Sunday, August 30, 2020

 நாமும் எங்களால் ஆனது செய்வோம்...

இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.

Tuesday, August 11, 2020

'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.

-கரவைதாசன்-

கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.