Saturday, April 24, 2010

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள்
-மு.வி.நந்தினி -

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.

இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…

“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,

“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.
நன்றி : பெண்ணியம்

No comments: