Showing posts with label மீரா பாரதி. Show all posts
Showing posts with label மீரா பாரதி. Show all posts

Monday, March 16, 2015

மீரா பாரதியின் பால்- பாலியல், காதல்- காமம், பெண்- பெண்ணியம்

-ஸ்ரீ ரஞ்சனி விஜயேந்திரா-
ஆரோக்கியமான எதிர்கொள்ளலுக்கு ஒரு சிறு பங்களிப்பாவது செய்யவேண்டும் என்ற நல்லதொரு நோக்கத்துடன் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெண்ணியம் என்ற இந்த நூலை,
மீரா பாரதி அவர்கள் அனைத்துப் பெண்களுக்கும் Shirley க்கும் சமர்ப்பணமாக வெளியிட்டிருக்கின்றார்.
பெண் – பெண்ணியம் என்பது பற்றிய எனது பார்வையை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, நடிகை என பல்வேறு பரிமாணங்களில் செயற்படும், Lena Dunhamன் கூற்றுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். “Feminism isn’t a dirty word. We don’ think women should take over the planet, raise our young on our own or eliminate men from the picture.”
பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குமுறை என்பவற்றுக்கே பெண்ணியம் எதிரானதேயன்றி அது ஆண்களுக்கு எதிரானது அல்ல. ஆதிக்கமற்ற ஒரு உலகத்தை உருவாக்கவே அது முனைகின்றது,
பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் கலாசாரரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புக்களும் இருக்க வேண்டும் என்பதை வலுயுறுத்துவதே, பெண்ணியம் ஆகும்

Tuesday, January 03, 2012

சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும் : தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி..

-மீராபாரதி-

இந்த தலைப்பில் இக் கட்டுரையை – சிறு குறிப்பு எனக் குறிப்பதே பொருத்தமானது – எழுதுவதற்கு முதல் “சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும்” என கூகுள் இணையத்தளத்தில் தமிழில் தேடினேன். துரதிர்ஸ்டவசமாக ஒன்றும் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இவர்கள் இருவரையும் இணைத்து தமிழில் ஆய்வு ஒன்றும் நடைபெறவில்லை என்பதாக கருதலாம். ஆனால் இக் குறிப்பிட்ட தேடலை மட்டும் கொண்டு அவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது அபத்தமானது. நிச்சயமாக யாராவது எழுதியிருப்பார்கள். ஏனனில் இவர்களது பெயரை ஆங்கிலத்தில் எழுதி தேடிய பொழுது பல ஆய்வுகள் நடைபெற்றதை அறிய முடிந்தது.. 80களின் கடைசியில் யாழிலில் இருந்தபோது, கார்ல் மார்க்ஸை ஆர்வமாக ஆனால் மேலோட்டமாக நூனிப் புல் மேய்ந்தேன். இதற்கு குறிப்பிட்ட சிலரின் வழிகாட்டல்களும் இருந்தன. ஆனால் நமது அக்கறை எல்லாம் நடைமுறை செயற்பாடுகளில் இருந்ததனால் இவ்வாறான வாசிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. (செயற்பாடுகளில் என்னத்தை செய்து கிழித்தோம் என்பது கேள்விக்குறியே?) மீண்டும் 90களின் ஆரம்பத்தில் எதிர்கால புரட்சியின் கனவை நினைவில் கொண்டு இவ்வாறான புத்தகங்களை கொழும்பில் இருக்கும் பொழுது வாங்கி அழகுபார்த்ததுதான் மிச்சம். ஆனாலும் புலம் பெயரும் பொழுதும் இந்தப் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தது ஒரே ;ஒரு நம்பிக்கையில் தான். அது, மீண்டும் நாட்டிற்கு சென்று புரட்சிகர செயற்பாட்டில் ஈடுபடுவோம் என்பதே. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக 90களின் கடைசியில் நம்பி செயற்பட்டுக்கொண்ருந்தபோது, ஒரு புறம் அந்த நம்பிக்கை சிதைவுற்று சென்றது. ஆனால் மறுபுறம் இந்த சிதைவுகளுக்கான காரணங்களை எனக்குப் புரிகின்ற வகையில் (மிகச் சரியாக?) விளக்குகின்ற புதிய வகை சிந்தனை என்னுள் உள்வாங்கப்பட்டதனால் அடிப்படை சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, தியானம் தொடர்பான, மிகவும் குறிப்பாக சொன்னால் ஒசோவின் எழுத்துக்களை தவிர்த்து, எல்லாவிதமான வாசிப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இலங்கையிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் அணைத்தையும் கூட கை(கழுவி) விட்டுவிட்டேன். சில கால இடைவெளியின் பின் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவெளில் பல மாற்றங்கள் நடைபெற்றது மட்டுமல்ல பல தலைப்புகளில் பல படைப்புகள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இணையத்தளங்களில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதை, நடைபெற்று வருவதை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே நிச்சயமாக மார்க்ஸையும் பிரட்டையும் இணைத்தும் ஒப்பிட்டும் பல ஆய்வுகள் விவாதங்கள் தமிழில் வந்திருக்கலாம். அவ்வாறு வந்திருப்பின் அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் இக் குறிப்பு அதிக பிரசங்கித்தனமாகவும் ஆழமற்ற பார்வையையும் கொண்டிருந்தால்; ஒதுக்கிவிடுங்கள்;.