Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6 -7- 8 )

-விஜய பாஸ்கரன்-

நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.
இக்காலத்தில் செல்வநாயகம் இது இந்துக்கள் பிரச்சினை. எனவே நான் தலையிட மாட்டேன் என்று நழுவினார்.அமிர்தலிங்கம் சங்கானை ஒரு வியட்நாமாக மாறி வருகிறது என கம்யூனிஸ்ட் சாயம் பூசி திசை திருப்ப முயற்சித்தார்.இப் போராட்டத்தை கேவலப்படுத்தி பேசினார்.அன்று உள்ளூராட்சி அமைச்சாராக தமிழரசுக்கட்சி சார்பில் இருந்தவர் எம்.திருச்செல்வம்.அவர் நினைத்திருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம்.அவரின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இவை.

எந்த சட்டத்தரணிகளும் உதவிக்கு வராத நிலையில் சண்முகதாசன் மூலமாக நடேசன் சத்தியேந்திரா உதவ முன்வந்தார்.அன்று பலகலைக்கழக மாணவராக இருந்த என் சகோதர்ர், அவருடன் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினார்,சத்தியேந்திரா ஒரு இளம் சட்டத்தரணி.எனவே எமது பகுதியில் நம்பிக்கை தளர்ச்சி காணப்பட்டது.
சட்டத்தரணி ஒழுங்கு படுத்தியதை அறிந்த சாதிவெறியர்கள் தமது சட்டத்தரணிகள் மூலமாக வழக்கை கொழும்புக்கு மாற்றினர் .நீதித்துறை,பொலிஸ் எல்லோருமே அவர்களுக்கு துணை நின்றது.பொருளாதார வளம் குறைந்த நமது ஊரவர்கள் கொஞ்சம் நிலை குலைந்தனர்.
இக்,காலத்தில், நடைபெற்ற கொடுமைகளை பாராளுமன்றம் கொண்டு சென்று வாதிட்டவர் அமர்ர் தோழர் எஸ்.டி. பண்டாரநாயக்கா.இவர் இறந்தபோது எமது பகுதிகளில் யாரும் அஞ்சலி செலுத்தியதாக நான் அறியவில்லை .இது எனக்கு வேதனை அளிக்கிறது.இவர் மட்டும் இல்லாவிட்டால். அன்றைய தமிழ் பொலிசார் எமது மக்களை உண்டு இல்லை என நாசம் பண்ணியிருப்பார்கள்.அன்று யாழ்ப்பாண எஸ்.பி ஆக இருந்தவர் சுந்தரலிங்கம் .( தமிழீழம் வேண்டுமா)
இவர்கள் வழக்குகளுக்கு செல்லும் வழியில் பலதடவை கொல்வதற்கு முயற்சித்துள்ளனர் .எமது முன் எச்சரிக்கைகளால் எதுவும் சாத்தியப்படவில்லை.
நவரத்தினம் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளாளரும் கொஞ்சம் சாதிவெறியர்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.ஆனாலும் அயலில் உள்ளவர்கள் உண்மை நிலை தெரிந்ததால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.ஒவ்வொரு விசயத்திலும் நமது பகுதி கையே முந்துவதால் இரத்தினத்தை எப்படியாவது கொலை செய்ய தீர்மானித்தனர்.இதற்கு இப்போது வெள்ளாளர் ஒத்துழைப்பும் கிடைத்தது.
வெள்ளாளரின் ஒரு பகுதி நளவர்மீது ஆத்திரமாக இருந்தனர்.அது ஒரு கட்டுக்கதை விவகாரம்.எமது ஊரில் கந்தையா என்ற ஒருவர் இருந்தார்.எமது ஊரில் கொஞ்சம் தள்ளி வெள்ளாளர் வாழும் பகுதியில் இருந்து தோட்டமும் சீவல் தொழிலும் செய்து வந்தார்.இவர் ஒரு வெள்ளாளர் வீட்டில் சீவல் தொழில் செய்ய அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இவருக்கும் தொடர்பு என கதை கட்டி அந்தப் பெண்ணை வதை செய்தனர். உண்மையில் அது பொய்.கற்பனை.இவரகள் தொல்லை தாங்காத அந்தப் பெண் தன் ஒரே பெண் பிள்ளையுடன் கந்தையா வீட்டுக்கே வந்துவிட்டார் .உண்மையில் விரும்பி வரவில்லை .கோபத்தில் தன் உறவுகளை பழிவாங்கவே வந்தார்.அவரது வீடு மிகவும் தனிமையான காடும் வயலும் அண்டிய பகுதி.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
நேரம் கழித்து வெள்ளாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.தாயும் மகளும் அவர்களுடன் செல்ல விரும்பவில்லை.பலாத்காரமாக இழுக்க கந்தையா கத்தி எடுத்து அவர்களை விரட்டி விட்டார்.இது அவர்களுக்கு அவமானமாக கருதினர்.இது ஒரு தனி நபர் விவகாரம்.அந்தப் பெண்ணின் மகளை கந்தையா படிக்க வைத்து பல்கலைக் கழகம் அனுப்பினார்.( பின்னாட்களில் இவரும் கொல்லப்பட்டார்)
இவை எல்லாம் வெள்ளாளர் கோவியரகளோடு நெருங்க உதவியது.இதை அறிந்த முன்னாள் பொலிஸ் ஒருவர்(வெள்ளாளர்)இரத்தினத்தை எச்சரித்தார்.அப்போது இரத்தினம் சொன்னாராம் சொன்னதுக்கு நன்றி.முன்பு எனக்கு ஒரு சிலரே எதிரி.இப்போது எல்லோருமே எதிரி.என்னை விட மாட்டாங்கள்.ஒழிச்சு ஓடி சாவதைவிட ஓடாமல் நின்று சாவேன் என சொல்லி அவரை அனுப்பி வைத்தார்
இரத்தினத்துக்கு மிக நெருங்கிய நண்பர் கொடிகாம்ம் அய்யா. மற்றவர் பனியன்ராசன் என அழைக்கப்படும் இராசேந்திரம்.இவர் அப்போது யாழ்ப்பாணம் அநுராதபுரம் பஸ் டிரைவராக பணி புரிந்தார்.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்தி சபை தலைவர் நடராசாவின் தங்கையின் கணவர்.
நவரத்தினம் கொலை வழக்கு சில தவணை விசாரணைகள் முதலில் சாவகச்சேரி நீதி மன்றத்திலேயே நடந்தன.இவ் வழக்குக்கு நல்ல சாதகமானதாக தகவல்களை சத்தியேந்திராவுக்கு கொடுத்தவர் இளையதம்பி என்னும் சீவல் தொழிலாளி.இவர் இரத்தினத்தின் மாமனார்.
இந்த வழக்குக்கு சத்தியேந்திரா வந்தது தமிழரசுக் கட்சிக்கு பிடிக்கவில்லை .நவரத்தினத்தின் வாலான நடராசாவுக்கும் பிடிக்கவில்லை.இத்தனைக்கும. இரத்தினம் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் காலூன்றி இருக்க முடியாது.நவரத்தினம் கூட வெள்ளாளரகளால் இழிவு படுத்தப்பட்டவர்.அவரகளிலும் இரண்டு பிரிவு.என் காலத்தில் கூட பூவன்னா குறியை அழிக்க நினைக்கிறான் எளிய நாய் என பலர் இழிவாக பேச கேட்டிருக்கிறேன்.
(சாதிப் பெயர்களை பாவிக்க நண்பர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அவரகள் நியாயம் சரியானதே.தெளிவாக பிரச்சினைகளை விளங்கவே எழுதுகிறேன்.மன்னிக்கவும்.நான் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் அதில் நம்பிக்கை உடையவன்.வர்க்க ரீதியாகவே சிந்திக்க முயல்கிறேன்.இது நேர்மையான தகவல் சேகரிப்பு.சில விசயங்கள் விடுபடலாம். ஆனால் பொய்கள் இல்லை.)

எனது கிராமத்தில் மூன்று பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.பெரிய மந்துவில் ,கும்பாவெளி,கலட்டி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.இப் போராட்டத்தில் தனியாக பெரிய மந்துவில் மட்டும் பங்கேற்றது.மற்றைய பகுதிகளில் சிலர் ஆதரவளித்தனர்.
எமது பகுதியில் உள்ள ஒரு பகுதி மக்கள் 1935 ம் ஆண்டளவில் வடமராட்சி மண்டான்,கரணவாய் பகுதிகளில் இருந்து உயர்சாதியினரால் ஒரே இரவில் வீடுகளை எரித்தும் கொலைகள் செய்தும் விரட்டப்பட்டு மந்துவிலில் தஞ்சம் புகுந்தவர்கள்.இருந்தாலும் மந்துவில் வெள்ளாளர், நளவர் எல்லோரும் அவர்களை அரவணைத்தனர்.சாதி வேறுபாடு இருந்தாலும் வெள்ளாளர் பாணிகளில் குடியிருந்து அந்த காணிகளை வாங்கி சொந்தமாக்கி கொண்டனர்.இவரகள் இப்போதும் வடமராட்சி தொடர்புகளை அறுக்காமல் உறவுகள் தொடர்கின்றன .
ஆனால் இவர்களுக்கும் பூர்வீகமான எங்களுக்கும் உறவுகள் கிடையாது.இன்றுவரையும் இல்லை.ஆனால் இந்த சாதி எதிர்ப்பு போராட்டம் சாதி வெறியர்களின் கண்மூடித்தனமான பழிவாங்கல் போக்கால் ஒன்றுபட வைத்தது.இன்றுவரை எமக்குள் எந்தவிதமான உறவுகள் ஏற்படாதபோதும் வேறு சாதியினர் அல்லது வேறு ஊரவர் பிரச்சினக்கு வரும்போது எல்லாக் கைகளும் ஒன்று திரளும்.இது இந்த போராட்டத்தின் பின்னால் வந்த ஒற்றுமை.இதனால் இங்கே புலிகளின் சர்வாதிகாரம் கூட தலைநிமிர முடியவில்லை .
சமூகங்களிடையே உள்ள பிரச்சினைகள் ஏற்படுவதும் குறைவு.பயம் காரணம் அல்ல.பொதுவாக அவை தனிநபர் பிரச்சினைகளாக கருதி அவைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
இச் சாதிப்பிரச்சினையில் நம்மை எதிர்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியால் முன்னாள் பா.உ. வே. குமாரசாமியால் வளர்க்கப்பட்டவரகள்.1956 தேர்தலில் குமாரசாமிக்காக வன்முறையில் ஈடுபட்டவர்கள்.
எமது பகுதியும் குமாரசாமியின் கோட்டையாகவே இருந்தது.சேர்.ஜோன். கொத்தலாவல அவர்களை மாட்டுக்கு மாலையிட வைத்து எமது சமூகத்தை எமது ஊரை,சாதியை அவமானப் படுத்தியதால் செல்வாக்கை இழந்தது.பின் தமிழரசுக்கட்சியின் கோட்டையானது.அப்படி இருந்தும் எமக்கு எதிராகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டது.
நவரத்தினம் என்கிற இளைஞனின் கொலை திட்டமிட்ட கொலை அல்ல.அவர் அங்கே வந்தது தவறு.ஆனால் அவரின் குடும்பம் வழக்காடியது.அவருக்கு சாட்சியாக சாதிவெறியரகள் தங்கியிருந்த வீட்டுக்காரி அயிலகண்டம் என்னும் பெண் சாட்சியாக வந்தார்.
இந்த கொலையைத் தொடர்ந்து சாதி உரிமைப் போராட்டம் திசை மாற தொடங்கியது.

No comments: