Saturday, August 25, 2012

கவிதாவின் கறுத்தப்பெண்

“கறுத்தபெண் - நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்"
 பேராசிரியர் சண்முகரட்ணம் அணிந்துரை:-
"இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்."

தாழ் உடைக்கும் கவிதைகள்
கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக் கூறத்தேவையில்லை. கவிதாவின் கவிதைகள் அழகானவை, அவற்றில் பெரும்பாலானவை ஆழமானவை. அழகும் ஆழமும் மிக்க கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பினைப் படித்து மகிழும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தமைக்காகக் கவிதாவிற்கு எனது நன்றிகள். ”கறுத்தபெண்”  கவிதைகளை இயற்றிய கவிதாவிற்கு எனது பாராட்டுக்கள்.
தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர்.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.
’நான் பெய்யெனப் பெய்யும் மழை’ எனும் தலைப்பினைக் கொண்ட முதலாவது கவிதை பல்லாண்டு காலமாகத் தமிழராய் புனித கோபுரத்தில் வைத்துப் பூசிக்கப்படும் திருக்குறள் மீது ஒரு போர் பிரகடனத்தை வீசுகிறது.
வள்ளுவா!
உன்னுடன் கொண்ட
முரண் பாடொன்று
முறிந்து விட்டது
உண்மைதான்
ஓம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழை!
என ஆரம்பிக்கும் கவிதை தொடர்கிறது
கலைந்த கூந்தலோடு
உம்மையும்
பெண் கற்பைப்பாடும்
உம்மொத்த புலவர்களையும்
பிடுங்கியெறிய
என் மழை எழுகிறது
எனச் சவால்விட்டுப்; பின் வருமாறு முடிகிறது இந்தக் கவித்துவப்போர் பிரகடனம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழையாய்
கட்டுக்கடங்பாதென் கவிதை
நான் பாயெனப் பாயும்
இந்தக்கவிதையின் நோக்கம் திருக்குறளை அவமதிப்பதெனப் பார்ப்பதைவிட அது நியாயப்படுத்தும் ஆண்-பெண் அசமத்துவ விழுமியத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்கிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும். ஆணாதிக்கம் நமது சமூகத்தில் நிறுவன ரீதியில் தொடர்வதை மறுக்க முடியாது.
புனிதப்படுத்தப்பட்ட தொன்மைமிகு ஒழுக்கவியல் நூல்களும் மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது திணிக்கப்படும் சடங்குகளும் கட்டுப்பாடுகளும் விமர்சிக்கப்படுதல் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் விழுமியங்களின் பரிணமிப்புக்கும் முற்போக்கான சமூக மாற்றத்தின் நகர்ச்சிக்கும் அவசியமான செயற்பாடாகும். இந்தச் சிந்தனைப்போக்கு இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் இழையோடக் காணலாம். இது ஒரு அரசியல் சுலோகமாகவோ அல்லது அறிக்கை ரீதியான வாசகமாகவோ வரவில்லை. கவிதைகளைப் படித்து சற்று ஆழச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்கள் தோன்றலாம். இது எனது வாசிப்பு.
பெண்ணின் சமூக நிலை, காதல், கற்பு நிலைபற்றி மீண்டும் அதே கருத்துக்களை வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது ”சொன்ன சொல் மாறாமல்” என்ற கவிதை. இதன் இறுதி வார்த்தைகளைப் பாருங்கள்
தயவுசெய்து
காலாகாலமாய் கட்டிவரும்
கற்பு என்றால் என்ன, என்பதை
கறுத்தபெண் என்ற
என் முகவரிக்கு
வந்து சொல்லுங்கள்
இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு கறுத்தபெண் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் எனக் கூறுகிறது. அதே நேரம் கறுத்தபெண்ணாயிருந்தால் மட்டுமல்ல இந்த மறுப்பு அவள் அவள் சிவப்புப் பெண்ணாக மாறினாலும் கட்டுப்பாடுகள் மாறுவதில்லை எனும் உண்மையையும் காட்டுகிறது.
இதை மேலும் ஆழப் புலப்படுத்துகிறது “நாங்கள் காவும் பெட்டகம்” எனும் கவிதை. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என ஆணாதிக்கம் வரித்த நாற்குணங்களும் பெண்மையின் ஒருமித்த இலக்கணமென்று அவளை அதன் பெட்டகமாக்கிப் பொன்விலங்கு பூட்டியுள்ளது சமூகம். காதலாக ஆரம்பிக்கும் உறவும்
படிப்படியாக ஆக்கிரமிப்பாக மாறலாம் என்பதை நயம்படக் கூறுகிறது இன்னொரு கவிதை.
இந்தத் தொகுப்பில் வேறு விடயங்களும் கையாளப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘சித்தப்பாவும் சில கேள்விகளும்’ எனும் கவிதை வாசகரை தாயகத்தின் போர்க் கொடூரங்கள் மிகுந்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சித்தப்பாவிற்கு நடந்தது என்ன.
..
ஈரம் சொட்ட சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின் கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் எதுமில்லை
இந்தக் கவிதையின் முடிவு மனதை
மிகவும் தொடுவதாயுள்ளது
எந்த மதிலையும்
பழஞ் சுவரென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்கவேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்
என்னைக் கவர்ந்த வேறு பல கவிதைகளும் இங்கே உண்டு. இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம். இந்த வகையில் ஒருவரின் ஆக்கம் சமூகத்தில் வெளிவந்ததும் அது தனக்கென ஒருவாழ்வைப் பெற்றுக் கொள்கிறது என்பதை மறந்திடலாகாது. அதன் பிரசுரம் அதை ஆக்கியவரிடமிருந்து விடுவித்து விடுகிறது என்றும்
அர்த்தப்படுத்தலாம்.
கவிதாவின் கவிதைகள் வாசகர்களுக்கூடாக ஒரு திறந்த அரங்கிற்குள் வந்துவிட்டது. அங்கே அவை பற்றிய விளக்கங்களும் விவாதங்களும் தொடர வேண்டும் என வாழ்த்தி கவிதாவுக்கு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.
நன்றி:பேராசிரியர் ந. சண்முகரத்தினம்

Thursday, August 23, 2012

நூல் அறிமுகம்

தோழர் MC லோகன் இன் கவிதை தொகுப்பு வெளியீடும் - அரசியல் நிகழ்வும் டென்மார்க் இல் நடக்கவிருக்கிறது .
 

Wednesday, August 08, 2012

உயிர் நிழல் 35வது இதழ் வெளிவந்துள்ளது

, சுல்பிகா இஸ்மாயில், பா. துவாரகன், சேரன், இராகவன், ஆழியாள், றியாஸ் குரானா, லஷ்மி, வி. சிவலிங்கம், ரிஷான் ஷெரீப், ஜிஃப்ரி ஹாசன், ரதன், எம்.பௌசர், ஸர்மிளா செய்யித், சு. குணேஸ்வரன், அஜாதிகா, ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.