எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில் நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும்படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.
