கலை இலக்கிய வாதிகளினதும் எழுத்தாளர்களினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பு இன்றியமையாததாகும். இலங்கைத் தமிழ் மக்களின் எந்தவொரு எதிர்கால அரசியல் செயன்முறையிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் விவேகமான அணுகுமுறையுடன் கூடிய பங்களிப்பு பயனுறுதியுடையதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் தங்களின் இரத்த உறவுகளுக்கு உதவுவதற்கான மார்க்கங்களை வகுக்க வேண்டுமென்பதே நாம் வலியுறுத்த முன்வருகின்ற முக்கியமான விடயமாகும். அரசியல் ரீதியில் நடுவீதியில் நிற்கின்ற ஒரு சமூகத்துக்கு மேலும் இடர்பாடுகளைத் தரக்கூடியதான தான்தோன்றித்தனமான செயன்முறைகளை புலம் பெயர் சமூகம் தெரிந்தெடுத்தலாகாது என்பதே எமது வேண்டுகோளாகும்.
இத்தகையதொரு பின்புலத்திலேயே, இலங்கை வாழ் தமிழச் சமூகத்துக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையேயான இதய சுத்தியுடனான ஊடாட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நிலையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நாம் வரவேற்கின்றோம். இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்க்கையின் தரப்பாட்டை அல்லது எதிர்காலவாய்ப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எந்தெந்த வழிகளில் ஆரோக்கியமாக உதவ முடியுமென்பதை புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தவர்களுக்கு தெளிவுற விளக்குவதற்கு அவர்கள் மத்தியில் இருக்கக் கூடிய படைப்பாளிகள் தங்கள் ஆற்றல்களைப் பயன்படுத்த முடியுமென்று திடமாக நம்புகிறோம். சகல சமூகங்களையும் போன்றே புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் வேறுபட்ட கருத்து நிலைகளையும் சிந்தனைப் போக்குகளையும் கொண்ட பிரிவினர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் பங்கேற்பதற்காக புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள படைப்பாளிகளுக்குப் புறம்பாக, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளும் பெரும் எண்ணிக்கையில் தலைநகர் வந்திருக்கிறார்கள். இவர்கள் சகலரிலும் சங்கமம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுணர்வை ஊட்டுவதற்கான கருத்தாடல் களமாக அமையவேண்டும் என்பதே தினக்குரலின் எதிர்பார்ப்பாகும். வெறுமனே கூடிக்கலையும் உண்டுகளித்துப் பிரியும் மகாநாடாக அமையாமல் தொடர்ந்து அக்கறையுடன் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்பாடாக அமையக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஆக்கபூர்வப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை வாழ்த்துகிறோம்!
நன்றி:தினக்குரல் 

Monday, January 03, 2011

ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும் தேசிய இன முரண்பாடும்

ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும், 52ஆவது கியூப தேசிய விடுதலை தினமும்
 (01-01-2011), விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்று கூடலில் வாசித்தது
-சே.போ.கோபிநாத்- 
 இன்னுமொரு புதிய ஆண்டு பிறந்திருக்கின்றது. நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் முடிந்து, ஆசியாவின் ஆச்சிரியமாக மாறப் போகின்ற நாட்டில் வாழும் நமக்கும் இது ஓரு புதிய ஆண்டுதான். இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாக்கலும், தேசிய இன முரண்பாடும் என்ற தலைப்பின் தற்கால பொருத்தப்பாடுதான் என்ன? மனிதாபிமான நடவடிக்கை நிறைவடைந்து, நல்லிணக்கம், தேசத்தை கட்டியெழுப்பல் என்ற நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகளை கிளறிவிடும் தொனியிலான இவ்வாறான தலைப்பு எதுவித பயனை தந்துவிடப் போகின்றது என்ற கேள்வியை எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.
30வருடங்கள் ஆயுதப் போராட்டம், 50-60 வருடங்களுக்கும் அதிகமாக உரிமைப் போராட்டம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக் கூடிய இந்த தேசிய இன முரண்பாட்டின் அடிப்படையை அடையாளங்கண்டு கொள்ளாத வரை, நல்லிணக்கமும், தேசத்தை கட்டியெழுப்பலும் அசாத்தியமானது. அதுசரி, இதில் எங்கே வந்து ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் சம்பந்தப்படுகின்றது? என்ற கேள்வி எழக் கூடும். ஏகாதிபத்தியம் என்ற உலக ஒழுங்கை ஆட்டிப் படைக்கும் அதிகாரங்களின் செயற்பாடும், தற்கால உலகின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகிப் போன பூகோளமயமாக்கலும், தேச எல்லைக்குள் கட்டுப்பட்டுப் போய் உள்ள தேசிய இன முரண்பாட்டில் எவ்வாறு சம்பந்தப்படும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கக் கூடும்.
இதனை தெளிவாக புரிந்துக் கொள்வதற்கு ஏகாதிபத்தியம், பூகோளமயமாக்கல், தேசிய இன முரண்பாடு என்ற சொற்றொடர்களை தனித்தனியாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏகாதிபத்தியம் என்பதற்கு பல நிலைகளிலும், பல்வேறுபட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், ஒரு வெளிநாட்டின் மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ, மேலாதிக்கத்தையோ செலுத்துவது ஏகாதிபத்தியம் என அழைக்கப்படுகின்றது. ஆட்சிப்பகுதிகளை கைப்பற்றுதல், குடியேற்றங்களை ஏற்படுத்துதல், மறைமுகமான வழிகள் ஊடாக அரசியல் அல்லது பொருளாதாரத்தின் செல்வாக்கு செலுத்துதல் அல்லது கட்டுப்பாட்டை வைத்திருத்தல் என்பதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுருக்கமாக கூறினால், ஒரு நாடு தொலைவிலுள்ள நாடுகளின் மீது கொண்டிருக்கும் மேலாதிக்கக் கொள்கையாகும். இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் விளக்கமாகும். இதனையே லெனின், புதிய சந்தைவாய்ப்புக்களையும், வளங்களையும் தேடுவதற்காக முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தை தூண்டிவிட்டதாக கூறுகின்றார். அதனை அடுத்து ஸ்டாலினின் பார்வையில் யுத்தம், இரத்தம், சதை என்பதே ஏகாதிபத்தியம்.
இந்த மூன்று விளக்கங்களும் எந்த வகையிலும் வேறுபட்டவை அல்ல. அனைத்தும் கூற வரும் விடயம் ஒன்;றுதான். இந்த விளக்கங்களை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நாடு எது, அதன் அதிகார மையம் எது என்பது தொடர்பில் உங்களால் இலகுவில் அடையாளங் கண்டு கொள்ள முடியும்.
உலகின் வலிமை வாய்ந்த அரசுகளின் நிலவுடைமை ஆசையின் வடிவமான காலனியாதிக்க கனவுகளில் சிக்கி நூற்றாண்டுகளை கடந்து, உலக அரசுகள் தமக்கிடையில் சண்டையிட்டு முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் இருந்து எமது இன்றைய நிலையை சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கின்றது. உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தில் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் வௌ;வேறு வடிவங்களில் உலகின் ஆண்டான்களாக தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இன்றைய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக இரண்டாம் உலக மகா யுத்தம் காணப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவுடன் மேலோங்கிய சக்தியாக எழுந்து வந்த அமெரிக்கா இன்று வரை உலக நாடுகளில் அரசியல் ரீதியான, இராணுவரீதியான, பொருளாதார ரீதியான ஏகாதிபத்திய பண்பை வெளிப்படுத்தி வருகின்றது. எல்லா விதத்திலும் உலகில் மேலாதிக்க போக்கை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகள் பல்வேறு வழிகளிலும், அமெரிக்க ஆதரவு நாடுகளாலும் பல வடிவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான உலக வரலாற்றிலே, உலக ஒழுங்கின் சீர்கேட்டுக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாடுகள் எவ்வாறு காரணியாக இருந்தன என்பதனை இலத்தீன் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகளின் அரசியல் வரலாற்றை ஆராயும் போது புரிந்து கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் தொடங்கி, ஈராக்கில் இறங்கி, இன்று ஈரான் மீது தமது அதிகார கட்டளைகளை விதித்து வருவது. கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் முட்டி மோதிக் கொண்டது என அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளினை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அமெரிக்காவின் வரலாற்றை அறிந்து கொள்ள முனையும் எவரும் எளிதில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். தனது சுயநலனைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித தார்மீக நெறிமுறைக்கும் உட்படாமல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளும் குணம் கொண்டது அமெரிக்கா என்பதே அது!

2001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்க உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தாக்கி அழிக்கப்பட்டதன் பின்னரான அமெரிக்காவின் உலகு குறித்து செயற்பாடுகளும் மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

செப்ரம்பர் 11க்குப் பின்னரான அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகள் எவ்வாறு பூகோளமயமாக்கலின் உதவியுடன் தேசிய இன முரண்பாட்டை தூண்டி விட்டன என்பதனை பார்ப்பதற்கு முதல் பூகோளமயமாக்கல் என்றால் என்ன என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய முன்னேற்றங்களினால் உலக சமூகங்களுக்கு இடையில் அதிகரிக்கும் தொடர்பும், அதனால் ஏற்பட்டுள்ள ஒருவரில் ஒருவர் தங்கி வாழ வேண்டிய நிலையும் பூகோளமயமாக்கல் எனப்படுகின்றது. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் பூமியை ஒரு குடையின் கீழ், ஒரே அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலையை உடையதாக மாற்றும் செயற்பாடு எனக் குறிப்பிடலாம்.

இந்த பூகோளமயமாக்கல் என்பது இன்று முக்கியமான இரண்டு வழிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

முதலாவது, ஒடுக்கப்படும் மக்கள், தம்மை சுரண்டும் மக்களின் அடையாளங்களுக்குள் ஐக்கியப்படுத்தப்படுவது.
மற்றையது, சுரண்டும் குழுக்கள் ஒன்றிணைந்து சுரண்டலை முன்னெடுத்துச் செல்வது.

இந்த இரண்டு வழிகளின் ஊடாகவும் உலக நன்மைக்காகவோ, அல்லது தேசத்தின் நன்மைக்காகவோ ஏதேனும் இடம்பெறும் என நம்புவது வீணான கற்பனை மாத்திரமே.

பூகோளமயமாக்கல் என்ற புதியதொரு வடிவத்தில் நவகாலனித்துவம் மீண்டும் தனது சுவடுகளைப் பதித்து வருகின்றது. விஞ்ஞான, தொழில்நுட்ப உபகரணங்களின் ஊடாக சிந்தனை ரீதியிலான திணிப்பை ஏற்படுத்தி, அடிமைத்தனத்தை புகுத்தும் பணியை வெகு இலகுவாக ஊடகங்களின் வழியாக பூகோளமயமாக்கல் செய்து கொண்டிருக்கின்றது. மேற்கத்தைய வாழ்க்கை முறைகள், பழக்க வழகங்கங்கள் ஊடகங்கள் வழியாக பிரசாரப்படுத்தப்படுகின்றன. தேசிய மொழிகள் மூலமான கல்விக்கான முக்கியத்துவம் பயனற்றதாக விளம்பரப்படுத்தப்பட்டு, தனித்து ஆங்கில மொழிமூலக் கல்வி மீண்டும் ஊக்குவிக்கப்படுகின்றது. இவ்வாறு தேசிய பண்பாட்டுக் கோலங்களை சீர்குலைக்கும் பணியை சிக்கலே இல்லாமல் பூகோளமயமாக்கல் செய்து வருகின்றது.

அடுத்தது தேசிய இன முரண்பாடு. இது மிகவும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய சொற்றொடர். தேசிய இனங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு. நாம் அனைவரும் அதன் சாட்சியங்களாக இன்று இருப்பதனால் இது தொடர்பில் பெரிதான விளக்கம் ஒன்றையும் முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்த தேசியம் என்பது ஒரு முதலாளித்துவக் கோரிக்கை என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், மக்கள் கூட்டம் ஒன்று ஒடுக்கப்படும் நிலையில், அதில் தமக்கான பங்கினைக் கோரும் கோரிக்கை சுரண்டும் வர்க்கத்திடம் இருந்தே வருகின்றது. உதாரணமாக, இரண்டு இனப்பிரிவுகளின் ஆதிக்கத்தை கொண்டிருக்கக் கூடிய சுரண்டல் வர்க்கங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் யுத்தமானது அவை சார்ந்த ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் சுமையாக வைக்கப்படுகின்றது. உண்மையில் இங்கே, இந்த போராட்டமானது ஓடுக்கப்படுபவர்களினால், சுரண்டப்படுபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் போராட்டமாக இல்லை. அது தனியே, இரண்டு சுரண்டும் குழுக்களுக்கு இடையிலான போராட்டமாகவே இருக்கின்றது.

இந்த வகையில் நாங்கள் இன்று புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாக இருப்பது இந்த தேசிய இன முரண்பாட்டுக்கு ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் என்பது தூண்டற் கருவியாக அல்லது அடிப்படையாக இருக்கின்றது என்பதனையாகும்.

பூகோளமயமாக்கல் எனும் நிகழ்ச்சி நிரலின் உதவியுடன் உலகில் உள்ள தேசிய செல்வங்கள் பல்தேசிய நிறுவனங்களினால் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனை தீவிரப்படுத்தும் வகையில் பல்தேசிய நிறுவனங்கள் பொருளாதார சுரண்டலின் மூலம் உலகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இங்கு ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்படும் மக்களிற்கும் இடையில் இருக்கும் இன்னும் ஒரு அங்கத்தையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. அந்த அங்கம்தான் தேசிய முதலாளித்துவம் என்பதாகும். ஏகாதிபத்திய நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு சேவை செய்பவர்களாக இவர்கள் மாறியுள்ளனர். இந்த தேசிய முதலாளிகள் என்ற பிரிவில்தான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, அரசாங்கத்தை அமைக்கும் ஆளும் கட்சியும் உள்ளடங்குகின்றது. ஏகாதிபத்தியம் பூகோளமயமாக்கலின் ஊடாக செயற்படுத்த விரும்பும் செயற்பாடுகளை தேசிய ரீதியில் அமுலாக்கும் இயந்திரங்களாக இவர்கள் இருக்கின்றனர். இந்த அதிகரித்த செயற்பாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றது. இதில் முன்னிற்பவர்களாக பாட்டாளிகள் இருக்கின்றனர். இந்த பாட்டாளி வர்க்கத்தினை பிரிக்கும் சூழ்ச்சியாகவே இந்த தேசிய இன முரண்பாட்டை ஏகாதிபத்தியம் கையாளுகின்றது. பாட்டாளிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக ஒரு தேசிய இனத்திற்கு முன்னுரிமை அளித்தும், இன்னொரு தேசிய இனத்தை தாழ்த்தியும் இன முரண்பாட்டை உருவாக்குகின்றது ஏகாதிபத்தியம். இந்த சந்தர்ப்பத்தில், இந்த தேசிய இன முரண்பாட்டை மேலும் தூண்டிவிடும் செயலை தேசிய முதலாளித்துவமான அரசாங்கம் என்ற அமைப்பு செய்கின்றது. இதில் அரசாங்கத்தின் இருப்பு என்பது தங்கியுள்ளது. ஏனெனில், இந்த ஏகாதித்திய சக்திகளுக்கு இசைந்து போகாவிடில் அரசாங்கத்தை மாற்றிவிடும் அதிகாரத்தையும் இந்த ஏகாதிபத்திய சக்திகள் உருவாக்கி வைத்துள்ளன. இலங்கையின் இன முரண்பாட்டை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த நிலையை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

எனவேதான், பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படையில் மக்கள் அணிதிரள்வது ஏகாதிபத்தியத்திற்கு மாத்திரமல்லாது, தேசிய இன முரண்பாட்டுக்கும் தீர்வாக அமையும் என்ற ஆணித்தரமான கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பல தேசிய இனங்கள் வாழும் எமது நாட்டிலும் இந்த தேசிய இன முரண்பாடு என்ற போர்வையில் ஏகாதிபத்தியம், எமது நாட்டு அரசாங்கங்களை தமது கைக்கூலிகளாக வைத்துக் கொண்டு நிகழ்த்தி முடித்த இனப்படுகொலைகளும், சொத்து அழிப்புக்களும் நம் கண் முன்னே சாட்சியங்களாக இருக்கின்றன. ஆனால், இன்றும் நாங்கள் இந்த அழிவுகளுக்கு காரணம் மற்றைய தேசிய இனம் என்ற முட்டாள்தனமான கருத்தில் இருக்கின்றோம். அதனால்தான் பல தசாப்தங்களாக தொடரும் எமது நாட்டின் தேசிய இன முரண்பாட்டிற்கான சரியான தீர்வினை அடைய முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம். 2009 ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்கு பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையை ஆழமாக பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளது. மேலோட்டமாக, யுத்தம் நிறைவடைந்து விட்டது, குண்டுகள் வெடிப்பதில்லை, சோதனைகள் அதிகம் இல்லை, அடையாள அட்டை இல்லாமல் பயமின்றி வெளியே செல்லலாம் என்ற சூழ்நிலை காணப்படுகின்றது. ஆனால், இவற்றிற்கு எல்லாம் பின்னால் நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியானதாக அங்கீகரிக்கப்பட்டு புதியதொரு வடிவில் வெளிக்கிளம்பி வருகின்றது. இன்னொரு வகையில் பார்க்கும் போது நாட்டு சொத்துக்களும், சேவைகளும் தனியார்மயமாக்கப்படுவதும், அபிவிருத்தி என்ற பெயரில் அயல்நாடுகளிற்கு தாரை வார்க்கப்படும் செயற்பாடுகளும் தொடர்கின்றன. 1980களில் உலக அரங்கில் அறிமுகமான ப+கோளமயமதால் என்ற ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் இலங்கையில் அன்றாட நடவடிக்கைகளில் வேரூன்றி செல்கின்றது.

யுத்த காலத்தில் மக்கள் நேரடியாக அழிவை எதிர்நோக்கினர். ஆனால், அந்த அழிவு மறைமுகமாக அமைதி, சமாதானம் என்ற பெயரில் தற்போது ஏற்பட்டு வருவதனை உணரக் கூடியதாகவுள்ளது. யுத்தகாலத்தின் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தூண்டிவிட்டு, ஆயுதங்கள் மூலம் மக்களின் அமைதி சீர்குலைக்கப்பட்டது. இன்று தனியார்மயமாதல், தாரளாமயம், திறந்த பொருளாதாரம், நுகர்வு கலாசாரம் என்ற போர்வையில் நாட்டின் அரசியல், பண்பாட்டு, இராணுவ கட்டமைப்புக்களை ஆளும் சூழ்ச்சியை ஏகாதிபத்தியம் மேற்கொண்டு வருகின்றது. சமாதானம் என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு, பயம், வறுமை, கொலை, கொள்ளை, கடத்தல், நுகர்வு கலாசாரம், வரி, லஞ்சம், கருத்துச் சுதந்திரம் இன்மை, சட்ட பயமின்மை என்ற வடிவங்களில் மக்களின் வாழ்வை சூறையாடி வருகின்றது.

இலங்கையில் பாராளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் அரசாங்கங்களும் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகவே செயற்பட்டு வருகின்றன. நாட்டையும், நாட்டு மக்களையும் கொள்ளையிட முயற்சி செய்யும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு, இலங்கையில் முதலீட்டு சந்தர்ப்பங்களை வழங்குவதன் ஊடாக அரசாங்கம் உதவி புரிகின்றது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா என விரியும் வெளிநாட்டு முதலீடுகள் இவற்றுக்கு உதாரணங்களாக இருக்கின்றன. அதேவேளை, இவ்வாறான கொள்ளையிடும் செயற்பாடுகளை மறைக்கும் வகையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக உதவி வழங்கி தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளும் பணியை இந்த வெளிநாடுகள் செய்கின்றன.

இந்த செயற்பாடுகளை ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் போது உதவி என்ற பெயரில் ஏகாதிபத்திய சக்திகள் நவகாலனித்துவத்தை எத்தனை வேகமாக நிறுவிவருகின்றன என்பதனை அன்றாடம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சிரித்த முகத்துடன் காட்சி தரும் வெளிநாட்டு, அரசாங்க பிரதிநிதிகளின் படங்கள் எமக்கு விளக்குகின்றன.

உலக வங்கியின் நிதியுதவியின் பேரில் வழங்கப்படும் கடன்களை மாத்திரம் கவனத்திற் கொள்ளும் நமக்கு, அதன் பின்னால் எம்மைப் போன்ற ஊழியர்களின் ஈ.பி.எப், ஈ.ரி.எப் வைப்புக்கள் பணயமாக வைக்கப்பட்டிருப்பதனை மறைக்கும் அரசாங்கம் ஏகாதிபத்திய நலனுக்காக பகுதி, பகுதியாக நாட்டையும், மக்களையும் அடகு வைக்கின்றது.

கடந்த 30 வருடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த யுத்தத்தின் அடிப்படை காரணியாக இருப்பது என்ன? இனமுரண்பாடு என்று எம்மால் எளிதாக கூறிவிட முடியும். ஆனால், இந்த இன முரண்பாடு என்பது யாரால் திட்டமிடப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை என்ற பெயரில் மேலைநாடுகள், அதாவது ஏகாதிபத்தியமானது பூகோளமயமாக்கலை இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தியமையும், இலங்கையின் தேசிய சொத்துக்கள் தனியார்மயமாக்கப்பட்டதையும், தாராளமயம் என்ற பேரில் ஏற்பட்டிருக்கக் கூடிய அந்நிய கலாசார புகுத்தல்களையும் நாம் அவதானிக்கத் தவறிவிட்டோம். அதற்கு இந்த தேசிய முதலாளித்துவம் முன்வைத்த உபாயம்தான் ஏ9 வீதி திறப்பு, வடக்கு பயணம் என்பனவெல்லாம்.

தற்போதைய நிலையை எண்ணிப் பாருங்கள், அமைதி ஏற்பட்டுவிட்டது என்றதன் பேரில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என புதிய அபிவிருத்தி பணிகள் என்ற போர்வையில் புதிய வீதிகள் நிர்மாணிக்கப்படுகின்றன, புதிய துறைமுகம், புதிய விமான நிலையம் என ஏகாதிபத்திய கடன்கள் இதற்குள் கொண்டு வரப்படுகின்றன. ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மத்தியில் தேசிய பொருளாதாரம் என்பது மிகவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நாட்டின் சுயதேவைக்கான அரிசி இல்லாத நிலையில் ஏற்றுமதி என்பதன் பேரில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நாட்டில் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

எதிர்பார்க்க முடியாதவகையில் ஏகாதிபத்தியமானது உதவிகள், கடன்கள் என்பவற்றை வாரி வாரி வழங்குகின்றது. இதன் ஊடாக நேரடியான சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற வகைகளில் இலங்கையின் தேசிய வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறாக ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளுக்கு அரசாங்கமும் தாரளமய கொள்கையுடன் அனுமதி அளிக்கின்றது. அவ்வப்போது மக்கள் மத்தியில் ஏற்படும் கிளர்ச்சிகளை சமாளிப்பதற்கு பொருத்தமில்லாத பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்து மக்களின் கவனத்தை இலகுவாக திசை திருப்பி விடுகின்றது. அண்மையில் தேசிய கீதம் தொடர்பில் எழுப்பப்பட்ட பிரச்சினை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

தமிழர், சிங்களவர் என்ற பேத உணர்வை மக்கள் மத்தியில் நீடிக்கச் செய்வதற்கான ஒரு உபாயமாகவும் இது அமைந்துள்ளது.

இவ்வாறு ஏகாதிபத்திய செயற்பாடுகளின் உதவிக்கரமாக இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. அண்மைக்காலமாக அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம். இன்றைய தமிழ் பத்திரிகை ஒன்றில், இந்திய பத்திரிகையில் வெளிவந்த கார்ட்டூன் ஒன்றை பார்த்தேன். சர்வதேச அரசியல் என்ற 2010 பொறிக்கப்பட்ட உலக உருண்டை நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சி. எத்தனை உண்மை. அரசாங்கங்கள் பகிரங்கமானதாக இருப்பதற்கு நாம் உதவி செய்கின்றோம் என்ற தொனிப்பொருளுடன் இயங்கும் விக்கிலீக்ஸ், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு மதப்பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தூண்டிவிட்டது, அது நடத்திய மனிதப் படுகொலைகள் என்பதனை விளக்குகின்றது. அதுமாத்திரமின்றி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் எவ்வாறு குறித்த நாட்டின் அரசியல் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனையும் வெளிக்கொணர்ந்தது.

காலத்துக்கு காலம் முதலாளித்துவம் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் சார்ந்த கொள்கையாக தற்போது பின்நவீனத்துவம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களை குழுக்களாகப் பிரித்து அவர்களுடைய செயற்பாடுகளில் தேக்கத்தை கொண்டுவருவது அல்லது முற்றாக செயற்பாடுகளை இல்லாது செய்வது என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், ஏகாதிபத்தியம் தொடர்பான பகுப்பாய்வு ஒன்றினை நடத்தி முதலாளித்துவத்தின் விதையாக தூவப்பட்டுள்ள ஏகாதிபத்திய பூகோளமயாதலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியத்தின் கால்களில் மிதியுண்டு நைந்து போயுள்ள பல நாடுகள் நாளாந்தம் யுத்தமும், இரத்தமும், சதையுமாய் அல்லலுறுவதனை நாளாந்தம் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம். இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்க நாடுகள் என விரியும் இந்த பட்டியலில் நாமும் இணையப் போகின்றோமா? அல்லது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒன்றாக இணைந்து ஏகாதிபத்திய பூகோளமயமாக்கல் மற்றும் தேசிய முதலாளித்துவத்திற்கு எதிராக போராடப் போகின்றோமா?

மக்கள் சமுதாயம் மிகவும் பயங்கரமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. மிகவும் மோசமான எதிர்காலத்தினை நோக்கிய இந்த பயணத்தில் ஏகாதிபத்தியத்தின் பணயக் கைதிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இருக்கப் போகின்றோம்? ஜனநாயகத்தின் பேரால், ஏகாதிபத்தியக் கனவுகளை இளைஞர்களில் விதைத்து, எதிர்காலத்தை சூன்யமாக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக, இனபேதங்களை மறந்து, பாட்டாளிகள் என்ற அணியில் ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஒற்றுமை வழிஒன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம்- நன்கு தேர்ந்திட்டோம்
மற்ற நீங்கள் செயுங்கொடு மைக்கெலாம்
அலைவுறோம்- சித்தம்- கலைவுறோம்
-பாரதியார்-

நன்றி:கோபிநாத்

Saturday, January 01, 2011

புத்தாண்டுச்செய்தி

இலங்கை அரசுக்குள் நெருக்கடி உக்கிரமடைகிறது.
                        -வ.அழகலிங்கம்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்றாடம் மக்கள் ஆதரவை இழந்துவருவதாக இங்கிரியவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சிரேஸ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். அரசு இழைக்கும் தவறுகளின் காரணமாக ஜனாதிபதி மஹிந்தர் ராஜபக்ஸ்ச மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அருகிவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

இன்றைய நிலைமைக்கு அரசை இட்டுச் செல்வதற்காக ஆலோசனை வழங்கி வரும் கும்பல் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர்களுடைய ஆலோசனைகளின்படி நடக்கும் அரசுக்கு மக்கள் உரிய பதில் அளிப்பர் என்றும் கூறினார்.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் அதுகுறித்து மக்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள், எவ்வித திட்டமொன்றும் இல்லாமல் பொருட்களின் விலை அதிகரிப்பதனால் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல் போகிறது.
    அனேக சிரேஷ்டமந்திரிகளுக்கு நிர்வாகப் பணிமனை வசதிகள்கூட அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். 'நீங்கள் எங்கே வதிக்கிறீர்கள் என்று சில சீரேஷ்ட மந்திரிகளைக் கேட்டதிற்கு, அவர்கள,; நாங்கள் காற்றிலே வசக்pகிறோம்' என்று விடையளிக்கிறார்கள். அமைச்சர்கள் வசதியின்மையால் சரியான படி செயற்பட முடியாமலும் திட்டமிட முடியாமலும் இருக்கிறார்கள்.
    நாங்கள் மக்கள் முன்சென்று எமது தவறுகளைச் சொல்ல வேண்டும். அவர் 'அப்பி வவமு றட்டே நகமு' 'யிi றயஎயஅர சயவய யெபயஅர'  வேலைத்திட்டமும் சரியாக நடக்கவில்லையென்று குறிப்பிட்டார். விவசாயிகளின் விளைபொருட்களை விற்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று கூறினார்.
    மாஜி பிரதம மந்திரியும் சிரேஷ்ட மந்திரியுமான விக்கிரம ரத்தின இதை நேருக்கு நேரே ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ்சவுக்குச் சொல்லாமலும், மந்திரிசபைக் கூட்டத்து;ள் சொல்லாமலும் தனது சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசியற்குழு, மத்தியகுழு மற்றும்  பேராளர் காங்கிரஸ், அங்கத்தவர் கூட்டங்களில் சொல்லாமல் வெகுசனங்களுக்குச் சொல்ல நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார். இதுவே அரசாங்கம் உள்ளுக்குள் இருந்து உளுக்கிறது என்பதைச் சமிக்ஞை செய்வதாகும்.
    மனோகரா சினிமாப்படத்திலே அந்தப்புரச் செய்தி அரசவைக்கு வருவானேன் என்று சிவாஜி கணேசன் வசனம் பேசியதுதான் ஞாபகம் வருகிறது.
'வட்டமிடும் கழுகு, வாயைப் பிளந்து நிற்கும் ஓநாய், நம்மைச் சுற்றி நிற்கும் மலைப்பாம்பு... என்று கனவிலே இருந்த கலைஞர் கதைவசனம் தான் நினைவுக்கு வருகிறது.
    வால்மீகி ராமாயணத்திலே மாரீசன் சொல்கிறான்:-'இலங்கையின் ஆட்சி மக்களுக்கு அச்சமூட்டுவதாலும், கொடுமை புரிவதாலும் நடைபெறுகிறது. மக்களுடைய நலனுக்கு எதிராக நீதிக்குப் பணிதல் இன்றிக் கடும் தண்டனை விதிப்பதால் நாட்டை ஆளமுடியாது. கொடுமையால் ஆளும் அரசனுக்கு ஆலோசனை கூறியும் துணைபுரிந்தும் வாழ்கின்ற ஆணையர் அவ்வரசனோடு அழிவர்.'
    மாரீசன ;வாயால் வால்மீகி மேலும் சொல்லுகிறான்:-' அரசே நீ கேட்க விரும்பும் ஆலோசனைகளை மாத்திரமே எப்பொழுதும் சொல்லும் மந்திரிகளையும் ஆலோசகர்களையும் பெறல் மிகமிக எளிது. நீ கேட்க விரும்பாத, ஆனால் உனக்கும் மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும் ஆலோசளைச் சொல்வோர் கிடைத்தல் அரிதிலும் அரிது. அவர்கள் சொன்னாலும் அச்சொல்லைச் செவிமடுக்கும், பொறுத்துக் கொள்ளும் அரசன் கிடைப்பது அதனிலும் அரிது.'
    கும்பகருணன் வாயால் கம்பன் சொல்லுகின்றான்:- இராவணனுடைய மந்திரி சபையின்தகுதியின்மையைக் கும்பகருணன் ;போருக்குப் போகுமுன்பு சுட்டிக்காட்டுகிறான். அவனுடைய இறுதி அறிவுரை இது:-
    ' உனது மந்திரிகள் நீதியும் ஒழுக்கமும் அறியாதவர்கள். அவற்றை மதிப்பவரும் அல்லர். ஆட்சிமுறைகளைப் பற்றிக் கவலைப் படுவோரும் அல்லர். பொருள்நூல் அறியாத அவர்களோ பெற விழைவதோ பெருஞ் செல்வம். செருக்கால் அறிவிழந்து உனக்கு அடாதனவற்றைப் பிதற்றுகின்றனர். அப்பிதற்றலை உனக்;;காகவும் தேசத்தின் நன்மைக்காவும் சொல்கின்றனர் என்றெண்ணி நீயும் ஏற்கிறாய். சிறிது நன்மைகூட அவர்கள் செயல்களாலும் ஆலோசனைகளாலும் வரப்போவதில்லை. ஒவ்வொரு செயலுமே மாசு அடையும். பேரழிவைக் கொண்டுவரும். அவர்களின் சொல்லைக் கேளாதே. அவர்களை மந்திரி சபையிலிருந்து நீக்கு.'
    இவையெல்லாம் இன்று எம் கண்ணுக்கு முன்னால் மீண்டும் இலங்கையில் நடப்பது போன்று இருக்கிறது. சரித்திரம் மீளவும் வரும் என்பது உண்மையாகுமோ என்ற அச்சத்தை ஊட்டுகிறது.
    தசரதன் இறந்தபின்பு மார்க்கண்டேயர் முதலியபுரோகிதரும் அமைச்சர்களும் வசிட்டனிடம் கூறுகின்னர்:-
அரசன் இன்றி சட்டத்தின் ஆட்சி நிலவாத நாட்டிலே:-
'கணவனுக்கு மனைவியும், தந்தைக்கு மகனும் கட்டுப்படார்.
--கணவன் மனைவி என்ற நெறிமுறை இராது.
--சொத்துரிமை இராது
--கலைகள், விழாக்கள் குன்றும்
--வாணிகம் நடைபெறாது.
--பாதைகளில் பாதுகாப்பு இருக்காது.
--குடிமக்கள் இரவினில் நிம்மதியாகத் தூங்க மாட்டார்கள்.
--முயற்சியும், முயற்சியின் பயனுக்கு உறுதியும் இரா.
n    படைகளால் புறப்பகைவரை எதிர்க்க முடியாது.
n    நாட்டில் எந்தப் பொருளும் ஒருவனின் உடமையாக இராது.
n    பெரிய மீன் சிறிய மீனை விழுங்குவது போல வலியார் மெலியாரை விழுங்குவர்.
n    சமூக வரம்புகள் இரா.
n    சம்பிரதாயங்கள் நிராகரிக்கப்பட்டு நாசசேலைகள் பெருகும்
n    நாத்திகம் பரவும்
n    யாருடைய ஆணையும் செல்லுபடியாகாது.
-- தண்டனைப் பயம் அகலும்

நல்லாட்சி நடவாத நாட்டினிலே என்ன நடக்கும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.
'ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவா விடில்'
ஆக்கத்தால் அதாவது பல்வேறு தொழில்களால் வரும் பயன் குன்றும். நானாவிதத் தொழிலாளர்களும் கற்றுக்கொண்ட தொழில்களைப் பிரயோகிக்க முடியாமையால் தொழிலால் பண்டங்களைப் படைக்கும் வழிமுறைகளை மறந்து போவார்கள்
    எவ்வாறு பிரபாகரனின் அச்சுறுத்தலால் தமிழ் சமூகம் நலிவுற்றதோ அதே போல் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகமும் இராணுவ, உளவுப்படை, வெள்ளைவான் கடத்தல்களால் அச்சுறுத்தப்பட்டு நலிவுறுகிறது.
    2010 .12.30  டெய்லிநியுஸ் ஆசிரியர்தலைப்பில் கூட பெரிய குற்றவாளிகள் அரச நிர்வாகத் துறையிலேயே இருக்கிறார்கள் என்று வெளியிட்டுள்ளது.. யாராவது பிரஜை ஒருவர் அரச திணைக்களங்களுக்குள் சென்றால் அங்கே ஆளில்லாத இடங்களில் மின்விசிறி தானே ஓடிக்கொண்டிருக்குமென்றும் குளிர்சாதான பொறிகளும் தேவையில்லாமல் இயங்கிக் வீண்விரயம் செய்துகொண்டிருக்குமென்றும் எழுதியுள்ளார். அரச ஊதுகுழலான டெய்லி நியூஸ்  அரச நிர்வாக துர்ப்பிரயோகங்களை அம்பலப் படுத்தத் தொடங்கியுள்ளது.

  The biggest culprits in this regard are the Government institutions. Any visitor to a Government Department today will confront the all too common site of fans rotating at full blast over vacant seats or Air-conditioners operating at full throttle in untenanted office areas.
2010.12.31 சிறீ ஜெயவர்த்தன புர சர்வகலாசாலை மாணவர்கள் 14 பேரை இடைநிறுத்தம் செய்ததையும் அதற்கெதிராக  முழுப் பல்கலைக்கழக மாணவர்களும் சத்தியாக்கிரகப்போராட்டத்தைச் செய்வதையும்  டெய்லிநியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
    நாட்டில் கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றமானது சாதாரண சனங்களுக்கு அதை எதிர்கொள்ள வகையில்லாததால் திடிரென்று கொலைசெய்து கொள்ளையடிப்பது தென்னிலங்கையில் அதிகரித்துள்ளது. சட்டத்தின் ஆட்சியென்பது மருந்துக்கும் இல்லாததாகி விட்டது.
    'பசியோடு இருக்கும்ஒரு மனிதன்குற்றம் புரியாமல் இருந்தால்தான் வியப்படைவேன்' என்று தீர்க்கதரிசி முகமதுவின்தோழர் ஒருவர் கூறியுள்ளார்.
டிசெம்பர் மத்தியில் சிங்களமக்கள் வாழும் தென்னிலங்கையில் ளுநடடயறயாயபந Pலையளநயெ (54)   செல்லாவாககே பியசேனா(54) என்ற ;இரும்புக்கடை மில்லியாதிபதி மிகவும்பாதுகாப்பான களனிப்பிரதேசத்தில் தலுகம என்ற இடத்தில் இரண்டு இராணுவ விட்டோடிகள் என்று சொல்லப்படுபவர்களால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
டிசெம்பர் 11, 2010 இல்  பட்டப் பகலில்; மீரிகமவிலுள்ள அங்குறவெல்ல என்ற இடத்தில் ஒரு நகைக்கடை வியாபாரி கொள்ளையடிக்கப் பட்டுள்ளார். இந்தக் கொள்ளை நடந்த முறையையும் நேரத்தையும் கருத்திலெடுத்த வெகுசனங்கள் இதிலே இராணுவ பொலீஸ் உச்சியிலுள்ள அதிகாரிகள் சம்பந்தப் பட்டதை உடனே ஊகித்துள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளை மூடிமறைப்பதற்காக அந்த இடத்தில் பொலீஸ் கொள்ளையர்களிடையே நடைபெற்ற சண்டையில் இருபகுதியிலும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
    நவம்பர் முற்பகுதியில் கொக்கறல்லப் பிரதேசத்தில் 3 கனவான் உடையணிந்தவர்கள்  புதைபொருள் ஆய்வுத்திணைக்களத்தின் உத்தியோக பூர்வ வாகனத்தில்  றாஜ மகாவிகரைக்கு வந்து தாம் உத்தியோக பூர்வ வேலைக்கு வந்ததாகக் கூறி விகாரையின் பக்கத்தைத் தோண்டி விலைமதிக்க முடியாத தொல்பொருட்களை எடுக்கத்  தொடங்கினர். விகாரையின் பிக்கு ஊர்ச்சனங்களுக்கு சந்தேகத்தின் பேரில் சொல்லவே சனங்கள் சூழ்ந்து அவர்களைப் பிடித்துப் பொலீசிடம் கொடுத்தனர். (சுரியஎயாiniஇ ஊPஊஇ வுiஅடிநச ஊழசிழசயவழைn யனெ வாந ர்னுகுஊ டீயமெ. ) அவர்களுள் ஒருவர் ரூபாவாகினியில் வேலைசெய்பவரும் மற்றவர் மரக் கூட்டுத்தாபனத்தில் வேலை செய்பவரும் மற்றயவர் ஏச்டீஎப்சீ வங்கி ஊளியருமாகும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    தென்னிலங்கையில் ராஜபக்ஸ்ச குடும்ப குறுங்குழு கும்பலாட்சிக்கு எதிரான வெறுப்பானது பெருக்கல்விருத்தி வேகத்தில் வளர்ந்துகொண்டு செல்கிறது. தென்னிலங்கையில் உள்ள குசினிகளின் அடுப்புக்களை நாய்விறாண்டத் தொடங்கியுள்ளது. தேங்காய் அரிய அற்புதப் பொருளாகி விட்டது. தேங்காய் திறந்த சந்தையில் வாங்க இயலாது. ரூபா 60 வதுக்குக் கூட ஒரு தேங்காய் வாங்க இயலாது. இத்தனைக்கும் பல மந்திரிகள் தெங்குத்துறை உற்பத்தியை நிர்வகிக்கின்றனர்.
பாண்விலை ரூபா 50. அதுவும் இலகுவில் கிடைக்காத பொருளாகி விட்டது. அரைறாத்தல்பாணும் சம்பலோடும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் திடீர்சாவை நெருங்குகின்றனர். சாத்துக்கு எளிய சூடைமீனின் விலை ரூபா50 இல் இருந்து ரூபா150-ரூபா200 வரை ஏறி விட்டது. முன்பு ரூபா150 விற்ற கிளாத்தி மீன் ரூபா 650 ஆக உயர்ந்து விட்டது. வெங்காயத்தின் விலை ரூபா60 இல ;இருந்து  ரூபா 200 க்கு உயர்ந்து விட்டது. அரிசி விலை ரூபா60. சாதாரண காய்கறிகளின் சராசரி விலை கில்லோவுக்கு ரூபா100 இல் இருநது; ரூபா 130 வரை உள்ளது.
மத்தியதர வர்கம் உண்ணும் கோழி இறைச்சியும் முட்டையும் கிடைக்கவே கிடைக்காது. போன வருடம் ரூபா250 விற்ற கோழியின் விலை இப்பொழுது ரூபா450. ஒரு கிளாஸ் பிளேன் ரீ ரூபா20. ஒரு கிளாஸ் பால்ரீ ரூபா35. ஏறத்தாள 30 வீதத்திலிருந்து 50 வீதம் வரை விலையேற்றம். ஒரு சோத்துச் சாப்பாடு இரண்டு காய்கறிக் கறியோடும் ஒரு துண்டு மீனோடும் விலை ரூபா50 ஆக இருந்தது. இப்பொழுது விலை ரூபா125 ஆகிவிட்டது. முன்பு இதற்குத் தேங்காயச் சம்பலும் தருவார்கள். இப்பொழுது அது நிறுத்தப்பட்டு விட்டது.
    மின்சக்தியைப் பாவித்த கட்டணத்தை எவ்வாறு கட்டுவது என்பதே பேசுபொருள். அதுவும் ஒவ்வொருமாதமும் வௌ;வேறு கணக்கீடுகளோடு கைகளுக்கு வருகின்றன. மக்களின் ஏளனச்சிரிப்போடும் பெருமூச்சோடும் மந்திரி சம்பிக்க றணவாக்கை பற்றிய நக்கல் நையாண்டி ஏளனங்களோடும் முடிந்து விடுகின்ற.
    
    2010 ஆம் ஆண்டு போரின் கடுமையை, போரின் அனைத்து விளைவுகளையும் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உணர்த்திக் கொண்டிருந்தது. 2011 ஆம் ஆண்டின் தலைவாயிலில், அனைத்தும் நழுவிக் கொண்டும், நொருங்கிக் கொண்டும், இருப்பதுபோலவும், எதையும் பற்றிக் கொள்ள முடியாதது; போலவும், எதன் மீதும் சாய முடியாதது; போலவும்,  தோன்றுகிறது. சரத்பொன்சேகா சொன்ன தமிழ்கொடி சிங்கள மரத்திலே படரவேண்டும் என்பதுகூட இயலாமல் போய்விட்டது. சிங்கள மரமும் பராமரிப்பார் இன்றிப் பால்வற்றிப் பட்டு உக்கி உழுத்துக் கறையான் அரித்து அழிவின் வழிம்பில் நிற்கிறது. மிகவும் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கிற, பொருளாதார வகையில் வாடி உலர்ந்து போயுள்ள, மிகவும் பாழ்பட்டு நிற்கின்ற ஒரு நாட்டை, அதை ஆழ்கின்ற அரசுக்கு ஆதரவழிப்பதே சந்தேகத்திற்கு இடமின்றி மக்கள் துN;ராகமாகிக் கொண்டிருக்கும் மறுக்கமுடியாத பேருண்மைக்கு மத்தியில, தமிழ் சிங்கள முஸ்லீம் மூன்றுசமூகத்திலுமுள்ள புலமைச்செருக்கின் சுவடுகளைக்கூடக் காணமுடியாத படித்த பண்பாளர்கள் எல்லோருக்குமே ;அரசியல் என்றதுமே இதயம் வெடிக்கிறது. சிங்கள மக்கள் அலுத்துச் சலித்து விரக்தியின் வழிம்பில் நிற்கிறார்கள். கிட்லர் பாசிசத்தின் முன் நாட்களில் ஜேர்மன் மக்கள் இப்படியே அலுத்துச் சலித்து வாழ்ந்தார்கள்.
தேசியத் தற்சார்பைக் காத்துக் கொள்வதற்கும் வேண்டிய உயிர்ச்சாரத்தை இழந்திருக்கும் ஒரு நாட்டைக் கண்டொருவர், அதுவும் அந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஒருவர் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. அங்கு உணவு இல்லை. மருந்து இல்லை. போக்குவரத்து சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் நீக்கமறச் சதிகள் தோன்றிக் கெண்டிருக்கின்றன. அனைத்தும் தேசமும் தேசியமும், வாழுகின்ற எல்லா இனங்களின் கலாச்சாரமும் கண்ணுக்கு முன்னிலேயே மறைந்து கொண்டிருப்பது அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் எதை எங்கு தேடுவது என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கிறது. மிகவும் எளிய நாளாந்தப் பணிகள்கூட பெரும் முன்மயற்சியை  வேண்டும் கடும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. புலிப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பாதித் துணைவர்களாக இருந்தவர்கள் தங்கள் தற்போதய செயல்களிலுள்ள மக்கள் விரோதத்தைச் சட்டைசெய்யாமல் குறுங்குழு குடும்பநலக் கொடுங்கோன்மை அரசுக்கு முண்டுகொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் துரோகிகள் என்பதை மெய்ப்பிக்கின்றனர்.
    மனித வரலாற்றில் பலவகை வேறுபாட்டுக் கூறுகள் இருப்பதும், அவற்றில் கோழைத்தனமான வரலாற்று விதி வாதங்களுக்கு எதிராக விவாதங்கள் முறையாக வைக்கப் படுவதும், அப்படிவைக்கப்படும் அனைத்துப் பருமையான வினாக்களுக்கும் காரணகாரிய விதிகளின் பின்னால் அக்கூறுகள் செயலற்று ஓடி ஒளிவதும் -ஒரு கணம் மிகமுக்கியமான கூறான வாழ்ந்துகொண்டும் செயற்பட்டும் கொண்டுமிருக்கும் கூறான மனிதனை அவை புறக்கணித்து விடுவதையும் நாம் பார்க்கலாம். இன்று இலங்கை முழுவதிலுமே தலைகீழான சிலமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. புலிப் பாசிச காலமோ நித்திய நிரந்தரக் கொலைக் காலமாக இருந்தது. இன்று; இலங்கை முழுவதும் நித்திய நிரந்தரக் கொலைக் காலமாக மாறிவிட்டது. யுதத்தத்தின் போது கோடி கோடியாகக் கொள்ளை பணம் சேர்த்தவர்கள் தாங்கள் பழக்கத்திற்கு அடிமையான ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்ந்து பேண புதிய குள்ள வழிகளை நாடியுள்ளனர். முழத்திற்கு முழம் ஆயுதப் படைகள் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாளாந்தம் கொலை கொள்ளை நடப்பதை வேறு வழியில் வியாக்கியானப் படுத்த முடியாது. அதன் விஸ்தரிப்பே தென்னிலங்கையின் அவலம்.
    எதிர்ப்புரட்சிக்கான அரசியல் மாற்றங்கள் மனிதர்களையும் மாண்புகளையும் பேராவுலுடன் விழுங்கும். வலியவர்களை அவர்களின் அழிவுக்கு வழி நடாத்தம். நெஞ்சுரம் குன்றியோரின் ஆன்மாக்களை அழிக்கும்.
    இலங்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கே அதிபராக்கிரமமும் அமானிடபுலமையும் தேவைப்படுகிறது. எண்ணற்ற ஊடகங்கள் குறுக்கும் மறுக்குமாக ஊடறுப்பதால் எதையும் பொதுமைப்படுத்துவது இரத்தம் காய்ந்த வேலையாகிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அப்படியே உணருவது பாதிவெற்றியை ஏற்கனவே உறுதிப்படுத்துகிறது. புரட்சிகர அரசியலாளன் ஒருவனின் அறிவுத்திற வீழ்ச்சிக்கு வெகுசனங்களை ஏமாற்றுவதைவிட வேறு மிகப்பெரிய சான்றுகள் தேவையில்லை. இலங்கை மக்கள் உயிர்தப்பிப் பிழைப்பதற்காகவும் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழவேண்டுமென்பதற்காகவும் மிகமிகக் கனத்த சிலுவையை இறக்கிவைக்க வாய்பில்லாது முப்பது வருடங்கள் சுமந்தார்கள். இன்றோ என்னும் எத்தனை வருடம் மேலும் சுமக்க வேண்டும் என்ற அடுத்த அங்கலாய்ப்போடு வாழ வேண்டியிருக்கிறது.
    எந்தவித வெட்கமும் இல்லாமல் பொய்பேசவும் அதையே வழக்கமாகவும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் கீழ் இலங்கைமக்கள் வாழ்வதோடு தமது எதிர்காலப் பரம்பரையை ஈடேற்றவும் வேண்டியுள்ளது. ராஜபக்ஸ்ச இனவாத குறுங்குழு சர்வாதிகார அரசு இராணுவ சட்டகங்களால் உருவாக்கப்பட்டு அரசியல்போர்த்த அமைப்பு ஒன்றாகும். முப்பது வருடப் புலிப்பாசிசத்தின் கதகதப்பில் அது அப்படித்தான் உருவாக்கப்பட்டது. அது ஜனனாயக ஆட்சிமுறை, தன்னிறைவான கோட்பாடுகளிலிருந்து வடித்தெடுக்கப்படாமல் ஆதிக்க வகுப்பின் தேவைகளிலிருந்து, அதன் உட்தருக்கத்தின் சக்திகளாலும் அதற்குள் அதுவே உட்படுத்திக்கொண்ட புகலிட உரிமையாலும் வடித்தெடுக்கப் பட்டதாகும்.
    மக்களின் சகிக்கமுடியாத வாழ்துயரங்கள் வருகின்ற ஜனவரி 26 எதிர்க்கட்சிக் கூட்டுக்களின் ஆர்ப்பாட்டமாக உருவெடுத்துள்ளது. ஒரு லட்சம் பேர் ஊர்வலத்திற்கு வருஉள்ளதாக ஊகிக்கப் பட்டுள்ளது. இது என்னமாதிரி 1953 கர்த்தால் எதிர்பாராத வெகுஜன எழுச்சியாக மாறினதோ அதேபோலவே அதிகமாக அபிவிருத்தியடையும். 1953 இல் உலக பொருளாதாரம் மேலேறிப்போகும் வளர்ச்சிக்கோட்டில் சென்றது. இன்றோ நிலமை வேறு. ஆயிரம் லட்சம் மடங்கு உலக பெருளாதார நெருக்கடி நிலவும் காலத்தில் நடக்க இருக்கிறது. வங்கி நெருக்கடி, பொருளாதாரக்கட்டுமான நெருக்கடி, கடன் நெருக்கடி வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை, ராஜதந்திர நெருக்கடி யுத்தநெருக்கடியென்று எழுபதுவரடமாகத் திரண்ட முதலாளித்துவ நெருக்கடியாக வந்துள்ளது.
    இலங்கையோ ஒரு பிரத்தியேக நிலையில் உள்ளது. வெகுஜனக் கிளர்ச்சி எழுச்சிகளின் பின் எதிர்ப்புரட்சி அபிவிருத்தியடைவதே வழமை. இன்றய இலங்கையோ மூன்று தசாப்த எதிர்ப்பரட்சி அழிவுகளின் பின் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எதிர்ப்புரட்சி முற்றுப் பெற்றபின் இரண்டு வருடம் கூட ஆகவில்லை. என்னுமொரு எதிர்ப்புரட்சியை நாடு தாங்காது. ஒரு சமூகப் புரட்சிக்கான அத்தனை புறநிலைச் சூழலும் இலங்கையில் உள்ளது. இராணுவம் ஏற்கனவே பிளவு பட்டுவிட்டது. புரட்சியின் அகவயக்காரணியபன பலமுறை வர்க்கப்போராட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சர்வதேச ஐக்கியத்தோடு கூடிய புரட்சிக் கட்சி கருநிலையிலேயே உள்ளது. இலங்கைத் தொழிலாளி வர்க்கம் தன்னிடமுள்ள அத்தனை புரட்சிச் சமன்பாடுகளையும் பிரயோகிக்க நாமும் உதவ வேண்டும். எழுபது வருடமாக முதலாளித்துவ அமைப்புக்குள் வைத்து தமிழ்தேசியப் பிரச்சனை உள்ளிடட் இலங்கையின் எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மையாகும். எழுபது வருடம் பரிசோதித்துப் பார்த்த முதலாளித்துவத்தின் கீழ் அதே பரிசோதனையை வேறு விளைவு வரும் என்று முட்டாள்கள்தான் நம்புவார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையைச் சோஷலிசம் மாத்திரம்தான் தீர்க்கும் என்பதை எம்மால் அடித்துக் கூறமுடியும். சிங்கள தமிழ் முஸ்;லீம் தொழிலாளரிடையே சகோதரத்துவம் மலருவது கபடமான ஒன்றல்ல. சுனாமியின்போதும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போதும் அது நடைமுறையில் தமிழ்மக்களுக்கு உரைத்துக் காட்டப்பட்டது. அமிலப் பரிசோதனையால் நிறுவிக்காட்டப்பட்டது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதை நினைப்போமாக. சிங்கள தமிழ் முஸ்லீம் சகோதரத்துவத்தின் பேரால் எமது இனிய புரட்சிகர புத்தாண்டு வாழ்த்துக்கள் உரியதாகுக.
2010.12.31