Monday, December 06, 2010

விம்பம் 2010 - 6வது  சர்வதேச தமிழ்  குறுந்

திரைப்படவிழாதமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்.
-கே.கே.ராஜா - 

ஆறாவது குறுந்திரைப்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபாடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் கூடிய முறையில் அவர்களது படங்கள் அமைந்திருந்தன .


விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா விருது பெற்ற கலைஞர்கள்

சிறந்த குழந்தை நட்சத்திரம்: ஏ. அஜந்தன்

படம்: 3 இரவு 4 பகல் (பிரான்ஸ்)

vimbam10

சிறந்த நடிகை: லீசா சோனம்


படம்: நேசம் (இலங்கை)

சிறந்த நடிகர்: எம். பாஸ்கர்

படம்: 3 இரவு 4 பகல் (பிரான்ஸ்)

சிறந்த திரைப் பிரதி: ஸ்ரீ. தயாளன்


படம்: கறுப்பு வெள்ளை (பிரான்ஸ்)

சிறந்த தொகுப்பாளர்: பொன். கேதாரன்

படம்: கலாச்சாரம் (பிரான்ஸ்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: சுகிர்

படம்: அம்மணம் (பிரான்ஸ்)

சிறந்த நெறியாளர்: ஐ. வி. ஜன  படம்: 3 இரவு 4 பகல் (பிரான்ஸ்)

Best Film Sri Lanka – இலங்கையில் தயாரான படங்களில்

சிறந்த படம்: 100% Discount

Best Film Exile - புலம்பெயர் நாட்டில் தயாரான படங்களில்

சிறந்த படம்: இனி அவள் (பிரான்ஸ்)

Overall Best Film

எல்லா படங்களிலும்ஃதகைமைகளிலும்

சிறந்த படம்: 3 இரவு 4 பகல் (பிரான்ஸ்)

Audience Voteed Film

பார்வையாளர்கள் தெரிவு செய்த

சிறந்த படம்: 3 இரவு 4 பகல் (பிரான்ஸ்)

போட்டிக்கென வந்திருந்த 47 படங்களில் இறுதிச் சுற்றில் தெரிவாகி விழாவன்று திரையிடப்பட்ட படங்கள்:

1.அம்மாவுக்கு ஒரு கடிதம் S. V. Jeyaraj (London)

2.நேசம் S. Koneshwaran (Sri Lanka)

3. 12.00pm – 12.00am Eric Thompsan (Sri Lanka)

4. Noir et Blanc (கறுப்பும் வெள்ளையும்) P. Ketharan (France)

5.இனி அவள் I. Ramanan (France)

6.3 இரவு 4 பகல் I. V. Jana (France)

7.கலாச்சாரம் P. Ketharan (France)

8.அம்மணம் I. V. Jana (France)
9.100% Discount Nilani Baskaran (Sri Lanka)

10.ஒருத்தி (Oruthi) A Girl by Amshan Kumar (Special Screening)

விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்! - ஜெயன் தேவா -

-விம்பம் அமைப்பின் ஆறாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா 21-11-2010 அன்று லண்டன் கிறீனிச் பல்கலைக்கழக (University of Greenwich) திரை அரங்கில் நடைபெற்றது. -

ஆறு வருடங்களின் முன்பு நடைபெற்ற முதலாவது குறும்பட விழாவில் பங்குபற்றிய படங்களைப் பார்த்தபின்பு புலம்பெயர் சினிமா என்பது தமிழ் நாட்டு சினிமாவின் மலிவுப் பதிப்பு என்ற எண்ணம் தவறானது என்பதை நிரூபித்து விட்டதாக மனதில் தோன்றியது. அந்த எண்ணம் கூடவே ஒரு பெருமித உணர்வையும் அன்று மனதில் ஏற்படுத்தியது இன்றும் ஞாபகத்திற்கு வந்தது. ஒவ்வொரு தமிழ் இல்லத்தினதும் வரவேற்பறைக்குள் தினமும் நுழைந்து கொள்ளும் தமிழ் மசாலா சினிமாவும், செல்வி, சித்தி இத்தியாதி ஸீரியல்களும் தமிழ் ரசிகரின் மனதில் ஏற்படுத்தி விட்ட பாதிப்புக்களை தாண்டி நீங்கள் அறிந்து கொள்வதற்கு வேறொரு விஷயமும் இருக்கிறது என்பதாக தமிழ் குறும்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்திய தளமாக விம்பம் அமைந்தது என்றால் அது மிகையில்லை. சினிமா என்ற கலை வெளிப்பாட்டின் மீதான ஆர்வமும் வித்தியாசமான முறையில் செய்து முடிக்க விழையும் மனோபாவமும் சேர்ந்து புலம்பெயர் தமிழரிடையே பல முயற்சியாளர்களை உருவாக்கியிருந்ததை நான் விம்பம் விழா மூலமே அறிந்து கொண்டேன். செலவாகும் பணத்தை திரும்பப் பெறுவது அறவே சாத்தியமில்லை என்று தெரிந்த போதும் அவர்கள் தமது ஆக்க முயற்சியில் பின் நிற்கவில்லை என்பது போற்றப்படவேண்டிய ஒரு விஷயம்.

ஆறாவது குறுந்திரைப்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபாடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் கூடிய முறையில் அவர்களது படங்கள் அமைந்திருந்தன என்றே தோன்றியது.. இப்படங்களினூடே தமிழ் இளையோரின் இன்னொரு முகத்தை- மிக ஆக்கபூர்வமான முகத்தை- நான் காண முடிந்தது. ஒவ்வொரு படத்தின் பின்னணியிலும் தனிநபராகவும், ஒத்த ஆர்வம் கொண்ட நண்பர் குழுவாகவும் அவர்களது அயராத உழைப்பு வெளிப்பட்டுள்ளது. அவர்கள் நவீன சினிமாவின் மொழியில் நன்கு பரிச்சயம் கொண்டிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிக்கல்களையும், மன அவலங்களையும் சொல்ல முயற்சிக்கிறார்கள். நவீன சினிமாவின் உத்திகளுடன் அவர்கள் எமது சமூகத்தின் பிரச்சனைகளை காட்சிப் பொருளாக்கியுள்ளார்கள்.

நடுவர் குழுவாலும், விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்களாலும் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்ட ‘3 இரவு 4 பகல்’ (3 Nights & 4 Days) என்ற படம் தாய் மண்ணைப் பிரிந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தரைவழி எல்லைகளை பனி உறைந்த இரவுப் பொழுதுகளில் திருட்டுத்தனமாகக் கடந்து இறுதியில் பிரான்சுக்கு வந்து சேரும் தமிழ் அகதிகளின் கதை. ஒரு முழுநீள திரைப்படம் வெளிப்படுத்தியிருக்கக் கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு குறும்படமாக பதினைந்து நிமிடங்களுக்குள் வெளிப்படுத்தியது வியக்கத்தக்க ஒரு முயற்சி. மிகத் தேர்ச்சியான அனுபவசாலிகள் உருவாக்கிய படம் போன்று அமைந்திருந்த இதனை உருவாக்கியவர்கள் மிகவும் இளையோரே. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்த மற்றும் வந்து சேராத தமிழ் அகதிகளின் பயணம் அளவுக்கதிகமான சோக அனுபவங்களை உள்ளடக்கியது. ஐரோப்பாவில் வாழும் ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் இவ்வனுபவங்கள் கனத்த இதயங்களுடன் பேசப்பட்டன. அந்தக் கதைகளில் ஒன்று கண்முன்னே காட்சியாக விரிவடைந்தபோது அது பார்வையாளரின் ஆதரவை இயல்பாகவே தட்டிச் சென்று விட்டது என்று பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி. தாரா அம்ஷன் குமார் என்னிடம் தெரிவித்தார். கதை சொன்ன விதம் ஒரு நேர்கோட்டு முறையில் அமைந்திருந்த போதும் சம்பவங்கள் (பேச்சு) வசனங்களின்றி காட்சி அமைப்பினூடாகவே உணர்த்தப் படுகின்றன. படத்தின் இறுதிப் பகுதியில் வரும் பேச்சு மொழி காட்சிகள் தரும் உணர்ச்சிகளை மேலும் உக்கிரமாக்குகின்றது. நடுவர் குழுவால் வழங்கப்பட்ட நான்கு பரிசுகளையும், பார்வையாளர்களின் தேர்வையும் தட்டிச் சென்றது இப்படம்.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய இன்னொரு படம், தமிழ் இளையோரால் பிரெஞ்சு மொழியில் எடுக்கப் பட்ட ‘கறுப்பும் வெள்ளையும்’ (Noir et Blanc). குறும்படத்தின் வரைவிலக்கணங்களைப் பின்பற்றி ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாக அமைந்த போதிலும் சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லி விடுகிறது. வண்ணப் படமாக இல்லாமல் கறுப்பு வெள்ளையில் எடுத்திருந்தது பார்வையாளன் மனதில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு உத்தியாக அமைந்ததை உணரக் கூடியதாக இருந்தது.

மிகக் குறுகிய நேரத்தில் கருத்தைச் சொன்ன இன்னொரு குறும்படம் ‘இனி அவள்’. புலம் பெயர்ந்த போதிலும் தமிழ் சமூகத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியாத ஓரின பால் உறவு நிலையை இப்படத்தின் மூலம் பகிரங்க விவாதத்திற்கு கொண்டுவரும் உருவாக்க குழுவினரின் மனத் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். (ஆனால் பார்வையாளர் மத்தியிலிருந்து கைதட்டலுக்கு பதிலாக ஏளனச் சிரிப்பொலியை இப்படம் வரவழைத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்).

தொழில் நுட்ப ரீதியான செய்நேர்த்தியுடன் அமைந்த படம் ‘நேசம்’. போட்டிக்கு குறும்படம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட போதிலும் அது முப்பது நிமிடங்களை நிரப்பக் கூடிய ஒரு தொலைக் காட்சி நாடகத்திற்குரிய (tele-drama) அம்சங்களையே அதிகமாகக் கொண்டிருந்தது அப்படத்தின் பலவீனம். கணவன் மனைவியாக நடித்த இரு நடிகர்களும் சிறந்த, இயற்கையான நடிப்பை வழங்கியிருந்த போதிலும் படத்தொகுப்பில் கவனம் செலுத்தாமையால் படத்தின் நீளம் அநியாயத்திற்கு அதிகமாகி தரத்தை இழக்கிறது.

ஐரோப்பிய அல்லது மேற்குலகின் நவீன மாற்று சினிமாவின் பல நுணுக்கங்களை ஒரு குறும்படத்தில் கொண்டு வந்த படம் ‘கலாச்சாரம்’. காட்சியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு என்பவற்றுடன் படத்தின் சிறப்பு நின்று விடவில்லை, பின்னணி இசையைக் கூட காட்சியின் தன்மையைப் புரிய வைக்கும் பாங்கில் பயன்படுத்த முடியும் எனப் புரியவைத்த அரிதான சில படங்களில் இதுவும் ஒன்று. அந்த செயல் நுணுக்கம் இப்படத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு அம்சம்.(பெரும்பான்மையான படங்கள் இரவல் சத்தத்தை இசை என்ற ரீதியில் பயன்படுத்தியுள்ள தன்மை மேலோங்கியிருந்ததை உணரக் கூடியதாக இருந்தது.)

‘100மூ கழிவு’ (100% Discount) இலங்கையிலிருந்து பங்குபற்றியிருந்த படம். குறும்படத்திற்கான தன்மைகளை அது முற்றாகவே புறக்கணித்து, அர்த்தமற்ற காட்சிகளால் நிரப்பப்பட்டு நேரம் இழுத்தடிக்கப்பட்டாலும் ஒளிப்பதிவு, நடிப்பு, போன்ற அம்சங்கள் கவனத்தைப் பெறக் கூடிய முறையில் அமைந்திருந்தன. படத்தின் கரு மிகச் சாதாரணமானதாக அமைந்ததும் அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே விதமான காட்சிகளை திரும்பத் திரும்ப அமைத்ததும் படத்தின் தரத்தைக் குறைத்தன என்றே கூறவேண்டும்.

விம்பம் ஆறாவது சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்சில் வாழும் தமிழ் இளையோரின் படைப்புக்களே பரிசுகளில் ஆதிக்கம் செலுத்தின. தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஏனைய நாடுகளின் இளையோரும் தமது ஆர்வத்தை சிறப்பாக பயன்படுத்தி தரமான படைப்புக்களை போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

விழாவின் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டவர் தமிழ் நாட்டில் ஆவணப் படங்களை உருவாக்கும் முயற்சிகளில் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட திரு. அம்ஷன் குமார் அவர்கள். அவர் தனது உரையில் ‘தமிழ் நாட்டில் தரமான குறும்படங்களையோ ஆவணப் படங்களையோ உருவாக்குவதில் யாரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஈழத் தமிழர்கள் தமது உழைப்பின் மூலம் குறும்படங்களின் தரத்தை மிகவும் பாராட்டக் கூடிய உயரத்திற்கு கொண்டு சென்று விட்டதை நான் பார்க்கிறேன். இதற்கான தளத்தை அமைத்த விம்பம் அமைப்பையும் நான் பாராட்ட விரும்புகிறேன்’ என்றார். அவரது இயக்கத்தில் வெளியான ஒரேயொரு முழுநீளத் திரைப்படமான ‘ஒருத்தி’ யை பார்வையாளருக்கு இலவசமாக காண்பிக்க அனுமதி வழங்கியிருந்தார்.

அமைதி நிறைந்த சூழலில், தமிழ் மக்கள் அரசியல் கலப்பு எதுவுமின்றி மனதிற்குகந்த முறையில் பங்குபற்றி மகிழக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக விழா அமைந்திருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். குடும்ப சகிதம் எவ்வித பயமுமின்றி எத்தனை நிகழ்ச்சிகளுக்கு இன்று தமிழ் மக்களால் செல்ல முடிகிறது? இந்த வகையில் ஐரோப்பா முழுவதும் வாழும் தமிழ் மக்களது குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு கலாசார நிகழ்வாக விம்பம் குறும்திரைப்பட விழா உருவாகியுள்ளதை உணரக் கூடியதாக உள்ளது.

No comments: