Saturday, March 05, 2016

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் - சிறுகதை

-நந்தினி  சேவியர்- 







இடதுசாரியச் சிந்தனையாளரான நந்தினி சேவியர்  அவர்களின்  இச் சிறுகதை 1972 ல் மல்லிகையில் வெளிவந்தது. தொடர்ச்சியில்  1994 ல் சுதந்திர இலக்கிய விருதினையும் அதே ஆண்டில் தமிழின்பக் கண்காட்சி விருதினையும் பெற்றது .
நாங்கள் வழமைபோல குந்தியிருக்கும் ஞான வைரவர் கோவில்ஆலமரத்தின் கீழ் குந்தியிருந்தோம். சின்னையரின் தேநீர்க்கடைஇன்னமும் திறக்கவில்லை. முன்புறத்துத் தட்டியை இழுத்துச்சாத்திக் கட்டியிருக்கும் கயிற்றின் முடிச்சு வழமைபோல இறுகியேஇருந்தது. மனிதர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தட்டியைஅவிழ்க்க ஆறுமணியாகிவிடும். அது எங்களுக்குத்தெரிந்துதானிருந்தது. காலைநேர வயிற்றுப் புகைச்சலைத் தவிர்க்கசின்னையர் போட்டுத்தரும் தேநீருக்காக நாங்கள் காத்துக்கிடந்தோம்.எங்களது அணியச் சாமான்கள் ஒதுக்குப்புறமாக விழுதுகளில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தன .
முதல்நாள் ஆறுமுகத்தானின் "வாய்ச்சி "ஆணியொன்றில்பட்டுவிட்டதால் எங்களது அணியத்தில் ஒரேயொரு பொருள் மட்டும்குறைந்திருந்தது .


"கம்மாலைக்குப் போய் அதைத் தோய்வித்துவிடவேண்டும்"

என்று ஆறுமுகம் அடிக்கடி முனகிக் கொண்டிருந்தான். வலதுகை ஊனமாகிவிட்டது போன்ற  மனவருத்தம் அவனுக்கு. ஆப்புகளைப்போட்டுக் கட்டியிருக்கும் சாக்குப் பையையும் ‚வல்லுட்டுக் குத்தி‘யையும் எடுக்கப்போன செல்லையன் இழுகயிறை எடுத்துவரும்கந்தனோடு தொலைவில் வருவது தெரிந்தது. வாய்க்கசப்பைத் தீர்க்கவெற்றிலையைக்கூடப் போடமுடியாமல் சின்னையர்கடைத்தட்டியைத் திறப்பதை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தோம். அந்தஅதிகாலை வேளையில் எம்மைப்போல் எத்தனையோ மனிதப்பிரகிருதிகள் இப்படித் தொழிலுக்குத் புறப்பட்டுப் போவதையும்காத்துக் கிடப்பதையும் நாங்கள் மனப்பூர்வமாக அறிவோம். வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டுபோகும் இந்தநாட்களில் எம்போன்றோரின் அவல நிலைகளை நாம் எமக்குள்எண்ணிப்பார்த்துப் புழுங்குவோம். எமது கைகளின் வலுவானதுசற்றுத் தொய்யுமாக இருந்தால் நாம் மழை இல்லாதபயிர்களாகிவிடுவோம் என்பது எமக்குத் தெரியாமலில்லை.இவற்றைப் பற்றிச் சிந்திக்குந்தோறும் நாம்உணர்ச்சிவசப்பட்டுவிடுவோம்.



எங்களது மனைவி மக்கள் எங்களோடு சேர்ந்து பாடுபட்டபோதிலும்எம்மால் அன்றாடச் செலவுகளைக் கூடச் சரிக்கட்டமுடியாதுசங்கடங்கள் எறபடுவதைப் பற்றித் தீவிரமாக சம்பாஷிப்போம்.படிப்பறிவற்ற எம்மைப்போன்றோருக்கு இவையாவும் புதிர்களாகஇருந்த காலமொன்றிருந்தது. நமது பிள்ளைகளை நாம் ஓரளவிற்குப்படிக்கவைத்தோம் .அவர்கள் ஓரளவிற்காவது நமக்குச்சகலவற்றையும் விளக்கக்கூடிய வல்லமை பெற்றவர்களாகஇருந்தார்கள். எமது கிராமம் பின்தங்கிய நிலையிலிருந்து விடுபடஎமது வாலிபப் பிள்ளைகள் உற்சாகத்தோடு உழைத்தார்கள்.  நாமும்அதற்கு உடந்தையாக இருந்தோம். எமது கிராமம் ஒரு மாறுபட்ட –வித்தியாசமான - மறுமலர்ச்சியுடன் புத்துயிர் பெற்று வருவதை நாம்அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு எல்லாம் மூல காரணம்எமது ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமதுபிள்ளைகளின் உற்சாகமுமே.




எங்கள் கிராமத்தில் அநேகமானவர்கள் கூலித் தொழிலாளிகளாகவேஇருந்தோம். ஆண்கள், பெண்கள் ,வாலிபர்கள், முதியோர்கள் என்றவித்தியாசம் இன்றி நாம் கூலித் தொழில் செய்து சீவியம்போக்காட்டவேண்டியிருந்தது. நாம் கிணறு வெட்டுதல், மண்சுமத்தல்,கல்லுடைத்தல், ஆகிய தொழில்களுடன் பனை அடித்தல், துலாவெட்டுதல், போன்ற தொழில்களிலும் ஒரளவு தேர்ச்சி பெற்றுஇருந்தமையினால் எமக்குள்ளே போட்டிகளும் பொறாமைகளும்இருக்கவில்லை. அப்படியான ஒரு நிலைமை ஒருகாலத்தில்இருந்ததென்னவோ உண்மைதான். அவை மிகுந்த அவமானத்திற்கும்அசூசைக்குமுரிய பழைய மடிந்துவிட்ட நிலைமைகள்.  செத்துப்போனஅந்தக் காலத்தைப் பற்றி நினைக்கும் தோறும் நாம் எமக்குள் மிகுந்தவெட்கமடைவோம்.  இந்த ஒரு நிலைமையே எங்களை ஐக்கியமாக்கஉதவியதெனலாம்.  காலை நேரங்களில் நாம் அந்த ஞான வைரவர்கோவில் ஆலமரத்தின் கீழ் கூடுவோம்.  கலட்டி பூவற்கரைத் திடல்,முடவானை, குச்சம் முதலிய கிராமத்தின் மனிதர்கள் சந்திக்கும்கேந்திர பூமி அது.  அங்கு சின்னையரின் தேநீர்க்கடையில் சூடாகஏதாவதை வயிற்றினுள் தள்ளியபின் சிதறு தேங்காய்களாக நான்குதிக்கும் பிரிந்து உழைக்கச் செல்வது நமது அன்றாட அத்தியாவசியகைங்கரியமாக இருந்துவரும் நித்திய கருமம்.  மைமலில் சோர்வுடன்திரும்பிய பிறகு எமது உடல்களைச் சற்று ஆசுவாசப்படுத்தியபின்எமது குடில்களின் ஒதுக்குப்புறமாக எமது மக்களின்முகங்களைப்போல இறுகி வெடித்துப் பிளந்து கிடக்கும் பொட்டல்வெளியில் கூட்டமாகக் கூடி இரவு இறுகும்வரைசம்பாசித்துக்கொண்டிருப்போம்.  எங்களில் குடிவெறிகாரர்களும்இருந்தோம்.  ஆனாலும் அந்த நிலையில் நாம் எமது குடிசைகளுக்குள்போய் முடங்கிக்கொள்வோம்.  எமது மனைவிமாருக்கும்எங்களுக்கும் இடையில் வாக்குவாதங்களும் வக்கணைகளும்சிலநேரங்களில் மூண்டுவிடுவதுமுண்டு.  அப்போது எல்லாம்மற்றவர்கள் தலையிட்டுச் சமாளிக்கும் ஒரு நிலையைஏற்படுத்தாமல் நாமே அடங்கிப்போகும் ஒரு பழக்கத்தை நாம்உண்டாக்கிக்கொண்டோம்.  பிறருக்கு இடையூறாக நாம்இருக்கவிரும்புவதுமில்லை.  பிறர் எம்மை அதற்குஅனுமதிப்பதுமில்லை.



எம்மைப்போல் தம்மை ஆக்கிக்கொள்ளாத உதிரிகள் சிலர்எம்மிடையே இல்லாமலில்லை.  அவையும் தொங்கு தசையாகிக்கிழடு தட்டிவிட்ட மனிதர்கள்தாம்.  அவர்களின் எண்ணிக்கை மிகமிகச்சொற்பமாகவே இருந்தது.  அந்த மனிதர்களைப்பற்றி நாம் கோபிப்பதுஇல்லை.  காரணம் நிதர்சனத்திலேயே அவர்களை எமக்குப்புரிந்திருந்தது.  காலம் எமக்குச் சரியான திசையைக்காட்டிக்கொண்டிருந்தது.  நாம் தெளிவு பெற்றுக் கொண்டிருந்தோம். எம் கண்முன் ஒரு பாதை தெரிந்துகொண்டிருந்தது.  அதன்வழியேநாம் நமது சந்ததியை வழிநடத்திச் செல்வதற்கு ஊக்கமாகஇருந்தோம்.  வழமைபோலவே சின்னையர் நெடுநேரம் காத்திருக்கவைக்கவில்லை.  அவர் தட்டியைத் திறப்பதற்கு நாம் உதவிசெய்தோம்.  தேநீர்க்கடை சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டது. அடுப்பின் புகையோடு சுகந்தமான சாம்பிராணிப் புகையும் காற்றில்மிதந்தது.  உற்சாகமாக சின்னையர் போட்டுத்தந்த தேநீரைப்பருகிவிட்டு வல்லுவங்களை அவிழ்த்து வெற்றிலையைக்குதப்பியபடி அணியங்களைத் தோளில் ஏற்றிக்கொண்டு நாம்நடக்கத்தொடங்கினோம்.



பிள்ளையார் கோவிலடித் தோட்டவெளியில் இறங்கி  கூவிலைநோக்கி எம் கால்கள் நடந்தன. முதல்நாள் நாம் துண்டுபோட்டபனையில் இன்று சிலாகைகள் அடிக்கவேண்டியிருந்தது.  எங்களதுகால்கள் சற்று வேகமாக நடக்கத்தொடங்கின.  மாயக்கைக் குளத்தைஅண்மி நாங்கள் நடந்தபோது எட்ட நிற்கும் பனை வடலிகளைஊடறுத்து அழுகுரல் சத்தம் கேட்டது.  நாம் துணுக்குற்றுச்செவிமடுத்தோம்.  காற்றிலே மெல்லிய ஒப்பாரியின் அனுங்கல்பரவிவந்தது.  எமது கால்கள் நிதானித்தன.  நாங்கள் கண்களைவடலிகளை நோக்கி எறிந்து நடந்தோம் .தூரத்தில் மாயக்கை முருகன்காலெறிந்து நடந்து வருவது எமக்குத் தெரிந்தது.  நாம் அவனருகில்கடுகி நடந்தோம்.  அவன் கூறிய சம்பவம் எம்மை மிகுந்த அதிர்வுக்குஉள்ளாக்கியது. நாம் திகைத்து நின்றோம்.  எங்களது பால்ய நண்பன்கிட்டினன் பனையால் விழுந்து இறந்துவிட்டான் என்ற செய்திதான்அது.  நாம் வடலிக்குள்ளால் விழுந்து கிட்டினன் வீட்டை நோக்கிஓடினோம்.  வெட்டிப்பிளந்துவிட்ட மரம் எங்களைக் காத்துக்கிடக்கிறதென்ற நினைப்பே எங்களுக்கு மறந்துபோய்விட்டது.  நேற்றுமாலை நிகழ்ந்துவிட்ட அந்தச் சம்பவத்தை நாம் அப்போதுதான்அறிந்தோம்.  எங்களுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டிருந்தது. கிட்டிணனை நாம் சிறுவயதிலிருந்தே அறிவோம்.  அவன் மிகுந்தஉற்சாகமான ஒரு தொழிலாளி .துணிச்சல் நிறைந்தவன்.  யாருக்கும்பயப்படாதவன் முரடன்.   எங்களுக்கும் அவனுக்கும் இடையில்இருந்த அந்த நட்பு மானசீகமானது. 



அது நெருக்கமானதும் பவித்திரமானதும்கூட. சகல தொழிலாளவிவசாயிகளைப்போல அவனிடமும் எங்களிடமும் இழப்பதற்குஒன்றுமே இருக்கவில்லை.  இந்த நிலைமையும் நமது இறுக்கமானபிணைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.  நேற்று முன்தினம் கூடஅவன் எங்களைத் தேடிக் கிராமத்திற்கு வந்திருந்தான்.  தனக்கும்ஊரில் சில  பெரிய மனிதர்களுக்குமிடையில்  ஏற்பட்ட விரோதங்கள்பற்றியெல்லாம் அப்போது அவன் எங்களிடம் பூடகமாகக் கூறினான். தன்னுடைய சமூகத்தவர்களைத் தன்னுடன் நின்று கதைக்கத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினான்.   அந்த மக்கள் மிகுந்தபயமுள்ளவர்களாக இருந்தமையால் கட்டுப்பாடிற்குள் அடங்கிக்கிடப்பதாக அவன் மனமுடைந்து மிக விசனப்பட்டான்.  நாமும்அதைப்பற்றிக் கவலை தெரிவித்தோம்.  இன்று அவன்இறந்துவிட்டான்.  தங்களின் ஒற்றுமையின்மையைப்  பற்றிமனமுடைந்தவன் தனிவழிப் பயணம் புறப்பட்டுவிட்டான்.  எமதுகால்கள் கிட்டினனது வீட்டினுள் பிரவேசித்தபோது அவன் வீட்டின்முன்பு சிறு பந்தல் போட்டு வெள்ளை கட்டப்பட்டிருந்தது. கிட்டினனதுசடலம் பெரிய கட்டிலொன்றில் வளர்த்தப்பட்டிருந்ததது. அவனதுதலைமாட்டில் குத்துவிளக்கொன்று அழுது வடிந்துகொண்டிருந்தது.கிட்டிணனின் மனைவி தங்கச்சியம்மாவும் மகள் செல்லக்கண்டுவும்பெரிதாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். 



நாங்கள் எங்கள் அணியச் சாமான்களை வைத்துவிட்டு கிட்டிணனைஅருகில் சென்று பார்த்தோம் .எமது கண்கள் பனித்து நீரைச் சிந்தின.அன்று எங்களுக்கு வேலைக்குப் போகும் எண்ணமே மறந்துவிட்டது.அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக நாம் அங்கே நின்றிருந்தோம். முருகன் எல்லாக் கிராமங்களுக்கும் 'இழவு' அறிவித்திருந்தான்.  எமதுகிராமத்திலிருந்தும் பலர் வந்திருந்தார்கள்.  எங்களது பையன்களும்வந்திருந்தார்கள்.  சந்தைக்குப் போனவர்கள் திரும்பினர். செத்தவீட்டில் செய்யவேண்டிய அலுவல்கள்நடைபெற்றுக்கொண்டிருந்தன.   நாம் முற்றத்து வேலியோரம் பனைநிழல்களில் குந்தியிருந்து சுருட்டுக்களைப் பற்றுவதும்வெற்றிலைகளை சப்புவதுமாக கிட்டினனைப்பற்றிச்சம்பாசித்துக்கொண்டிருந்தோம்.  நேரம் கடந்துகொண்டிருந்தது. நாங்கள் அயல் கிராமத்து அந்த மனிதனுக்காக எழுந்திருந்து உதவிசெய்ய முனைந்தோம்.  இரண்டு பூவரசம் கதிகால்களைத் தறித்துகிட்டிகளைப் பிணைத்து நாம் பாடை வேலைகளைத்தொடங்கிவிட்டோம்.  ஆறுமுகம் பன்னாங்கு பின்னும் காரியத்தில்இறங்கியிருந்தான்.  மாயக்கையின் மனிதர்களது முகங்கள் இறுகிச்சோர்ந்து கிடப்பதை நாம் அந்த வேளையிலும் அவதானிக்காமல்இல்லை. அதன் அர்த்தம் எங்களுக்குப் புரியவுமில்லை. சூரியன்உச்சியைக் கடந்துவிட்டான். மூன்று மணிக்குமேலிருக்கும்போலிருந்தது.  வந்த மனிதர்கள் பலர் விடை பெற்றுச்சென்றுவிட்டார்கள்.   நாமோ காத்து இருந்தோம்.  அந்த அயல்கிராமத்து மக்கள் மௌனமாக உலாவிக்கொண்டுந்தார்கள்.  அவர்கள்ஏதோ பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாய் ஒதுங்கி ஒதுங்கிநடந்துகொண்டிருந்தார்கள்.  எமக்குப் பொறுமைஎல்லைகடந்துவிட்டது . முருகனைக் கைச்சாடை காட்டிக்கூப்பிட்டான் ஆறுமுகம்.



"என்ன ஆரேனும் .... இன்னும் வரவேணுமே...?"

"இல்லை ...ஆறுமுகம் "
"வந்த சனமெல்லாம் போகுது, எப்ப எடுக்கப்போறியள்...?"


முருகன் விம்முவது எங்களுக்குப் புரிந்தது.   ஏதோ விபரீதம்நடக்கப்போவதாக அவன் அழுவதும் எங்களுக்குத் தெரிந்தது.  ஆறுமுகம் எங்களருகில் விரைந்து வந்தான் . எமது பையன்களும்எமது கிராமத்து மனிதர்களும் வந்தார்கள்.

"கிட்டினன்ரை சவத்தைக் காவ ஒருத்தரும் போகக்கூடாது என்றுதடை விதிச்சிருக்காம், காவச்சம்மதிக்கிறாங்களில்லை....பயப்படுறாங்கள்."


எமக்கு எல்லாம் புரிந்துவிட்டது. சனத்தின் அழுகுரலையும் அதற்குப்பங்குபோடும் மனிதர்களையும்  விட்டு நாம் சற்று ஒதுக்குப் புறமாகநடந்தோம்.  முருகனைத் தனியே அழைத்து மற்றவர்களைக்கூட்டிவரும்படி கூறினோம். அவர்கள் -ஆண்கள் -தயங்கியபடிஎங்களருகில் வந்தார்கள். ஆறுமுகம் சற்றுச் சூடாக அவர்களைப்பார்த்துப் பேசினான்.

"நீங்கள் ...பயந்தவர்கள் ...ரோசமில்லாதவர்கள் "


"எப்படியும் அவங்களிட்டைத்தானே நாங்கள் பிழைக்கிறம்...எங்களுக்கு உதவியில்லை" அவர்கள் தலைகுனிந்து பேசினார்கள்.

"நாங்கள் இருக்கிறம்...பயப்படாதையுங்கோ...கிட்டினனைப்போலஇருங்கோ"  ஆறுமுகம் பேசினான். மாயக்கை வாழ் மனிதர்கள்துணிந்து நிமிர்ந்த அந்த நேரம் நாம் துணிச்சலைக் கொடுத்தவர்கள்என்பதைக் காட்டாமல் ஒதுங்கி நின்றோம். அவர்கள் பரபரப்போடுசவத்தைக் குளிப்பாட்டி வாய்க்கரிசி போட்டு விரைவாகச்செயற்பட்டார்கள். எல்லாம் பரபரப்பாக நடந்து முடிந்தன. முருகன்தேவாரம் பாடினான்.


" கூற்றாயினவாறு ....விலக்ககலீர் கொடுமைபல செய்தன ...."



முன்னே கொள்ளிச் சட்டியுடன் கிட்டிணனின் புத்திரர் நடக்கஅவர்களின் பிறகே வேலியைப் பிரித்துக் கிட்டிணனின் சவம் நாலுமாயக்கை மனிதர்களின் தோளில் ஏறிப் புறப்பட்டது. நாம் எமதுகோடரிகளையும் வாய்ச்சிகளையும் தோள்களில் ஏற்றியபடிசவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தோம். நம்மில் சிலர் பின்தங்கிகிட்டினனது வீட்டில் காவலுக்கு நின்றார்கள். சுடலையைச் சமீபித்தும் கூட நாம் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. சவம்கட்டையில் வளர்த்தப்பட்டு நெஞ்சாங்கட்டை வைக்கப்பட்டது .சவத்தைச் சுற்றி நடந்த கிட்டிணனின் மூத்த பையன் கொள்ளிக்குடம்கொத்தப்பட்டதும் சம்பிரதாயமாகக் கொள்ளிவைத்தான். அதுமுடிந்ததும் காவோலைகளைக் கொளுத்தி நெருப்பைப்பெரிதாக்கினார்கள் மாயக்கை வாழ் மக்கள்.  நாங்கள் மெதுவாகஅங்கிருந்து நகரத் தொடங்கினோம்.  எம்மில் சிலர் சுடலையிலும்எரிப்பவர்களுக்கு உதவியாக நின்றிருந்தார்கள்.

அந்த அயல் கிராமத்து மனிதர்களுக்கு அன்றும்சரி அதற்குப்பிறகும்சரி எதுவித தீங்கும் பிறரால் நேரவில்லை.   அவர்களும்எங்களைப்போல் தங்களையும் ஆக்கிக்கொள்வதற்கு நாம் உதவியாகஇருந்தோம்.  ஒருநாள் அவர்கள் எங்களைப் போலவே  தங்களைஆக்கிக்கொள்வார்கள்.


(மல்லிகை : 1972 )




நன்றி :பிறத்தியாள்

No comments: