Saturday, December 25, 2010

நூல் அறிமுக விழா

கனடாவில், இளங்கோவன் கதைகள், 
தமிழ் இலக்கியக் களஞ்சியம்
நூல்கள் அறிமுக விழா
 - தொகுப்பு: கெவின் ஆனந்த் (கனடா)
                                                      
'புலம்பெயர்ந்த எம்மக்களது வாழ்வுச் சிக்கல்களை வி. ரி. இளங்கோவனது சிறுகதைகள் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளன. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல அவரது கதைகள் 'நிர்த்தாட்சண்யமான யதார்த்தம்" என்பது உண்மைதான். புகலிட வாழ்வின் அனுபவங்கள் மாத்திரமன்றி தாயகத்தில் வாழ்ந்த அனுபவப் பதிவுகளாகவும், ஒரு மனிதநேயவாதியின் படப்பிடிப்பாகவும் அவரது கதைகள் பளிச்சிடுகின்றன. கலை இலக்கிய அரசியல், மருத்துவ, சட்டத் துறைகளில் சாதனை படைத்த குடும்ப பாரம்பரியத்தில் வந்த இளங்கோவனிடமிருந்து மேலும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்."
இவ்வாறு கனடா ரொறன்ரோ மாநகர நெல்சன் வீதியில் அமைந்துள்ள முதியோர் சமூக நிலைய மண்டபத்தில், கடந்த ஞாயிறு (12 - 12 - 2010) மாலை நடைபெற்ற இரு நூல்களின் அறிமுக விழாவில் உரையாற்றிய கலாநிதி பால. சிவகடாட்சம் குறிப்பிட்டார்.
பாரிஸ் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் 'இளங்கோவன் கதைகள்" (சிறுகதைத் தொகுதி) அவர் பதிப்பித்து வெளியிட்ட கவிஞர் த. துரைசிங்கம் அவர்களின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய நூல்களின் அறிமுக விழா கனடா ரொறன்ரோ மாநகரில் பிரபல எழுத்தாளர் என். கே. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

த. துரைசிங்கம் அவர்களின் அசுர சாதனை
'தமிழ் இலக்கியக் களஞ்சியம்"

இவ்விழாவில் கலாநிதி இ. பாலசுந்தரம் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் த. துரைசிங்கம் அவர்களின் வாழ்நாள் முயற்சியின் வெளிப்பாடாக, அசுர சாதனையாக வெளிவந்திருப்பது 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்". தனிமனிதனின் இந்தச் சாதனையை மெச்சி அவருக்குச் சாகித்திய மண்டலப் பரிசு மாத்திரமல்ல, அதற்கும் மேலான பரிசினை இலக்கிய அமைப்புகள், தமிழ் மக்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டும். தமிழகத்தவர் எம்மவரது சாதனைகளை, படைப்புகளைத் தொடர்ந்தும் இருட்டடிப்புச் செய்துவரும் வேளையில் இத்தகைய ஆவணப்படுத்தும் முயற்சிகள் பாராட்டுக்குரியதாகும். நெருக்கடி மிக்க சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு, பலவருடத் தேடுதலின் பலனாக இந்த நூலைத் தந்துள்ள த. துரைசிங்கம் அவர்களின் பணி இலக்கியத்துறையில் மிகவும் போற்றத்தக்கதாகும். அவரது அசுர சாதனையான இப்பணிக்கு எம் தமிழறிஞர்கள் தலைசாய்த்து வாழ்த்த வேண்டும். இந்நூலின் அடுத்த பதிப்பும் சிறப்புற அமைய எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்" என்றார்.
ஆசிரியர்; த. சிவபாலு பேசுகையில், துரைசிங்கம் அவர்களின் கல்விப் பணி குறித்து நன்கறிவேன் எனவும், அவரது ஆலோசனைகள், செயற்பாட்டு முன்மாதிரிகள், தாயகத்தில் கொத்தணி அதிபராகத் தான் கடமையாற்றவும், கல்வித்துறை - நிர்வாகம் குறித்துப் பல விடயங்களைப் புரிந்துகொள்ளவும் உதவியது என்றும், 'செய்யும் தொழிலே தெய்வம்" என அர்ப்பண சிந்தையுடன் செயலாற்றும் அவரது தமிழ் இலக்கியக் களஞ்சியம் நூலின் இரண்டாம் பாகம் அவசியம் வெளிவர வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும், அவரது குழந்தைப் பாடல்களைக் கனடாவில் கற்பித்துக் கொடுப்பதில் மகிழ்வுறுவதாகவும் குறிப்பிட்டார்.
'தீவகத்தில் கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க குடும்பத்தில் வந்த இளங்கோவன் கல்லூரிக் காலம் முதல் மனிதாபிமானியாக, முற்போக்கு இலக்கியவாதிகளுடன் இணைந்து நடந்தவர். புகழ்பெற்ற நாவலாசிரியர் கே. டானியலின் தோழனாக, அவருடன் கலை இலக்கிய அரசியல் பணியாற்றியவர். இவரது மூத்த சகோதரர் நாவேந்தன் தலைசிறந்த பேச்சாளர். தமிழரசுக் கட்சியின் அன்றைய பிரச்சாரப் பீரங்கி. அவர்களது இலக்கியப் பிரதிநிதி. அடுத்தவர் துரைசிங்கம். ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர். சிறுவர் இலக்கியத்திற்காக நான்குமுறை சாகித்திய மண்டலப் பரிசில்களையும் மற்றும் பரிசில்கள் பலவற்றையும் பெற்ற சாதனையாளர். அடுத்தவர் சிவானந்தன். மருத்துவத்துறையில் பணியாற்றும் இலக்கிய அபிமானி. மற்றவர் வி. ரி. தமிழ்மாறன்.  கொழும்பு பல்கலைக்கழகச் சர்வதேச சட்டபீடத் தலைவர். கலை இலக்கிய அரசியல் விமர்சகர். பல நூல்களை எழுதியவர். இவர்களது தந்தையார் புகழ்பெற்ற சித்த ஆயுர்வேத வைத்தியர். இவ்வாறு ஒரு குடும்பத்தில் அத்தனைபேரும் புகழ்பெற்றவர்களாக விளங்குகின்ற பாரம்பரியத்தில் வந்த இளங்கோவனது நூலைக் கனடாவில் அறிமுகப்படுத்தும் இவ்விழாவில், அவரது கலை இலக்கிய அரசியல் நண்பர்கள், உறவினர்கள் பெருமளவில் இங்கு வந்து சிறப்பிப்பது எதிர்பார்த்தது தான்" என விழாவிற்குத் தலைமை வகித்த பிரபல எழுத்தாளர் என். கே. மகாலிங்கம் குறிப்பிட்டார்.
கலாநிதி க. தேவமனோகரன் பேசுகையில், இளங்கோவன் கதைகளில் தனக்குப் பிடித்த கதைகளின் சிறப்புகள் குறித்தும், அவரது தோழமை, மனிதாபிமானம், நட்பு என்பன அவரது கதைகளில் பளிச்சிடுவதை வாசகர்கள் அறியலாமெனவும், அவரது கதைகளின் சிறப்புக்கருதியே, இலங்கை இலக்கியப் பேரவை - இலக்கிய வட்டம் அவரது கதைத் தொகுதிக்குப் பரிசளித்துக் கௌரவித்தது எனவும், அவருடன் ஏற்பட்ட நட்புக் காரணமாக விஞ்ஞானப் பட்டதாரியான தானும் இலக்கிய ஆர்வலனாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ். பல்கலைக்கழகப் பொருளியல்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ந. பேரின்பநாதன் பேசுகையில், தனது நண்பர் இளங்கோவனோடு சமகாலத்தில் கல்விகற்ற நாட்களை நினைவுகூர்ந்ததோடு, அவரது மனிதாபிமான செயற்பாடுகள், சமூக மேம்பாட்டு எண்ணங்கள், தாயகப்பற்று, இலக்கியப் படைப்புகள் தம்மைக் கவரந்தன எனக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தார்.
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. சோம. சச்சிதானந்தன் பேசுகையில், 'இளங்கோவன் சிறப்புகளை நன்குணர்ந்து, புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் இவ்வருட ஆண்டுவிழாவான 'பூவரசம் பொழுது" நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாரிஸ் மாநகரிலிருந்து அவரை அழைத்தமை தமக்குப் பெருமையளிப்பதாகவும், அவர் எம்மோடு மாத்திரமல்ல, எனது தந்தையின் நண்பராகவும் சமூகப் பணியாற்றியவர் எனவும், அவரது சிறப்புகளை இங்கு பார்த்தும் எம் ஊரவர் பெருமைப்படலாமெனவும் குறிப்பிட்டார்.
கனடா 'உதயன்" பிரதம ஆசிரியர் என். லோகேந்திரலிங்கம் பேசுகையில், தாயகத்தில் நண்பர் இளங்கோவனது கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளை நன்கறிவேன் எனவும்,  அவர் மார்க்ஸிச சிந்தனை வழி செயற்பட்டவர் எனவும், தமக்கிடையேயான அனுபவங்களைக் குறிப்பிட்டு நட்புரையாற்றினார்.
ஈற்றில் ஏற்புரையாற்றிய வி. ரி. இளங்கோவன் கனடா வந்தது முதல் பல வழிகளிலும் தமக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றி கூறியதுடன், தமது கதைகள்pன் உண்மைத்தன்மைகள், சம்பவங்கள் குறித்தும், உளக் கொதிப்புகள் - உணர்வுகள் எவ்வாறு எழுதத் தூண்டின எனவும் விளக்கினார்.
நூல் அறிமுக விழாவினை சிறப்புற ஏற்பாடு செய்த 'நண்பர் வட்டம்" சார்பில் திரு. சூசை மார்க் நன்றியுரை வழங்கினார்.
நூல்களின் முதற்பிரதிகளைப் பிரபல தொழிலதிபர் திரு. குணா செல்லையா பெற்றுக்கொண்டார். மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டமாக விழா சிறப்புற அமைந்ததும், விழாவுக்குக் கொண்டுவரப்பட்ட நூல்கள் யாவும் முடிவடைந்துவிட்டதால் சிலர் நூல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வீடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'பூவரசம் பொழுது" கலை விழாவில்
பிரதம விருந்தினராக வி. ரி. இளங்கோவன்

முன்னதாக, 04 - 12 - 2010 சனிக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்ற, கனடா - புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 'பூவரசம் பொழுது" ஆண்டு விழாவிற்கு வி. ரி. இளங்கோவன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். இந்த ஆண்டு விழாவிலும் வழமைபோல பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

No comments: