Friday, November 11, 2011

உயிர் நிழல் இதழ் வெளிவந்துள்ளது....

உயிர்நிழல்இதழ்வெளிவந்துள்ளது....
தொடர்ச்சியான சிற்றிதழ்கள் வருகை!


புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிவரும் மாற்று தமிழ் சிற்றிதழ்களில் உயிர் நிழல் இதழ் குறிப்பிடத்தக்கது.இவ்விதழில் மீராபாரதி,தூவாரகன்,திருமாவளவன்,கலையரசன், பவ்சர்,சிவலிங்கம்,ஆழியாள், பஹிமா ஜஹான்,ஜிப்ரி ஹசன்,எஸ்‍ சிவதாஸ்,ஆகியோர் பங்களித்துள்ளனர். தொகுப்பாசிரியர்களான லக்சுமி,சுசீந்திரன் ஆகியோரின் முயற்சியினால் இவ்விதழ் வருகை சாத்தியப்பட்டுள்ளது.இவ்விதழ் வெளிவர 5 மாதங்களுக்கு மேல் எடுத்துள்ளது.(உயிர் நிழல் தொடர்புக்கு exilpub@gmail.com ) குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் தொடர்ச்சியாக இதழை வெளிக்கொண்டு வர முடியாமைக்கான காரணங்களை, மாற்று தமிழ் சிற்றிதழ் பணியில் ஈடுபாடு கொண்ட அனைவரும் அறிவர்.


இலங்கையிலிருந்து மல்லிகை,ஞானம்,கலையமுதம்,தாயகம் போன்ற இதழ்கள் தொடர்ச்சியான வருகையை கொண்டுள்ளது. அலை,பூரணி,புதுசு, நந்தலாலா, மூன்றாவது மனிதன்,வியூகம்,ஆகவே மற்றும் பல சிற்றிதழ்கள்..... வருகையை நிறுத்தி விட்டன.

எண்பதுகளில் புலம் பெயர் நாடுக‌ளிலிருந்து வீரியத்துட‌ன் வெளிவ‌ந்த‌ ப‌ல‌ ச‌ஞ்சிகைக‌ள் (இருபதிற்கும் மேற்பட்ட இதழ்கள்)தொண்ணூறூகளில் வருகையை நிறுத்தி விட்டன. இன்று புல‌ம் பெய‌ர் நாடுக‌ளிலிருந்து புலம் பெயர் தமிழ்ச் சூழலில் குறிக்கப்பட்ட காலஎல்லைக்குள் என்றில்லாமல் வெளிவ‌ருகின்ற‌ சிற்றிதழ்களாக‌ க‌ன‌டாவிலிருந்து கால‌ம், பிரான்சிலிருந்து உயிர் நிழல், இல‌ண்டனிலிருந்து எதுவ‌ரை, டென்மார்க்கிலிருந்து இனி, நோர்வேயிலிருந்து உயிமெய்,பறை... என‌ சில‌ சிற்றிதழ்க‌ளையே குறித்துக்காட்ட‌ முடியும்.இலங்கையிலிருந்து தற்போது புதிய தலைமுறை படைப்பாளிகளால்,இலக்கிய செயற்பாட்டாளர்களால் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் என்றில்லாமல் பல ச‌ஞ்சிகைகள் வெளிவ‌ருகின்றன.

இலங்கை தமிழ் , புலம் பெயர் தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியான சிற்றிதழ் வெளியீடு இடை நடுவில் தேக்கமுற்று நின்று விடுவதற்கான காரணங்கள் குறித்த உரையாடல் ,சிற்றிதழ்களில் ஈடுபாடு கொண்டு பணிசெய்தோர், எழுத்தாளர்கள்,சிற்றிதழ் வாசகர்களிடையே பொதுத் தளத்தில் நடைபெறுவதன் ஊடாக / தொடர்ச்சியான சிற்றிதழ்கள் வருகையை திட்டமிடலாம் என நம்புகிறேன்.இலங்கை ,புலம் பெயர் தமிழ்ச் சூழலை இணைத்து ஒரு முயற்சியை மேற்கொண்டு பார்க்கலாம் என சில நண்பர்களிடையே கருத்தும் நிலவுகிறது.உங்களது கருத்துக்கள்,ஆலோசனைகளை தயவு செய்து எழுதுமாறு கேட்கிறேன்...
எம் . பவுசர்

No comments: