Showing posts with label கன்பொல்லை. Show all posts
Showing posts with label கன்பொல்லை. Show all posts

Friday, April 21, 2023

தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.

புதுயுகம் மலர்க!14.4.2023 கரவை செஞ்சுடர் விளையாட்டுக் கழக மைதானம் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும். இந்த 2023 நடப்பாண்டில் சில நிழல்கள். * கழகத்தின் கரப்பந்தாட்ட மைதானத்துக்கு மின்சார விளக்கமைத்து கொடுத்தல். *குடிநீர்தேவைக்காக குழாய்க் கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி தாங்கி வைத்துக் கொடுத்தல். *புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் விருந்தினர் அனைவருக்கும் மாலை நேர உணவு வழங்கல். என மூன்று விடயங்களுக்கும் தவம் அறக்கட்டளையினராகிய நாம் மகிழ்வுடன் பூரண அனுசரணை வழங்கியிருந்தோம் . இந்தாண்டின் சிறப்பு, 2023 விழாவில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பேச்சாளர்கள், விழாவுக்கான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுசரணை வழங்கிய வியாபாரவள்ளல்கள் அனைவருமே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள். இந்த மூச்சுடன் தொடர்ந்து பயணியுங்கள் நிறைந்த பயனைக் காணலாம்.

Sunday, March 29, 2020

உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை

நாமும் நம்மால் ஆனது செய்வோம்!
‐----‐-‐---------‐--------------------------------------------


தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.

Monday, June 10, 2019

கன்பொல்லைக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை



-கரவைதாசன்-

கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­? இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது?

கன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர் .இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார். தாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தார். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது
" வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல! " இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும்! நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.
ஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.

Sunday, March 05, 2017

மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு


மக்கள் கலைஞர் கே.எஸ். இரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவில் நாம் நிற்கிறோம்.  இவ்வேளையில் அரசியல்  கலை இலக்கியத் தளங்களில் இவரோடு சேர்ந்து இயங்கிய இவரது சகா எஸ். தர்மன் (ஜெர்மனி)அவர்கள், கே.எஸ். இரத்தினம் அவர்கள் இறப்பெய்தியபோது அனுப்பி வைத்த பிரிவுச் செய்தியினை பதிவேற்றுகின்றேன். 

அம்மான் என நாம் அன்பாக அழைக்கும் கே.எஸ். இரத்தினம் அவர்கள் யாழ் கொக்குவிலைச் சேர்ந்தவர். பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் கன்பொல்லைக் கிராமத்தில் எனது கற்கண்டு சித்தப்பாவின் மகள் எனது சகோதரி முறையான இராசு அவர்களை திருமண பந்தத்தில் சேர்த்துக்கொண்டு பலரும் புகழ்ந்து போற்றும் வகையில் வாழ்ந்து வந்தார். திருமண பந்த வழியில் வந்தவர் நண்பனுக்கு நண்பன் போலும் மைத்துனருக்கு மைத்துனர் போலும் அன்பாக பண்பாக பழகினார். நாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்ந்து செய்வோம். அச்சூழல் காரணமாக கே.எஸ். இரத்தினம் அவர்களின் மூலம் சீனசார்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்து வெகுஜன இயக்க மூலம் பல சாதியப் போராட்டங்களில் பங்காற்றினோம்.  இதில் முக்கியமாக கன்பொல்லையில் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். மேலும் நானும் கே.எஸ். இரத்தினம் அவர்களும் வேறு தோழர்களோடு இணைந்தும் பல முற்போக்கான வேலைகளை செய்தோம். மக்கள் சீனத்துக்கு எதிராக அமெரிக்க எடுத்த Shoes of the Fisher men  ஆங்கிலப் படத்தினை யாழ் றீகல்  தியேட்டரில் ஓடவிடாமல் தடுத்து ஓர் தாக்குதலை நடத்தினோம். படம் திரையிடப்பட்டபோது வெளியில் கைக்குண்டு வெடிக்கவைத்து கலகம் விளைவிக்கப்பட்டபோது நாம் தியேட்டரின் திரைக்கு உள்ளேயிருந்து  கோழிமுட்டைக் கோதுக்குள் கொண்டு சென்ற பெயின்ரினை அடிக்க வேண்டும் அத்தாக்குதலை வெற்றிகரமாகச் செய்தோம். இத்தாக்குதலுக்கு தோழர் இக்பால், சலீம்,   சி.கா.செந்திவேலும் , ஆத்திசூடி நவரத்தினம்  கிளிநொச்சியினை  சேர்ந்த  தோழரும் வெளியில் நின்று செயற்பட்டனர்.  மேலும் பல முற்போக்கான வேலைகளை செய்ததோடு பல நாடகங்களையும் நடித்து மேடைகள் பல ஏற்றினோம். இப்படியாக நண்பனுக்கு நண்பன் போலும் தோழனுக்கு தோழன் போலும் இணைந்து பல காரியங்களை செய்து வந்ததினை நினைக்கும்போது  அவர் ஞாபகம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது . அவரைப்போல் அன்பு காட்ட தோளோடு தோள்  கொடுக்க வேறு யாருமில்லை. இன்று என் கையை நழுவிப் போய்விட்டார். அவரின் சிரிப்பு, நகைச்சுவையான கதைகள், பண்பான பழக்க வழக்கங்கள். என் கண்முன் நிற்கின்றது . இனி அவரை எப்போது காண்பேன் என மனம் ஊசலாடும். தோழன் ச.தர்மன் (ஜெர்மனி).

Wednesday, January 11, 2017

கன்பொல்லை தவம் இரண்டாம் ஆண்டு நினைவுகள்

- கரவைதாசன்- 
இன்று கன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) அவர்களின் நினைவுகளை மீட்டு நிறுத்தும் இரண்டாம் ஆண்டு. அவரைப் பற்றி அவர் எனக்கு தந்தை எனச் சிலவும் சமத்துவத்துக்கான போராளியெனச் சிலவும் பொதுவுடமைக் கட்சியாளரெனச் சிலவுமென பலதும் பத்துமாக பல்வேறு நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தும் பிரிந்தும் வந்தேகின்றன. அண்மையில் இலக்கிய நண்பர் சிவராசா கருணாகரன் அவர்கள் ஆனையிறவு உப்பளம் பல மில்லியன் செலவில் இலங்கை அரசினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் உப்பளத்தினை தனியாருக்கு கையளிக்கப்போவதாகவும் இதனால் காலகாலமாக இவ்உப்பளத்தில் வேலை செய்து வந்த மாசியப்பிட்டி, தட்டுவன்கொட்டி, எழுதுமட்டுவாள், கரவெட்டி போன்ற கிராமத்து மக்களுக்கு திரும்பவும் வேலை கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை குறித்தும் விசனப்பட்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதனை படிக்க கிடைத்தபோது ஏனைய கிராமங்கள் ஆனையிறவுக்கு அயல் கிராமமாக இருக்கும்போது கரவெட்டியிலிருந்து வெகுதூரத்திலிருந்து வந்து அந்த மக்கள் வேலையில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை நான் பதிவுசெய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதும் என் நினைவுப் புலவுக்கு வந்து எட்டி நிற்கின்றன. அது வடபுலத்து நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களின் நாகரிகமற்ற கரிய பகுதி. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக குற்றப்பரம்பரைச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்து கள்ளர்சாதியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கியபோது அது போன்ற சட்டங்களை இங்குள்ள அதிகாரத்திலிருந்த ஆதிக்க சாதியினர் இங்கேயும் கொண்டு வர விரும்பினர். ஆனால் யாழ்ப்பாணராச்சியத்தில் அங்கம் வகித்த அந்திராசு போன்ற (கரையார) இடைச்சாதியினைச் சேர்ந்த முதலிகளினால் அவை முற்றுப்பெறாமல் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மையம் வடபுலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஒடுக்கி வந்தனர். யாழ்ப்பாணத்து தேசவழமைச் சட்டம் இதன் விரிந்த பகுதி என்பது இங்கு கண்கூடு. இலங்கையில் டொனமூர்திட்டத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது சேர்.பொன்.இராமநாதன்  போன்ற சாதிவெறி பிடித்த தலைமைகள் தமிழில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எவ்வளவு ஊழிக்கூத்து ஆடினார்கள் என்பதும் எங்களது இருண்ட பக்கங்கள் தான்.

Wednesday, December 28, 2016

குதித்த குதியும் ஆடியபாதங்களும்! நினைவில் நிற்கும் நாட்டுக்கூத்து கலைஞர்கள்

- கரவைதாசன் - 

தமிழிலே மேலைத்தேயவரின் வருகையும் அவர்களின் வருகைக்கு பிற்பட்ட புனைகதை (Fiction) முறையும் அறிமுகமாவதற்கு முன்பு வரலாறு, சோதிடம், வைத்தியம், இலக்கியம் என எல்லாம் கவி வடிவிலேயே இருந்திருக்கின்றன. முன்னெல்லாம் சபைகளிலே கவிதையிலேதான் கதைத்தார்கள் என்று  காணக்கிடக்கின்றது. அந்தவகையில் பாடற்கலையும் ஆடற்கலையும் இணைந்து கூத்து அல்லது நாடகம் என்ற வடிவம் மிகச் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாக விருக்கின்றது. பழம்பெரும் நூல்களான சாத்தனாரின் கூத்த நூலிலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும், பரதருடைய நாட்டியசாஸ்திரத்திலும் நாடகம் பற்றிய பல செய்திகள் காணக்கிடக்கின்றன. சிந்து, தரு, ஓடம் தண்டகம், விருத்தம், பத்யம், சுலோகம், ஓரடிதரு, ஓரடிபதம் எனப் பல்வேறு இசைவடிவங்களை இசைநாடகங்களில் கையாண்டதாகக் காணக்கிடக்கின்றது. 

கூத்து என்பது இசையோடு இணைந்த ஆட்டமாகும். ஈழத்திலே தமிழர் பாரம்பாரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளிலே கூத்து பல்நெடும் காலமாக ஆடப்பட்டு வந்திருக்கின்றது. இவை வடமோடி, தென்மோடி, வட்டக்களாரி, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வீரபத்திரா; ஆட்டம், காமன்கூத்து எனப்பல வகைப்படும். உண்மையில் கூத்து தமிழர்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான ஓர் இடத்தில் அமைந்திருந்ததாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. 

ஆனால் கிராமங்கள் நகரங்களாகியபோதும், பார்சிய வடிவிலான ஸ்பெசல் நாடகமுறையின் வருகையாலும், சினிமாவின் வருகையாலும் கிராமத்தினிலேயே இக்கூத்து வடிவம் வித்தூண்டி நின்றபோது நகரத்து மக்களால் இக்கூத்து வடிவம் நாட்டுக்கூத்து என அழைக்கப்பட்டது. 

Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம். 

Thursday, March 19, 2015

சங்கப் படலை - கன்பொல்லை- வரலாற்றுக் குறிப்புகள்.

-கரவைதாசன் -
புத்தம் சரணம் கச்சாமி..............
பானாதி பாதா வேரமணி சிக்கா பதம் சமாதி யாமி.........
வண்ண கந்த குணோ பேதங் ஏ தங்க குசும சந்ததி..............
சுகந்தங் சீதலங்கப்பங் வசந்த மரணங் சுகங்..........
சுகந்தி காய வதனம் மணந்த குண கந்தினம்................
நாகவல்லி தழு பேதம்...............
நமாமி புத்தம் குணசாகரந்தம்.......
இதிபிசோ பகவா புரிச சம்ம சாரதி................
போன்ற பாளி மொழியினால சுலோக சட்டங்களினால் (காதா)
இலங்கையில் பெளத்த மதத்தின் சங்கப்படலை உருவாக்கம் செய்யப் பட்டடுள்ளது.  இச்சங்கப் படலை பல்வேறுபட்டகாலங்களில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இலங்கைதீவில் ஒவ்வொரு பகுதியிலும்  திறக்கப்பட்டும் மூடப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் அகற்றப்படுவதற்கும் எத்தணிப்புகள் நடந்துள்ளன. சிலவேளை சில ஆயிரம் வருடங்கள் முன்பாக, சிலவேளை சில நூற்றாண்டுகள் முன்பாக, சிலவேளை சில பத்து வருடங்கள் முன்பாக  வரலாற்றின் போக்கில் பதிவுகளும் அகழ்வுத் தடயங்களிலும் புனைவுகளிலும் கூட நிறுத்தம் கொள்கிறது.

Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

Thursday, January 26, 2012

சிங்கள நாடக அரங்கம் சில தகவல்கள்

- கரவைதாசன் -

இனத்துப் புனைவுககளின் தொடர்ச்சி, முரண் இவற்றிடையே தொடரும் மாற்றங்களினிடையும் இத்தகவல்கள் என்னை வந்தடைந்ததையும் அதை இன்று நான் நினைவுமீட்டலும் என்னை என் பால்ய வயதிற்கு அழைத்துச் செல்லும் உணர்வினை எனக்குள் பாய்ச்சி நிற்கின்றது. தமிழிலே இன்று பூச்சுத்தப்படுகின்ற மொழி ஒன்று, மதம் ஒன்று, கடவுள் ஒன்று  எல்லாம் ஒன்று என்ற பம்மாத்துக்களிடையே வித்தியாசங்களை கண்டறிந்து பழம் தின்று கொட்டையும் போட்ட ஒரு மூத்த சந்ததி பட்ட அவலங்களைக் கண்டும் கேட்டும் பட்டும் விழிப்புக்கொண்ட அனுபவம் எங்களது, என ஒரு கட்டுரையில் விழித்து தொடங்கியிருந்தேன். இது என்னது எனச் சொல்வதே இங்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இலங்கைத் தீவிற்குள் தமிழ்க் குறுந்தேசிய அரசியல் தமிழுக்கும் சைவத்திற்கும் முடிச்சுக்கட்டி அக்கருத்தியலுக்குள் தமிழ் மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும்,  சிங்கள பெரும் தேசியம் பௌத்தத்திற்கும்  சிங்களத்திற்கும் முடிச்சுக் கட்டி அக்கருத்தியலுக்குள் சிங்கள மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றன. இது இயல் இசை நாடகம் என எல்லாவற்றிக்குள்ளும் கூட இன்று விரவிக் கிடக்கின்றன. இவற்றுள் நாடக அரங்கில்  இதன் வித்தியாசங்களை தொகுத்தறிந்து பொதுத் தன்மைகளை உய்த்தறியும்  ஒருமுயற்சியாக இவ்வெழுத்தினைக் கொள்ளலாம். இவ்முயற்சிக்கு எனக்கு தகவல்களை தந்துதவியவர் எனது கிராமத்தில் நான் கண்டறிந்து பழகிய நாட்டிய நாடக ஆசிரியர் தென்னக்கோண் அவர்கள்.

Saturday, July 23, 2011

பொன் .கந்தையா

 நினைவில் தோழர் பொன். கந்தையா  
-கரவைதாசன்-

வர்க்க உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும் வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை!


அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர் பொன். கந்தையாதான்.

Wednesday, March 03, 2010


கறுப்பாகிக் கிடந்த ஈழமண்ணில்எழுந்து பழுத்து வீழ்ந்த விதை!
அமரர்
சின்னத்தம்பி செல்லையா

1932
-2007
-கரவைதாசன்-

யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூகத்தின் முரண்பாடுகளை விளங்கிக்கொண்டு, அச்சமூகத்தில் அசைவியகத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில் 1950ம் ஆண்டு காலப்பகுதிகளில் தோன்றிய அமைப்பாளர்கள், மாதிரி உருவை வடிவமைத்தவர்கள், மார்க்கத்தினை கண்டறிந்தவர்கள், வாழ்ந்து பணி செய்த தோழர்கள் வரிசையில் இந்த ஆண்டில், முதலில் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையைச் சேர்ந்த மா.செல்லத்தம்பி அவர்களை இழந்து தவித்து நின்றபோது மகாசபையைச் சேர்ந்த இன்னொரு தோழர் துன்னாலையைச் சேர்ந்த தலைவர் செல்லையாவையும் இழந்துவிட்டோம் என்ற செய்தி வந்து சேர்ந்தது.

தோழர் செல்லையா அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். அவர் நிகழ்வுகளை புனைவின்றி பதிவு செய்வதினூடே ஐம்பதுகளில் அடக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஒரு சமூகத்தின் வரலாற்றினையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிட்டுவதை உணர்கிறேன். அன்று ஈழத்திலே ஒரே மொழியைப் பேசி ஒரே பிரதேசத்தில் ஒரே மாதிரியான வாழ்வை வாழ முடியாமற் தடுத்து, நாகரிகமற்ற முறையில் எங்கள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, கிளர்ந்தெழுந்த வரலாற்றினை பதிவு செய்யும் முயற்சியாகவும் இதனைக் கொள்ளலாம். எனில் எனக்கு எட்டியவரை கிடைத்த தகவல்களின் வழி நான் வாழ்ந்த கிராமத்தில் வாழ்ந்த இவரோடொத்த தோழர்களையும் இவர்களது செயற்பாடுகளையும் ஆவணப்படுத்த நினைக்கிறேன்.

அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்கள் ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் துன்னாலை மேற்கில் 22-04-1932ல் சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் இளைய மகனாகப் பிறந்தார். யாழ் /ஞானசாரியார் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய இவர் தொடர்ந்து அரசினரால் நடத்தப்பட்ட பாடசாலை, நெல்லியடி மத்தியமகாவித்தியாலயத்தில் ஆங்கில மொழிமூலம் தனது இடைநிலைக் கல்வியினை கற்று தேறினார். தனது ஊரைச் சேர்ந்த பூங்கிளி என்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாகச் சேர்ந்து ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று ஐவரையும் ஆசிரியைகளாக உருவாக்கியுள்ளார்கள்.

அமரர் அவர்கள் இடைநிலைக் கல்வியினை கற்று தேறிய காலத்திலேயே வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் கணக்காளராக வேலைக்கமர்த்தப்பட்டார். சமூகச் சீர்திருத்த எண்ணமும் அடக்குமுறைக்கெதிரான போராட்டச் சிந்தனையும் இவரை கம்யூனிசக் கட்சியிலும் அதனைத் தொடர்ந்து எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை தலைமையாகக் கொண்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையிலும் இணைந்து செயற்பட வைத்தது. வடமராட்சியில் மகாசபையின் கிளையினை அமைத்து செயற்பட்ட தோழர்கள் அமரர்கள் ..செல்லத்துரை, கவிஞர் பசுபதி, மு.செல்வபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, ஜீ.ஜீ.மகாலிங்கம், முருகேசு, மா.செல்லத்தம்பி, .குலேந்திரம், .சின்னத்தம்பி, .வன்னியசிங்கம், வீ.எஸ்.சிவபாதம், .தங்கமணி, மற்றும் இரகுநாதன், தெணியான், .இராசரத்தினம் ஆகியோருடன் இணைந்து முன்னணியில் நின்று செயற்பட்டார். மகாசபையின் பொதுக் காரியதரிசியாக சட்டத்தரணி பீ.ஜே. அன்ரனி அவர்கள் இருந்து உழைத்துக் கொண்டிருந்தபோது அமரர் அவர்கள் நிர்வாகக் காரியதரிசியாக இருந்து செயற்பட்டார். அப்போது உத்தியோகமா? சமூகப்பணியா? எனக் கேள்வி எழுந்தபோது உத்தியோகத்தினை விட்டு வந்து சமூகப்பணியிலே முழுவதுமாக ஈடுபட்டார்.

இப்டியாக இவர் மட்டுமன்றி எம்.சி.சுப்பிரமணியம் எலிபன்ட் கவுசில் பார்த்த உத்தியோகத்தை துறந்தார். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த .தங்கமணி அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தினை துறந்துவிட்டு இவர்களுடன் சமூகப்பணியில் சேர்ந்து செயற்பட்டார். அது போலவே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம், .சிவகுரு இருவரும் கூட தாங்கள் அக்குறனையில் வகித்து வந்த பண்டகசாலைப் பொறுப்பாளர் உத்தியோகங்களை விட்டு வந்து (இப்படிப் பலர்) சமூக மாற்றத்திற்காக எழிச்சியுடன் ஈடுபட்டு உழைத்தார்கள்.
அமரர் அவர்கள் 1956ல் பொன்.கந்தையா அவர்களின் தேர்தல் வெற்றிக்காக கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டார். சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனல் பறக்க அரசியல் மேடைகளில் பேசிவந்தார். இவர் போன்ற தோழர்களின் தொடர்ச்சியான உழைப்பு வடக்கு கிழக்கிலிருந்து பாராளுமன்றத்திற்கு கம்யூனிஸ் கட்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஒரே ஒரு பராளுமன்ற உறுப்பினர் தோழர். பொன்.கந்தையா அவர்கள்தான் என்ற வரலாற்றினை உருவாக்கியது.


இதே1956ல் பிற்றர் கெனமன் வடமராட்சிக்கு வருகை தந்து மாலிசந்தியில் பிரமாண்டமான கூட்டமொன்று நடைபெற்றது. அதனையொட்டி வடமராட்சியில் சைக்கிள் ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது அதில் பீற்றர் கெனமனும் பங்குபற்றினார். வடமராட்சியின் முன்னணித் தோழர்களுடன் அமரர் தலைவர் செல்லையா அவர்களும் இரண்டிலும் கலந்து கொண்டார். அச்சைக்கிள் ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டிருந்தனர். கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களின் சகோதரி லட்சுமி அவர்களும் அவ்வூர்வலத்தில் சேர்ந்திருந்தார். அப்போது வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் s.s.c படித்துக் கொண்டிருந்த மாணவன். இவர் அடுத்த நாள் பாடசாலைக்கு போகும் வழியில், வட்டவிதானை என அழைக்கப்படும் சாதி வெறியர்களுடைய சண்டியன் சித்தன் என்பவன் (அக்காலங்களில் வட்டவிதானை என அழைக்கப்படும் அரச அதிகாரமற்ற உயர்சாதி கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் இருந்திருக்கிறார்கள்.) வீ.எஸ்.சிவபாதம் அவர்களை வழிமறித்து அவரிடம் அவரது சகோதரியை மிக அவதூறாகப் பேசி அவரை துவரந்தடியால் தாக்கியும் உள்ளார். பதிலுக்கு வீ.எஸ்.சிவபாதம் அவர்கள் அவர் பென்சில் சீவுவதற்காக வைத்திருந்த பேனாக் கத்தியால் சித்தனை தாக்கியுள்ளார். இச்சம்வமானது அன்று சாதி அதிகாரச் சண்டித்தனத்தினை உசுப்பிய சம்பவமாக அமைந்திருந்தது. அன்று மாலை சிவபாதம் அவர்களுடைய வீடு தீக்கிரை ஆக்கப்பட்டது. சேதியறிந்து எம்.சி அவர்களுடன் அமரர் செல்லையா அவர்களும் அவ்விடம் வந்து தோழைமையுடன் அவர்களுடன் சேர்ந்து எதிர் நடவடிக்கைகளில் செயற்பட்டுள்ளார். கன்பொல்லையின் எல்லையை அண்டி இடைக்குறிச்சியில் வாழ்ந்து வந்த வீ.எஸ்.சிவபாதம் அவர்களது பெற்றோர், குடும்பமாக பாதுகாப்புக் கருதி கன்பொல்லையின் மையப் பகுதிக்கு அவரது பெரிய தகப்பனாரின் காணிக்கு இடம் பெயர்ந்தார்கள். இப்படி பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த ஒரு சம்பவம் சங்கானை நிச்சாமம் கிராமத்தில் தோழர் மான் நா. முத்தையா அவர்களுக்கும் நேர்ந்தது.


ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் பருத்தித்துறைதொகுதி எம்.பியாக இருந்தபோது, சோல்பரி கொமிசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது. அப்போது சாதிக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை கொமிசனரை அழைத்துச் சென்று காட்டுவதென சிறுபான்மைத்தமிழர் மகாசபை முடிவெடுத்திருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தபோதும் சோல்பரி கொமிசனரை இரகசியமாக அழைத்து வந்து கன்பொல்லைக் கிராமத்தில் எரிந்த வீடுகளை புகைந்துகொண்டிருக்கும் நிலையில் காட்டியுள்ளார்கள். இதற்குப் பின்னணியில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த ஆசையண்ண என அழைக்கபடும் தோழர் இராசையா அவர்களும், டி.ஜேம்ஸ், வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம் இருந்தார்கள். கூடவே தலைவர் செல்லையாவும் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த இன்னொரு சமசமாசித்தோழர் பைரவன்.மாசிலாமணி அவர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. வீடு திரும்பும் வழியில் நெல்லியடிச்சந்தியில் வைத்து வி.டி.கணபதிப்பிள்ளை, எம்.சி.சுப்பிரமணியம், டி.ஜேம்ஸ் ஆகிய மூவரும் சாதிவெறியர்களால் நையப்புடைகப்பட்டார்கள் என்பது பல இடங்களில் பதிவாகியுள்ளது.

பொன்.கந்தையா அவர்களின் காலத்தில் அவர் கல்வி அமைச்சர் டபிள்யு. தகாநாயக்க அவர்களின் உதவியுடன் சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் அனுசரனையுடன் தமிழ்ப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல பாடசாலைகளை உருவாக்கினார். கூடவே உள்ளுராட்சிசபைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவிற்காகப் பாடுபட்டடார். உள்ளுராட்ச்சி சபைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். அப்போது நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த தோழர்..சிவகுரு தொடர்ந்து இரண்டு தடவையாக வேட்பாளராக நிறுத்தப்பட்டு நட்சத்திரச் சின்னத்தில் போட்டியிட்டார். முதற் தடவை 22வாக்குகள் வித்தியாசத்திலும் இரண்டாவது தடவை பத்திற்குட்டபட்ட வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம் அத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமரர் செல்லையா அவர்கள் கலந்து கொண்டு தோழர் .சிவகுரு அவர்களுக்கு ஆதரவு தேடி பேசி வந்துள்ளார். (பின்பொருதடவை கன்பொல்லையைச் சேர்ந்த தோழர்.ஆண்டி.சுந்தரம் அவர்களும் நெல்லியடி பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டார்). சமகாலத்தில் சங்கானைப் பட்டினசபையில் போட்டியிட்ட மான் நா.முத்தையா, பி.நாகலிங்கம், வி.வைரமுத்து, .பசுபதி, வல்வெட்டித்துறை பட்டினசபையில் போட்டியிட்ட தோழர்.திருப்பதி, சுன்னாகம் பட்டினசபையில் போட்டியிட்ட செனட்டர் நாகலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எம்.சி.அவர்களின் வலுமிக்க தோழராக அமரர் செல்லையா அவர்கள் விளங்கினார். மகாசபையின் வாலிப முன்னணியில் வடமராட்சியில் ஆசிரியர் ஜி.ஜி.மகாலிங்கம் அவர்களுடன் சேர்ந்து தலைமை தாங்கி முனைப்புடன் செயற்பட்டார். அந்நாட்களில் வடமராட்சிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏற்படுத்தப்பட்ட எழுச்சி மிக்க சயிக்கிள் ஊர்வலத்தினை ஒழுங்கு செய்து தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இவ் ஊர்வலத்தில் யாழ் அணி, கரவெட்டி கிழக்கு அணி, பருத்தித்துறைஅணி, துன்னாலைஅணி;, மட்டுவில்அணி, மானிப்பாய்அணி, காங்கேசன்துறை அணி, தீவு அணி, இமையாணன் அணி, கம்பர்மலை அணி, என நூற்றுக்கணக்கான அணியினருடன் கன்பொல்லைஅணியும் ஆசிரியர் .இராசரத்தினம் அவர்களின் முனைப்பில் அணிவகித்து நின்றது. அந்நாட்களின் வரலாறு. இச்சயிக்கிள் ஊர்வலம் சிறப்புற நடந்தேறியமைக்காக அமரர் செல்லையா அவர்கள் அவ்வேளை பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார்.


1966
மாசி மாதம் 14ந் திகதி கன்பொல்லைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கல்வி கற்பதை முன் வைத்து ஓர் பாடசாலை (யா/சிறீநாரதவித்தியாலயம்) .இராசரத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலையை நிறுவுவதற்கு நிலத்திற்கு சொந்தமானவர்கள் நிலத்தினை வழங்கி ஒத்துழைத்தபோது ஒருவர் மட்டும் மறுத்து குழப்பம் விளைவித்தார். அவ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைவர் செல்லையா அவர்களும் கலந்திருந்தார். எப்பொழுதும் பிரச்சினைகள் வரும்போது அதற்கு முகம் கொடுக்கும் அமரர் அவர்கள் குளப்பம் விளைவித்தவரை அணுகி சமாதானம் பேசியுள்ளார். விடயம் முற்றி விவகாரமாகி கைகலப்பு அளவிற்கு போனபோது கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த கட்டுரையாளரின் தந்தை மு.தவராசா (தவம்)அவர்கள் இடையில் தலையிடவே பொலீஸ் வந்து அமரர் செல்லையா அவர்களையும் தவம் அவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்திருந்தது. மறுநாள் எம்.சி.அவர்களும், .தங்கமணி அவர்களும் பொலிஸ் நிலையம் சென்று .தங்கமணிஅவர்கள் பிணைக்கையெழுத்திட்டு இருவரையும் அழைத்து வந்தார். பின்பு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றபோது இப்பாடசாலைக் ஊடாக பன்னிரண்டு சிறுபான்மைத்தமிழர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. இன்று பத்தாம் வகுப்புவரை இங்கே மாணவர்கள் கல்வி கற்றுவருகிறார்கள்.
கன்பொல்லைக் கிராமமக்கள் தொடர்ச்சியாக சாதியப்போராட்டத்தினை நடத்திவந்தபோது ஒரு கம்யூனிஸ்ட் என்ற வகையிலும் அனைத்திலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முன்னணி உறுப்பினர் என்ற வகையிலும் தோழைமையோடு அவர்களுடன் அமரர் செல்லையா அவர்கள் இணைந்து செயற்பட்டு வந்துள்ளார்.



தொடர்ச்சியாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமைஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்த தேனீர்க்கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் என பஞ்சமர்களின் சமத்துவத்திற்கான அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ஒரு சமயம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரவேசத்தின்போது மண்டையில் பலமாக அடிப்பட்டார். இவரது கிராமத்தினை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வல்லிபுரக்கோவில் பிரவேசத்தின்போது எம்.சியும், அமரர் அவர்களும், தவயோகம், மற்றும் துன்னாலையை சேர்ந்த .வு.டீ செல்லையா, அரசடி குழந்தையப்பா, .இராசரத்தினம் மற்றும் தானும் முன்வரிசையில் கோவிலுக்குள் சென்றபோது எங்களின் வீட்டு அர்ச்சனைத் தட்டைத்தான் எம்.சி அவர்கள் வாங்கி முதல் முதலாக அர்ச்சனை செய்வித்தார் என எனது தந்தையார் மு.தவராசா சொல்லி மகிழ்வார். அங்கு கோயில் உள் மண்டபத்தில் துவக்குகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தை தாங்கள் கண்டதாகவும் கோயில் மணியம் வே..வல்லிபுரமும் சில அடியாட்களும் இரண்டாம் மண்டபத்தில் நின்றதாகவும், எம்.சி யின் ஏற்பாட்டில் பொலிசும் ஆமியும் பந்தோபஸ்திற்கு வந்து நின்றதாகவும். இருந்தபோதும் தாங்களும் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குள் ஆயுதங்களை கொண்டு போன அதே பாணியில் பொங்கல்ப் பானைக்குள் கைக்குண்டுகளை கொண்டுபோனதாகவும் ஆமி நின்றபடியால் எந்தவித அசம்பாவிதமுமின்றி ஆலயப் பிரவேசம் நடந்ததாகவும் அவர் கூறினார்.
எம்.சி அவர்கள் நியமன எம்பியாக இருந்தபோது அமரர் அவர்கள் சிபார்சு செய்து தனது கிராமத்தில் ஆட்டுப்பட்டிக் குறிச்சியில் சாதிமான் அருமைத்துரை என்பவனுக்கு சொந்தமாயிருந்த எழுபத்தைந்து பரப்பு காணியினை அரசினால் சுவீகரித்து அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு உரிமையாக்கினார். சாதியச் சண்டையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த தன் கிராமத்தினைச் சேர்ந்த மாம்பழன், சீனியன் சகோதரர்களை பிரதம மந்திரி சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை வாங்கிக் கொடுத்தார். மேற்கொண்ட காரியங்களுக்காக இவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோதும் அதனை துச்சமாக மதித்து எம்.சிக்கூடாக இவற்றை செய்து முடித்தார்.


அமரர் அவர்களின் தொடர்ச்சியான பணிகளினூடே சிறுபான்மைத்தமிழர் மகாசபையின் நிர்வாகக் காரியதரிசியாகவும், கட்டைவேலி நெல்லியடி..நோ.கூ.சங்க பணிப்பாளர்சபைத் தலைவராகவும், கட்டைவேலி. உடுப்பிட்டி. தெங்குப்பனம்பொருள். உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், பனை அபிவிருத்தி பணிப்பாளர்சபை பணிப்பாளராகவும், கடற்தொழில்அமைச்சின் பணிப்பாளர்சபை உறுப்பினராகவும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகப்பற்றற்ற மேற்பார்வையாளராவும், சமாதான நீதிவானகவும் பயணித்துள்ளார்.
இவர் போன்ற சமூக விடுதலைப் போராளிகளின் இரத்தம், வியர்வை, சிறைவதைக் கொடுமை இவற்றினூடேதான் இன்றைய ஈழத்தில் வாழும் பஞ்சம இளம் சந்ததி இன்றுவரையுள்ள சமத்துவத்தினை அனுபவிகின்றது. இப்போராளிகள் கருப்பாகிக் கிடந்த ஈழமண்ணில் எழுந்து பழுத்து வீழ்ந்தாலும், எல்லாம் விலகிப்போச்சு என்ற வெறும் தோற்றப்பாடு இருக்கும் வரை, என்றும் புதிய விதைகளே!

தகவல்: க.இராசரத்தினம், மு.தவராசா(தவம்)
துணைநூல்கள்: சி.கா.செந்திவேல், „இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்“,
போ.சிறீபவன்,“நந்தா விளக்கு“


இக் கட்டுரை முதலில் „உயிர்மெய்“ (இதழ் 4, ஐப்பசி-மார்கழி 2007) வெளியாகியுள்ளது.