Showing posts with label K.S.Rathnam. Show all posts
Showing posts with label K.S.Rathnam. Show all posts

Monday, April 04, 2016

நினைவழியா நாட்கள் கே.எஸ். இரத்தினம் நினைவுக் குறிப்பு

-வண்ணைத்தெய்வம்-
கலைஞர்களுடன் கைகுலுக்கி
 நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் 
 உன் மூச்சின்றி முகாரி பாடுதடா!!!
பூஞ்செடிகள், இன்னும், இன்னும் இத்தியாதி, இத்தியாதிகள். யாரையும் மறக்கமுடியவில்லை! 1983ம் ஆண்டு கார்த்திகை மாதம்;, நான் பிறந்து ஓடி விளையாடிய எனது தாய் மண்ணை விட்டு பிரிந்த அந்த நாள், 33 வருடங்கள் உருண்டோடி விட்டது! மறக்கமுடியவில்லை!.... என்னால் மறக்க முடியவில்லை!எனக்கு பிரியாவிடை தந்தனுப்பிய எனது நண்பர்கள் உறவினர்களுடன் நான் பிறந்த வீடு, நான் வாழ்ந்த வீடு, நான் வளர்த்த செல்லப்பிராணி வீமன் என்ற நாய்க்குட்டி, எவையையும் மறக்கமுடியவில்லை! 

இது கலைஞர்கள் வாழ்கின்ற பூங்காவனம். புகழ்பெற்ற பெரும் கலைஞர்கள் 'நவாலியூர் நா.செல்லத்துரை மாஸ்ற்ரர், 'கலைக்காவலர்" சி.தர்மலிங்கம் மாஸ்ற்ரர், குணநாயகம் மாஸ்ற்ரர். இந்த பெரும் கலைஞர்கள் வாழ்ந்த அந்த மண்தான் நண்பன் கே.எஸ்.இரத்தினத்தின் பிறப்பிடமும். இரத்தினம; நான் மறக்கமுடியாத அந்த நண்பர்களில் ஒருவர். ஏன் இவன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, எனது கலை வாழ்வின் குருவும்கூட! 1970ம் ஆண்டு என நினைக்கின்றேன் 'நல்வாழ்வு" என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக இயக்குனர் கே.எஸ். இரத்தினத்தினத்துடன் அறிமுகமாகி, இனிய நண்பர்களாகிய நாங்கள் இறுதிவரை நண்பர்களாகவே இருந்தோம். மறக்கமுடியாத அந்த நினைவழியா நாட்களை இன்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு மிக மிக அண்மையில் ஆத்திப்புலம் என்னும் சிற்றூர். ஆத்திசூடி வீதிக்கு முன்பாக புகையிரதத் தண்டவாளம். அதனைத் தாண்டினால் ஆத்திப்புல மக்களுக்கே பல்கலைக்கழகம்போல் விழங்கிய 'கலைமகள் சனசமூக நிலையம்" அதற்கு பின்னால் ஒரு அகண்ட பெரிய ஓலையால் வேயப்பட்ட வீடு. அதுதான் இரத்தினத்தின் இல்லம். இரத்தினத்தின் கலை வாழ்விற்கு வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இருந்ததில்லை. இவருடைய இல்லத்தில்த் தான் நாடக ஒத்திகை பார்ப்போம். இதனால் தினமும் இரவு ஏழு மணியானால் நான் இவர்களின் வீட்டிற்கு தவறாது செண்றிடுவேன். முகம் தெரியாத வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலும் ஒரு உற்ற சகோதரனைப்போல் கனம் பேணுவது இரத்தினத்தின் துணைவியார் போக்கு; நாடக ஒத்திகைக்கு வருபவர்களில் நான் ஒருவன்தான் வெளியாள். மற்றவர்களான கிங்ஸிலி செல்வக்குமார், சி.ரி.பி. ஜெயா அண்ணன், தேவன் நாகராசா போன்ற அனைவரும் அயலவர்கள்தான். ஓரிரு வாரங்களிலேயே நான் நன்கு அறிமுகமாகிவிட பின்பு அவர்களின் குடும்ப நண்பனாகிவிட்டேன்;.

இவரின் செல்ல மகள் சாந்தி. ஐந்து வயது இருக்கும். பார்ப்பதற்கு லக்ஸ்பிறே மாரின்னில் இருக்கும் குழந்தையின் படம்போல மொழு மொழுவென இருப்பார். நான் சென்றதும் என்னை வரவேற்கும் முதல் ஆள் இவர்தான். இரத்தினத்தின் தந்தையார் ஒரு கலா ரசிகன். நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது அவரும் ஒரு இயக்குனராகவே மாறி நடிப்பின் நுணுக்கங்களைச்; சொல்லித்தருவார். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை.