Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

Sunday, December 06, 2015

அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்

இன்று தோழர் அம்பேத்கரின் நினைவு தினம்!
அம்பேத்கரின் இறுதி நாட்கள் குறித்து சில வரலாற்று பகிர்வுகள்:
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.
டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.
அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.
அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.
டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.

Wednesday, November 25, 2015

எஸ்.பொவின் "வரலாற்றில் வாழ்தல்" நூலை முன் வைத்து.....

-நோயேல்  நடேசன்  -
மறைந்த இலங்கை தலைமை இலக்கியவாதி எஸ்போவின் மறைவை நினைவு கூர்ந்து அவரது வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலை முன்வைத்து 27-11-2015 ல் வெளிவரும் கட்டுரை
இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட எஸ் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல் என்ற சுயசரிதை நூலின்  இரண்டு பாகங்களையும் நான் ஏன் படிக்கவேண்டும்? படித்தால் என்னிடத்தே வைத்திராமல் அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சொல்லவேணடுமென்பது என்ற முக்கியமான கேள்விக்கு நான் பதில் தரவேண்டும்.
பதிலை எனது கூற்றாகச் சொன்னால் அது மதிப்பிழக்கலாம். எனவே எனது கருத்தைச் சொல்லாமல் பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் வார்த்தையில் சொல்வது நலமானது.
‘எமக்கு முந்திய தலைமுறையில் தமிழுக்கு தொண்டு செய்தவர்களை நாம் நினைத்துப் பார்க்காவிடில் அடுத்த சந்ததியில் நம்மை மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்ற தார்மீகமான நினைவை நாங்கள் வைத்திருக்க முடியாது.’
இதை மிகவும் அழுத்தமாக சொல்வதானால் எனது பெற்றோரையோ எனது மனைவியின் பெற்றோரையோ பராமரிக்க தவறினால் எனது மகனிடம் அல்லது மகளிடம் எனது வயோதிபகாலத்தில் எதையும் எதிர்பார்க்க தகுதியில்லாதவனாகிறேன். அதை யாழ்ப்பாணத்து வழக்கத்தில் சொன்னால் எனது தந்தைக்கு சிரட்டையில் தேநீர் பரிமாறினால் எனது மகனும் அதிலே எனக்குத் தருவான்.
எமது மத்தியில் சுயசரிதை எழுதுவது வழக்கமில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கல்வெட்டு எழுதுவோம் ஆனால் கல்வெட்டு எழுதினால் எல்லோருக்கும் பெயரைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே மாதிரி தேவார திருவாசகத்துடன் இருக்கும். அந்தியேட்டி செலவோடு கல்வெட்டும் பழைய கடதாசியாகிவிடும்.
தனது வாழ்கையில் நடந்த விடயங்களை காய்தல் உவத்தல் அற்று எழுதுவதோ மற்றவரை எழுதுவதற்கு அனுமதிப்பதோ இல்லாதது தமிழ் சமுகம். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பிற்காலத்து போரட்டத்; தலைமுறையில் வந்தவர்களைப் பற்றிய குறிப்புகள் எம்மிடமில்லை. அதை எழுதுவதற்கு எந்த ஏற்பாடுகளும் எம்மிடமில்லை. இது ஈழத்தமிழர்மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் நிலையும் அதுவே. கருணாநிதி எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றவர்கள் தங்கள் அரசியல் தேவைக்காக எழுதியவை உள்ளன. இக்காலத்திலும் பூரணமாக எம்ஜிஆர் சம்பந்தமப்பட்ட ஒரு புத்தகத்தை யாராவது எழுதினால் அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும்.
இப்படியான தமிழ்ச்சூழலில் எஸ்.பொ. தனது ஐம்பது வருட எழுத்து வாழ்வை எந்த ஒளிவு மறைவுமின்றி எழுதியது ஒரு இமாலய துணிவு. அதைப் படைப்பாக்கியது மகத்தான சாதனை. இதை குறைந்தபட்சம் இன்னமும் ஐம்பது வருடங்களுக்கு தமிழில் எவராலும் செய்யமுடியுமா என்பது கேள்விக்குறி. எழுதுவது முடிந்தாலும் பாவனை காட்டாது தனது பலங்களையும் பலவீனங்களையும் மதியத்தில் சூரிய குளியல் நடத்தும்; மேற்குநாட்டுப் பெண்கள்போல் துணிவுள்ளவர்கள் எவருமில்லை அந்தவகையில் தமிழில் இது ஒரு முன்னுதாரணம்.

Wednesday, October 14, 2015

மடக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் கந்தன் கருணை இளைய பத்மனாதன்.

-பேராசிரியர்.சி.மௌனகுரு-
பத்தண்ணா எனப் பலராலும் அழைக்கப் படும் இளைய பத்மனாதன் இன்றும் நாடகம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்.
78 வயதினர்.
நாடக நடிகர்,
நெறியாளர்,
நாடக எழுத்தாளர்,
நாடக ஆய்வாளர்
1970 களில் காத்தான் கூத்துப் பாணியில் கந்தன் கருணை என்ற சமூகப் பிரச்சனை சார்ந்த நாடகம் போட்டதன் மூலம் ஈழத்து நாடக உலகில் அறியப்பட்டவர். தொடர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு தயாரித்த மரபு வழி நாடகமான ஏகலைவன் அவரை மேலும் நாடக உலகுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் யாழ்ப்பாண,மன்னார் மரபுவழி நாடகக் கூறுகளை இணைத்திருந்தார்.  அதற்கு அவர் புது மோடி நாடகம் என்று பெயர் இட்டிருந்தார்


1970 களில் நடிகர் ஒன்றியம் தயாரித்து தாஸீசியஸ் நெற்யாள்கை செய்தகந்தன் கருணையில் நான் கந்தனாக நடித்தேன் அவர் பக்தராக வந்தார். காத்தான் கூத்துப் பாணியை அங்கு அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வடமோடிப் பாணியை அங்கு அவர் பெற்றுக் கொண்டார்.

அவரோடுநா.சுந்தரலிங்கம் நெற்யாள்கை செய்த அபசுரம்,தாஸீசியஸ் நெறியாள்கை செய்த புதியதொரு வீடு முதலான நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும்1970 களில் கொழும்பில் கிட்டியது

Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம். 

Monday, October 05, 2015

"தமிழில் சமகாலத்தில் எந்தப் பாடலாசிரியனும் நல்ல கவிஞன் என்ற பட்டியலில் இல்லை "

-திருமாவளவன்-
நேர்காணல் கருணாகரன் 
இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடக்கில் உள்ள வருத்தலைவிளான் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த திருமாவளவன் இப்போதிருப்பதும் இலக்கியத்தில் இயங்குவதும் கனடாவில். அரசியலும் அரங்கும் கவிதையும் திருமாவளவனின் ஈடுபாடுகள். என்றாலும் அரசியல்வாதியல்ல. கவிஞர். அரங்காடி. ஒத்தோடியல்ல. மறுத்தோடி. இதனால் வாழ்வின் பெரும்பகுதியும் சவால்களோடுதான் திருமாவளவனுக்குக் கழிந்திருக்கிறது. இந்த நேர்காணலும் அந்தக் குணத்தையே கொண்டிருக்கிறது. பெரும்போக்கு, பொது இயல்பு போன்றவற்றை அனுசரிக்க வேண்டும் என்ற அவசியத்தைப் புறந்தள்ளியவை. ‘கவிதைக்கும் கவிஞனுக்கும் இடையில் எப்படி இடைவெளி இருக்க முடியும்? கவிதையை எப்படிச் செய்ய முடியும்?’ என்றெல்லாம் கேட்கும் கவிஞர், ‘வாழ்தலே கவிதை. என்னுடைய வலிகளும் வாழ்வின் அடையாளமும் அனுபவங்களுமே அவை’ என்கிறார். இதுவரையில் ‘பனி வயல் உழவு’, ‘இருள்யாழி’, அஃதே பகல் அஃதே இரவு’, ‘முதுவேனில் பதிகம்’ என நான்கு கவிதை நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
முந்நூறு ஆண்டுகள் உழுதோம் / எங்கள் நிலத்தில் அவர்க்கு / இனியும் உழுவோம் / அவர்கள் நிலத்தை அவர்க்கே’
என்று மேற்குலகத்தினருக்காக உழைத்து மாளும் நம் அவலத்தைச் சொன்ன கவி திருமாவளவனின் தந்தை கனகசிங்கம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மலேசிய விடுதலை அமைப்பில் போராளியாக இயங்கியவர். பின்னர் இலங்கை திரும்பி இடதுசாரி அரசியலின் ஆதரவாளராக இருந்தார். அந்த இடதுசாரி அரசியல் ஊற்றே திருமாவளவனின் ஆதாரம். திருமாவளவின் இளைய சகோதரர் கலைச்செல்வன் புலம்பெயர் படைப்பாளிகளில் முக்கியமானவர். பள்ளம், எக்ஸில், உயிர் நிழல் ஆகியவற்றின் மையத்தில் இருந்தவர். புகலிட சினிமாவின் ஆதாரமாகவும் விளங்கியவர். இலக்கியச் சந்திப்பின் இயக்கத்தில் முக்கிய பங்களிப்பாளர். திருமாவளவனும் கலைச்செல்வனும் இளவயதில் இருந்தே சேர்ந்தும் விலகியும் தோழமையோடும் சசோதரத்துவத்தோடும் இயங்கினர். இந்த நிலையில் கலைச்செல்வனின் இழப்பு பெரும்பாதிப்பை திருமாவளவனுக்கு ஏற்படுத்தியது. எனினும் அவருடைய இயக்கம் தளர்வடையவில்லை. இப்பொழுது தன்னுடைய பத்திகளையும் கதைகளையும் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டது.

Saturday, September 12, 2015

யாழ்.சர்வதேசத் திரைப்பட விழா.

04. 09. 2015 இல், யாழ்ப்பாணம் மஜெஸ்ரிக் கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!


தொனிப்பொருள்: குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவானது ஆரம்பமாகிறது. 

விழாத் திகதிகள்: 2015  செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை. 
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்  என்பவற்றோடு  அஜன்டா 14 ஆகியன இணைந்து, முதலாவது யாழ்ப்பாண சர்வதேசத்  திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன. இத்திரைப்பட விழாக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகக் காட்டப்படுகின்றமை முக்கியமானதாகும். 

விழாவின் இயக்குநரான அனோமா ராஜகருணா, குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவது என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளிலிருந்து நிகழும் மீண்டெழுதலாக அமைவதோடு, கலையைப் பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் இந்த விழாவானது, சினிமாவினூடாகச் சமூகங்கள் தமது எல்லைகளினைக் கடந்து, ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஒரு வெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். எனக் கூறுகிறார்.

Saturday, September 05, 2015

நாம் நெல்லியடி அம்பலத்தாடிகளில் குழந்தைக் கலைஞர்கள்......

-கரவைதாசன்-


நெல்லியடி அம்பலத்தாடிகள்  என இலங்கையின்  நாடகவரலாற்றில் அறியப்பட்ட கலை  இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வெறுமனே நாடகக் கலைஞர்கள் என்பதனை தாண்டி மக்கள் கலைஇலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனச் செயற்பட்டவர்கள். இந் நாடகமன்று அந்நாட்களில்  இடது சாரியக்  கலை இலக்கிய மன்றாகவே  இயங்கி வந்தது. கந்தன் கருணை, சங்காரம் இதுவுமன்றி சமூக விழிப்பினை புகட்டவல்ல  தாளலய ஓரங்க நாடங்கங்கள் பல அந்நாட்களில் இவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  அரங்காடப்பட்டன. 

இலங்கை கம்யுனிஸ்டுகள் மாஸ்கோ,  பீக்கிங் என கோட்பாட்டு ரீதியிலே  பிளவுண்டிருந்த காலத்தினிலே நெல்லியடி அம்பலத்தாடிகள் கலைமன்று  சீன சார்பு செயற்பாட்டாளர்களின் கலை இலக்கிய மன்றாக இயங்கி வந்தது  என்பதே பொருந்தக் கூறக்கூடிய செய்தியாகும் . இம்மன்று  நெல்லியடியினிலே முகவரியினை கொண்டிருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் முற்போக்கு கலைஞர்கள்  மத்திமைப்பட்டு இம் மன்றில் செயற்பட்டார்கள். 

மட்டக்களப்பிலிருந்து சி.மௌனகுரு, தாளயடியிலிருந்து  தாசீசியஸ், ம.சண்முகலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிறந்து  கரவெட்டி கன்பொல்லையில் திருமணபந்தத்தினால் வாழ்வினைக்  கொண்ட கே.எஸ். இரத்தினம் இப்படியே ஒரு நீண்ட பட்டியல் நீளும். இன்று அண்ணாவியராக  விழிக்கப்படுகின்ற இளைய பத்மநாதன் கலைஞனாக  கருக்கொண்டதும் இம் மன்றில்த் தான். அந்நாளில் அம்பலத்தாடிகளின்  வில்லிசை குழுவில் பத்தண்ணா  பிரதான கதை சொல்லியாக   இருந்தார். இவ் வில்லிசைக் குழுவினை நெறிசெய்து இவர்களுக்கு ஒத்தாசையாக கன்பொல்லையைச்  சேர்ந்த நாடறிந்த இசை நாடகக் கலைஞர் நாடத்திலகம் கே.வி. நற்குணம் அவர்கள் இருந்தார். 

Thursday, August 27, 2015

"எம் சமூகத்திற்குச் சாபமா? தரித்திரமா? அத்தனை விரைவில் ஓர் பெண் ஆளுமையின் இழப்பு!

-ந.சுசீந்திரன் -
சாந்தி சச்சிதானந்தம் அவர்களின் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. முதன் முதலில் நான் அவரைச் சந்தித்ததை இன்று எண்ணிப்பார்க்கிறேன். சில காலங்களுக்கு முன்னர் காலமாகிவிட்ட இன்னொரு ஆளுமைமிக்க பெண் சுனிலா அபயசேகர அவர்களது தந்தை சார்ள்ஸ் அபயசேகர, நான் கொழும்பில் நின்றிருந்த வேளை விபத்தொன்றில் காலமானார். அவரது மரணச் சடங்கில் தான் நாங்கள் பரஸ்பரம் அறிந்து கொண்டோம். அவரது கணவர் காலஞ்சென்ற மனோ ராஜசிங்கம் மற்றும் அமரர் நீலன் திருச்செல்வம் ஆகியோருடனும் அன்று தான் அறிமுகமானேன். சர்வதேசப் பரிசொன்றினைக் கையேற்க அருந்ததி ராய் அவர்கள் பெர்லின் வந்திருந்தபோது நீலன் திருச்செல்வம் அவர்களோடு தனக்கிருக்கும் நட்பினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்பும் கவர்ச்சியும் ஆளுமையுங்கொண்ட சாந்தி அவர்களுடனான நட்பில் நான் எப்பொழுதும் பெருமை கொண்டிருந்தேன்.
வாழ்க்கை பற்றிய தீவிரமான விசாரணகள் கொண்டவர். பங்கேற்பு ஜனநாயகம், பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் முற்போக்கான கருத்துக் கொண்டிருந்ததோடில்லாமல் சிவில் சமூகச் செயற்பட்டாளராகவுமிருந்தார். சமகால அரசியல் சமூக வாழ்க்கையில் தன் அனுபங்களினூடு தனக்குச் சரியெனப் பட்டதை துணிவாக முன்வைத்துச் செயற்பட்டு வந்தவர்.
விழுது என்ற அமைப்பின் மூலம் சாந்தி அவர்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்களில் எமது மக்கள் பலனடைந்தனர். இலங்கையின் பலவேறு சமுகப்பிரச்சினைகள் தொடக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள் என்பது வரை விழுது வெளியிட்ட பல பிரசுரங்கள் மிகவும் பயன்பாடானவை. நண்பர் மதுசூதனன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ”அகவிழி” என்ற ஆசிரியத்துவத்துக்கான தரமான சஞ்சிகை பலகாலம் விழுது நிறுவனத்தினராலேயே வெளிக்கொணரப்பட்டது. “இருக்கிறம்” என்ற வெகுஜன சஞ்சிகை ஒன்றினையும் ஜனரஞ்சகமாகக் கொண்டுவர முயற்சித்தனர்.

Sunday, August 16, 2015

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவி

-சி.மௌனகுரு-

பறை பற்றி இப்போது பலர் பேசுகிறார்கள்
இங்கு.பெண்கள் சேர்ந்து செய்த பறை முழக்கம்
ஒன்றையும் நான் இணையத் தளத்திலும் பார்த்தேன்

மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இப் பறை வத்தியத்தை நாம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
1996இல் அறிமுகம் செய்தோம்

.இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.
எமது உலக நாடக தின விழாவினை பறை முழக்கத்தோடு ஆரம்பித்தோம்.
அது முதல் படி
.களுதாவளையிலிருந்து ஆனைக்குட்டி தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது
இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்
இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதவளையச் சேர்ந்தவரும்
இன்று விரிவுரையாளராயிருப்பவருமான 
அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்

அவரோடு சேர்ந்து எனக்கு மிகுந்தவலதுகரமாக நின்றவர்.பாலசுகுமார்
உதவியாக இருந்தவர் ஜெயசங்கர்
முதன் முதலில் பறை தூக்கி அடித்த பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலசுமாரே
.அதனால் அவர் பெருமை பெற்றார்
.மாணாக்கருக்கு ஒரு வ்ழிகாட்டியுமானார்.
ஒவ்வொரு ஆண்டும் பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில் நாடக விழா ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை அவர்களைக்கொண்டு மாணாக்கருக்குப் பழக்கினோம்.
ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள் தயக்கம் காட்டிய வேளைகளில் நாங்கள் அவர்களுக்கு
தமிழ் மரபிலும் தமிழ் இசை மரபிலும்
பறையின் இடம் பற்றி வரலாற்று
விளக்கமளித்ததோடு.

Thursday, August 13, 2015

'சக்தி' என்பது வெறுஞ் சொல்லா என்ன?

-சுமதி தங்கபாண்டியன்-
பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை முன்வைத்து ஒரு பகிரல்
"திரெளபதியின்துகில் போல நீண்டு
கிடக்கின்றது இந்தப் பாதை..." நிகழ்வு முடிந்தபின் அது நடந்த இரவும் கூட!
"பாலுறவின் வேட்கையும், அது முடிந்தபின் மரணத்தின் பீதியுமே மனிதனை இயக்கும் மனவிசை" எனும் ஃபிராய்டின் கூற்றை முற்றும் நம்புபவளாகவே இருந்தேன் பிரசன்னா ராமசாமியின் "சக்திக் கூத்து" அரங்க நிகழ்வை மிகச் சமீபத்தில் அனுபவிக்கும் வரை. அந் நிகழ்வின் ஊடறுத்தலுக்குப் பின் கலையே மனிதனை இயக்கும் மனவிசை என உணர்ந்து உறுதியுடையவளாயிருக்கிறேன். எவ்வளவு இழந்தாலும் வாழ்வு முழுமை கொள்வது கலையில் தான் என்பதைத் தனது 'சக்திக் கூத்தினால்' எனக்குப் பொட்டில் அடித்தாற்போலும், முலைப் பாலமுதம் போலும் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமசாமி.
கண்களும், காதுகளும் மட்டும் உள்வாங்குவதல்ல ஒரு அரங்க நிகழ்வென்பது - புலன்களின் வழி ஊடுறுவி அது ஆன்மாவைக் கத்தி முனையில் ருசிப்பது எனப் புரிய வைத்தார் பிரசன்னா அந்த 90 நிமிடங்களில். "கலை ஒரு உலக மொழி" என்பதை மெய்ப்பித்துக் கொண்டே இருந்தார்கள், இருந்தன - நடிகர்களும், உத்திகளும், ஒலி அமைப்பும், பறை இசையும்.
இந் நாடகம் பேசும் ஒரே மொழி - காலந்தோறும், திசைகள்தோறும், நிலமெங்கினும் பாதிக்கப்பட்ட, அழுத்தப்பட்ட, அடையாளமழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் மொழி. நிலத்தின் வலி - குறிப்பாக நமது ஈழத்தின் மறக்கமுடியா இன அழிப்பும், தொடர் வன்முறையும், புலம்பெயர் அலைந்துழல்வு அவலத்தின் துயர்மிகு வதைகளும் ஒலிக்கும் குரல்!

Sunday, July 05, 2015

பிரத்தியேகம் (சிறுகதை)

-கரவைதாசன்-
எனக்குத்  தெரியும் தூரத்தில் அவர்கள்  அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில்  அண்டளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ  சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக்  கிடக்கும்  கல்லொன்றினையோ அல்லது  பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து  பிரிய விரும்பா ரீங்காரத்துடன்  அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் கரும் முகில்களால் சூழ்ந்தே கிடக்கின்றது. இடையிடையே வெள்ளியிலான முகில்கூட்டங்களும். மொய்க்கின்ற குளிரும்,  வசந்த காலத்தினிலே இலையும் கணுவும்  பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் குடை விரித்துநின்ற மரங்கள் விறகாகி  உயிர் ஒளித்து மீண்டும் ஒரு பிராப்தத்துக்காய் வான் நோக்கி விரல் நீட்டி தவம் கேட்க  அவற்றிலும்  பனி குந்தியிருந்தன.  இவை  டென்மார்க் நாட்டின்  குளிர் காலத்தின்  இயற்கை வனப்புகள்.

எனக்கு இரசிக்க நேரமில்லை கைகோடரியினை ஓங்கி மரக்குத்திகளியிடையே  இறக்கினேன். எதிரே காற்று மெல்ல வந்து விலகிப் போனாபோது  குளிர் முகத்தில் அறைந்தது.  உள்ளே சென்று வழைமைபோல் அப்பா பாவிக்கின்ற அந்தக் கூடையை எடுத்து வந்து கொத்திப்பிரித்தெடுத்த விறகுகளை அதில் அடுக்கத்தொடங்கினேன். அப்பாவுக்குத் தெரிந்த  அதே நுட்பம் பெரிய துண்டுகள் கீழாகவும் சிறுதுண்டுகள் மேலாகவும்  அடுக்கி முடித்தேன். பலம் கொண்டவரை கூடையை இழுத்துச் சென்று கொட்டிலின் நடுவே விட்டேன். 
இரண்டொரு விறகுத்துண்டுகளை என்னோடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்கதவினைத் திறந்து சமையல் அறையினைக் கடந்து வராந்தவை நோக்கிச் சென்றேன். அங்கே அம்மா லீற்ஸ் கிழங்கினை பிரித்துச் சுத்தம் செய்துகொண்டு நின்றாள். நான் எடுத்துச்  சென்ற விறகுகளை போறணையில் இட்டேன். நெருப்பு சூழ்ந்து கொண்டு சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது சிறு கணங்களில் அவை தணலாய் பூக்கத்தொடங்கும். ஆனாலும் இப்போதே வராந்தாவை இதமான வெப்பம்   சூழ்ந்திருந்தது. அப்போதான்  கோட்டைக் கழட்டத் தோன்றியது.

யோகியின் நேர்காணல்


தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்

மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

Friday, June 26, 2015

“படிப்பகம்” புத்தக நிலைய திறப்பு விழாவும் கருத்தரங்கமும்.

படிப்பகம் புத்தக நிறுவனத்தினர்.
தொடர்வுகளுக்குசந்திரகுமார்  - 0713 006 971

Tuesday, June 02, 2015

கவிஞர்.எம்சி.லோகநாதன் நினைவுகளைப்பகிர்தல்


வெப்பியாரமாய் இருக்கிறதடா, நீ வாழ்கிறாய் என்பதில், சிறிது தணியும் தன்மை கண்டேன். உன்அன்பு தாஸ்.

Friday, May 22, 2015

நீதிகோரி தெற்கில் மே 26

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள் - தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
இடம் : Kanatta roundabout , Boralla
நேரம் : on the 26th at 4 pm.
In Jaffna, in the recent past, they raped logarani, saranya and now vithya. If you want to show solidarity and demand justice for this victim please come, wearing black, to Kanatta roundabout , Boralla on the 26th at 4 pm. Please share the news with your friends and networks.

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 
கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறோம். 


26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும் - கோசங்களும்

1. We need justice for Sivaloganaadan Vithiya, Expedite the hearing - 

விசாரணைகளை துரிதப்படுத்து, சிவலோகநாதன் வித்யாவுக்கு நீதி வழங்கு. 

2. Justice Delayed is Justice Denied. Expedite judgments in all rape cases - 

தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்! அனைத்து பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கும் விரைந்து தீர்ப்புகள் வழங்கு

3. No bail or suspended sentence for rapists - 

பாலியல் வன்புணர்வாளருக்கு வழக்குகளின் பிணை வழங்குவதையும், தண்டனையை இல்லாமல் செய்வதனையும் நிறுத்து. 

4. She is still a minor. Reform the law stipulating that raping a girl under the age of 18 is a statutory rape. 
அவள் இப்போதும் சிறுமிதான் ! 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதை a statutory rape(பாலியல் வன்முறைக்கு குற்றவாளியே முழுப் பொறுப்பு ) என சட்ட சீர்திருத்தம் மூலம் நிர்ணயம் செய்!

5. Establish a separate court for women and children's matters - 

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களைக் கவனிக்க தனி நீதிமன்றம் அமை! 

6. Politicians don’t try to fish in troubled water. Rape against a Tamil, Sinhala, or Muslim girl-it is all the same. It is gruesome.- 

அரசியல் வாதிகளே , கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம். பாலியல் வல்லுறவு தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லீம் பெண்கள் - எவர் மீது நடத்தப்பட்டாலும் அது ஒன்றே . அது கொடூரமானது

7. Five Rapes a Day!! Can you sleep at night? 

ஒருநாளில் ஐந்து பாலியல் வல்லுறவு ! உங்களால் நின்மதியாக உறங்க முடியுமா? 

8. No exceptions, no excuses- Stop Rape Now - 

எந்த விதிவிலக்கும் காரணங்களும் தேவையில்லை - பாலியல் வன்புணர்வை உடனே நிறுத்து ! 

9. Enough is Enough-- Stop rape now - 

நடந்தவைகள் போதும்! பாலியல் வல்லுறவை உடனே நிறத்து ! 



විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය! මැයි මස 26 වන අඟහරුවාදා සවස 4 ට බොරැල්ලේ කනත්ත වටරවුමට කළු පැහැති ඇඳුමින් සැරසී පැමිණෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු. 
---------------------------------------------------------------------- 

1. විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය අවශ්‍යය -- නඩුව පමා නොකර විභාග කල යුතුය.

2. යුක්තිය පමා අයුක්තිය වේ -- සියලු දූෂණ නඩු කඩිනමින් විභාග කරනු.
3. දූෂිතයින්ට ඇප දීම තහනම් කරනු, අත්හිටුවන දඬුවම් දීම අත්හිටවනු.
4. ඇය බාල්වයස්කාරියකි. 
5. ළමා සහ කාන්තා නඩු සඳහා වෙනම උසාවි පිහිටවනු.
6. දේශපාලකයිනි, බොර දියෙහි මාළු බෑම නවත්වනු -- දූෂණයට ලක්වූ යේ සිංහල හෝ දමිළ හෝ මුස්ලිම් හෝ වෙන කවුරුන් හෝ වේවා, දූෂණයෙහි කෲරත්වය සහ ප්‍රචණ්ඩත්වය එකමය. 
7. දවසකට පස් දෙනෙකු දූෂණය වන රටක සුව නින්දක් නිදාගැනීමට හැකිද? 


Thanks: Malinda Seneviratne,piraththiyal

Thursday, May 21, 2015

தேர்தல் முறைமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் - ஒரு கவலை

-மல்லியப்பு சந்தி திலகர்-
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ' 20வது அரசியலமைப்புத் திருத்தமும் மலையகமும்' எனும் கட்டுரையை கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல், நமதுமலையகம்.கொம், அததெரண தமிழ் இணைத்தளம் மற்றும் கருடன்நிவ்ஸ் போன்றன 'சிறப்புக்கட்டுரையாக' வெளியிட்டிருந்தன. கட்டுரையை வாசித்த பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உள்பெட்டி செய்தியாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சரளமான மொழிநடையில் அதனை எழுதியிருக்கிறேன் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது.
இந்த தேர்தல் முறைமாற்ற விடயம் மக்களுக்கு சரள மொழியில் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் சமூகத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையான வாக்குகள் அது அளிக்கப்படும் முறை அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிவாகும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும் திருத்தமாக இந்த '20வது திருத்தம்' அமைகிறது.
இதனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு உரையாடல்கள், செயலமர்வுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு கற்று வருகிறேன். அவற்றையே கட்டுரை வடிவிலும் இத்தகைய பதிவுகள் ஊடாகவும் பதிவு  செய்து வருகிறேன். நேற்றைய நாளிலும் 'தேர்தல் திணைக்களம்' ஒழுங்குசெய்திருந்த செயலமர்வு ஒன்றில் பங்குகொண்டேன். அப்போதெல்லாம் விளக்கமளிக்கும் வளவாளர்கள் (கட்சி சாராத) நிபுணர்கள் உரையாற்றும்போது, விளக்கமளிக்கும்போது என்னையறியாமல் ஒரு கவலை எனக்குள் வருகிறது.