Showing posts with label ரீ.கே.கலாப்ரியா. Show all posts
Showing posts with label ரீ.கே.கலாப்ரியா. Show all posts

Saturday, July 26, 2014

மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கு உண்டு.

நெல்லை புத்தக விழாவில் கவிதை வாசிப்புக்கு அறிமுகமாக ஒரு சிறு கட்டுரைவாசிப்பு... 

அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சீரும் சிறப்புமாக நடை பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்தக் கவிதை வாசிப்பரங்கத்தில் பங்குபெறும் வாய்ப்பினைத் தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு என் வாழ்த்துகளும் அன்பும். குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் அவர்களுக்கும் அவருக்கு துணையாகச் செயல் படுகிற என் அருமைச் சகோதரர் தேவேந்திரபூபதி அவர்களுக்கும் என் மனம் கனிந்த அன்பும் நன்றியும்.
நண்பர்களே, ”நினைவின் விருந்தாளியாக ஒரு கவிதை பிரவேசிக்கும்போது நம்முடைய உலகமே மாறிப்போகிறது”- என்று ஒரு மேல்நாட்டுப் பொன் மொழி ஒன்று உண்டு’. “இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்”என்று ஷேக்ஸ்பியர் சொல்லுவார். இசை எப்படி ஒருவனை மென்மையாக்குகிறதோ அதே போல் நம்முடைய மனநிலை என்னவாக இருந்தாலும் அதை மாற்றக் கூடிய வல்லமை கவிதைக்கும் உண்டு. ஒரு சம்பவம் சொல்வார்கள், வாழ்வில் விரக்தி மேலிட்டுத் தற்கொலை எண்ணம் மேலோங்கியிருந்த ஒரு பொழுதில் நண்பர் ஒருவர் தன் கையில் கிடைத்த நான்கு வரிக் கவிதை ஒன்றை வாசிக்கிறார்,

“இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்..”

Saturday, May 31, 2014

எது ஹைகு

-ரீ.கே.கலாப்ரியா- 

ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-

ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்

“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)

என்றெல்லாம் நானும் எழுதினேன்.

ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்