Thursday, February 18, 2021
கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம்..
Wednesday, February 03, 2021
டொமினிக் ஜீவா
-எம் .ஏ.நுஃமான்-
டொமினிக் ஜீவாவுக்கு 85 வயதாகிறது. கலை இலக்கிய நண்பர்கள் அவரது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 27.06.2011 கொண்டாடினார்கள். 18.06.2011ல் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஜீவாவைச் சந்தித்தேன். வழக்கம்போல் அன்போடு விசாரித்தார். மல்லிகை இதழ்களோடு அழகாக அச்சிட்ட ஒரு அழைப்பிதழையும் நீட்டினார். அது அவரது பிறந்த நாள் சந்திப்பு அழைப்பிதழ். எட்டுப் பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் ஜீவாவின் வெவ்வேறு முகத் தோற்றத்துடன், ஜீவமொழிகள் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ். இம்முறை கட்டாயம் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனினும் முடியவில்லை. ஆகையால் இக்குறிப்பை எழுதுகிறேன்.
ஜீவாவுக்கு எண்பத்தைந்து வயது என்பதை நம்பமுடியாது. அவரது ஆரோக்கியம் அப்படி. இன்னும் அதே வெள்ளை நெனல் வேட்டியுடன் கைகளை அகல விரித்து நிமிர்ந்து நடக்கிறார். இளமை மிடுக்கின் சுவடுகள் இன்னும் மறைந்துவிடவில்லை. தீவிர இலக்கியச் செயற்பாட்டாளராக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் மல்லிகை ஆசிரியராக அர்ப்பணிப்புடன் இயங்குகிறார். நினைவாற்றலும் செயற் துடிப்பும் மங்கிவிடவில்லை. உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று வேடிக்கையாக மல்லிகை தூண்டில் பகுதிக்கு ஒரு கேள்வி அனுப்பலாம் என்று சிலவேளை நாங்கள் சில நண்பர்கள் சந்திக்கும் போது பேசிக்கொண்டதுண்டு. அதற்கு அவர் சொல்லக் கூடிய விடைகளை நினைத்துப் பார்த்துச் சிரித்ததும் உண்டு. ஜீவாவின் ஆரோக்கியத்தின் அடிப்படை அவரது வாழ்க்கை முறைதான் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்க்கையை கட்டுதிட்டமான சில ஒழுங்குமுறைகளுக்குள் அமைத்துக்கொண்டவர். தற்துணிபும் தன்னம்பிக்கையும் அவரை வழிநடத்தின. ஒரு இலக்கியவாதி என்ற வகையில் அவரது வாழ்வு நிறைவானது. இதில் அவருக்கு ஒரு சுயதிருப்தி இருப்பது அவரது ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படக் காணலாம்.
நான் ஜீவாவை முதல்முதல் சந்தித்தது 1965 டிசம்பரில் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நீலாவணனுடன் முதல்முதல் நான் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்போது மல்லிகை வெளிவரத் தொடங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். கஸ்தூரியார் வீதியில் ஜீவாவின் தொழிலகத்தில் அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஜீவா ஒருவருக்கு சிகையலங்காரம் செய்துகொண்டே என்னுடன் உரையாடியது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது நான் இலக்கிய உலகுக்குப் புதியவன். ஜீவா என்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது. 1970களின் தொடக்கத்தில் கைலாசபதியின் தலைமையில் சாகித்திய மண்டல உறுப்பினர்களாகச் செயற்பட்டபோதுதான் நாங்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலப் பிட்டியிலும் கல்முனையிலும் இலக்கிய விழாக்களை நாம் இணைந்து நடத்தியிருக்கிறோம். அக்காலகட்டத்தில்தான் நான் மல்லிகையில் அடிக்கடி எழுதினேன். 1976ல் நான் யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தபின் மல்லிகை அலுவலகத்திலும், வெளியிலும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. மல்லிகையைத் தருவதற்காக என் வீட்டுக்கும் அவர் சில தடவைகள் வந்திருக்கிறார். 1990ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்பெயரும்வரை இச் சந்திப்பு நீடித்தது. பின்னர் ஜீவாவும் அநேகரைப்போல் கொழும்புக்குப் புலம்பெயர்ந்தார். அதன்பின் அடிக்கடி இல்லாவிட்டாலும் இடைக்கிடை அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
மல்லிகையை வெளியிடத் தொடங்கிய பின்னர் ஜீவா தன் சுயதொழிலைக் கைவிட்டு அதனையே தன் முழுநேரத் தொழிலாகவும் இலக்கியப் பணியாகவும் வரித்துக்கொண்டார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தை, இலக்கியத்தை மட்டும் நம்பி வாழ்பவர் இலங்கையில் நான் அறிந்தவரை ஜீவா ஒருவர்தான். அவருடைய விடா முயற்சியும், தற்துணிபும், அர்ப்பணிப்பும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன, மல்லிகையை ஐம்பதாவது ஆண்டை நோக்கிக் கொண்டு செல்கின்றன. இதை ஒரு தனிமனித சாதனையாக நாம் கொண்டாடலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகால ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகையின் பங்கு என்ன என்ற கேள்வி நம்முன் உள்ளது. 1970க்குப் பின்னர் மல்லிகையில் எழுதி முன்னணிக்குவந்த ஒரு எழுத்தாளர் பரம்பரை இதற்குப் பதில் சொல்லும் என்று நம்புகின்றேன். திக்வல்லை கமால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஓர் இலக்கிய ஆளுமை. இவருடைய கணிசமான படைப்புகள் மல்லிகையிலேயே பிரசுமாயின.
செங்கையாழியான் தொகுத்த மல்லிகைச் சிறுகதைகள் இரு தொகுதிகளும் மல்லிகையின் இலக்கியப் பங்களிப்பின் அறுவடைகள்தான். தான் வளர்த்த அல்லது தன்னைக் களமாகக் கொண்டு வளர்ந்த இலக்கியப் பரம்பரை பற்றி மல்லிகை பெருமைப்படுவதில் நியாயம் உண்டு.
முக்கியமான சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதிலும் மற்ற இதழ்களைவிட மல்லிகைக்கு முக்கியமான பங்கு உண்டு. மல்லிகை வெளியிட்ட சிங்களச் சிறுகதைகள் தொகுப்பு இதற்கு ஒரு உதாரணம்.
ஈழத்து இலக்கியம், இலக்கிய விமர்சனம் தொடர்பான திறந்த விவாதங்களுக்கு மல்லிகை எந்த அளவு களமாக அமைந்தது என்ற கேள்வியையும் நாம் கேட்டுப்பார்க்கலாம். இது தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டு. எனினும் மல்லிகையில் இடம்பெற்ற விமர்சனங்கள், விவாதங்கள் பல முக்கியமானவை. மார்க்சியம், தேசியம், இலக்கியவடிவங்கள் என்பன தொடர்பான முக்கியமான விமர்சனக் கட்டுரைகள், விவாதங்கள் மல்லிகையில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதி, சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரட்னா உட்பட ஈழத்தின் முக்கியமான விமர்சகர்கள் மல்லிகையில் எழுதியுள்ளனர். மல்லிகையில் வெளிவந்த முக்கியமான விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கப்படின் இத்துறையில் மல்லிகையின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும்.
ஒரு சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் 1950, 60 காலகட்டத்துச் சிறுகதை எழுத்தாளராகவே நாம் ஜீவாவை நோக்கவேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை இக்காலகட்டம் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். இலங்கையில் இடதுசாரி, மார்க்சிய அரசியல் சிந்தனையும் முற்போக்கு இலக்கிய இயக்கமும் முன்னணிக்கு வந்த காலகட்டம் இது. சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வும் சமூக எழுச்சியும் இலக்கியத்தில் வெளிப்பாடு பெற்று, சாதாரண மக்களின் பேச்சுமொழி இக்கிய மொழியாக மாற்றமடைந்த காலகட்டமும் இதுவே. வர்க்க, சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை என்ற குரல் இலக்கியத்தில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டம் இது. தாழ்த்தப்பட்ட அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கால கட்டத்தில்தான் எழுத்தாளர்களாக முன்னணிக்கு வந்தார்கள். டொமினிக் ஜீவா, டானியல், என். கே. ரகுநாதன், எஸ். பொன்னுத்துரை போற்றவர்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். சே. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், இளங்கீரன் முதலியோர் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தோர் அல்ல எனினும் புதிய இலக்கியக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்டு முற்போக்கு இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகினர். கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா ஆகியோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கருத்துநிலைக் காவலர்களாக முன்னணிக்கு வந்தனர்.
ஜீவாவின் கதைகள் இக்காலகட்டத்து முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்கு உதாரணங்களாக அமைவன. ஜீவாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது அடிநிலை மக்களே. அவர்களது பிரச்சினைகள், துன்பங்கள், ஆசை அபிலாசைகள், அவர்களுக்குள் புதைந்திருக்கும் மனிதத் தன்மை என்பன அவரது கதைப் பொருளாக அமைகின்றன. சாதி ஒடுக்குமுறை என்னும் யாழ்ப்பாணச் சமூக யதார்த்தத்தை, அங்கு நிலவிய வர்க்க முரண்பாட்டை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லும் கதைகள் அவற்றுட் பல. இக்காலத்தில் எழுதிய டானியல், என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கள் முதலியோரின் கதைகளிலும் நாம் இப் பொதுப் பண்பைக் காணலாம். 1950, 60களில் இத்தகைய கதைகள் ஈழத்து இலக்கிய உலகில் புதியவை. அரசியல் உணர்வை முனைப்பாகக் கொண்டவை. அதனாலேயே இவை கலை அல்ல பிரச்சாரம் என ஒரு சாராரால் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவே மக்கள் இலக்கியத்தின் அழகியல் என முற்போக்கு விமர்சகர்களும் எழுத்தாளர்களும் வாதிட்டனர். அக்கால கட்டத்தில் இத்தகைய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய வாலாற்றுத் தேவை தங்களுக்கு இருந்ததாக ஏ. ஜே. கனகரட்னா இதுபற்றிப் பேசும்போது ஒருமுறை என்னிடம் கூறினார். இப்போது பின்னோக்கிப் பார;க்கும்போது ஏ. ஜே. அப்படிச் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகின்றது. எக்காலத்துக்கும் பொதுவான, நிலையான கலைமுறை, அழகியல் என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறுவன, வேறுபடுவன. இந்த வேறுபாடுகளே இலக்கியத்துக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றன. 1950, 60 களில் 70களிலும்கூட முற்போக்கு இலக்கியம் முன்வைத்த அழகியல் தனித்துவமானது, வேறுபட்டது என்ற புரிதல் முற்போக்கு இலக்கியத்தின் அழகில் பிரச்சினைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம். இச்சர்ச்சைகள் எவ்வாறு இருந்தாலும் ஐம்பது அறுபதுகளில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஜீவாவும் ஒரு முக்கிய ஆளுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. மல்லிகைப் பந்தல் மூலமாக ஒரு நூல் வெளியீட்டாளர் என்ற வகையிலும் ஜீவாவின் இலக்கியப் பணி முக்கியமானது.
ஜீவாவின் சுயசரிதை நூல்களை - எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத் தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம் - படிக்கும் போது அவரது சமூகச் சூழல், குடும்ப வாழ்வின் நெருக்கடி ஆகியவற்றுக்குள் அமிழ்ந்து போகாது ஈழத்து இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் எழுச்சியடைந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே தோன்றுகின்றது. அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே இதனைச் சாத்தியமாக்கியது என்று கூறலாம். சவரக் கடையே தன் சர்வகலாசாலை என்றும், நான் சிரைக்கப் பிறந்தவனல்ல சாதிக்கப் பிறந்தவன் என்றும், மண்புழுவாக இருந்து மனிதனானவன் என்றும் ஜீவா தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். தன்னையும் தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பற்றி அடிக்கடி குரல் உயர்த்திப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். சிலவேளை இது ஒரு நெருடலாகவும் மிகையான சுய மதிப்பீடாகவும் எனக்குத் தோன்றியதுண்டு. ஆயினும், ஜீவா என்ற மனிதனின், எழுத்தாளனின், பத்திரிகையாளனின் பயணத்தில் தாண்ட வேண்டியிருந்த தடைகளையும், சகிக்க வேண்டியிருந்த அவமானங்களையும், சந்திக்க வேண்டியிருந்த இன்னல்களையும் அறியும்போது ஜீவாவின் உளவியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீவா சொல்வதுபோல் இறுக்கமான யாழ்ப்பாணச் சாதி அடுக்கை உடைத்துக்கொண்டு ஒரு மண்புழு மனிதனான கதைதான் ஜீவாவின் கதை. அவருடைய சிறுகதைகள் எல்லாவற்றையும் விடச் சிறந்த கதை அது. ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை அதனாலேயே நானும் கொண்டாட நினைத்தேன். ஜீவா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மல்லிகையையும் மல்லிகைப் பந்தலையும் இன்னும் மணம் கமழச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
…………. …………….
இதை எழுதி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்
கனத்த மனதுடன் இன்று வழியனுப்புகிறோம்.
நிறை வாழ்வு வாழ்ந்தீர், நிலைக்கும் உம் பணிகள்
Sunday, October 18, 2020
இன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதியில்J/363 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள இராஜகிராம முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியகருவிகள் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இராசையா சாள்ஸ் அவர்களால் முன்பள்ளி ஆசிரிகைகள் திருமதி நவசீலன் கிருஜா, திருமதி சிவர்தன் விஜிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவ்வேளை கிராம அலுவலர்- சிறந்த பண்பாளர் கணேஷ் ரதீசன் அவர்களும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படும் செல்வி அருமைத்துரை சாளினி அவர்களும் கலந்து சிறப்புச் செய்தார்கள்.அனுசரணை தவம் அறக்கட்டளை.
Sunday, August 30, 2020
நாமும் எங்களால் ஆனது செய்வோம்...
இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.Tuesday, August 11, 2020
'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.
-கரவைதாசன்-
கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Sunday, July 05, 2020
கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.
இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....
22.6.20
Sunday, June 14, 2020
யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்படுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ?
-கரவைதாசன்-