Tuesday, July 24, 2012

நகைச்சுவைச் சிங்கம் நினைவுகளை எழுதித்தான் கடக்க வேண்டும் ...

- கரவைதாசன் -

யாழ் புங்கங்குளம்வீதி பாண்டியந்தாழ்வை பிறப்பிடமாக கொண்டு  நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த "நகைச்சுவை சிங்கம்" தம்பிமுத்து தவரத்தினம் அவர்கள் பிரான்சில் 24.06.2012 இறப்பெய்தினார்.  சிறந்த நாடகநடிகர், நாடக கதாசிரியர் வசனகர்த்தா, நாடக இயக்குநர், சிலைவடிக்கும் சிற்பி, பயிற்றப்பட்ட கடச்சல் தொழில் நிபுணர், முகாமைத்துவப் பொறுப்பாளர்  எனப் பல்வேறு பரிமாணங்களையும் ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு உன்னத கலைஞன் அந்நிய தேசமொன்றில் யாருமறியாச் சக மனிதனாய் மரிணித்து போவது போலோரு கொடுமை, வேறெந்த மொழிச் சூழலிலுமில்லை. 
காட்டுவிளைச்சலாய் வியாபித்துப் போயிருக்கும் தமிழ்பேசும்  பெரும் ஊடகங்களுக்கு இச்செய்திகள் எட்டுவதில்லைதான். பல்வேறுபட்ட அரசியல் காரணிகளினால்  இவரைப்போன்ற பலரின் சுவடுகள் புகலிடச் சூழலில் அறியாப் பொருளாய் அற்ப மனிதர்களாய் மறைந்து போதல்  உண்மையில் கொடுமை!  வரலாற்றின் சில பக்கங்களைத்தன்னும் நம்மால் முயன்று  பதிதல் வேண்டும். இல்லையேல்   அஃது இவர்களது  சாவின் கொடுமையிலும்  கொடுமையாய் அமைந்துவிடும்.
ஈழத்தில் அளவெட்டியில் தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் தலை மகனாக   நண்பர் தவரத்தினம் அவர்கள் 05.10.1950ம்  ஆண்டு பிறந்தார். அவரது ஆரம்பக் கல்வியை பாசையூர் சென்யோசாப் கல்லூரியில் ஆரம்பித்த அவர், தொடர்ந்து கொழும்புத்துறை  இந்துமகா வித்தியாலயத்தில் தனது இடைநிலை கல்வியினை கற்றார். முத்திரைச் சந்தி புரோ மோட்டார் கொம்பனியில் தொழில்  கல்வியை கற்றுக் கொண்டு அங்கேயே முகாமைத்துவப்  பொறுப்பாளராக  கடமையாற்றினார். இடையே யாழ் அத்தியடியில் இயங்கி வந்த  ஸ்கைலாக் என்ஜினியரிங் கொம்பனியிலும் அதே தொழிலில் இருந்தார். யாழ் பாண்டியந்தாழ்வை சேர்ந்த லில்லி மலர் என்ற பெண்ணை காதல்மணம் புரிந்து இனிய காதலின் பேறாக சேர்ஜன், ஷர்மிலி, தமிழினி, மதீபன் என நான்கு பிள்ளைகளை பெற்றார்கள்.

சிறுவயதினிலேயே யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடக இயக்குநர் தலைவர் அருளானந்தம் அவர்களின் "இறுதிவார்த்தை" எனும் சமூகநாடகத்தில் நடித்து,  தனது கலைப் பயணத்தினை தொடர்ந்த இவர். முடிவில் ஓர் ஆரம்பம், பரந்தர் பத்தாயிரம், அன்பின் பெருமை,பரிவும் பிரிவும், சிட்டுக்குருவி,  நான் ஒரு பெக்கோ, மாலிக்கபூர், பிஞ்சகடகம் என பல்வேறுபட்ட நாடகங்களில்  சிறுவன், பெரியவன், அரசன், ஆண்டி ,கோமாளி என வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

Wednesday, July 18, 2012

மலேசியஇலக்கியம் பீர் முஹம்மது

லாயா நாட்டின் தொடக்ககால வரலாற்றை ஆராயும் எவரும் யாழ்பாணத் திலிருந்து குடிபெயர்ந்து போன தமிழர்கள், மலாயாவின் எல்லாப் பகுதிக்கும் பரந்து சென்று அங்கிருந்த நிர்வாகத்திற்கும், அடிமட்ட தொழிலளர்களுக்கும் இடையில் மேலாளராக பணியாற்றினார்கள், என்பதற்கப்பால் தேடுவதில்லை.  அவங்கள் என்ன பண்ணினாங்கள்? என்பதற்கு பல தகவல்கள்  இக் காணொளியில்............

Monday, July 16, 2012

விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா


ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகள்

Fauzer
-எம் .பௌசர்-
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரசாங்க கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அரசியல் தீர்மானம் முஸ்லீம்,தமிழ் அரசியல் வெளியில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.

முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்,சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காகவும் ஸ்தாபன மயமான இவ்வியக்கம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை வழிப்படுத்தும் வரை,முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்தின் இடத்தினை இலங்கை முஸ்லிம்களுக்குள் ஓரளவு பூர்த்தி செய்கின்ற அரசியல்பண்புகளுடனும் தனது அரசியல் போக்கினை முன்னெடுத்து வந்திருக்கிறது.


அஷ்ரப் அவர்களின் அகால மறைவின்பின் நீடித்த உட்கட்சி அரசியல் முரண்பாடுகளினால், காலத்திற்கு காலம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சிதறுண்டு பல்வேறு குட்டிகுட்டி தலைமைகளின் கீழும்,பிராந்தியத் தலைமைகளின் கீழும் பல அரசியல் கட்சிகளாக மாறின. பேரியல் அஷ்ரப் தலைமையில் தேசிய ஐக்கிய முன்னணி,அதாஉல்லா தலமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என கட்சிகளின் அடையாளங்களும் தலைவர்களின் பெயர்களும் அதிகரித்தன.என்னதான் கட்சி பல்வேறு அணிகளாகப் பிரிந்தாலும், முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் தலைமையாக முஸ்லிம் காங்கிரஸ் நீடித்ததற்கு அதனுடைய ஸ்தாபன பெறுமானமும்,அக்கட்சி உருவானதன் தேவையும் நோக்கமும் பின்புலமாக இருந்து வந்துள்ளன.

Wednesday, July 11, 2012

உலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்ப்புப் போராட்டங்கள்

-இதயச்சந்திரன்-
உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன.
பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை  நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள்.

அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது.
 தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம்.
மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்காக அரசோடு கைகோர்க்கும் பன்னாட்டு கம்பனிகளை இந்தியாவின் மத்திய பகுதியில் பார்க்கலாம்.திருமலைத் துறை முகத்தில் முதலீடு செய்யும் பல் தேசியக் கம்பனிகளின் நகர்வு, சம்பூர் மண்ணை ஆக்கிரமிக்கிறது என்கிற செய்தியை கடந்த வாரம் கண்டோம்.


முதலீட்டு ஆதிக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் நிலங்களையும் கபளீகரம் செய்கிறது.
மனித உரிமை மீறல் குறித்துப் பேசும் வல்லரசாளர்கள், நில ஆக்கிரமிப்புக் குறித்து வாய் திறப்பதில்லை.

வல்வை கடலோடிகள் நூல் வெளியீட்டு விழா

இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார்..
இங்கிலாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானிய ஆதரவில் வல்வை கடலோடிகள் என்ற வரலாற்று ஆவண நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார். ஈழத்து பூராடனார் வல்வையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தன்னால் திரட்ட முடிந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்தியுள்ளார். இவரோடு மேலும் பலர் துணை நின்றுள்ளனர்.
கனடாவில் வல்வை தொடர்பாக நடைபெறும் பல்வேறு ஆவணப்படுத்தல் முயற்சிகளில் காலம் சென்ற அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவு மையமூடாக அவர்கள் நினைவாக தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அவருடைய புதல்வர் வி. அருட்செல்வம் ( விஷ்ணு ) இதை வெளியீடு செய்துள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வல்வையின் கடலோடிகள், கேப்டன் பணியாற்றிய பலர் பங்கேற்று சிறப்பித்தது கவனத்தைத் தொட்டது. கேப்டன் துரைலிங்கம் அவர்களுடைய பாரியார் விளக்கேற்றி நூல் வெளியீட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். வல்வையின் அன்னபூரணி அமெரிக்கக் கரையை தொட்ட சாதனையை நூல்வடிவாக்கிய திரு. ரீ. இராஜகோபாலும் கலந்து சிறப்பித்தார். மேற்கண்ட நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்து வந்தாலும் தாய் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாரமானது, அதை சிறப்பாக செய்த விஷ்ணு அவர்கள் தமிழ் சங்கத்தால் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நன்றி: அலைகள்