Saturday, February 20, 2016

"நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம்." ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தலைவர் கன்னையாகுமாரின் உரை

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)
COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
  மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு  சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.

நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சங் பரிவாரத்தினரோ,வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான  எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.

ஆனால், இன்று ஏ.பி.வி.பியும் அதன் ஊடகக் கூட்டாளிகளும் சேர்ந்து பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான இயக்கத்தைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்துவருவது மிகவும் வெட்கக்கேடானதும் துயரமிக்கதும் ஆகும்.  ஆராய்ச்சி மாணவர்களின் உதவித் தொகைகளுக்காகத் (FELLOWSHIPS) தாங்கள் போராடுவதாக ஏ.பி.வி.பி.யின் இணைச் செயலாளர் நேற்று கூறினார். இதைக் கேட்பது கேலிக்குரியது. ஏனெனில் அவர்களது அரசாங்கம், திருமதி மனு-ஸ்ம்ரிதி இரானி, உதவித் தொகைகளை வெட்டிக்கொண்டு வருகிறார். ஏ.பி.வி.பி.யோ “நாங்கள் உதவித்தொகைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறது. அவர்களது அரசாங்கம் உயர் கல்விக்கான வரவு-செலவு நிதியில் (BUDGET) 17 விழுக்காடை குறைத்துள்ளது. நான்கு ஆண்டுகளாக எங்கள் உண்டி உறையுள் விடுதி கட்டப்படவில்லை. எங்களுக்கு ‘வை ஃபி’ வசதி இன்று வரை கிடைக்கவில்லை. ‘பெல்’ நிறுவனம் எங்களுக்கு ஒரு பேருந்தைக் கொடுத்தது. ஆனால், அதை ஓட்டுவதற்கு வேண்டிய எரிபொருளை வழங்குவதற்குப் பல்கலைக்கழக   நிர்வாகத்திடம் பணம் இல்லை.  ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் (திரைப்பட நடிகர்) தேவ் ஆனந்தைப் போல, சாலை அமைக்கும் யந்திர வண்டிகளுக்கு (ROLLERS) முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு , “நாங்கள் உண்டி உறையுள் விடுதிகள் கிடைக்கச் செய்து கொண்டிருக்கிறோம்”, “‘வை ஃபி’ யைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்”, “உதவித் தொகைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். நண்பர்களே, இந்த நாட்டில் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விவாதம் நடக்குமேயானால், அவர்களது பொய்கள் அம்பலப்படுத்தபடும். ஜே.என்.யு.வைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்புவதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

ஜே,என்.யு.வில் ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்று (சுப்பிரமணியன்) சுவாமி கூறுகிறார். ஜே.என்யு.வில் இருப்பவர்கள் வன்முறையைப் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார். இங்கு வந்து எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஜே.என்.யு. சார்பில் நான் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர்களுக்குச் சவாலிடுகிறேன். வன்முறை என்ற கருத்தாக்கத்தின் மீது நாங்கள் விவாதம் புரிய விரும்புகிறோம். நாங்கள் கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்“கூன் ஸெ திலக் கரேங்கெ, கோல்யோ ஸெ ஆர்த்தி” (இரத்தத்தால் திலகமிடுவோம், தோட்டாக்களால் ஆரத்தி எடுப்போம் –எஸ்.வி.ஆர்.) என்னும் ஆர்.எஸ்.எஸ். முழக்கத்தின் மீது கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.   யாருடைய இரத்தத்தை இந்த நாட்டில்  ஓடச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்கள் மீது பயன்படுத்தப்படுவதற்காக பிரிட்டிஷாருடன் சேர்ந்து நீங்களும் தோட்டாக்களை வழங்கினீர்கள். இந்த  நாட்டின் ஏழைகள் உணவு வேண்டும் என்று கேட்கும்போது, பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, நீங்கள் அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்துகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். பெண்கள், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியபோது, அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். கையிலுள்ள ஐந்து விரல்களும் சரிசமமானவையாக இருக்க முடியாது என்றும், பெண்கள் சீதையைப் போல வாழ்ந்து அக்னிப் பரிட்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் ஒவ்வொருவருக்கும் சமத்துவம் என்னும் உரிமையை வழங்குகிறது. ஒரு மாணவரோ, ஒரு துப்புரவுத் தொழிலாளரோ,  ஒரு ஏழையோ, ஒரு தொழிலாளியோ, ஒரு விவசாயியோ அல்லது ஒரு அம்பானியோ, ஒரு அதானியோ அவர்கள் யாராக இருந்தாலும், எல்லோருக்கும் சம உரிமை உள்ளது. ஆகவே, நாங்கள் பெண்களின் உரிமையைப் பற்றிப் பேசினால், அவர்கள் (சங் பரிவாரத்தினர்) நாங்கள் இந்தியக் கலாசாரத்தை நாசப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். சுரண்டல்வாத, சாதிய, மனுவாத, பார்ப்பனிய மரபுகள் என்பனவற்றைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிவதை நாங்கள் விரும்புகிறோம்.

ஆகவே, அவர்கள் ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறார்கள்?  இந்த நாட்டின் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப்  பேசும் போது, அவர்கள் செவ்வணக்கத்தோடு நீல வணக்கம் சொல்லும்போது, மார்க்ஸோடு சேர்த்து பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரைப் பற்றியும் மக்கள் பேசும் போது,   அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகிறது. அஷ்ஃபகுல்லா கானைப்· பற்றிப் பேசும் போது அவர்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

அவர்கள் சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகள். வாருங்கள், என் மீது அவதூறு வழக்குத் தொடருங்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு, பிரிட்டிஷாருடன் வலுவாக சேர்ந்து நின்று கொண்டிருந்த வரலாறுதான். இந்த தேசதுரோகிகள்தாம் இன்று தேசபக்தி சான்றிதழ்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். எனது செல்பேசியை சோதித்துப் பாருங்கள், நண்பர்களே. எனது தாயாரையும் சகோதரியையும் அவர்கள் எவ்வளவு கொடூரமாக அவதூறு செய்து செய்திகளை அனுப்புகிறார்கள் என்று.  எனது தாய் இந்த பாரத மாதாவின் பகுதி இல்லை என்றால், எந்த பாரத மாதாவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? அந்த பாரதா மாதா என்ற கருத்தாக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது தாயார் ஒரு அங்கன்வாடித் தொழிலாளி. எனது குடும்பம்  ரூ.3000 மாத வருவாயை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் எனது தாயாரை அவதூறு செய்கிறார்கள்.  இந்த நாட்டின் ஏழைகள், தொழிலாளர்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோரின் தாய்மார்கள் பாரதாமாதாவின் பகுதியாக இல்லாமல் இருப்பதற்காக நான் வெட்கப்படுகிறேன். உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுங்கள். ‘பகத் சிங் நீடூழி வாழ்க’ என்று கூறுங்கள். ‘சுக்தேவ் நீடூழி வாழ்க’என்று கூறுங்கள்.  ‘அஷ்ஃபக்குல்லா கான்’ நீடூழி வாழ்க’ என்று சொல்லுங்கள். பிறகுதான் நாங்கள் நம்புவோம், உங்களுக்கு இந்த நாட்டின் மீது பற்றுறுதி இருக்கிறது என்று. 

பாபாசாகெப்பின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் கனவு காண்கின்றீர்கள். உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை எழுப்புங்கள். இந்த நாட்டிலுள்ள மிகப் பெரும் பிரச்சினை சாதியம்தான். சாதியத்திற்கு எதிராகப் பேசுங்கள். இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள். தனியார் துறையிலும்கூட இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள். 

இந்த தேசம், ஒருபோதும் உங்களுடைய தேசமாக இருந்ததில்லை  - ஒருபோதும் இருக்கப் போவதுமில்லை. ஒரு தேசம் என்பது மக்களால் உருவாக்கப்படுவது. பசியால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு தேசத்தில் இடம் இல்லை என்றால், அது ஒரு தேசமே அல்ல. நேற்று ஒரு தொலைக்காட்சி சேனல் விவாதத்தின் போது தீபக் செளரியாஸிஜியிடம் கூறினேன்: “செளரியாஸிஜி, இது ஓர் இருண்ட தருணம், நினைவிருக்கிறதா?” என்று. பாசிசம் இந்த நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், இனி ஊடகங்களும்கூட பாதுகாப்பாக இரா.  சங் பரிவார அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்படுவதைத்தான் அவை பயன்படுத்த வேண்டியிருக்கும் - இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்ததைப் போல. இதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தேசபக்தியை நீங்கள் உண்மையிலேயே காட்ட விரும்புகிறீர்களா? ஜே.என்.யு., வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு, மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது என்று சில ஊடகத்தினர் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆம், அது உண்மைதான். ஜே.என்.யு., வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு கேள்வி எழுகின்றது: ஒரு பல்கலைக் கழகம் எதற்காக இருக்கிறது? சமுதாயத்தின் “பொது மனசாட்சியை” விமர்சனப்பூர்வமாகப் பகுத்தாய்வு செய்வதற்குத்தான் ஒரு பல்கலைக்கழகம் இருக்கின்றது. விமர்சனரீதியான சிந்தனைய ஊக்குவிக்கத்தான் அது இருக்கின்றது. இந்தப் பணியைச் செய்யப் பல்கலைக் கழகங்கள் தவறுமேயானால், பின்னர் ஒரு தேசம் என்பதே இருக்காது, மக்களின் பங்கேற்பு ஏதும் இருக்காது. நாடு முதலாளிகளுக்கான தீவனமாகவே இருக்கும். கொள்ளைக்கும் சுரண்டலுக்குமான தீவனமாக மட்டுமே இருக்கும். மக்களின் கலாசாரம், விழுமியங்கள், உரிமைகள் முதலியன உள்ளடக்கப்படாவிட்டால், தேசம் என்பதே ஏதும் இராது. நாங்கள் இந்த நாட்டோடு நிற்கிறோம். பகத் சிங்கும் பாபாசாகெப் பீம்ராவ் அம்பேத்கரும் கண்ட கனவைப் பார்க்கிறோம். அனைவருக்கும் சமத்துவம், வாழ்வதற்கான உரிமை, உணவு,  தண்ணீர், உறைவிடம் ஆகியன பெறுவதற்கான உரிமை என்கின்ற கனவுக்காக நிற்கிறோம். நாங்கள் இந்தக் கனவுக்காக நிற்கிறோம். இந்த கனவுகளோடு நிற்பதற்காக ரோஹித் தமது உயிரைத் தத்தம் செய்தார். ஆனால், இந்த சங் பரிவாரத்தினருக்குச் சொல்கிறேன்:  “உங்கள் அரசாங்கத்திற்கு வெட்கக் கேடு”. மத்திய அரசாங்கத்திடம் சவாலிட்டுச் சொல்கிறேன்: ரோஹித்துக்கு நடந்ததை ஜே.என்.யுவில் நடக்க விட மாட்டோம். ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் நினைவில் கொள்வோம். கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நாங்கள் நிற்போம்.

 பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் விடுங்கள், உலகிலுள்ள ஏழைகள், தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். உலகிலுள்ள மனிதகுலத்துக்கு, இந்தியாவிலுள்ள மனிதகுலத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  இந்த மனிதகுலத்துக்கு எதிராக நிற்கும் குழுவை இன்று நாம் அடையாளம் கண்டுள்ளோம். இன்று நமக்கு எதிரே உள்ள மிகக் காத்திரமான பிரச்சினை இதுதான். இந்த அடையாளப்படுத்துதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சாதியத்தின் அந்த முகத்தை, மனுவாதத்தின் அந்த முகத்தை, பார்ப்பனியத்துக்கும் முதலாளியத்துக்குமுள்ள கூட்டணி என்னும் முகத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த முகங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் இந்த நாட்டில் நிறுவ விரும்புவது  உண்மையான ஜனநாயகத்தை, உண்மையான சுதந்திரத்தை, ஒவ்வொருவரின் சுதந்திரத்தை.

அந்த சுதந்திரம் வரும், அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றம், ஜனநாயகம் ஆகியவற்றோடு அந்த சுதந்திரம் வரும். அதனால்தான் நான் எனது நண்பர்கள் அனைவரிடமும் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள் என்று. நமது கருத்து சுதந்திரத்தை, நமது அரசமைப்புச் சட்டத்தை, நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பிளவுச் சக்திகளை - பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பிடம் தரும் சக்திகளை - எதிர்த்து நிற்கும் பொருட்டு  நமது நாட்டை ஒற்றுமைக்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியுள்ளது.
கஸாப் யார்? அஃப்ஸல் குரு யார்? தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறச் செய்து கொள்ள விரும்பும் கட்டத்திற்குச் சென்ற அந்த மனிதர்கள் யார்? இந்தக் கேள்வி ஒரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்படாவிட்டால், அத்தகைய பல்கலைக் கழகம் இருப்பதற்குப் பொருளே இல்லை.

வன்முறை என்பதை வரையறுக்காவிட்டால், வன்முறையை உங்களால் எவ்வாறு காண முடியும்? வன்முறை என்பது ஏதோ துப்பாக்கிகளால் மக்களைக் கொல்வது மட்டுமே அல்ல. அரசமைப்புச் சட்டத்தால் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஜே.என்.யு. நிர்வாகம் மதிக்க மறுப்பதும்கூட வன்முறைதான். இதுதான் நிறுவனம்சார்ந்த வன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த மனிதர்கள் (சங் பரிவாரத்தினர்)  நீதி பற்றிப் பேசுகிறார்கள்.  எது நீதி என்று தீர்மானிப்பது யார்? பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியபோது, தலித்துகள் கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் நாய்களும் இந்தியர்களும் உணவு விடுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. இந்த நீதிக்கு நாங்கள் சவாலிட்டோம். இன்றும்கூடத்தான், நீதி பற்றி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் ஏ.பி.வி.பி.யும் கொண்டுள்ள கருத்தை எதிர்த்துப் போராடுகிறோம்.

நீதி பற்றிய உங்களது கருத்தில் நீதி பற்றிய எனது கருத்து உள்ளடக்கப்படாவிட்டால், நீதி பற்றிய உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒவ்வொருவரும் அரசியலமைப்புச் சட்டரீதியாகத் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறும் போதுதான் இந்த நாட்டை சுதந்திர நாடு  எனக் கருதுவோம். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலைப்புச் சட்டத்தின் கீழ் சரிசமமானவர்களாக இருக்கும்போது, நீதி இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்முறை எதனையும், பயங்கரவாதி எவரையும், பயங்கரவாதத் தாக்குதல் எதனையும், தேச-விரோத நடவடிக்கை எதனையும் ஆதரிக்காது. சந்தேகத்துக்கு இடமற்ற உறுதியான வார்த்தைகளில் இதை நான் மீண்டும் அறுதியிடுகிறேன். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை எழுப்பினர். அவர்களை ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

ஜே.என்.யு. நிர்வாகம், ஏ.பி.வி.பி.ஆகிய இரண்டுக்கும் பொதுவான கேள்வியொன்றை எழுப்ப விரும்புகிறேன். இந்த வளாகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. தயவு செய்து எ.பி.வி.பி.யின் முழக்கங்களைக் கவனமாகக் கேளுங்கள். அவர்கள், “கம்யூனிஸ்ட் நாய்கள்” என்று கூறுகிறார்கள். “அப்ஃஸல் குரு என்னும் நாயின் குட்டிகள்” , “ஜிஹாதியின் பிள்ளைகள்” என்று கூறுகிறார்கள். இந்த அரசமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமையை நமக்கு வழங்கியிருக்குமானால், எனது தந்தையை நாய் என்று சொல்வது நமக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? இதை நான் ஏ.பி.வி.பி.யிடம் கேட்கிறேன். இந்தக் கேள்வியை ஜே.என்.யு. நிர்வாகத்திடம் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? யாருடன் வேலை செய்கிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் வேலை செய்கிறீர்கள்?

இன்று ஒரு விஷயம் முழுமையாகத் தெளிவாகிவிட்டது: ஜே.என்.யு. நிர்வாகம் முதலில் அனுமதி வழங்குகிறது. பிறகு நாக்பூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அனுமதியை அது திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அனுமதி கொடுப்பதும், பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கு, மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதும் பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கைப் போலவே அடிக்கடி நிகழ்கிறது. உதவித் தொகை அதிகரிக்கப்படுவதாக முதலில் அவர்கள் அறிவிப்பதும், பிறகு அதற்கு நேர்மாறாக, உதவித் தொகை நிறுத்தப்படுவதாகச் சொல்வதும் போன்றதுதான் இது. சங் பரிவாரம் செயல்படும் பாணி இதுதான். ஆர்.எஸ்.எஸ். - ஏ.பி.வி.பி.பாணி. இந்த பாணியில்தான் அவர்கள் நாட்டை நடத்த விரும்புகிறார்கள். இதே பாணியில்தான் அவர்கள் ஜே.என்.யு.வை நடத்துகிறார்கள்.

ஜே.என்.யுவின் துணை வேந்தரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஜே.என்.யு.வளாகத்தில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. உணவு விடுதிகளில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்குப் பிரச்சினை இருந்திருந்தால், நீங்கள் அனுமதி கொடுத்திருக்கக்கூடாது. ஆனால், நீங்கள் அனுமதி கொடுத்திருந்ததால், அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன  என்பதைப் பல்கலைக் கழக நிர்வாகம் தெளிவுபடுத்தியாக  வேண்டும்.

இந்த மனிதர்களைப் பற்றிய உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் யாரையும் வெறுப்பதில்லை. எனவே  தயவு செய்து அவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள். உண்மையில் அவர்களுக்கு நான் இரக்கப்படுகிறேன். அவர்கள்  சும்மா பீற்றித் திரிபவர்கள். ஏன்? கஜேந்திர செளஹான் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக உட்காரச் செய்யப்பட்டது போல, தங்களுக்கும் ஒரு செளஹான், திவான், ஃபர்மான் (அரசனின் முத்திரை தாங்கிய ஆணை - எஸ்.வி.ஆர்.) கிடைக்கும் என்று நம்புகிறார்கள். தாங்களும் ஃபர்மான்களை அனுப்புவோம், இந்த ஃபர்மான்களைக் கொண்டு தங்களுக்கும் தொடர்ந்து வேலைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கத்தும்போது,  அது அவர்கள் பதவிகளுக்கான நேர்காணலுக்குத் தயாராகும் தருணம் வந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், பதவி கிடைத்தவுடன் தேசபக்தியையையும் பாரத மாதாவையும்  மறந்துவிடுவார்கள். மூவண்ணக் கொடி ஒருபுறமிருக்கட்டும்  - அதை அவர்கள் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை, காவிக் கொடியையும் மறந்துவிடுவார்கள்.

இது எந்த வகையான தேசபக்தி என்று அவர்களைக் கேட்க விரும்புகிறேன். வேலைக்கு அமர்த்துபவர், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியரை  நன்றாக நடத்தாவிட்டால், விவசாயி தொழிலாளியை நன்றாக நடத்தாவிட்டால், முதலாளி தனது தொழிலாளர்களை முறையாக நடத்தாவிட்டால், ரூ15000த்திற்கு வேலை செய்யும் தொலைக்காட்சி நிருபரை அவரது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சரியாக நடத்தாவிட்டால், இது எந்த வகையான தேசபக்தி என்று கேட்க விரும்புகிறேன்.

ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி என்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டிகளோடு மட்டும் நின்றுவிடுவதுதான். அதனால்தான், அவர்கள் தெருக்களில் வரும் போது, பழம் விற்பவரை மோசமாக நடத்துகிறார்கள். “ஐயா, ஒரு டஜன் வாழைப் பழத்தின் விலை ரூ 50” என்று அவர் சொல்லும்போது, அவர்கள் வசவுகளை அவிழ்த்துவிட்டு , “நீங்களெல்லாம் எங்களைக் கொள்ளயடிக்கிறீர்கள். நாங்கள் ரூ 30தான் தருவோம்” என்று கூறுகிறார்கள். ஆனால், பழம் விற்பவர் ஒரு நாள் அவர்களை எதிர்த்து நின்று, “ நீங்கள்தான் ஆகப்பெரும் கொள்ளைக்காரர். கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளீர்கள்” என்று கூறினால் என்ன நடக்கும்? அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.) பழம் விற்பபவரை தேச-விரோதி என்று முத்திரை குத்துவார்கள்.

ஏ.பி.வி.பி.யில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். “ தேசபக்தி உடையவர்களாக உண்மையிலேயே  நீங்கள் உங்களைக் கருதுகிறீர்களா? என்று நான் அவர்களிடம் அடிக்கடி கேட்பதுண்டு. அவர்கள் சொல்வார்கள்: “ என்ன செய்வது? அரசாங்கத்துக்கு ஐந்தாண்டுக் காலம் இருக்கிறது. இரண்டாண்டுகள் கழித்துவிட்டன. மூன்றாண்டுப் பேச்சுக் காலம் எஞ்சியுள்ளது. எதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டுமோ, அதை எஞ்சியுள்ள இந்த ஆண்டுகளில் செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறுவார்கள். ஆகவே, அவர்களிடம் நான் சொல்வேன், “ஜே.என்.யுவைப் பற்றி நீங்கள் பொய் சொன்னால், நாளை யாரேனும் ஒருவர் உங்கள் சட்டைக் காலரையும்கூட பிடித்துவிடக் கூடும்; அப்படிச் சட்டைக் காலரைப் பிடிப்பவர், உங்கள் நண்பர்களிலொருவராக, ரயில் வண்டிகளில் மாட்டுக் கறி இருக்கிறதா என்று சோதனை செய்யக்கூடியவர் போன்ற உங்கள் நண்பரொருவராக  இருக்கலாம். அவர் உங்களைப் பிடித்து, வதைத்து, நீங்கள் ஜே.என்.யு.மாணவர் என்பதால் நீங்களும் தேச விரோதிதான் என்று சொல்லலாம். நீங்கள் இப்போது செய்வதிலுள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறீர்களா?”

“நாங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம், அதனால்தான் ஜே.என்.யுவை மூடுவதை எதிர்க்கிறோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். “பிரமாதம்,  முதலில் ஜே.என்யு.வை மூடுவதற்கான சூழலை உருவாக்குவது, பிறகு, நீங்கள் ஜே.என்.யுவில் தங்க வேண்டியிருப்பதால், அதை மூடுவதை எதிர்ப்பது”  என்று அவர்களிடம் கூறினேன். அதனால்தான் ஜே.என்.யு. மாணவர்களாகிய உங்களிடம் சொல்கிறேன், மார்ச் மாதம் (மாணவர் சங்கத்துக்கான) தேர்தல் நடக்கப் போகிறது. ‘ஓம்’ சின்னத்துடன் ஏ.பி.வி.பி.யினர் உங்களிடம் வருவர். தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்: “நாங்கள் தேச விரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள். எங்கள் வாக்குகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்களும் தேச விரோதியாகிவிடுவீர்கள்”. 

இப்படிச் சொல்வதை உறுதி செய்யுங்கள். பிறகு அவர்கள் சொல்வார்கள் : “இல்லை, இல்லை. அப்படிப்பட்டவர்கள் நீங்களல்லர். வேறு யாரோ சிலர்தான் அப்படிப்பட்டவர்கள்”. பிறகு நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் : “தேசவிரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள் என்பவர்கள் வேறு யாரோ சிலர்தான்  (ஜே.என்.யு.வைச் சேர்ந்த அனைவரும் அல்லர்) என்று ஏன் ஊடகங்களின் முன் நீங்கள் கூறவில்லை? உங்கள் துணை வேந்தர் ஏன் இதைச் சொல்லவில்லை?  உங்களது பதிவாளர் இப்படிச் சொல்லவில்லையா?”

யார் அந்த ஒரு சிலர்? “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்களா? அந்த ஒரு சிலர் நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர் என்று கூறவில்லையா? அந்த ஒரு சிலர், முறைப்படி பெறப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறுவது தங்களது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் என்று கூறுவதில்லையா?  நாட்டின்  ஏதோவொரு பகுதியில் சண்டை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்களும் அதில் சேர்ந்து நிற்போம் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.- எஸ்.வி.ஆர்.) இந்த சின்ன விஷயத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்*. ஆனால், குறுகிய கால அவகாசத்தில் இங்கு கூடியுள்ளவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இந்த வளாகத்திலுள்ள ஒவ்வொரு மாணவரிடமும் செல்ல வேண்டும். ஏ.பி.வி.பி., இந்த நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது. ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது.  நாம் ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த விட மாட்டோம். ஜே.என்.யு. நீடூழி வாழ்க! இப்போது நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் அனைத்திலும், ஜே.என்.யு.முழுமையாகப் பங்கேற்கும். ஜனநாயகத்தின் குரலை, சுதந்திரத்தின் குரலை, கருத்து சுதந்திரத்தை  வலுப்படுத்தும்.

நாம் முன்னேறிச் செல்வோம். நாம் போராடுவோம். நாம் வெற்றி பெறுவோம். இந்த நகரத்தின் துரோகிகளைத் தோற்கடிப்போம். இந்தச் சொற்களுடன், ஒற்றுமைக்கான வேண்டுகோளை விடுக்கிறேன்.
ஜெய் பீம், லால் சலாம்!
  நன்றி: COUNTERCURRENTS.ORG, 18 FEBRUARY, 2016


· அஷ்ஃபகுல்லா கான்: உத்தரப்பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த இவர், ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன்’ என்னும் அமைப்பில் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால், சதி, தேச துரோகக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு, அவருடைய நண்பரும் போராட்டத் தோழரும் அவரைப் போன்ற உருதுக் கவிஞருமான பிஸ்மில்லுடன் சேர்த்துத் தூக்கிலிடப்பட்டார். பிஸ்மில் பிறப்பால் ஓர் இந்து.

* கன்னைய குமாரின் உரை எழுதி வாசிக்கப்பட்டது அன்று. எனவே, வாக்கிய அமைதியை உரையின் எல்ல இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது. எனினும் இந்தக் குறிப்பிட்ட வாக்கியம் சற்றுக் குழப்பத்தைத் தருகிறது. அதன் ஆங்கில மூலம் பின்வருமாறு: “They will never understand this small thing”. அவருடைய உரையில் இந்த வாக்கியம் இடம் பெறும் பத்தியைக் கருத்தில் கொளகையில் ‘They’  என்று அவர் இங்கு குறிப்பிடுவது ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றைத்தான் என்று கொண்டு, அவ்வாறே மொழியாக்கம் செய்துள்ளேன் -எஸ்.வி.ஆர்.

நன்றி: தந்துகி 

No comments: