Showing posts with label சி.மௌனகுரு. Show all posts
Showing posts with label சி.மௌனகுரு. Show all posts

Sunday, April 24, 2016

இருள் இன்னும் முற்றாக விலகவில்லை

(இது புனைகதை அன்று உண்மை)
இக்கதை நிகழ்ந்த காலம் 2007
-சி மௌனகுரு -


சந்திரகுப்த தேனுவர இலங்கையின் நவீன பாணி ஓவியர்களுள் புகழ் பெற்ற ஒருவர். தனக்கென ஓவியத்தில் ஒரு பாணியைத் தோற்றுவித்ததுடன் தனக்கென ஒரு மாணவ பரம்பரையையும் கொண்டவர். சிங்கள மக்கள் மத்தியில் கௌரவத்துடன் கணிக்கப்படுவர். கொழும்பிலுள்ள கட்புல அவைக் காற்றுக் கலைப் பல்கலைக்கழகத்தில் (University of Visual and Performing Arts ) கட்புலக்கலைத் துறைத் தலைவர் நெருக்கமான என் நண்பர்களுள் ஒருவர்.விடுமுறையைக் கழிக்க அவர் தன் மனைவி குமுதினியையும் ஒன்பது வயது மகனான சாருதத்தனையும் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார். “ஆட்கடத்தல்கள், கொலைகள், அடக்குமுறைகள் மலிந்திருக்கும் இடம் என்றும் ஊடகங்களால் வர்ணிகக்கப்படும் மட்டக்களப்புக்கு இப்போது போகத்தான் வேண்டுமா” என்ற கொழும்புச் சிங்கள நண்பர்களின் பயமுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாது ஒரு அதிகாலையில் மட்டக்களப்பு ரெயிலில் தன் மகனுடன் எம் வீட்டுக்கு வந்தார் குமுதினி. இரண்டு நாட்களும் மிக அருமையாகக் கழிந்தன. என் மனைவி சித்திரலேகாவும் நானும் அவர்களை மட்டக்களப்பின் இயற்கை வளம் நிறைந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றோம்.மட்டக்களப்பு வாவி (ஆறு) கடலோடு கலக்கும் கழிமுகமான முகத்துவாரம், அதனருகே நிறைந்து கிடந்த மிருதுவான வெண்மணல், எழுவான் கரைத் தீவும் அதன் கடல் அழகும், டச்சுபாரின் அழகிய கடற்கரை, மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் மதாளித்து வளர்ந்து காற்றிலே அசைந்து நின்ற இளம் தென்னைகள் கண்ணாப் பத்தைகள்,

Sunday, February 14, 2016

பல்துறையாளன் நாடகக் கலைஞன் அரசையா

சி .மௌனகுரு 
அன்புமிக்க நாடக ஆர்வலர்களே!
விசேடமாக யாழ்ப்பாணத்தில் நாடகம் செய்யும் இளம் நாடகக் கலைஞர்களே!,

உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அரசையா என நாடக உலகில் அழைக்கப்பட்ட  திருநாவுக்கரசு அவர்கள் தமக்கு எண்பத்திரண்டு வயதாகிய நிலையில்
உடற் சுகயீனமுற்று  மிக மிகத் தளர்ந்து போய் இருப்பதாக அறிந்தேன். இன்று என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் தன் மன ஆதங்கங்களை மள மளவென ஒரு மணி நேரம் என்னிடம் கொட்டினார் தளதளத்த குரலில் கொட்டினார். அக்கொட்டலுக்குள் மிகுதியான அவர் மனத் துயரங்களும்அதிகமான பல உண்மைகளும் இருந்தன. இவற்றையெல்லாம் சுமந்து கொண்டு அந்த முதியவர் தனிமையில் வாடுகிறார்  என்பதை எண்ணி என் மனமும் வாடுகிறது. 1950 1960,1970 களில் யாழ்ப்பாண நாடக உலகில் புகழ் மிக்க இப்பெரியவர் கலையரசு சொர்ணலிங்கம் 90 வயதாகி நவாலியில் வாழ்ந்த காலத்தில் அடிக்கடி அவர் வீடு சென்று பார்த்துப் பராமரித்து வந்தவர். அவருடன் நானும் ஓரிரு தடவைகள் கலையரசின் முதுமைக் காலத்தில் அவர் வீடு சென்று வந்துள்ளேன். நாடக டிப்புளோமா எடுக்கக் கொழும்புப் பல்கலைக் கழகம் செல்லும்படி குழந்தை சண்முகலிங்கம் அவர்களை 1970 களில் வற்புறுத்தி அனுப்பி வைத்தவர்களுள் முக்கியமானவர். அரசையா 1970 களின் பிற்பகுதியில் நாடக அரங்கக் கல்லூரியை வளர்த்த முதன்மையருள் ஒருவர். அன்று யாழ்ப்பாணப் பாடசாலைகள் பலவற்றில் நாடகங்கள் பழக்கி மாணவர் மத்தியில் நாடக ஆர்வத்தை வளர்த்தவர் பிற்காலத்தில் மிகச் சிறந்ததோர்  ஒப்பனைக் கலைஞனராகப் பரிணமித்தவர். குத்து விளக்குத் திரைப்படத்தில் நடித்தவர் சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவில் இருந்தவர். சிறந்த புகைப்படப் பிடிப்பாளர், பல் திறன் மிகுந்த ஓர் கலைஞர். இன்று மாணவர்கள் இவர் பற்றி அறியார். யாழ்ப்பாணத்தில் இன்று பல நாடக மன்றங்கள் காத்திரமான நாடகச் செயற்பாடுகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது.

Wednesday, October 14, 2015

மடக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் கந்தன் கருணை இளைய பத்மனாதன்.

-பேராசிரியர்.சி.மௌனகுரு-
பத்தண்ணா எனப் பலராலும் அழைக்கப் படும் இளைய பத்மனாதன் இன்றும் நாடகம் கற்றுக்கொண்டிருக்கும் ஒருவர்.
78 வயதினர்.
நாடக நடிகர்,
நெறியாளர்,
நாடக எழுத்தாளர்,
நாடக ஆய்வாளர்
1970 களில் காத்தான் கூத்துப் பாணியில் கந்தன் கருணை என்ற சமூகப் பிரச்சனை சார்ந்த நாடகம் போட்டதன் மூலம் ஈழத்து நாடக உலகில் அறியப்பட்டவர். தொடர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் நெல்லியடி மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டு தயாரித்த மரபு வழி நாடகமான ஏகலைவன் அவரை மேலும் நாடக உலகுக்கு அறிமுகம் செய்தது. அதில் அவர் யாழ்ப்பாண,மன்னார் மரபுவழி நாடகக் கூறுகளை இணைத்திருந்தார்.  அதற்கு அவர் புது மோடி நாடகம் என்று பெயர் இட்டிருந்தார்


1970 களில் நடிகர் ஒன்றியம் தயாரித்து தாஸீசியஸ் நெற்யாள்கை செய்தகந்தன் கருணையில் நான் கந்தனாக நடித்தேன் அவர் பக்தராக வந்தார். காத்தான் கூத்துப் பாணியை அங்கு அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வடமோடிப் பாணியை அங்கு அவர் பெற்றுக் கொண்டார்.

அவரோடுநா.சுந்தரலிங்கம் நெற்யாள்கை செய்த அபசுரம்,தாஸீசியஸ் நெறியாள்கை செய்த புதியதொரு வீடு முதலான நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும்1970 களில் கொழும்பில் கிட்டியது