Thursday, January 26, 2012

சிங்கள நாடக அரங்கம் சில தகவல்கள்

- கரவைதாசன் -

இனத்துப் புனைவுககளின் தொடர்ச்சி, முரண் இவற்றிடையே தொடரும் மாற்றங்களினிடையும் இத்தகவல்கள் என்னை வந்தடைந்ததையும் அதை இன்று நான் நினைவுமீட்டலும் என்னை என் பால்ய வயதிற்கு அழைத்துச் செல்லும் உணர்வினை எனக்குள் பாய்ச்சி நிற்கின்றது. தமிழிலே இன்று பூச்சுத்தப்படுகின்ற மொழி ஒன்று, மதம் ஒன்று, கடவுள் ஒன்று  எல்லாம் ஒன்று என்ற பம்மாத்துக்களிடையே வித்தியாசங்களை கண்டறிந்து பழம் தின்று கொட்டையும் போட்ட ஒரு மூத்த சந்ததி பட்ட அவலங்களைக் கண்டும் கேட்டும் பட்டும் விழிப்புக்கொண்ட அனுபவம் எங்களது, என ஒரு கட்டுரையில் விழித்து தொடங்கியிருந்தேன். இது என்னது எனச் சொல்வதே இங்கு மிகப் பொருத்தமாக இருக்கும். இலங்கைத் தீவிற்குள் தமிழ்க் குறுந்தேசிய அரசியல் தமிழுக்கும் சைவத்திற்கும் முடிச்சுக்கட்டி அக்கருத்தியலுக்குள் தமிழ் மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும்,  சிங்கள பெரும் தேசியம் பௌத்தத்திற்கும்  சிங்களத்திற்கும் முடிச்சுக் கட்டி அக்கருத்தியலுக்குள் சிங்கள மக்களை மசிய வைத்திருக்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றன. இது இயல் இசை நாடகம் என எல்லாவற்றிக்குள்ளும் கூட இன்று விரவிக் கிடக்கின்றன. இவற்றுள் நாடக அரங்கில்  இதன் வித்தியாசங்களை தொகுத்தறிந்து பொதுத் தன்மைகளை உய்த்தறியும்  ஒருமுயற்சியாக இவ்வெழுத்தினைக் கொள்ளலாம். இவ்முயற்சிக்கு எனக்கு தகவல்களை தந்துதவியவர் எனது கிராமத்தில் நான் கண்டறிந்து பழகிய நாட்டிய நாடக ஆசிரியர் தென்னக்கோண் அவர்கள்.
இவர் எங்களது சகோதர இனங்களில் ஒன்றான சிங்கள சமூகத்தினைச் சேர்ந்தவர்.
இலங்கைத்தீவில் தமிழ்தேசிய சூழலுக்குள் நான் முன்பு  கூறியது போல் எல்லாம் ஒன்று எனக் கூறிக் கொண்டே தமிழ் மக்களுக்குள் ஒரு பகுதியினரை தமிழைப் படிக்கவிடாமல் தடுத்தும் சைவர்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களில் ஒரு பகுதியினரை ஆலயத்துக்குள் போகவிடாமல் தடுத்தும் வந்தார்கள். இவ்ஒடுக்கப்பட்ட மக்களில்  ஒரு பகுதியினர் வடஇலங்கையில் 1962ம் ஆண்டளவில் பௌத்த மதத்திற்கு மதம் மாறினர். மாறியவர் 1966ம் ஆண்டளவில் பூநகரி,  அல்வாய், கரவெட்டி(கன்பொல்லை), அச்சுவேலி, புத்தூர் ஆகிய இடங்களில் தமிழ் சிங்கள பௌத்த பாடசாலைகளை உருவாக்கினார்கள். இப்பாடசாலைகளில் சிங்களமொழி ஒருபாடமாகவும் பௌத்தமதமும் ஏனைய சமூகவியல், கணிதம், விஞ்ஞானம் தமிழ் போன்ற பாடங்கள் தமிழ் மொழிமூலமும் கற்பிக்கப்பட்டு வந்தன. இப்டி ஒரு பாடசாலைக்கு நாட்டிய நாடக அரங்கக்கல்வியை படிப்பிக்க வந்த ஆசிரியர் தென்னக்கோண். அவர்களிடம் பழகிக் கண்டறிந்த விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்ற முயற்சியாகக்கூட இதனைக் கொள்ளலாம்.
தென்னக்கோண் கன்பொல்லையில் வாழ்ந்த ஆரம்ப காலங்களில் அவருக்கு தமிழ்வராது ஆனாலும் அவர் எங்களது கிராமத்தில் வாழ்ந்த கலைஞர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். நாடகத்திலகம்  நற்குணம் அவர்களிடம் தன்னை அறிமுப்படுத்திக் கொண்டு மொழி புரியாமலேயே அவரைப்பாட வைத்து கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாக நகர்ந்த நாட்களில் கரவெட்டி அத்துழு அம்மன் கோவிலில் காத்தவராயன் காத்தான் கூத்து பார்ப்பதற்காக என்னையும் அழைத்துச்சென்றார்.
தொடரும்……..

No comments: