Showing posts with label சி.புலேந்திரன். Show all posts
Showing posts with label சி.புலேந்திரன். Show all posts

Wednesday, April 22, 2015

தீண்டாமை ஒழிப்பு செயலர் சி.புலேந்திரன் அவர்கள் நினைவு

சி.புலேந்திரன் அவர்கள் அண்ணன் அல்ல தோழர்
-கரவைதாசன்-
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அமரர் கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்ரருடன் இணைச்செயலாளர் நாயகம் பொறுப்பேற்று மக்களைத் தீண்டாமைக்கெதிராக பாசறை அமைத்துச் செயற்பட்டு வந்தார்.

கருப்பாகிக் கிடந்த ஈழ மண்ணில் எழுந்து பழுத்து விழுந்த மற்றொரு விதை தோழர் சி.புலேந்திரன் அவர்கள். தொடர்ச்சியான போராட்ட குணமும் சமத்துவத்துக்கான முன் ஏற்பாடுகளையும் கொண்ட கன்பொல்லைக் கிராமத்தில் ஒரு தலை முறையின்  பழுதற்ற விதையாக வந்தவர். 

இனத்துவப் புனைவுகளின்  தொடர் முரண்பாடுகளுக்கிடையேயும் சரியான அரசியல் திசை நோக்கிய பயணம் அவரிடம் இருந்தது. 

மதம் ஒன்று, மொழி ஒன்று, கடவுள் ஒன்று என்ற பம்மாத்துக்கிடையே பலம் தின்று கொட்டை போட்ட மூத்தசந்ததி பட்ட அவலங்கள். சிறை வதைக் கொடுமைகள் இவர் போன்ற தோழர்கள் சரியான அரசியல் தெரிவினைக் கொள்ளும் வாய்ப்பினை இவர்களுக்கு வழங்கிற்று. இடதுசாரிய பாரம்பரியம் மிக்க குடும்பப் பின்புலம் இவருக்கு ஏற்பாக அமைந்திருந்தது. இவரது தந்தையாரும் சிறிய தகப்பனார் ஆ.சிவகுருவும் மூத்த தோழர்களின் வரிசையில் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவர்கள்.

பழைய உலகம் மறைத்து புது  உலகின் இக்காலத்தின் குறியீடாக இவர் வந்தார்.

தனது இடை நிலைக் கல்வியினை கரவெட்டி திரு இருதயக் கல்லூரியல் பெற்ற இவர் இலங்கை அரச கட்டடத்தினைகளத்தில் ஊழியராக கடமை புரிந்தார். பொருளாதார மேம்பாட்டுக்காக ஈராக் சென்று பொருளீட்டி நாடு திரும்பியவர். தனது வழி நடத்தலில் தனது பிள்ளைகளையும் சகோதரியின் பிள்ளை களையும் எமது கிராமத்தில் பட்டதாரிகளின் வரிசையில் நிரல்ப்படுத்தியவர்.