Friday, May 27, 2022

இலங்கையின் தற்போதைய சூழல்

25.05.2022 புதன்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில்  *கலை இலக்கிய பெருமன்றத்தின்* தூத்துக்குடி மாநகர குழுசார்பாக முதலாம் கூட்டம் போல்டன்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. க விழாவி்ல் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வருகைப் புரிந்த முன்னாள் கல்வியியல் பேராசிரியர் தோழர் முனைவர் ந இரவீந்திரன் அவர்கள் கலந்த கொண்டு 'இலங்கையின் தற்போதைய சூழல்' என்ற தலைப்பில் பேசினார்..  

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று நகரக்குழுவின் தலைவர் மாடசாமி அவர்கள் நடத்தினார். வரவேற்புரையை மன்றத்தின் நகரக்குழு செயலர் சொ பிரபாகரன் நிகழ்த்த, அதன் செயற்குழு உறுப்பினர் சுந்தர் காந்தி முனைவர் ரவீந்திரன் அவர்களைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.   

உரையின் போது ரவீந்திரன் அவர்கள் தற்போது நடந்த இலங்கை போராட்டம் என்பது மக்கள் எழுச்சி என்று கூறமுடியாது என்றும், அது ஊடகங்கள் நாட்டின் சுயசார்பு தன்மையை இழக்க வைக்கும் முறையிலும், ஆதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வைக்கும் வகையிலும், தகவல்களை தணிக்கை செய்து பரப்பியதின் விளைவு என்று கூறினார். ஆகவேதான் இப்போராட்டத்தின் பின்புலத்தில் எந்த அரசியல் தலைமையும், அரசியல் கட்சிகளும் ஈடுபடவில்லை என்றும் விளக்கினார்.. நமது சமூகத்தில் எந்த மேலாதிக்க சக்திக்கும் அடிபணியாமல், சமத்துவத்தைப் பேணுவதின் மூலம்தான் மக்களின் பொது நன்மையைப் பேண முடியும் என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார். 

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏதாவது ஒரு கேள்வி இருந்தது, அனைவரும் உரையை உள்வாங்கி உள்ளார்கள் என்பதற்கும், சிறந்த விவாதம் நடந்தது என்பதற்கும் எடுத்துக் காட்டாய் இருந்தது. 

பின்னர் கட்சியின் மாநகரச் செயலர் தோழர் ஞானசேகர் அவர்கள் முனைவர் இரவீந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். கட்சியின் மாவட்ட பொறுப்பு செயலர் தோழர் கரும்பன் அவர்கள் மன்றம் இதுமாதிரி பல கூட்டங்களை நடத்தி, சிறந்த கருத்துகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென கூறினார்.. மன்றத்தின் மாவட்ட தலைவர் அருட்சகோதரி எழிலரசி அவர்கள் நன்றி கூற, கூட்டம் இனிமையாக முடிவுற்றது...

Sunday, May 22, 2022

தெணியான் மறைவு

தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் அவர்கள்  இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர் இன்று காலமான செய்தி கிட்டிக் கலங்கி நிற்கிறோம்.
தனது எழுத்துக்களால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை வரலாறாக்கிய தெணியான்
1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தொழில்ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம்பணியாற்றி ,யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமைஆசிரியர்உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில்  பகுதித்தலைவர்,கனிஸ்ட அதிபர்,உபஅதிபர்,தொலைக்கல்விப்போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு ஓய்வு பெற்றவர். முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்த தெணியான் கலகக்கார எழுத்தாளர்கள் அணியில் முதல் வரிசையினை சேர்ந்த  படைப்பாளி .
1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப்பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150  சிறுகதைகள் ,10 நாவல்கள்,3.  குறுநாவல்கள்,5 வானொலிநாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள்,செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.
இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கைஅரசு ‘சாகித்யரத்னா’(2013) ,வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’, (2008),இலங்கை இந்து கலாசார அமைச்சு’கலாபூஷணம்’(2003) போன்ற விருதுகளை  வழங்கி இவரைக்கௌரவித்துள்ளது.
இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’பரிசையும்,’மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும்,வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல்  இலங்கைஅரசின் சாகித்திய விருதையும்,’
‘குடிமைகள் ‘நாவல்  இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல்  தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும்,சுபமங்களா பரிசையும் ,சின்னப்பபாரதி 
அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும்  பெற்றுள்ளன.
சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச்செயலாளர் பொறுப்பினை வகித்தவர். சிறுபான்மைத்தமிழர் மகாசபையில்  இணைந்து சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப்போராளி.
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது.
எனக்கு தமிழ் கல்வியை புகட்டிய ஆசான். எனது தந்தையாரை அண்ணர் என அழைத்தாலும் அவரது நெருக்கமான தோழர்.  எனக்கு  சிறந்த வழிகாட்டியாகவும் ,ஆதர்சனமாகவும் விளங்கிய
 அவரது இழப்பு  பேரிழப்பாகும்.