- க.திருநாவுக்கரசு-
மத்திய அரசு சமீபத்தில் இந்தியைத் திணித்தார்கள். தமிழக மெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ஏதோ சமாதானம் சொன்னார்கள். இப்போது சமஸ்கிருத வாரம் கொண்டாடும் படி மத்திய அரசுப் பள்ளிக்கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்தக் கொண்டாட் டத்தை ஆகஸ்ட் 7 முதல் 13-ஆம் தேதி வரை கொண்டாட வேண்டுமாம்! அந்த சுற்றறிக்கையின் தொடக்கமே எல்லா மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம் என்று எழுதப்பட்டு இருக்கிறது.
சுஷ்மா சுவராஜூம், உமா பாரதியும் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளட்டும். அதன் மூலம் அவர்கள் கட்சிக்காரர்களும், அவர்களும் இறும்பூது எய்தட்டும். நமக்கு கவலையில்லை.
கடந்த ஜூலை 19-ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் போலோ என்பவர் நாடாளுமன்ற சபாநாயகரான சுமித்திரா மகாஜனை சமஸ்கிருத மயமான இந்தியில், நீங்கள் உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கிறபோது கடவுளைப் போல இருக்கிறீர்கள் என்று கூறினார்.
இப்படிப் பாராட்டியபோது எல்லா உறுப்பினர்களும் நிலை குத்தி நின்று விட்டனர். அவர் பாராட்டிய அந்த மூன்று வரிகளில் சமஸ்கிருதம், இந்தி, உருது அடங்கி இருந்தது என்று இந்து தெரிவிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய போலே காங்கிரசுக்குச் சென்றார். அதன் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீகார் சட்டமன்றத்தில் எட்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார். சமஸ்கிருதத்தில் பேச முயல்கிறார். முழு பா.ஜ.க. வாக பயிற்சி எடுக்கிறார். இதிலும் நமக்குக் கவலையில்லை. சமஸ் கிருதத்தில் பேசுகிறார்கள்;
