Showing posts with label -கரவைதாசன்-. Show all posts
Showing posts with label -கரவைதாசன்-. Show all posts

Monday, January 30, 2023

அன்று துரைராசா

-கரவைதாசன்-
அநுபவபகிர்வு....... 

அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்." என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன். நானும் அவரும் எமது பகுதியில் அருகருகே வாழ்ந்து வந்தோம் என்பதை கடந்து வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொண்டு எம்மை பொறுப்புடன் உருவாக்கி அசல் மனிதர்களாய் வாழ்வதற்கான முன்னெடுப்புகளை முன்செய்தோம் பாதியிலே படிப்பினை நிறுத்திய பல எமது கிராமத்து இளைஞர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடத்தினோம். திருக்கோணமலையிலிருந்து வந்திருந்த பொலிஸ் மார்க்கண்டு ராஜாஅண்ணாவிடம் மாலை நேரத்தில் ஆங்கில மொழியினை கற்றோம். இதன் தொடர்ச்சிதான் தனது பிள்ளைகளை ஆங்கில மொழிவழிக் கல்வியில் அவர் கற்பிக்கும் வழிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். மொத்தத்தில் கல்வியின் அவசியத்தினை உணர்ந்தவராக அவர் இருந்தார். எமது கிராமத்தின் மூத்த தலைமுறையினைச் சார்ந்த வ. தங்கமணி , க.இராசரத்தினம் , மு.தவராசா, வீ.எஸ். சிவபாதம், ஆ.சிவகுரு , ஆ.தங்கராசா இன்னும் சிலர் கிராமத்தின் கட்டுமானப் பணிகளான பாடசாலை , சனசமூகநிலையம் , கோவில்கள், சுடலை, தெருக்கள், சங்கக்கடை போன்றவற்றில் களப்பணியாற்றி அவற்றில் அபிவிருத்தியினையும் கண்டனர். இடதுசாரிகளான இவர்களிடையே ரசிய சார்பு ,சீன சார்பு எனத் துருவப்பட்ட நிலையும் இருந்து வந்தது . 1978ஆம் ஆண்டளவில் இத்துருவப்பாட்டு நிலையிலிருந்து விலகி அன்று இளைஞர்களாக இருந்த நாம் ஒரு நிலையில் நின்று உருவாக்கியதே கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகம். என்னிலும் மூன்று வயதுகள் குறைந்த துரைராசா என்னோடு வயதுகள் ஒத்த இளைஞர்களுடன் சேர்ந்து கழகத்தின் களப் பணியாற்றிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் . விளையாட்டுத் துறை , மலை நேர வகுப்பு , கரவை சகாதேவன் குடியிருப்பு ஞான வைரவர் ஆலயத்துக்கு மின் இணைப்பு என பல்வேறு ஆக்கப்பணிகளில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டு செயற்பட்டார். வந்துபோன நாட்களில் 1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம். குற்றப் புலனற்ற கிராமமாக அந் நாட்களில் நாம் கிராமத்தினை வழி நடத்தினோம். கிராமத்தின் வளர்ச்சி வலதுசாரிய அரசியல்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதன் உச்ச செயற்பாடாக ஆயுதாரி இயக்கங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக வந்து கன்பொல்லைதியாகிகளின் சிலைகளை உடைக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு ஊரவர்கள் திருப்பத் தாக்கவே அவர்கள் மறைந்தோடினர். தீ.ஒ.வெகுசன அமைப்பின் ஆயுதத்துக்கு அப்போது பொறுப்பாக சி. புலேந்திரன் இருந்தார். அவர் அந்த கைத்துப்பாக்கியினை வெளிக்கொணர்ந்து சத்தவெடி வைத்தது அப்போது ஆயுதாரி இயக்கப் பொடியளை அந்நாளில் கிலிகொள்ள வைத்தது. மறு நாள் ஊரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முடிவானது. ஆனால் எந்த நடவடிக்கையுமற்று நாட்கள் சென்றன. நானும் உலகனும் துரைராசவும் தோழர் சி.கா.செந்திவேலிடம் சென்று போராட ஆயுதம் கேட்டோம். செந்தில் தோழர் நாம் வந்த விடயம் எனது தந்தையார் தவத்துக்குத் தெரியுமா என என்னிடம் கேட்டார். தெரியாது எனச் சொல்லவே ,நீ போய் படியும் என அறிவு சொல்லி அனுப்பி வைத்தார். நல்லவேளை ஐயாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆயுதத்தினை எப்படி கையாள்வதென எங்களுக்கு மூன்றுநாள் வகுப்புகள் எடுத்தார். இத்தனைக்கும் கட்சியில் நாம் அங்கத்தவர்கள் இல்லை. அவரின் பொறுப்பினை இன்றும் நினைத்து மெச்சுகிறேன். ஆனால் நாம் ஓயவில்லை எங்கள் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் நான், நேசன்,ரங்கன்,உலகன்,துரைராசா,ரவி, எனது மச்சான் செல்வா இவ்வளவு பேருமாக சேர்ந்து கண்டன சுவரொட்டிகளை தயார் செய்தோம். பருத்தித்துறை ,மந்திகை, வல்வெட்டித்துறை, நெல்லியடி நகரங்களில் ஒட்டிவைத்தோம். நெல்லியடி மத்தியசந்தை சுவரின் மேற்பகுதியில் நேசனும் துரைராசவும் பெரும் கண்டனப் பதாகையை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது நான் கீழிருந்து டோச் வெளிச்சத்தினை சுவருக்கு பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை ரங்கன் சந்தியிலிருந்து சமிக்கை தந்தான் ஆமியின் டிராக் வண்டி வருவதாக நான் திருமகள் ஸ்டோர்ஸ் முன் ஒழுங்கைக்குள் இறங்கினேன் செல்வா என்னை பின் தொடர்ந்தான் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்தோம். வந்த டிராக் வண்டி துரைராசவையும் நேசனையும் நோக்கிச் சுடத் தொடங்கியது அவர்கள் இருவரும் கூரைக்கு தாவி பின்பக்கமாக மறைந்துவிட்டார்கள். அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும். எங்களது கண்ணீர்ப் பூக்களை மலர்க் காணிக்கையாக சாத்தியப்படுத்திய நண்பர் திலகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றிகள்...

Sunday, January 23, 2022

திச் நாட் ஹான் "மனம் கொண்டவர்களின் தந்தை" மறைவு

 -கரவைதாசன்- 

"மனம் கொண்டவர்களின் தந்தை. " எனஉலகறிந்த  திச் நாட் ஹான் காலமானார். 

போரும் அமைதியும் வாழ்வாகிப்போன உலகில் சாத்வீகப் போராட்டத்தினால் அமைதியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கற்பித்த மஹாத்மா காந்தி, மாட்டீன் லூதர் கிங்-யூனியர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்படும் ஒருவராக திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) இருந்தார்.

இவர் உலகின் மிகப் பெரிய ஜென் பௌத்தர் ஆவார்,
அவர் பௌத்தத்தைப் பற்றிய கோட்பாட்டுகளில் ஈடுபட்டிருப்பதை விட, பௌத்தத்தை நம் வாழ்விலும், அன்றாட வாழ்விலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதன் வெளிப்பாடாய் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவை மிகவும் நடைமுறைக்குரியவை என்பது எனது மனக்கணிப்பு. ஊடகங்கள் அவரை "நினைவின் தந்தை" என்றும் மனம் கொண்டவர்களின் தந்தை என்றும் அழைத்தன மற்றும் மார்ட்டின் லூதர்கிங்-யூனியர் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார்.

1926ல் வியநாமில்  பிறந்த  திச் நாட் ஹான் தனது பதினாறாவது வயதினில் துறவறம் பூண்டார்,  1960களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இங்கே அவர் கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார்.

அமெரிக்காவில் வாழ்ந்த காலங்களில் தான் அமெரிக்கா வியட்நாம் மேல் மேற்கொண்ட போருக்கு எதிரான பகிரங்க கடிதத்தினை மார்ட்டின் லூதர் கிங்- யூனியருக்கு எழுதினார். தொடர்ந்து பூமி எங்கள் தாய் எனும் பதாகையின்கீழ் மக்களைச் சேர்த்து உலகின் அமைதி வேண்டி அமைதியான ஊர்வலங்கள் செய்தார். இச்செயற்பாடுகளுக்காக அங்கிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார்.

பிரான்சில் உள்ள கான்வென்ட், பிளம் எனும் குக் கிராமத்தில் வசித்தார். அங்கே வசித்துவந்த வேளையில்த்தான் நூற்றுக்கணக்கான மனமும் பெளத்தமும் சார்ந்த புத்தகங்களை எழுதினார். அவரது 90வது வயதில் 2014 இல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது,பேச்சுத் தொடர்பற்றிருந்த அவர் செப்டம்பர் 2015 இல் திரும்பவும் தனது முதல் வார்த்தைகளைச் சொன்னார். 2018ல் திரும்பவும் தாயகம் திரும்பினார். அங்கே து ஹியூ கோவிலில் தனது இறுதி நாட்களைக் கழிக்க அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார்.
சனிக்கிழமை மற்றும் கடைசி ஐந்து நாட்களில் ஹியூவில் தொடங்கும் அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 இவரது  செய்தி எனது சிந்தையை எனதூரின் பக்கம் இழுத்துச் சென்றது. கடந்த 2012ல் நான் ஊர் சென்றபோது கன்பொல்லை  கிராமத்தின் தந்தை அதிபர் க. இராசரத்தினம் அவர்களுடன் சில நாட்களை செலவு செய்தேன். அவ்வேளை அவர் துறவி திச் நாட் ஹான் அவர்களை அவரது பெயரினை குறிப்பிடாது மஹாயானவகையைச் சேர்ந்த இந்த ஜென் பெளத்த துறவிஎன அவரைப் பற்றி  குறிப்பிட்டார். யாழ் கரவெட்டி கன்பொல்லையில் அமைந்துள்ள தமிழ் சிங்கள பெளத்த பாடசாலையான ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் தொடக்கத்துக்கு உறுதுணையாக அமர்ந்த வணக்கத்துக்குரிய நாரத தேரர் அவர்கள் 1966ல் வியட்நாமில் நடைபெற்ற போரை நிறுத்தக் கோரி வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று திச் நாட் ஹான் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து "போர் தவறு" எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொன்னார். இப்பேர்ப்பட்ட வரலாறுகளை சுமந்து நிற்கும் கிராமத்தினை நினைத்து மூச்செறிகிறேன்.

Sunday, August 30, 2020

 நாமும் எங்களால் ஆனது செய்வோம்...

இன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.

Tuesday, August 11, 2020

'நீண்ட காத்திருப்பு" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.

-கரவைதாசன்-

கொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் "நீண்ட காத்திருப்பு" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.