Monday, April 27, 2020

தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்


ஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர் கந்த முருகேசனார்
இலங்கையின் வட மாகாணத்தில் தென்புலோலியில் #கந்தப்பர்_தெய்வானைப்_பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.
அறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார்.
இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார்.
பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.
கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்கு விரிவுரை சொன்னவர், பின்பு அதைத் தொடர முடியவில்லை.
இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் விரிவுரைசொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு #நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார்.
சிறந்த சிந்தனையாளராக மாறி #பொதுவுடைமைத் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.
உபாத்தியாயர்கந்த முருகேசனார் ஆரம்பத்தில் புற்றளை சாரதா வித்தியாசாலையில் (தற்போதைய புற்றளை மகா வித்தியாலயம்) ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் அவரது உறைவிடமான 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.
இயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில், இப்பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும்.
இங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் யாவும் இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.
கந்தமுருகேசனாருக்கு #பேரறிஞர்_அண்ணா . #நாவலர் #இரா#நெடுஞ்செழியன்#நாஞ்சில்_மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும்,
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார்.
 #தமிழகத்_தந்தை_பெரியாருடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவரின் நகத்திகக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். எனவே இவர் #ஈழத்துப்_பெரியார் எனவும் அழைக்கப்பெற்றார்.
கந்த முருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக வெளிவந்தது.
ஈழத்துப் பெரியார் கந்த முருகேசனார் தமது 63 ஆம் அகவையில் 14.6.1965 இல் புகழுடம் பெய்தினார்

கந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
வாழ்க வளர்க அன்னாரின் புகழ்

Sunday, March 29, 2020

உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை

நாமும் நம்மால் ஆனது செய்வோம்!
‐----‐-‐---------‐--------------------------------------------


தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.

Saturday, January 18, 2020

புத்தாடையும் பொங்கலுமென..




14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.

Sunday, December 15, 2019

-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.


தமிழில் : ஜி. குப்புசாமி 

மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளலாம். ஓர் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிக்கு – அங்கே புகழாரம் சூட்டப்படுகிறது.

அந்த எலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘அப்பாடா, கடைசியில் தரப்பட்டதே’ என்று ஒருவர் சொல்லலாம். அதன் பெயர் பல வருடங்களாக பட்டியலில் இருந்து வருகிறது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இலட்சக்கணக்கான சோதனைக்கூட விலங்குகளிலில் – கினிப்பன்றியிலிருந்து ரீஸஸ் குரங்குவரை – வெள்ளை ரோமமும், சிவப்புக் கண்களும் கொண்ட இந்த எலி இறுதியில் உரிய கெளவரத்தைப் பெறுகிறது. எனது நாவலில் கதை சொல்லியின் அபிப்பிராயத்தின் படி, நோபல் பரிசிற்குகந்த மருத்துவ ஆராய்ச்சியிலும், மரபணு ஆராய்ச்சியிலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரித்து வைத்த ‘வாட்ஸன்’ மற்றும் ‘க்ரிக்கின்’ ஆய்வுகளிலும் மற்றெந்த பிராணிகளை விடவும் இந்த வெள்ளெலிகளே உபயோகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற உதவியிருக்கின்றன. இதற்குப் பிறகே சோளத்திலும் மற்ற காய்கறிகளிலும், இதர சோதனைக்கூட விலங்களிலும் படிபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட சட்டபூர்வமான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனாலேயே, இந்நாவல் முடிவிற்கு வரும்போது மனிதகுலத்தின் இறுதிநாட்களில் உருவான ‘வாட்ஸன் க்ரிக்குகள்’ எனப்படும் ‘எலிமனிதர்கள்’ இவ்வுலகை கோலோச்சத் துவங்குகின்றனர். இவர்களிடம் மனித, விலங்கினத்தின் இரு நற்பண்புகளும் கலந்திருக்கின்றன. மனிதர்களிடம் பெரும்பான்மையாக எலியும், எலியிடம் பெரும்பான்மையாக மனிதனும் இருக்கின்றனர். உலகம் இக்கலப்பின் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்கிறது. மாபெரும் அண்ட வெடிப்பிற்குப் பின் வெறும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் ஒருசில மீன், தவளை முட்டைகளுமே எஞ்சியிருக்கின்றன. அதனால், இக்களேபரத்திலிருந்து மீண்டும், ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர, ஆச்சரியகரமாக பிழைத்திருக்கும் இந்த ‘வாட்ஸன் க்ரிக்குகள்’தான் அனைத்திற்கும் தலைமையேற்க வேண்டியிருக்கிறது.

Tuesday, November 26, 2019

எங்கள் தோழர் சண்முகம் வல்லி காலமானார் ..

-கரவைதாசன்- 
தோழர் முறிகண்டி என அறியப்பட்ட எங்கள் தோழர் சண்முகம் வல்லி அவர்கள் தனது அறுபத்தி ஒன்பதாவது வயதில்   காலமாகிவிட்டார். என்ற செய்தி மிகுந்த துயரத்தினை வரவழைத்து நிற்கின்றது. 

இலங்கைத்தீவினில் இனவாதமே அரசியலின் மூலதனமாக போயுள்ள சூழலின் இடையே, அறுபதுகளில் கார்ல்மாக்சின் மூலதனத்தினை செவிவழியே உள்வாங்கிக்கொண்டு பொதுவுடைமைச்  சமுதாயத்தின் முதல் படி சோஷலிச சமூகமே எனும் அரசியல் பட்டறிவில் வடபகுதியின் கன்பொல்லைக் கிராமத்தில் சமத்துவத்துக்கான போராட்டத்தில் தனது ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம்  ஏந்தி மாற்றம் வேண்டி நின்றவர்  எங்கள் தோழர். 

1966களில் தொடங்கிய போராட்டம் 1971வரை நடைபெற்றது. அன்று தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் தலைமறைவாக வாழவேண்டிய சூழல். தலைமறைவில் ஒருநாள், அப்போது அவர் வாழ்ந்த வீடு ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் மைதானத்தினை ஒட்டியிருந்தது ஒரு மாலை வேளை போலீஸ்காரர்கள்  அவரை கைது செய்ய சூழ்ந்து கொண்டார்கள். ஒரு சாஜனும் இரண்டு கான்ஸ்சடுபிளுமென மூவர் அவரை  சூழ்ந்து நின்றனர். வேறு வழியின்றி மூவரையும் அடித்து சாய்த்து விட்டு தப்பித்துக் கொண்டார். அவ்வழக்கு உட்பட சிவானந்தன் எனும் சாதிவெறியனை நெல்லியடிச் சந்தியில் வைத்து  தாக்கியது, சாதியம் பேசிய வல்லிபுரம் அவர்களின் மஹாத்மா சினிமா தியேட்டரினை சேதப்படுத்தியது, நெல்லியடி தேனீர்க்கடைப்   பிரவேசம், ஆனையிறவில் வைத்து சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது, கொடிகாமத்திலும் சாவாகச்சேரியிலும் சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது என  இவர் மீதும் இவரது தோழர்கள் மீதும் எட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தன. 1) முத்தன் தவராசா. 2)ஆழ்வான் சிவகுரு. 3)நல்லதம்பி இளையதம்பி. 4)இராசன் மார்க்கண்டன். 5)  சண்முகம் வல்லி. 6)பசுவர் செல்வராசா. 7)வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை என எழு பேர் மீது   கைக்குண்டு தயாரித்து தாக்கிய வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இவர் ஐந்தாம் எதிரியாக அடையாளம் காணப்பட்டார். 

வடமராட்ச்சிப் பகுதியில் நெல்லியடி, மந்திகை, பருத்தித்துறை போன்ற நகரங்களில் இரட்டை குவளை முறை ஒழிக்கபட்டு பொதுஇடங்களில் இன்று சமத்துவம் பேணப்பாடுகின்றதென்றால் இவர்   சிந்திய இரத்தமும் வேர்வையும் கூட ஆகுதியாகிப் போயிருக்கின்றது. அவரது குடும்பத்தின் துயரில் பங்குகொண்டு தோழருக்கு செங்கொடியினை தாழ்த்தி கனத்த இதயத்துடன் அஞ்சலிகள். 


சி.கா. செந்திவேல் 76 அநுபவப்பகிர்வு...

-கரவைதாசன்-

தோழர்களும் நண்பர்களும் கூடுங்கள்! பயணத்தின் பகிர்வில்.....

கன்பொல்லையில் சமத்துவத்துக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தோழர் அடிக்கடி கிராமத்துக்கு வருவார், சிலவேளையில் பொழுது சாய்ந்துவிட்டால் இரவு தங்கி நின்று செல்வார். அப்போது கிராமத்தின் சனசமூக நிலையம் கனுவில் சனசமூக நிலையம் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டு முதலியார் கோவிலடியில் இயங்கி வந்தது. இரண்டு பெரிய வாங்கில்களும் ஒரு பெரிய வாசிப்பு மேசையும் அங்கிருந்தது. அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் தான் தோழர் தூங்குவார். அநேகமாக அப்போராட்ட காலத்தில் ஆண்கள் யாருமே வீடுகளில் தூங்குவது இல்லை அங்கிருந்த கோவில்களிலும் ஸ்ரீ நாரதா பாடசாலையிலும் பூவரசமரங்கள் குடைபிடித்து நின்ற இருண்ட ஒழுங்கைகளிலும் ஆண்கள் இரவிரவாக விழித்திருப்பார்கள். வாசிகசாலை கிராமத்தின் நடுப்பகுதியிலும் போலிஸ் வாகனம் உள்வரமுடியாத ஒழுங்கையுடன் அமைந்திருந்ததாலும் அங்கே தான் ஊருக்கு வரும் தோழர்களை தங்கவைப்பார்கள். காலையில் ஒரு குண்டுசீனிப்பாணும் தேனீரும் அல்லது இரண்டு தோசையும் தேனீரும் பாடசாலை வளவில் எல்லோருக்கும் போல் தோழருக்கும் கிடைக்கும் மதியம் யராவது ஒரு முக்கிய தோழர் ஒருவரின் வீட்டில் உணவருந்துவார். பின் நெல்லியடித் தோழர்கள் அவரை வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அந்நாட்களில் தோழருக்கும் எனது தந்தையார் தவத்தாருக்கும் இடையில் நடந்த சம்பாசனைகளின் அநுபவங்களை கடிதவாயிலாக எனக்கு எழுதியுள்ளார். அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.

Monday, October 14, 2019

புத்தகங்கள் பறப்பைத் தருகின்றன...

-கரவைதாசன்-

நான் தனியாகவில்லை, புத்தகங்கள் என் தோழன். அவை எனக்கு பறப்பைத் தருகின்றன. புத்தகங்களை கொண்டாடினால் நீ என் தோழன் என் உறவு எல்லாம். 

" ஒரு வயோதிபன் மறையும்போது ஒரு நூலகம் மறைகிறது" என்கின்ற பிரக்ஞை ஆபிரிக்க மக்களிடம் இருக்கின்றது, எனில் அவர்களிடம் அந்த வழக்காற்றுமொழி  இன்றும் வாழ்கின்றது என எழுத்தாளர் சினுவா அச்சுவா பறைகிறார்.

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள் கடந்தகாலம் மற்றும் தேசியம் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்" என கவிஞர் பாபிலே நெருடே பறைகிறார். 

தொல்காப்பியம் குறைந்தது மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்கின்ற பறைதல் தமிழர்களிடம் இருக்கின்றது. சிங்கத்திடம் இருந்து வந்தவர்கள் நாம்  என கூச்சத்துடன்  உரைக்கிடினும்  மகாவம்சம் எனும் நூலினை இலங்கையின் வரலாற்று நூல் என  பறைகின்ற போக்கு சிங்கள மக்களிடம் இருக்கின்றது. 

டன் எனும் ஒரு கிழவன் மலைக்குகை ஒன்றிலிருந்து டெனிஸ் மொழியின் இலக்கணத்தினை வகுத்தான் என்று பறைதல் டெனிஸ் மக்களிடம் இருக்கின்றது. 

இப்படியாக மனித சமூகம் நூலினை நேசிப்பதால் பல விடயதானங்களை தெரிந்துகொள்ளவும் சில விடயதானங்களை அறிந்துகொள்ளவும் வழியாகின்றன

நூல்கள் தங்களின் சிறந்த தோழன் என நான் வாழுகின்ற வயன் நகரத்து மக்கள் கடந்த 01.10.19 அன்று  டென்மார்க்கினிலே வாழ்கின்ற சகல இன மக்களுக்கும்  பிரசங்கித்துள்ளார்கள். நூல்களின் நேசர்களுக்கு அன்று பொன்னான நாள். சுமார் பதின்நான்கு வருடங்களுக்கு முன்பாக றீப (Ribe) மற்றும் தெற்குஜூலன்ட் (Sønderjylland ) மாவட்டங்கள் கலாசார மண்டபம் ஒன்று கட்டுவத்துக்கு ஒதுக்கிய 32.6 மில்லியன் குறோணர்களை மூலதனமாக வைத்து 29 மீற்றர் உயரம் 7500 சதுர அடி பரப்பளவினையும் கொண்ட டென்மார்க்கின் புதியதும் நவீனத்துவதுமான நூலகம் மக்கள் பாவனைக்காக அன்றைய தினம் பி.ப.4.00 மணிக்கு வயன் நகர மேயர் ஈகோன் வ்பிராயர் (Egon Fræhr) அவர்களின் பிரதமஉரையுடன் திறந்து வைக்கப்பட்டது. அவரைத்தொடர்ந்து. கட்டடத் தொகுதியின் பகுதி உரிமையாளர் Morten Oxlund, பிரதம நூலகர்Kasper Østergaar Grønkjær, சிறப்புவிருந்தினர் Jacob Steglmann உரையாற்றினார்கள். மாலை 7.00 மணி கடந்தும் நிகழ்சிகள் நடந்தன. 

ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மின்னஞ்சல்  ஊடாக கிடைத்தது. உண்மையில் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கே தொடங்கியிருந்தது. அங்கே நூலகர் மேற்றவும் நூலகர் ஹன்னேயும்  பத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவை 

Tysklandsarbejderen Frederiks valg.
Katte øje
Høstkarl i himlen
Dansk,Dænsk,Darnsk
Hungerhjerte
Vinter
Mit navn er Lucy Barton
Lone star 
Insekternes Planet
Hjertebank 
 நூல்கள் பற்றிய அவர்களது அறிமுக உரைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அஸ்கோ  உயர் நிலைக்கல்லூரியின் முதல்வர், முன்னாள் நகரசபை மேயர் எனது முன்னாள் வரலாற்று விவுரையாளர் ஹான்ஸ் ஜோர்ன், அரசியலாளர்கள் நண்பர்கள்  என பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது அன்றைய நாள் எங்கள் எல்லோர்க்கும் கொண்டாட்டமான நாளாக கழிந்தது . 

Thursday, October 10, 2019

அசுரன் திரைப்படம்

கிளர்த்திய நினைவுகள்...... 

-கரவைதாசன்-



சென்ற சனிக்கிழமை 05.10.19 வம்றுப் தியேட்டரில் "அசுரன்" திரைப்படம் பார்க்க கிடைத்தது. பூமணியின் வெக்கை நாவலின் கதைக்கருவினை இயக்குனர் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் திரையில் பேசுபொருள்
ஆக்கியிருந்தனர்.

நடிகர் தனுஷ் தொடக்கம் பசுபதிவரை நடிகர்கள் அப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். 

திரைக்கு வெளிச்சம் பாச்சியபோது பூமணியின் கதா பாத்திரங்கள் விம்பமாக  துலாம்பரமாக தெரிந்தன, இல்லை வாழ்ந்தன. ஆரவாரமில்லாமல் எரிச்சலுட்டாத இசை. கிராமங்களை அச்சொட்டாக உருவகப்படுத்தியிருந்த கலை,  பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார் வெற்றிமாறன். தொகுப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சண்டைக்காட்சியில் சில சினிமாத்தனங்கள் இருந்தன வர்த்தக நோக்கில் அவை தவிர்க்க முடியாதவை. அதனிடையும் தனுஷ் தன் நடிப்பாற்றலை தெறிக்கவிட்டுள்ளார். 

தனுசும் அவரது சின்ன மகனும் போலீசிடம் அகப்பாடாமல் காட்டையண்டிய நீர்நிலைக்கூடாக பதுங்கிப் பதுங்கி செல்வதுடன் படம் தொடங்குகிறது. நீரில் நனையாமல்  கையில் வைத்திருக்கும் பைகளை அவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள். உருண்டை கவனம் எனும் கதையாடல் அவர்களுக்கிடையில் நடக்கின்றது. பார்வையாளர்களுக்கு பின்பு தான் தெரிய வரும் உருண்டை என்பது தனுஷின் மகனால் தயாரிக்கப்பட்ட  கைக்குண்டுகள் என . 

விரியும் கதையும் கதை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் என் நினைவுகளை கிளர்த்தி என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனையிறவு உப்பளம் , குறிஞ்சாத்தீவு  அதையொட்டிய சிறு பத்தைக் காடுகள் அதே மணல்தரை அதை தெரிந்தவர்களுக்கு படம் காட்சிப் படுத்தப்பட்ட இடங்களை ஒத்துப் போவதை அவதானிப்பர்.  மட்டுமன்றி ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள் திரைப்படத்தில் காட்டப்பட்ட கிராம மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, சொந்தமாக  தயாரிக்கப்பட்ட குண்டு  என்பன நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தினையும் அறுபதுகளில் அவர்கள் நடத்திய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுக்கு கொண்டுவந்தன. இன்று கன்பொல்லையில் ஒரு ஓலைவீடுகூட இல்லை என்பது வேறு கதை. 

தனுஷின் பாத்திரம் கன்பொல்லைக்கிராமத்தின் சமத்துவத்துக்கான முன்னணிப் போராளிகள் மு.தவராசா, ஆ.சிவகுரு, இ .மார்கண்டன், ப.செல்வராசா, ந.இளையதம்பி, ச.வல்லி, வே.கிருஸ்ணபிள்ளை சி.காசியன் யாவரையும் ஒத்துப் போவதை நான் உணர்ந்தேன்.  

ஆயினும் திரைப்படத்தின் இயங்கு நிலை எனது ஒரு பத்து வயது காலத்துக்கு என்னை   பின்னோக்கி சரித்தது. தனுஷ் எனது தகப்பனார் தவத்தாராகவே (மு.தவராசா ) எனக்குத் தெரிந்தார். 1966 தொடக்கம் 1971 வரை சவாகச்சேரி, கொடிகாமம், பலாலி, தையிட்டி, ஆனையிறவு, எழுதுமட்டுவாள், சங்கானை, வன்னி  என அவர் தலைமறைவாக வாழ்ந்த  இடங்களையும் அந்த வாழ்வையும்  எனக்கு நினைவு மீட்டின. 

அப்போது அவருக்கு அக்கா, நான், தங்கை என மூன்று பிள்ளைகள் இருந்தோம். தலைமறைவான இடங்களுக்கு  ஆண் பிள்ளையான என்னை மட்டும் அழைத்துப் பார்ப்பார்.  அவரது மூத்த சகோதரர் அபிமன்யு அவரிடம் என்னை அழைத்துச் செல்வார். 

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் அவர் அதிக காலம் தலைமறைவாக இருந்தவிடம் அங்கு அவரது உறவினர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நான் ஐயாவை பார்க்கப் போகும்போது இயக்கச்சியிலேயே  பஸ்சிலிருந்து  இறங்கிவிடுவோம் . அங்கு  எங்களை அழைத்துச் செல்ல நடராசா மாமா, லக்குணம் மாமா அல்லது செல்வநாயகம் அத்தான், அல்லது சின்னராசா அத்தான்  அநேகமாக வந்து நிற்பார்கள். காட்டு வழியால் எங்களை அழைத்துச் செல்வார்கள்.  அந்த நிலச்சாயல் அப்படியே திரைப்படத்தில் ஒட்டியிருந்தது. செய்தியறிந்த போலிஸ் ஒரு தடவை நடராசா மாமாவை பிடித்து நையப்புடைத்தார்கள் அப்போதும் அவர் மறைவிடத்தினை காட்டிக்கொடுக்கவில்லை. திரைப்படத்தில்  இந்த ஒத்துப் போன பாங்குகள் தொண்டையை  அடைத்து கண்ணீரை வரவழைத்தன.

தமிழ்திரையுலக இயக்குநர்கள் கற்பனைகளை புனைந்து சினிமா ரசிகர்களை உணர்வு  தொற்றுதலுக்குள்  ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வாலாயத்துள்ளும்  சில செய்திகளை வைத்திருக்கும் வெற்றிமாறனை பாராட்டாமல்  இருக்கமுடியவில்லை. கல்வியும் ஒரு சிறந்த ஆயுதம் தான். (இதனை அடைய நாம் பெளத்தத்தில் சேர வேண்டியிருந்தது. என்பது எங்கள் கதை.) என் நினைவுகளைக்   கிளர்த்திய படம். நன்றி வெற்றிமாறன்.....
















Monday, September 02, 2019

எங்கள் தோழர் தங்கராசா அண்ணா

-கரவைதாசன்- 
தோழர் தங்கராசா அவர்களின் நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது ?
ஒவ்வொன்றாக அவரது தோழர்கள் வே.பரமகுரு, கே.எஸ்.இரத்தினம், சீ .செல்லக்கிளி, ஆ.சுந்தரம் என இன்னும் பலர்  அந்த மண்ணில் உதிர்ந்தபோதும் ஒற்றைப் பனைமரமாக அந்தக் கிராமத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தனித்துவமிக்க தோழராக அவர் வலம் வந்தார். கோட்பாட்டு ரீதியில் தனது கட்சியின் கோட்ப்பாடுகளுடன் அவர்  தன்னை அடையாளப்படுத்தியபோதும். சமூகத்தில் தானும் ஒருவராக தன்னை இணைத்துக்கொண்டு அவர் தோப்பாகவே வாழ்ந்தார். ஒரு சோஷலிசவாதிக்குரிய அரிய பண்புகளுடன்  கிராமத்தில் எரிந்துகொண்டிருக்கும் எந்த  முதற் பிரச்சினையிலும் சிநேகமாக   தீர்வு தேடும் ஒருவராக அவரை நான் அடையாளம் கண்டேன்.  அது கோவிலோ , சுடுகாடோ, கழகங்களோ அல்லது பாடசாலையோ பொதுச் செயற்பாடுகளில் பகை முரண்பாடுகளை களைந்து சினேகா முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை  இளைஞர்  மத்தியில் பேசு பொருளாக்கி  ஐக்கியத்தினை  வலியுறுத்தும் நல்ல முன்னோடியாக அவரைக் கண்டேன். அவர் இல்லாத கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சியில்  எனது நம்பிக்கைகளில் நான் பயம் கொண்டுள்ளேன்.

Thursday, August 22, 2019

Monday, June 10, 2019

கன்பொல்லைக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை



-கரவைதாசன்-

கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­? இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது?

கன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர் .இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார். தாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தார். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது
" வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல! " இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும்! நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.
ஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்.

- எம். ஏ. சி. இக்பால்-
இந்தக் கட்டுரை 2002 -ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் 25 -வது ஆண்டு நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரையை வரைந்த எம். ஏ. சி. இக்பால் அவர்களுக்கு நன்றிகள். 2019ம் ஆண்டு ஜூன் 25
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் மு. கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும், சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே.
அன்னார் காலமாகி பல வருடங்கள் கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது அரசியல் பணி என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் அமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட கார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், M.C. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார்.
அதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன் அவர்கள் 1955 -ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.

Thursday, September 20, 2018

"மலையக அபிவிருத்தி அதிகாரசபை" நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’
(மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று (19) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்த சரத்துகளை நீக்குவதற்குரிய சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்திலுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிபடுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அதிகாரசபையின் பணிகள்….
1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.

2. ஆதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.
5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.

நன்றி : மலைநாடு

Thursday, May 17, 2018

"மெலிஞ்சிமுனை சைமன்" கூத்தும் கடலும் கலந்த காற்று

-கருணாகரன் -

ஆயிரம் பாயிரங்கள் பாடி ஆடியகலைஞர் 

மெலிஞ்சிமுனை சைமன்  (1938-2017) 

நாங்கள் இளையவர்களாக இருந்த 1960, 70கள் வரையில் கூத்துக் கலையும் கூத்துக் கலைஞர்களும் பெரிய நட்சத்திரங்கள். அந்த நாட்களில் கூத்துக் கலைஞர்கள் இரவுகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆண்டார்கள். அதிலும் கிராமங்களில் என்றால், சொல்லவே தேவையில்லை. கூத்து அங்கேயொரு மாபெரும் கொண்டாட்ட நிகழ்வு. ஒரு நாள் திருவிழாவில் கூடிக்கலைவதைப்போல இல்லாமல், வாரக்கணக்காக, மாதக்கணக்காக கூத்தோடு ஒன்றாகிக் கலந்திருக்கும் ஊர்.

பொழுதிறங்க, கூத்தைப் பழகுவது, “வெள்ளுடுப்பு ஆட்டம்” என்று ஒத்திகை பார்ப்பது, பிறகு அதை அரங்கேற்றுவது என்று ஊர் கூத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும். இதிலே இன்னொரு விசேசமும் உண்டு. ஊரில் பாதிப்பேருக்கு மேல் கூத்துக் கலைஞர்களாகவே இருப்பார்கள். தலைமுறை தலைமுறையாக கூத்து ஆடப்படுவதே இதற்குக் காரணம். இதனால், எல்லாத் தலைமுறையிலும் ஆட்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். சில ஊர்களில் சில குடும்பங்களுக்குக் கூத்திலுள்ள சில பாத்திரங்கள் பரம்பரையாக வழங்கப்பட்டேயிருந்ததுமுண்டு.

அப்படியான ஒரு காலத்தில், அப்படியான ஒரு ஊரில் கூத்தும் தொழிலுமாக இருந்தவர்தான் சைமனும்.சைமன் மெலிஞ்சிமுனைவாசி. மெலிஞ்சிமுனையில் கடற்தொழிலும் கூத்தும் கூடிக் கலந்தவை. கடலும் காற்றும் போல.கடற்காற்றும் கூத்துப் பாட்டும் நிறைந்த வெளியுடைய கிராமம் அது. கடற்தொழில் இல்லாமல் வாழ்க்கை எப்படி இல்லையோ அப்படித்தான், அங்குள்ளவர்களுக்குக் கூத்தில்லாமலும் வாழ்க்கையில்லை. சைமனுக்கும் அப்படித்தான் வாழ்க்கை (யோகம்) அமைந்தது.

நாங்கள் கூத்துக்கலைஞர்களைத் தேடி மெலிஞ்சிமுனைக்குப் போனபோது, அங்கிருந்தவர்கள் சைமனைப் பற்றிக் கதை கதையாகச் சொன்னார்கள். ஆனால், அவரை அப்போது அங்கே பார்க்க முடியவில்லை. இவ்வளவுக்கும் சைமன் வேறு யாருமல்ல. நண்பரும் ஒளிப்படக் கலைஞருமான தமயந்தியின் தந்தையே. அதற்குப் பிறகு ஓராண்டு கழித்து, அகதி வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்தார் சைமன். நாங்கள் சந்திக்கப் போனபோது மகிழ்ச்சியாக வரவேற்றார். மலர்ந்த முகம். சிரிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாதவரைப் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களில் மகனை்  கண்ட பூரிப்பு.

பலதைப் பற்றியும் பேசினோம். அமர்க்களமாகவே இருந்தது சந்திப்பு. ஆனால், அவருக்கு இரண்டு கவலைகளிருந்தன. ஒன்று தன்னுடைய வீட்டில் வைத்து வரவேற்க முடியவில்லை, சாப்பாடு தர முடியவில்லை. கூழ் காய்ச்ச முடியவில்லை என்பது. மற்றது ஊருக்கு வந்திருந்தாலும் ஊர் நிலைமைகள் திருப்தியாக இல்லை என்பது. எல்லாம் படிப்படியாகச் சீராகும் என்று ஆறுதல் படுத்தினோம். ஆனால், பின்னாட்களில் நாங்கள் நம்பிக்கையூட்டியதற்கு மாறாகவே எல்லாம் நடந்தன. இதில் யார் சரி யார் தவறு என்ற வாதங்களுக்கு அப்பால், ஊருக்கு வந்த சைமன் அவர்கள், அங்கே இருக்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனில் போய் தற்காலிகமாகக் குடியேறினார். அது அவர் விரும்பிய தேர்வல்ல. விதிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.

ஒரு காலம் கரம்பனை விட்டு கோபத்தோடும் ஆற்றாமையோடும் வெளியேறி, மெலிஞ்சி முனைக்குப்போனவர், இன்னொரு காலத்தில் ஆற்றாமையோடும் இயலாமையோடும் மெலிஞ்சிமுனையை விட்டு வெளியேறிக் கரம்பனுக்குப் போகவேண்டியிருந்தது. மனித நடத்தைகள் உண்டாக்கிய முரண்நகை இது. கரம்பனில் இருந்தவேளையிலேயே சைமன் மரணமடைந்தார். மீள ஊருக்கு வந்திருந்தாலும் தன்னுடைய சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் சாவடையக் கூட வசப்படாத விதியோடு விடைபெற்றார். இலங்கையின் அரசியலும் சமூக நிலவரங்களும் ஏற்படுத்திய காயங்களோடு மறைந்த மனிதர் நம்மிடம் பதித்துவிட்டுச்சென்ற நினைவுகளும் எழுப்பும் கேள்விகளும் ஏராளம்.

10.10.1938 இல் ஊர்காவற்றுறையிலுள்ள கரம்பொன் தெற்கில் பிறந்தவர் சைமன். ஆரம்பக் கல்வியை ஊரில் உள்ள பாடசாலையில் படித்த பிறகு, மேல் வகுப்பை (1947-1953) கொழும்புத்துறை புனித வளனார் கல்லூரியில் படித்தார். மெலிஞ்சிமுனையில் அந்த நாளில் கூடிய படிப்பு (அதிகபடிப்பு அல்லது மேற்படிப்பு)ப் படித்தவர் சைமனே என்று மெலிஞ்சிமுனைவாசிகள் இப்பொழுதும் சொல்கிறார்கள். இதனால், ஊரின் நல்லது கெட்டது எதற்கென்றாலும் அறிவுரை கேட்கவும் ஆலோசிக்கவும் சனங்கள் சைமனையே தேடிப்போனார்கள். இதற்குத் தோதாகச் சைமனும் தன்னால் முடிந்ததையெல்லாம் ஊருக்குச் செய்தார். அது சைமன் துடிப்போடிருந்த இளமைக்காலம். தங்களுடைய காரியங்களை மட்டும் பார்த்துக் கொள்வதற்காகப் படித்த படிப்பைப் பயன்படுத்துகின்ற பெரும்பான்மையினரின் வழமைக்கு மாறாக, ஊரின் நன்மையைக் கருதிச் செயற்பட்டார் சைமன்.

Sunday, May 13, 2018

ஆலயடிவேம்பு பிரதேச சபை: இலங்கைத் தெலுங்கர் சமூகத்திலிருந்து ஒரு பிரதித் தவிசாளர்!


ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன்.

இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங்கு பேசும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஜெகன்.

ஜெகன் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அலிக்கம்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டு, இதே பதவிக்கு முதன் முறையாகவும், இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகியுள்ளார். இவருக்கு இப்போது 32 வயதாகிறது.

தன்னை ‘குறவர்’ என அழைப்பதை ஜெகன் விரும்பவில்லை. குறவர் சமூகத்துக்குரிய எந்தவொரு அடையாளமும் தமக்குத் தேவையில்லை என்று ஜெகன் கூறுகின்றார். குறவர் என்பதற்காகவே அவரும் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்கொண்ட அவமானங்களும், புறக்கணிப்புகளும் அவரை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஆலயடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஆலையடி வேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதியில்தான் அலிக்கம்பை கிராமமும் உள்ளது. இங்கு முழுதும் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வாழ்கின்றனர்.

இவர்கள் தங்களுக்கிடையில் தெலுங்கு மொழியிலேயே பேசிக் கொள்கின்றார்கள். குறவர்கள் பற்றிய புராணக் கதையொன்று இலங்கையில் உள்ளது. அலிக்கம்பையில் கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இளையதம்பி குலசேகரன் எழுதிய “அலிக்கம்பை வனக்குறவர்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலில் அந்தக் கதை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, February 22, 2018

முத்து அங்கிள்

-சந்துஸ்-
முத்து அங்கிள் ...
சப்பாத்தி முள்ளும் சரியாக முளைக்காது * என்று சொல்லப்பட்ட மண்ணிலே அரிதாகப் பூத்த அத்திப்பூ நீங்கள். அப்படித்தான் அவரை நாங்கள் அழைத்தோம். எழுபதுகளில் கொழும்பின் புறநகரான களுபோவிலவில் நாங்கள் வசித்த வீட்டின் ஒரு அறையில் இளம் தம்பதிகளான இந்திரா அன்ரியும் முத்து அங்கிளும் எங்களுடன் வசித்தனர். என் சிறு பிராயத்து நினைவுகளில் மறக்கமுடியாத ஓர் அம்சமாக அவர் இருக்கின்றார். அப்போது சிறுவர்களாக இருந்த எம்மைக் கவரும் எதோ ஒரு சக்தி அவரிடம் இருந்திருக்க வேண்டும். மாலைப் பொழுதுகளில் வேலையிலிருந்து அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்குமளவிற்கு அவர் எங்களுடன் நெருங்கியிருந்தார். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியில் எமக்கென்று செலவழிக்க அவரிடம் எப்போதும் நேரமிருந்தது. வேலையால்  வந்ததும் குளியலறையில் அவர் பெருங்குரலெடுத்துப் பாடுவதைக் கேட்பதில் தொடங்கி  அவர் எங்களுக்குச் சொல்லும் கதைகளின் வழியாக அவர் அழைத்துச் செல்லும் அந்த வினோதமான உலகத்தில் சஞ்சரிப்பது என்பது எங்கள் நாட்களின் அன்றாட அம்சமாகி இருந்தது. 
அவரிடம் இருந்தது தன்னை ஒளி த்துக் கொள்ளத் தெரியாத காற்று மனம். அவர் சத்தமான குரலில் பாடுவார். இருந்தால் போலநடனமாடுவார்.ஷேக்ஸ்பியரின் நாடகங்களின்  பாத்திரங்கள் பேசும் பெரும்பாலான வாசகங்கள் அவருக்கு மனப்பாடம்.
திடீரென்று வழமையாக அணியும் சேட் காற் சட்டையைத் தவிர்த்து national என்று சொல்லப்படும் முழுக்கைச்சேட்டும்  வெள்ளை வேட்டியும் அணிந்து திரிந்தார். அந்தக் காலத்தில் எங்களது சித்தி பத்திக் (Batique) உடைகள் தைக்கும்  வேலை செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஒரு வாளிக்குள் மஞ்சள் நிறக் கரைசலை நிரப்பிச் சென்றிருந்தார். அதை கண்ட முத்து அங்கிள் தனது வெள்ளை நிற தேசிய உடையைக் கொண்டு வந்து அந்த வாளிக்குள் போட்டுத் தோய்த்தெடுத்தார். அதன் பிறகு சில நாட்கள் மஞ்சள் உடையில் ஒரு துறவியைப் போலத் திரிந்தார். சில நாட்கள் தாடியும் மீசையும். சில நாட்கள் மழித்த தலையும் முழுச்சவரமும். ஒரு நாளினில் இருந்தது  போல் மறு நாளினில் இல்லை என்று கண்ணன் பாட்டில் வரும் பாரதியின் வரிகளை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

Thursday, February 01, 2018

அ. சிவானந்தன் எனும் ஒரு ஆளுமையின் மறைவு (1923-2018)

-சமுத்திரன்-

அ. சிவானந்தன் (1923-2018) அரசியலும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றே எனும் தனது வாக்கிற்கமைய முடிந்தவரை வாழ்ந்த ஒரு ஆளுமையின் மறைவு

சிவானந்தனின் மரணம் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களுடன் தன்னை அடையாளப்படுத்திய ஒரு பேரறிஞரின் மறைவென அவரை நன்கறிந்தோர் சர்வதேச ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர். ‘நாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களுக்காகவே எழுதுகிறோம்’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த சிவா ஜனவரி மூன்றாம் திகதி தொண்ணூற்றுநாலு வயதில் அவர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக வாழ்ந்து வந்த லண்டனில் மறைந்தபோது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவது சுலபமல்ல. அந்த ஆளுமைக்குள் ஆற்றல்மிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன      என அவரைப் பற்றி நண்பர்கள் வியந்துரைப்பதில் ஆச்சர்யமில்லை.

Wednesday, January 17, 2018

தமிழை ஆண்டாள்- கவிஞர் வைரமுத்து -

- கவிஞர் வைரமுத்து -

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement - some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :

“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple” – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப்பார்ப்பார்கள்.

பீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமியில் புகவிடாவண்ணம் மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆக்கப்பட்ட ஓசோன்(O3) கூரையைத் திண்மை செய்வதும் இந்த மார்கழிதான்.

மார்கழியின் அதிகாலை மனோகரமானது. தாயைத் தொட்டுக்கொண்டு குழந்தை உறங்குகிறது; தாய்ப் பறவையைத் தழுவிக்கொண்டு குஞ்சு உறங்குகிறது; இலைகளைப் போர்த்துக்கொண்டு மரம் உறங்குகிறது; கரைகளை முட்டிக்கொண்டு குளம் உறங்குகிறது. தன்னைத்தானே கட்டிக்கொண்டு முதுமை உறங்குகிறது. “இன்னுமா உறக்கம்! எல்லே இளங்கிளியே! எழுந்து வா வெளியே” என்று ஆண்டாளின் ஆசைக்குரல் அப்போது ஆணையிடுகிறது. ‘மார்கழி நீராட வாரீரோ மங்கையரே’ என்று அது எல்லாக் கதவுகளையும் எட்டித் தட்டுகிறது. அதிகாலை எழுவதே வாழ்வியல் ஒழுக்கம். இந்த நெடுங்குளிரில் நீராடுவது உடல் வெப்பத்துக்கும் மனத் திட்பத்துக்கும் ஆண்டாள் நிகழ்த்தும் அமிலச் சோதனை. இந்த அதிகாலை ஒழுக்கத்திற்குப் பாவை நோன்பு என்பது சடங்கு; கண்ணன் என்பதொரு காரணம்.

பாகவதத்தில் சொல்லப்படும் கார்த்தியாயினி நோன்புக்கும், ஆண்டாளின் திருப்பாவை நோன்புக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. கண்ணனே கணவனாய் அமைய நோற்பது கார்த்தியாயினி நோன்பு. நல்லதோர் கணவனை அடைய நோற்பது மட்டுமே திருப்பாவை நோன்பு. ‘எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்பதே நோன்பு. ஆனால் நாங்கள் நலம்காண வேண்டும் என்ற தன்னலம் தாண்டி, நாடு நலம்காண வேண்டும் என்ற பொதுப்பண்பில் இயங்குவதுதான் நோன்பின் மாண்பு.

Tuesday, July 11, 2017

மண்வாசனைக்கு மகுடம் வைத்த நிலக்கிளி

-ஜீவகுமாரன் -


1973ல் வன்னி மண்ணின் வாசனையை இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்த ’நிலக்கிளி’ நாவலின் ஆசிரியர். எழுத்தாளர் திரு. பாலமனோகரனின் 75வது பிறந்தநாள் தினக் கொண்டாட்டம் சென்ற சனிக்கிழமை மிக அமைதியான முறையில் குடும்ப உறவினர்கள் - நண்பர்கள் - இலக்கிய உலகுடன் தொடர்புடையவர்களுடன் நடந்தேறியது. டென்மார்க்கிற்கு வந்த காலம் தொடக்கம் அங்கிள் - அன்ரி என்ற உறவுமுறையே இப்போதும் தொடர்கிறது. மூத்த எழுத்தாளர் என்ற இடைவெளியுடன் ஏன் பழகவில்லை என்பதனை எனதுரையில் குறிபிட்டு இருந்தேன். எழுத்தாளர் பாலமனேகரனுக்கு ஒவியர் பாலமனோரன் என்று இன்னோர் பக்கம் உண்டு.
அவருக்கு எனது பரிசாக அவரின் சில ஓவியங்களையும் நிலக்கிளி நாவலின் அட்டைப்படத்தையும் தொகுத்து மிகச்சிறிய வாழ்த்தொன்றை எழுதியிருந்தேன்.இயற்கையும்  எழுத்தையும்  தன் சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும்   இடையில் சிறைப்படுத்திய அங்கிளுக்கு  எமது 75வது பிறந்த தின வாழ்த்துகள்   ஜீவகுமரன் - கலாநிதி இந்த மிகச்சிறிய வாழ்த்தின் பொழிப்புரையே எனது 10 நிமிட பேச்சாக அமைந்திருந்தது. எனது பேச்சை எனது மனைவியார் டெனிஷ் நண்பர்களுக்காகவும் எம் இளம் தலைமுறையினருக்காகவும் டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்தார்.
இந்த அனைத்து ஓவியங்களிலும் உள்ள எளிமையும் கிராமியமணத்தின் தொகுப்புத்தான் நிலக்கிளி நாவல் என்றால் மிகையாகாது.