Saturday, May 31, 2014

எது ஹைகு

-ரீ.கே.கலாப்ரியா- 

ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-

ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்

“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)

என்றெல்லாம் நானும் எழுதினேன்.

ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்



உதாரணத்துக்கு ஒன்று. மகாகவி தாகூர் ஒரு சிட்டுக் குருவியாகி,

“பாவம் மயில்
ஏன் இவ்வளவு
பெரிய தோகையுடன் அல்லாடுகிறது....”

என்று ’அழகாய்’வருத்தப்படுகிறார்.

”சிற்றோடை ஆடி ஆடிப் பாடி உருட்டி
இழுத்து வந்த கூழாங்கல்லின் திருத்தமான வடிவத்தை
எந்தச் சுத்தியல் அடியாலும் செதுக்க முடியுமா”,

என்று அவர் வியக்கிறார். தாகூர் தன் அற்புதமான, ‘STRAY BIRDS’ தொகுப்பை ஒரு ஜப்பானிய நண்பருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். ஒருவேளை தாகூருக்கு அவர்தான் ஜப்பானிய ‘டண்கா’ கவிதைகளையும் ‘ஹைகு’ கவிதைகளையும், அறிமுகப்படுத்தினாரோ என்னவோ.
இனி ஜப்பானிய ஹைகுக்கள. ஜப்பான் என்றால் ஏழைப் பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பானா என்ன.

”படுக்கை கரடு முரடான தெருவோரம் என்றாலும்,
பூச்சிகளும் கொசுக்களும் அவனுடன் அந்நியோன்யமாய்
பேசிச் சொந்தம் கொண்டாடுகின்றன”

என்று வியக்கிறான் ஜப்பானிய ஹைகு கவிஞன் ’ச்சியோ நி’.


இன்னொரு கவிஞன் ரய்ஸான், (இதுதான் ‘கசடதபற’ இதழில் வந்த்து.)

”நாற்று நடும் பெண்கள்
பாடும் பாட்டில் மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை”- என்கிறான்.

இது வெறும் காட்சி மட்டும்தானா, இது ஜப்பான் வயலில் மட்டும்தானா நிகழ்கிறது.

“காய்ந்த சுள்ளிகளைக் காட்டுக் கொடிகளால் பிணைத்த
தோட்டத்துப் படல்க் கதவு
பூட்டுக்குப் பதிலாய் ஒரு நத்தைக் கூடு” -(ISSA)

இதை எழுதிய ’இஸ்ஸா’ ‘ஹைகு’ கவிஞர்களிலேயே சற்று வித்தியாசமானவர், வாழ்க்கையின் பலமான அடிகள் அவரைப் பாதித்திருந்தாலும், வறுமை குழந்தையைக் கூட எடுத்துக் கொண்டாலும், பூப் போன்ற மனதுக்காரர். தன் சோகங்களையும்,மற்ற அழகுகளையும் மென்மையாய்ப் பதிவு செய்திருக்கிறார்.

”இனிய தோழனே, வெட்டுக்கிளியே
நீ காவல்காரனாய் இருப்பாயா
என் சிறிய கல்லறைக்கு..”

இதுவும் ‘இஸ்ஸா’ எழுதியதுதான்.

’ச்சியோ நி’ கவிதையைப் போலவே ‘நீலமணி’யின் அற்புதமான தமிழ்க் கவிதைகளில் ஒன்று நினைவுக்கு வருகிறது.

”தெருவில் தூங்கும்
யார் கழுத்தில் விழும்
அரிவாள் நிலா”

ஹைகு கவிதைகளை மொழி பெயர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அதிலும் அதே போல 17 அசைகளுடன், அதே கருத்தும் அனுபவமும் வரும்படி மொழி பெயர்ப்பது இயலாது. இங்கே கூறியுள்ள கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழ் வடிவம். ஆங்கில வடிவத்தில் 17 அசைகள் இல்லை.மேலும் ஹைகு அதனளவிலேயே ஒரு முழுமையான கவிதா வாக்கியம் மட்டும் அல்ல. அது வாசகனின் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஈடு பாட்டிற்கும் தீனி போடுபவை.அந்த அளவில், ஒரு நல்ல ஹைகு வாசகன் ஒரு ஹைகு கவிஞனாகவும் இருக்கிறான்.
கவிஞர் ‘பாஷோ’(1644-1694)தான் ஹைகுவைச் செழுமைப்படுத்திய கவிஞர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார்.அவருக்குப் பிறகு புசோன், இஸ்ஸா, ஆகியவர்களைக் கூறுகிறார்கள்.

நான் தமிழ்ப்’படுத்திய’ சில ஹைகுகள்

” அமைதியான நடு இரவில்
எங்களது சோளக் கொல்லைப் பொம்மை
திடுமென விழுந்தது...
எங்கோ ஒரு அமானுஷ்ய எதிரொலி ”
-போன்ச்சோ

”இந்த அழகான பாத்திரத்தில்
அந்த அழகான மலர்களை அடுக்குவோம்
வீட்டில் அரிசிதான் இல்லையே”
-பாஷோ

நடைபாதைக் கடையின் படங்கள்
மீதெல்லாம் கனமான கற்கள்...
இளங்காற்றுப் பருவம் வந்து விட்டதோ
-கிடோ

பனிமுத்தே உன்னுடைய
அழகிய துளிநீரில்என்
கசட்டு வாழ்க்கைக் கரங்களைக்
கழுவிக் கொள்கிறேனே
-பாஷோ

இந்த இலையுதிர்காலத்துக் காற்றைப் பார்
என் காவல் பொம்மையின்
குச்சி எலும்புகளையெல்லாம்
குரூரமாய் முறித்துப் போடுகிறது
- இஸ்ஸா

வாணவேடிக்கைக் கலகலப்புகள் வெடி ஓசைககள்
முடிந்து மீண்டது என் தனிமை
பார்! விழுகிறது ஒரு எரிநட்சத்திரம்

-ஷிகி

No comments: