Tuesday, January 31, 2017

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம் அமைச்சரே !
* * ******************************
குறிப்பு: 29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில் உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம் விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன், கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள் இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின் துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன் களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன் களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும். எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.

Thursday, January 26, 2017

மலைநாட்டு தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்

- லெனின் மதிவானம் - 
மலைநாட்டு தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்: திருமதி கோகிலம் சுப்பையா, ஸி.வி. வேலுப்பிள்ளை.
(ஸி.வி. வேலுப்பிள்ளையின் இக்கட்டுரை திரு. லெனின்மதிவானம் அவர்களால் சேகரிக்கப்பட்டது.பாக்கியாபதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள ஸி.வி.யின் 'மலைநாட்டு தலைவர்களும் தளபதிகளும்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கின்ற கட்டுரை).
திருமதி கோகிலம் சுப்பையா தோட்டங்களுக்குப் புதியவர். திரு.சுப்பையாவின் மனைவியாயிருப்பதனால் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸிலே கணவன்மாரின் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் வெகு சில பெண்களில் அவரும் ஒருவர். ஏனென்றால், மற்றும் காங்கிரஸ்காரர்களின் மனைவிமார் திருமதி சுப்பையாவைப்போலன்றித் தங்கள் கணவன்மாருக்குச் சுறுசுறுப்பாக உதவி செய்யப் பல்வேறு வசதிக் குறைவுகளைக்கொண்டுள்ளனர்.
தலைமை வகிக்கப் பேராற்றல்
''மாதர் காங்கிரஸ்'' எனப்படும் காங்கிரஸின் மாதர் பகுதி தேவையான பணிபுரியப் போதிய திறமைசாலிகளின்றி நெடுங்காலமாகச் செயலாற்றாதிருந்து வந்தது. ஆனால் திருமதி கோகிலம் சுப்பையா வந்து சேர்ந்ததும், இந்த நெடுங்காலத் தேவை நிறைவேறியது. 1948ம் ஆண்டு முதல் அவர் மாதர் காங்கிரஸில் சுறுசுறுப்பாகச் சேவைசெய்து வருகிறார். திரு.சுப்பையாவுடனும் தாமே தனியாகவும் சகல தோட்டங்களுக்கும் சென்று, பெண்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர்களுக்குச் சொற்பொழிவாற்றியுள்ளார். இவ்விதமாகத் திருமதி கோகிலம் சுப்பையா பெண்களிடையே மட்டுமன்றி ஆடவர்களிடையேயும் பிரபலமடைந்துவிட்டார். 
காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினராகவும் மாதர் காங்கிரஸ் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து, அவர் கமிட்டி ஆலோசனைகளிலும் பொதுமேடைகளிலும் சமூக வைபவங்களிலும் தமது பங்கையெடுத்துள்ளார். இப்பங்கெடுப்பதற்காக முன்னணிக்குச் செல்வதில் ஒருவேளை அவர் காட்டிய துணிவையும் விரைவையும் கண்டு ஆடவர்கள் கூடப் பொறாமைப்பட்டனர் எனலாம்.
தலைவரென்ற முறையில், அவர் மற்றும் ஸ்தாபனங்களில் தம்மைப்போன்று தலைமை வகிப்பவர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். அவர் திருமதி தேஜா குணவர்த்தனாவுடன் அரசியலைப்பற்றிப் பேசியுள்ளார்@ திருமதி குளோதா ஜயசூரியாவுடன் அரட்டையடித்திருக்கிறார்@ கைத்தொழில்களில் சமாதானத்தைச் சீராக்க வேலைநிறுத்துங்கள் அத்தியாவசியமாகுமெனக் கவர்ச்சிகரமான இங்கிதங்களுடன் திருமதி சதுரு குலசிங்காவிடம் அவர் சொல்ல முடிந்தது. அவர் ஓரிடத்துக்கு வந்து போகும்போது விட்டுச் செல்லும் வசீகரத்தின் நறுமணமும் கலகலப்பான சிரிப்பொலியும் 'யார் அந்தப் பெருமாட்டி?" என்று மற்றவர்களைக் கேட்க வைத்துவிடும். வேறெவரும் பதிலளிக்கு முன்பு திருமதி கோகிலம் சுப்பையாவே சொல்வார் "நான் திருமதி கோகிலம் சுப்பையா - மாதர் காங்கிரஸின் தலைவர்."
மாதர் சங்கம் பெற்ற புத்துயிர்உண்மையில், அவர் வந்து சேர்ந்தபிறகுதான் மாதர் காங்கிரஸ் புதிய தோற்றத்தைப் பெற்றது. அவர்கள் தங்கள் ஆண்டு மகாநாட்டுக்கு அணியும் ஜாக்கெட்டுக்கும் போர்க்கோலமுள்ள சிவப்பு நிறத்தைத் தெரிவுசெய்தனர்; தங்களுடைய சுலோகங்களைப் பெருமிதத்துடன் இசைக்க முஷ்டியைக் காட்டத் தொடங்கினர்.

Wednesday, January 11, 2017

கன்பொல்லை தவம் இரண்டாம் ஆண்டு நினைவுகள்

- கரவைதாசன்- 
இன்று கன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) அவர்களின் நினைவுகளை மீட்டு நிறுத்தும் இரண்டாம் ஆண்டு. அவரைப் பற்றி அவர் எனக்கு தந்தை எனச் சிலவும் சமத்துவத்துக்கான போராளியெனச் சிலவும் பொதுவுடமைக் கட்சியாளரெனச் சிலவுமென பலதும் பத்துமாக பல்வேறு நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தும் பிரிந்தும் வந்தேகின்றன. அண்மையில் இலக்கிய நண்பர் சிவராசா கருணாகரன் அவர்கள் ஆனையிறவு உப்பளம் பல மில்லியன் செலவில் இலங்கை அரசினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் உப்பளத்தினை தனியாருக்கு கையளிக்கப்போவதாகவும் இதனால் காலகாலமாக இவ்உப்பளத்தில் வேலை செய்து வந்த மாசியப்பிட்டி, தட்டுவன்கொட்டி, எழுதுமட்டுவாள், கரவெட்டி போன்ற கிராமத்து மக்களுக்கு திரும்பவும் வேலை கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை குறித்தும் விசனப்பட்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதனை படிக்க கிடைத்தபோது ஏனைய கிராமங்கள் ஆனையிறவுக்கு அயல் கிராமமாக இருக்கும்போது கரவெட்டியிலிருந்து வெகுதூரத்திலிருந்து வந்து அந்த மக்கள் வேலையில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை நான் பதிவுசெய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதும் என் நினைவுப் புலவுக்கு வந்து எட்டி நிற்கின்றன. அது வடபுலத்து நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களின் நாகரிகமற்ற கரிய பகுதி. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக குற்றப்பரம்பரைச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்து கள்ளர்சாதியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கியபோது அது போன்ற சட்டங்களை இங்குள்ள அதிகாரத்திலிருந்த ஆதிக்க சாதியினர் இங்கேயும் கொண்டு வர விரும்பினர். ஆனால் யாழ்ப்பாணராச்சியத்தில் அங்கம் வகித்த அந்திராசு போன்ற (கரையார) இடைச்சாதியினைச் சேர்ந்த முதலிகளினால் அவை முற்றுப்பெறாமல் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மையம் வடபுலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஒடுக்கி வந்தனர். யாழ்ப்பாணத்து தேசவழமைச் சட்டம் இதன் விரிந்த பகுதி என்பது இங்கு கண்கூடு. இலங்கையில் டொனமூர்திட்டத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது சேர்.பொன்.இராமநாதன்  போன்ற சாதிவெறி பிடித்த தலைமைகள் தமிழில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எவ்வளவு ஊழிக்கூத்து ஆடினார்கள் என்பதும் எங்களது இருண்ட பக்கங்கள் தான்.

Wednesday, January 04, 2017

துட்டகைமுணுவின் அவதாரம்

- என்.சரவணன் -


சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது. அதை அரச கட்டமைப்பு நேரடியாக செய்ய வேண்டியதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாத அமைப்புமுறை அந்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் வலிமையும், வலிமையான அனுசரணையும் கொண்டிருக்கிறது. இதனை நுகர்வதற்காகவே செயற்கையான “பேரினவாத இரசனை” வேகுஜனமட்டதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே சந்தையையும் உற்பத்தி செய்திருக்கிறது.

“அந்த சந்தை போதுமானதில்லை சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும், இதனைக் காணவேண்டும், உதவி செய்யவேண்டும், பரப்பவேண்டும் அன்று இந்தியாவில் இருந்து சோழர்கள் படையெடுத்து வந்து நம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றோ இந்தியாவில் இருந்து இந்தி தொலைகாட்சி நாடகங்கள் வாயிலாக நம்மை சுற்றிவளைத்து ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே அதனைக் கைவிடவேண்டும். நமது சொந்த சிங்கள நிகழ்சிகளை மட்டும் பாருங்கள்” என்றார் “கெமுனு மாரஜ” (துட்டகைமுனு மகாராஜா) தொலைக்காட்சித் தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க.

கடந்த சில வருடங்களாக மகாபாரதக் கதைகளும், இராமாயணக் கதைகளும் இந்தி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு தொடராக காண்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் பாதிப்பே சிங்கள இதிகாசங்களையும் அதுபோன்றே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சி.

பன்முக வழிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனு – எல்லாளன் போரையும் பரப்பும் பணிகள் சமீப காலமாக அதிகமாகவே காண முடிகிறது. துட்டகைமுனுவின் இந்த புத்துயிர்ப்பு இன்றைய புதிய அரசியல் அவதாரமாகவும், அஸ்திரமாகவும், வடிவமாகவுமே காண முடிகிறது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், அன்னியர்கள், கள்ளத் தோணிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பௌத்த மதத்தை அழித்து இந்து மதத்தை நிறுவியவர்கள். பௌத்த விகாரைகளை அழித்தொழித்தவர்கள் என்றெல்லாம் புனைவது சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்கு மிகவும் அவசியமானது. அதனை திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் புனைவதும், நிறுவுவதும், நம்பவைப்பதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு பலம் சேர்ப்பவை.

அதுமட்டுமன்றி மாறாக இப்பேற்பட்ட தமிழர்களை எதிர்த்து நின்றவர்கள் சிங்களவர்கள், பௌத்தர்கள், தேச பக்தர்கள், மண்ணின் மைந்தர்கள், மா வீரர்கள், நல்லவர்கள், மனிதாபிமானமுள்ளவர்கள் என்றெல்லாம் இந்த கதைகளின் வாயிலாக புனைவதும், நிறுவுவதும் அவர்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.