Tuesday, June 09, 2026

பிரக்ஞை

 -கரவைதாசன்-

   நான், அம்மா, அக்கா, தங்கை, ஐயா எல்லாருமாக  வீட்டுக்குள்ள இருக்கிறம் . மூலையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருக்கின்றது. விளக்கு சின்னதுதான் ஆனால் அறையிலிருந்த இருட்டு முழுவதையும் விரட்டியடித்து விட்டிருந்தது. ஒரு கடகம் இல்லை! ஒரு மூடல் அதுவும் இல்லை! அப்படின்றால் அதனை எப்படி அழைப்பது? ஓ! ஒரு குஞ்சுப்பெட்டி இது தான் சரி. அது நிறைய இடியப்பம் இருக்கிறது. உடனே அம்மியில் அரைச்சு எடுத்து வந்த சம்பல் ஒரு கிண்ணத்திலும் சட்டி நிறைய  தக்காளியும் சிறு நெத்தலியும் போட்டு வைச்ச சொதியும் இருக்கிறது. இந்த நேரத்தில எங்கால நெத்தலி என்று கேட்கக் கூடாது. எங்கட ஊர்ப்பக்கம் பின்னேரம் கூடுகிற கோயில்ச் சந்தையிலிருந்து அது அம்மம்மா கொண்டு வந்தது. எல்லாருமாக சாப்பிடத் தொடங்கும்போது நான் மட்டும் குழப்படி செய்யிறன். 

  "எனக்கு இடியப்பம் வேண்டாம். எனக்கு ஐயா வாங்கி வந்த பணிஸ்தான் வேணும்." இதில் நான் பிடிவாதமாக நிற்கிறன். அம்மா எனக்கெதிராக ஏப்பையை தூக்குகிறா. திண்ணையில் இருந்து நிலைமைகளை  அவதானித்த அம்மம்மா   "நான் யாவாரத்துக்கு எடுத்துச்செல்ல அரிஞ்சு வைச்ச வாழைப்பழ சீப்புகளில் நாலு கரஞ்ச பழத்தை இப்ப சாப்பாட்டுக்கு எடுங்கோவன்" என்று கூறுகிறா.

    ஐயா  சொல்லுகிறார் "அதிலை பிள்ளை இரண்டு பழத்தைப் பிடுங்கி பணிசோட அவனுக்கு குடுங்கோவன்" ஐயா அம்மாவை எப்பவும் பிள்ளை என்றுதான் அழைப்பார். எனக்கு பணிசும் பழமும் அவைக்கு சம்பலும் சொதியும் இடியப்பமும். எனக்கு நிறைய சந்தோசம். நான் வீட்டில் எல்லாருக்கும் செல்லம், யாரென்றில்லை  ஒருவர் கோவித்தாலும்  வேறு யாராவது ஒருவரிடமிருந்து எனக்கு அரவணைப்பு கிடைக்கும்.  

   எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். "மாமி கொஞ்சம் காலைவில த்தணை"  தாழ்வாரத்துக்கு குனிந்தவாறு சொல்லிக்கொண்டு பெரியப்பா திண்ணைக்கு வருகிறார்...  பெரியப்பாவென்றால் அம்மாவின்ர சொந்த மச்சான். அவருக்கு நான் பெறாமகன். 

    "யார் வாத்தியாரே? வாங்கோ! வாங்கோ!" ஐயா சாப்பாட்டுக்குள்ளால கையை  எடுத்துக்கொண்டு செம்பையும் தண்ணியையும் தூக்குகிறார். "அவசரமில்லை,  நாங்கள் முற்றத்தில இருக்கிறம் . நீங்கள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வாங்கோ" என்று கூறிக்கொண்டு பெரியப்பா முற்றத்துக்கு திரும்புகிறார். 

    முற்றத்தில் இந்தியாவிலிருந்து வந்த நடிகர் கோபாலகிருஷ்ணர், அவர் கையில் ஒரு பருவ வயதை எட்டிய   பராயப் பெண் பிள்ளையுடன் நிற்கிறார். படங்களில் பார்த்த அதே முகம் , நல்ல நரைத்த வெள்ளைத்தலை, வெள்ளை அரக்கை சேர்ட் + வெள்ளை நாலுமுழம். அந்தப் பெண்கூட வடிவானவளாக இருக்கிறாள். அவளுக்கு இது புது இடம் தானே அவளது வண்டுக் கண்களால் உருட்டி உருட்டி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் எனக்கோ அவள் என்னை மட்டும் துரத்தித்  துரத்தி தேடுவது போல் மனதிற்குள் மத்தளம். 

    ஐயா  முற்றத்திற்கு வந்ததும் ஐயாவும் பெரியப்பாவும் கதைத்துக் கொள்ளு .கினம் சித்தப்பாவும் தங்கட வீட்டுத் தாழ்வாரத்துக்குள்ளால குனிந்து முற்றத்துக்கு வருகின்றார்.

    எங்களின்ர வளவுக்கு பெரிய முற்றம் அடுப்புக்கு  மூன்றுகால்    வைச்சது மாதிரி எங்கடவீடும் சித்தியின்ரவீடும் மாமாவின்ரவீடும். இந்த மூன்று வீடுகளையும் பிறவெட்டுத்தடிகளால் வளைச்சுப் போட்ட வேலி இருக்கு, ஆனால் படலை இல்லை. முற்றம் நிறைய வெள்ளை மணல். அன்று பௌர்ணமி, அதனால் முற்றம் முழுவதும் பால்போல் இருந்தது. வேலிகளுக்கேயிருந்த நந்தியாவெட்டையும் பட்டிப்பூவும் காற்றடிக்கும் போதெல்லாம்  சிரித்துக் கொள்கின்றன. மாலுக்குள்ள இலட்சுமி படுத்துக்கொண்டு பகல் மேந்த  புல்லின் சுவைதனை மீ ட்டு இரைகண்டது. 

    இப்ப எங்கள் முற்றம் நிறைய சனம். அந்தோனிமாமா, காதர்காக்கா, பியதாச ஐயே  இன்னும் நிறைய ஐயாவின் கட்சியாக்கள். பெரியப்பா கொண்டு வந்த அரிக்கன் லாம்பு இரண்டையும் அம்மாவிடம் நீட்டியவாறு "சிமிளினை மினுக்குங்கோ" என்று சொல்லுகிறார். ஆனால் ராணிச்சித்திதான் லாம்புகளை வாங்கிக்கொண்டு எரிச்ச உமி போட்டு மினுக்கிறாள். 

    அரிக்கன் லாம்பு இரண்டும் இப்போ முற்றத்துக்கு வந்தாச்சு எல்லாரது முகங்களும் இப்போ வடிவாகத் தெரிகிறது. வகுப்பு ஆரம்பமாகியாச்சு முதலில் பெரியப்பா, பிறகு ஐயா இப்போ கோபாலகிருஸ்ணர் பேசிக் கொண்ட்டிருகின்றார். நாட்டில் எல்லாரும் கட்சிக்காக கூட்டம் கூடுவார்கள். ஆனால் இவர்கள் வகுப்பு எடுக்கிறம் அல்லது வகுப்பு நடத்துறம் என்று தான் சொல்லுவார்கள். அவர் பேசுவது என் காதில் தெளிவாக விழுகிறது . ஆனால் அது பற்றி நான் யாருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையாம் . ஐயாவும் மாமாவும் கண்டிப்பான தொனியில் சொல்லிக்கொள்வார்கள்.   "நீயென்ன இப்போதும் குழந்தைதானே  இனி  வாலிபனாகி கமிட்டிக் காட்டெடுக்க இன்னும் காலங்கள் இருக்கு"  என்பார்கள்.    

      கோபாலகிருஸ்ணர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். "பேரினவாத அரசு அப்பாவி மக்கெளுக்கெதிராக அராஜகத்தினை" எல்லாரும் அவதானமாகக்  கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் வலு தெளிவாக என் காதில் விழுகின்றன. நவ குடியேற்ற வாதம் ,  இலுமினாட்டிகள், உலகமயமாதல், பேரினவாதம், குறுந்தமிழ் தேசியம், அராஜகம், கொடூரம், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, பங்கெடுப்பு சொற்கள் தொடர்கிறது  நான் அவற்றை அசை போட்டுக் கொண்டு உச்சரித்துப் பார்க்கிறேன். எனக்கு பக்குவம் வர, வாலிபக் கமிட்டிக் காட்டு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் தான்  இருக்கின்றன. நானும் ஐயா வைப்போல, மாமாவைப்போல, பெரியப்பாவைபோல, கோபாலகிருஸ்ணரைப் போல  பேச வேண்டும் ........ 

       (காகம் இதழ்:4  ஏப்ரல் 1995 )

 


Monday, February 09, 2026

"எம். சி.ஒரு சமுகவிடுதளைப் போராளி" நூல் ஆசிரியர் எம்.சி.சந்திர போஸ் காலமானார்...

 எம்.சி யின் மகன் சந்திர


-கரவைதாசன்-

அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது - ஆனால்
அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது, தாக்க ஆரம்பித்தால் அது தோற்காது .
-எம். சி. சுப்பிரமணியம்-


ஈழ தேசத்தின் மகாப் பெரிய அறவழிப் போராளி, பொதுமைச் சிந்தனையாளர், விம்புநிலை சமூகத்தின் கல்வியின் தந்தை, கறுப்பாகக் கிடந்த சமத்துவ மற்ற மூடத்தனங்களையே மூலதனமாக வைத்திருந்த தமிழர்களில் சாதாரணமானவர் தொடக்கம் சனாதனர்கள் வரை எடுத்துரைத்து கல்வியாளர் தசநாயக்க என்ற மகான் கல்வி மந்திரியாகவிருந்த கால கட்டத்தினிலே பருத்தித்துறைதொகுதி கம்யுனிஸ் கட்சி எம்பியாகவிருந்த தோழர் பொன் கந்தையாவையும் இணைத்துக்கொண்டு தமிழர்களே தமிழர்களின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது சுமார் இருபத்தைந்து அ.த.க பாடசாலைகளை நிறுவியவர்தான் எம்.சி. என அழைக்கப்படுகின்ற எம்சி சுப்பிரமணியம்.
1956 ம் காலப் பகுதியிநிலேயே ஆலயப் பிரவேசம் தேநீர்கடைப் பிரவேசம் மயானங்களில் சமத்துவத்துக்கான போராட்டம் எனத் தேதியிட்டு வரிசைப் படுத்திக் கொண்டே செல்ல நீண்ட பெரும் பக்க வரலாறு ஈழத் தமிழருக்கு உண்டு. இக் காலத் தேதிகளை தெரிந்து வைத்திருந்த காலக் கண்ணாடி சந்திர போஸ் அண்ணா அவர்களின் இறுதிப் பயண குறிப்பினை எழுதக் கிடைத்த இயற்கையினை வைகிறேன்.
எனில் ,
சந்திர போஸ் அண்ணா இன்னும் எழுதுவதுக்கு அவரது அப்பாவின் வரலாறு குறித்தும் அவரோடு ஒத்த தோழர்கள் குறித்தும் எழுவதுக்கான ஏதுக்கள் அவரிடம் நிறையவே இருந்தன, டென்மார்க்கில் என்னால் கொண்டுவரப்பட்ட “இனி “ சஞசிகையில் கே.டானியல் பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதிருப்பார் அதில் படைப்பாளிக்கு ஒரு சமூகப் பொறுப்புண்டு என்பதையும் படைப்புகளுக்கு ஒரு இலக்கும் பயன்பாடும் சமூகக்கட்டமைப்பும் உள்ளது எனக் குறித்துள்ளார். இத்தகைய ஆக்கச்செறிவும் அறம் சார்ந்து பார்க்கின்ற பக்கச் செறிவும் அவரிடமிருந்தது.
சந்திர போஸ் அண்ணா அவர்களின் அப்பா எம்.சி அவர்கள் காலமாகிய காலம். மிகவும் சிக்கலுக்குரிய ஒரு நேரமாகவிருந்தது. வலதுசாரிய சிந்தனையில் வெளிக்கிளம்பிய இளைஞர்கள் கையில் ஆயுத பெலம் இருந்தது. பேச்சுக்கு சோசலிசம் சமத்தும் பற்றிய பேச்சுக்கள் அவர்களது அரசியல் கடைகளிலே ஏலமிடப்பட்டபோதும் அவர்களிடம் காணப்பட்டதெல்லாம் சுத்த பாசிசப் போக்கே . இடது சாரிகள் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களது பாசிசப் பார்வையில் இடது சாரிகளின் சமூகப் பங்களிப்பு பற்றி பேசுவதும் குற்றமாகப் பார்க்கப் பட்டு வேட்டையாடப்பட்ட காலம்
எனவே சுமார் பத்து வருடங்கள் காத்திருந்து கதைகளின் உரையாடல்களிடையே ஒருவகை சமரச போக்கினை கையாண்டே எம் சி . ஒரு சமூகவிடுதலை போராளி எனும் ஒரு சிறு நூலினை 1999 ஆம் ஆண்டுசந்திர போஸ் அண்ணா வெளிக்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியே அதே பெயரில் பின்பு வந்த தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் அர்பணிப்பு மிக்க எழுத்தும் வாழ்வும் அவரிடமிருந்தபோதும் கன்னை கட்டி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டமற்ற போக்க்கினைத் தான் அவரிடம் காணலாம் .
அவ்வாறே தனது இறுதி நிகழ்வும் தனது பூதவுட லை டொராண்டோ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கியுள்ளார் . அந்த வரலாற்று மிக்க நிகழ்வின் ஒளித்தொகுப்பே இணைக்கப்பட்டது. டொராண்டோ பல்கலைக்கழகத்தினர் உத்தியோக பூர்வமாக அவரது உடலினை பெற்றுச் செல்கிறார்கள். ஆனாலும் அவரது குடும்பத்தினர் அவருக்குகான இரங்கல் உரைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்
அன்பு மறவா
சத்தியதாஸ்

Tuesday, October 21, 2025

சாதனையாளர் இனோ சூரன்


காங்கசந்துறையிலிருந்து, அவரது உலகப் பயணத்தின் இலங்கைப் பயணம் தொடர்ந்து அவரின் தாயாரின்  ஜென்ம பூமியான நல்லூர்   யாழ்ப்பாணத்தை நோக்கி அவரது பயணம் விரிவடைகிறது.

இந்த குறிப்பிடத்தக்க பணி அவரது தைரியம், உறுதிப்பாடு மற்றும் வலுவான அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது அவரது **பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எங்கும் வாழும் **தமிழ் மக்களுக்கும், அவரது **பூர்வீக தாயகமான இலங்கைத் தீவுக்கும் ஒரு பெருமையாகும்.

சைக்கிளில் உலகம் சுற்றும் வாலிபர் எங்கள் மண்ணின் மைந்தனே வருக! 
  பிரான்ஸ் நாட்டின் பிரசையான இவரின்    தாய் ராதா யாழ்பாணம், தந்தையார் ராஜா நெல்லியடி கரவெட்டி. பேற்றோரின் பூர்வ ஜென்ம நிலங்களை தரிசித்து தனது பயணத்திணை முடித்துக்கொள்ள இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.



Tuesday, September 30, 2025

எங்கள் தோழர் யோகா மாஸ்டர்




-கரவைதாசன்-

எங்கள் தோழர் பற்றிய குறிப்பு:-

மக்கள் எனும் கடலில் கம்யூஸ்ட்டுக்கள் மீனாக நீந்தவேண்டும். தொடர்ச்சியில் யோகாமாஸ்ரர்....

யார் இவர் அவரோ? அவரே தான் தோழர் "சைவம்", என நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தில் சீனசார்புகம்யூனிசத் தோழர்கள் கா. சிவபாதம், கே.எஸ். இரத்தினம், ஆ.சிவகுரு, வெ.பரமகுரு, கரவை அமுதா ஆ.சுந்தரம்,ஆ.தங்கராசா எனக் குறிப்பிட வல்லாளர்களால் விளிக்க கேள்விப்பட்ட அவர்தான் இந்த ஆளுமை தோழர் ஏ.ஜி. யோகராஜா அவர்கள். பின்னாளில் புகலிடத்தில் இவர் மனிதம்குழு யோகராஜா மாஸ்டர் என எனக்கு அறிமுகமானார்.

மாற்று அரசியல் சிந்தனை, புதியன புனையும் இதழியல், நாடகம், இலக்கியம், புதிய பண்பாட்டிற்கான செயற்பாடு அந்தோனியோ கிராம்சியில் தொடங்கி அமைப்பியல்,பின்நவீனத்துவம் என தெரிதா வரையிலான பரவலான வாசிப்பு வாசித்தவற்றை உரையாடலுக்கு உட்படுத்தும் உயர்ந்த இயக்கம் இத்தனையும் சிறக்க தன்னகத்தினிலே கொண்ட சிறந்த ஆளுமை யோகாமாஸ்ரர்.

யோகா மாஸ்ரரின் இவ்வாளுமைச் செழுமை அறுபதுகளில் வட அல்வாயில் எஸ். எவ். போஜியா மாஸ்ரர் அவர்களின் முடிதிருத்தும் கடை ஒரு கம்யூனிச கட்சிக் காரியாலயம் போலவும் பல்துறை வசிகசாலைபோலவும் இயங்கிய காலத்தினிலேயே தொடங்கிற்று பின் எழுபதுகளில் அல்வாயைச் சேர்ந்த சீன சார்பு கம்யூனிஸ்ட் தோழர் செல்லையா அவர்களின் தோழமையில் ஊக்கம் பெற்று பரிமானம் கண்டது.

அந்நாட்களில் சிவபாதம், எட்வேட், சிவரத்தினம், காத்தலிங்கம், ஜெயபாலு அருட்செல்வம் ஆகியோருடன் சேர்த்து அயல் கிராமத்துத் தோழர்களான எழுத்தாளர் நந்தினி சேவையர், வயல் நவம், ஜெயநிதி, ரஞ்சிதராசா ஆகியோருடன் இணைத்து கம்யூனிஸ வாலிபசங்கத்தில் இவருக்கும் அங்கத்துவம் கிடைத்தது.

அதன் இணைப்பில் வட அல்வை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை பொதுமைப்படுத்தும் முயற்சியில் தோழர்களுடன் சேர்ந்து பெரும் பங்காற்றினார். அதில் வெற்றியும் கண்டார்கள், தொடர்ச்சியில் குருத்து இலக்கிய வட்டம், அல்வாய் யுவசக்தி விளையாட்டுக் கழகம் என பரந்து செயற்பட்ட தோழர்

மத்தொனி இரத்தினம், நெல்லியடி சிவராசா, நெல்லியடி சிவம் தோழர்களுடன் கன்பொல்லை கிராமத்து சாந்தி இல்லம் கே.எஸ். இரத்தினம் வீட்டுக்கு தங்களது கட்சி நடவடிக்கைகளுக்காக அடிக்கடி வந்து போவதை எனது கடுக் கண்ட வயதினில் நான் கண்டு வந்திருக்கின்றேன்.

கம்யூஸ்ட்டுக்கள் மக்கள் எனும் கடலில் மீனாக நீந்தவேண்டும். அதன் தொடர்ச்சியில் இயங்கி வரும் யோகாமாஸ்ரர் மாற்று சிந்தனைப் போக்கில் மனிதம் குழுவில் ஒரு முக்கியமான செயற்பாட்டாளராக செயற்பட்டதும் புலம்பெயர் நாடக எழுத்துருக்கள், எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! போன்ற சிந்தனைக்குரிய நூற்களை எழுதியிருப்பதுவும் எமக்குக் கிடைத்த கிடைப்பனவே. எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! எனும் சமூக சமத்துவம் அடுத்தகட்ட நகர்வு குறித்த முன் வரைபில் கையாளப்பட்டுள்ள மொழி அவரது பின் நவீனத்துவ வாசிப்பின் போக்கினை சாற்றி நிற்கின்றது தொடர்ந்து புதியன கற்றுக் கொண்டு உங்கள் அனுபவங்களையும் சேர்த்து பொருண்மைப் பார்வையில் இன்னும் நூல்கள் யோகாமாஸ்ரர் எழுத வேண்டும்.

நீடு வாழ்க தோழர் .... 

Tuesday, September 16, 2025

Thursday, March 06, 2025

சுகத் வசந்த டி சில்வா (மாற்றுத்திறனாளி) நாடாளுமன்றத்தில் முதல் உரை -


-சுகத் வசந்த டி சில்வா-


இலங்கையின் முதல் பார்வைக் குறைபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் நாடாளுமன்றத்தில் முதல் உரை -

"இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கதை. இது பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறுகிறது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் 76 ஆண்டுகளுக்குப் பிறகு, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நாடாளுமன்ற இடங்கள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நாடாளுமன்ற இடங்கள் தற்செயலாகவோ அல்லது  வானத்திலிருந்து விழுந்த ஒன்றாகவோ வழங்கப்படுவதில்லை. இந்த வரலாற்று தருணத்தை அடைய கடுமையாக உழைத்த ஒரு குழு உள்ளது. ஒரு அரசியல் தலைமை உள்ளது. எனது சமூகத்தின் சார்பாக, கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மாற்றுத்திறனாளி சமூகத்தின் சார்பாக நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்த இந்த உச்ச சபைக்கு நேரடி பிரதிநிதித்துவம் தேவை என்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே புரிந்துகொண்டது. அவர்கள் அந்த உணர்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டனர்?

இது கடந்த கால அரசியல் பிரச்சார இயந்திரத்தின் ஒரு பகுதியாக, தேசியப் பட்டியலுக்கான புள்ளிகளைப் பெறுவதற்கான ஒரு வழியாக, ஒரு அரசியல் தந்திரமாக முன்வைக்கப்பட்டது.  இந்த நாடாளுமன்றத்தில் நான் இருப்பதைப் பார்த்தாலே இது ஒரு அலங்காரம் அல்ல என்பது புரியும்.

என்ன செய்ய முடியும்?

மறுபுறம், மாற்றுத்திறனாளி ஒருவர் இங்கு என்ன செய்ய முடியும் என்று பலர் கேட்டார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எனது சக எம்.பி.க்களிடம் இதை நான் நிரூபித்துக் காட்டுவேன் என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பணிக்கு பங்களித்த தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கும், 1.7 மில்லியன் மாற்றுத்திறனாளி சமூகத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அது மட்டுமல்லாமல், இந்தப் பணியை நான் எளிதாகச் செய்ததற்காகத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் முன்பே சொன்னது போல், இலங்கையில் உங்களுடன் சுவாசிக்கும் ஒன்றரை மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட, நான் ஒரு மாற்றுத்திறனாளியாக வாழ்கிறேன், நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளி அல்லாதவராக வாழ்கிறீர்கள். நாங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். வாதிடுகிறோம்.

மாற்றுத்திறனாளி என்பவர் யார்?

இந்த மாற்றுத்திறனாளி யார்? மாற்றுத்திறனாளிகள் இந்த உலகத்திற்கு அழகைக் கொண்டு வரும் தூதர்கள் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். நீங்கள் காணும் அழகான படைப்பு பன்முகத்தன்மையில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். பன்முகத்தன்மை என்பது அழகு உருவாக்கப்படும் இடமாகும். பார்வையுடைய மாண்புமிகு சபாநாயகர் தலைமையிலான இந்த உறுப்பினர்களில், பார்வையற்ற நானும் ஒருவன். இது பன்முகத்தன்மையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், ஏன் என் உரையை சைகை மொழியில் மொழிபெயர்க்கிறீர்கள்?

எனக்குக் கேட்கத் தெரிந்தாலும், என்னைப் போல நன்றாகக் கேட்காத லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இது அவர்களின் தொடர்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்தச் செய்தியை தெரிவிப்பதற்கும் செய்யப்படுகிறது. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைகளைக் கொண்ட மக்களால்தான் மனித சமூகத்தின் பன்முகத்தன்மையும் அழகும் உருவாக்கப்படும். நான் அதற்கு பங்களிக்கும் ஒருவர். இந்த நாட்டில் வாழும் 1.7 மில்லியன் மாற்றுத்திறனாளிகள், நான் உட்பட, இந்த சமூகத்திற்கு அழகைக் கொண்டு வருபவர்கள்.

நமது பாரம்பரியம் என்ன?

 கேள்வி என்னவென்றால், இந்த அழகான குறைபாடுகள் கொண்ட அணி எந்த மாதிரியான சூழ்நிலையைப் பெற்றுள்ளது? இந்த நாடாளுமன்றம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டபோது, ​​ஒரு சிறு குழந்தையாக, நான் அந்த நிகழ்வை வானொலியில் கேட்டேன். பாராளுமன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம ஆற்றிய உரையின் சில பகுதிகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக, எனது இயலாமையைக் குறைத்து மதிப்பிடும் வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். மற்ற குறைபாடுகளை குறைத்து மதிப்பிடும் வார்த்தைகள். இந்த நாடாளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் என்று நான் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். அந்த வார்த்தைகளால் கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேதனைப்படுகிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்ய வேண்டும்.

இந்த இயலாமை என்பது நாம் வலுக்கட்டாயமாகவோ, விருப்பத்தினாலோ அல்லது வற்புறுத்தலால் மரபுரிமையாகப் பெற்ற ஒன்றல்ல. ஆனால் நாம் இந்த இயலாமையுடன் வாழ்க்கையை விட்டுக்கொடுக்காதவர்கள், மாறாக வாழ்க்கையை நேசிப்பதன் மூலம் இடைவிடாமல் போராடுபவர்கள். இந்த மக்களின் வாழ்க்கை நிலை என்ன?

சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின் தலைவிதி

நம்புவீர்களா? 1988 ஆம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீத வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன? மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, 71 சதவீத மாற்றுத்திறனாளிகள் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கமாக, நாங்கள் நிச்சயமாக இதற்கான பதில்களைத் தேடுகிறோம்.

இந்த நிலையை மரபுரிமையாகக் கொண்ட கடந்த கால அரசாங்கங்கள், இந்த சமூகத்தை இந்தத் துயர வாழ்க்கையிலிருந்து விடுவிக்க எதுவும் செய்யவில்லை. நான் ஒரு உதாரணம் தருகிறேன். இலங்கையில் மாகாண சபை முறைமை நடைமுறையில் உள்ளது. மாகாண சபையிலிருந்து மாகாண சபைக்கு ஒரே ஒரு சட்டம் கூட பொருந்தாது. அது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. அமைச்சரவை முடிவின்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மாகாண சபை அதை செயல்படுத்தவில்லை. மேல் மாகாண சபை அதை செயல்படுத்தவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, பார்வைக் குறைபாடுள்ள மற்றொரு குழுவினர், அவர்களில் பெரும்பாலோர், பட்டம் பெற்ற பிறகும், தங்கள் தாய்மார்கள் கொடுத்த பாலின் கடனை அடைக்க முடியாமல், தங்கள் வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். எனக்கு தீர்வுகள் தேவை. பட்டம் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் இயலாமை சலுகைகளில் அரிதாகவே உயிர் பிழைக்கின்றனர்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

நாங்கள் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை 7,500 லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆனால் இந்த கொடுப்பனவு 100% சார்பு மனநிலையுடன் வழங்கப்படுவதில்லை. சமூக அதிகாரமளித்தல் மூலம் தொழிலாளர் சக்திக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தீர்க்கமாக பங்களிக்கக்கூடிய குடிமக்களாக அவர்களை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

முந்தைய அரசாங்கங்கள் நிறைவேற்றத் தவறிய தேசிய மற்றும் சர்வதேச பொறுப்பை நிறைவேற்றுங்கள். இலங்கை 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கையெழுத்திட்டது. இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு இணங்கக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றுவது இன்னும் சாத்தியமில்லை. இயற்றப்படும் சட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இணங்க வேண்டும். இது கொள்கைகளையும் 25 உரிமைகளையும் கொண்டுள்ளது. மறுபுறம், அந்த சாசனத்தின் பிரிவு 33, பொதுத்துறையாக நாம் எவ்வாறு ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை நம்மை கட்டாயப்படுத்துகிறது, நம்ப வைக்கிறது. அந்த நிறுவன முறை, மாற்றுத்திறனாளிகளின் தீவிர பங்கேற்பைக் கோருகிறது. அந்தத் தீவிர பங்கேற்பு இல்லாமல், இந்த மாற்றுத்திறனாளி சமூகம் உண்மையான பலன்களை அனுபவிக்க முடியாது. அதைத் தடுக்க, இந்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் மூலம் ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.

அத்தியாவசிய அணுகலை இழக்கும் மாற்றுத்திறனாளி சமூகங்கள்

நம்மிடம் உள்ள தற்போதைய சட்டம் 28 ஆண்டுகள் பழமையானது. இது 1996 இல் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா நமக்கு மூன்று உரிமைகளை வழங்கியது. கல்விக்கான அணுகல். வேலைவாய்ப்புக்கான அணுகல். தொழில் பயிற்சிக்கான அணுகல். நான் குறிப்பிட்ட வேலையில்லாத மற்றும் சார்ந்திருக்கும் 71 சதவீத மக்களிடமிருந்து வேலைவாய்ப்புக்கான அணுகல் எந்த அளவிற்குத் தெளிவாகிறது. நீங்கள் கல்வி கற்கும் வாய்ப்பை எவ்வாறு பெற்றீர்கள்? ஒருங்கிணைந்த வகுப்பறையில் கற்க எங்களிடம் வசதிகள் இல்லை. இது அனைத்து மாற்றுத்திறனாளி குழுக்களுக்கும் பொருந்தும்.

தொடர்பு வசதிகள் இல்லாததால் காது கேளாதோர் சமூகம் கல்வியை இழந்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான கருவிகள் இல்லாததால், பார்வைக் குறைபாடுள்ள சமூகம் கல்வியைத் தவறவிடுகிறது. வகுப்பறையை அணுக முடியாத பிற குறைபாடுகள் உள்ள சமூகங்கள் கல்வியை பாதியில் நிறுத்தி வருகின்றன. அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழுக்களுக்கு நிலைமை இன்னும் தீவிரமானது. இது போன்ற சூழலில், ஒரு மசோதாவில் கல்விக்கான அணுகலைக் கொண்டிருப்பது பயனற்றது. நீங்கள் தொழில் பயிற்சி பெற்றாலும் கூட, அது ஒன்றே. நமக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சி படிப்புகள் நவீனமயமாக்கப்படவில்லை. இத்தகைய நவீனமயமாக்கல் இல்லாமல், மாற்றுத்திறனாளிகள் நாட்டின் உற்பத்திக்கு தேவையான அளவிற்கு பங்களிக்க வாய்ப்பு இருக்காது.

பிரச்சனை என்னவென்றால், 26 ஆண்டுகள் பழமையான 1996 சட்டம், மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பை வழங்கவில்லை. ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால் நான் மரியாதையுடன் சொல்ல வேண்டும், டாக்டர் அஜித் சி. மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் பிரச்சினையை திரு. பெரேரா உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த முடிவு எடுக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் முந்தைய அரசாங்கங்கள் எதுவும் அந்த முடிவை களத்தில் யதார்த்தமாக்கவில்லை, மேலும் இந்த மாற்றுத்திறனாளி சமூகம் பொது வசதிகளை அனுபவிக்க தேவையான சூழலை உருவாக்கவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு மாற்றுத்திறனாளிகள் இருந்தாலும், பொது போக்குவரத்தில் அவர்களுக்கு அணுகக்கூடிய ஒரு பேருந்து அல்லது ரயில் பெட்டி கூட இல்லை. மாற்றுத்திறனாளிகள் கண்களைத் திறந்து தெருவைப் பார்க்கும்போது ஏன் தெரிவதில்லை என்பதற்கான பதில் அங்கேயே உள்ளது.

நாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிறுவனங்களுக்கான அணுகல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இப்போதே செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். அரசு நிறுவனங்களுக்கு அந்த ஆலோசனையை வழங்க. மாற்றுத்திறனாளிகள் மீது பௌதீக சூழலால் விதிக்கப்படும் தடைகளை நீக்குதல், அந்த வெற்றியை அவர்கள் பெற அனுமதித்தல், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதைத் தடுக்கும் விலை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வரிச் சலுகை வழங்குதல் ஆகியவற்றை நாங்கள் வலியுறுத்துகிறோம். மாற்றுத்திறனாளி சமூகம் கௌரவமான வாழ்க்கையை வாழத் தயாராக உள்ளது. அரசாங்கமாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம் என்றும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை எங்களுக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றும் கூறி நிறுத்துகிறேன்.

மிக்க நன்றி!


தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னணி, Medialk Talks யூடியூப் சேனலுடன் நடத்திய கலந்துரையாடல். <iframe width="1054" height="593" src="https://www.youtube.com/embed/XuEm8-Or4Y8" title="ඔවුහු ඡන්ද ලක්ෂ 17ක් විතරමද? | Tharindu Jayawardhana | Shalika Wimalasena | MediaLK Talks" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

Saturday, November 30, 2024

மலையக இலக்கியத்தில் லெச்சுமி

தினகரன் பத்திரிகைச் செய்தி .....
மலையக இலக்கியத்தில் லெச்சுமி தந்த வாய்மொழி இலக்கியம் பேராசிரியர் மு.நித்தியானந்தன் ஆவர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயற்கரிய செயற்பாட்டிற்கு தவம் அறக்கட்டளை அனுசரணை இன்றைய (24.11.2024) தினகரன் செய்தி.
-நன்றி: மரதன் கிருஷ்ணன் -