Monday, May 12, 2014

ஈழத்துப் பெண் எழுத்தாளர் சித்ரா நாகநாதன்


-மைகேல் கொலின்-
தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து அந்த வருடத்தின் வட-கிழக்கு மாகாண தமிழ் சாகித்திய விருது பெற்றது. இதன் வெளியீட்டு விழா (1990 சித்திரை ) திருகோணமலையிலும் ஆணி மாதம் அறிமுக விழா யாழ் – நாவலர் மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் செம்பியன் செல்வன், அ.யேசுராசா (இன்னும் ஒரு எழுத்தாளர் பெயர் ஞாபகம்வரவில்லை) அக் காலத்தில் இளம் கவியாக அறியப்பட்ட செல்வி மைதிலி அருளையா ஆகியோர் விமர்சன உரைஆற்றினர். அன்றைய காலத்தின் போர்க்கால சூழ்நிலைகளின் காரணமாக பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்த சித்ரா நாகநாதன் 1990 களின் போர் நிலைகளை வைத்து எழுதிய “தாகம்” என்ற சிறுகதை “தாகம்’எட்டாவது ஆண்டு மலரில் (20 இதழில்) வெளியானது. கலாநிதி செங்கை ஆழியான் “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்ற தனது ஆய்வு நூலில் சித்ரா நாகநாதன் பற்றி இவ்வாறு எழுதுகிறார். 
சித்ரா நாகநாதன் எழுதிய சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் மறைக்கப் படக் கூடாத ஆவணங்களாகவுள்ளன . கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் சித்ரா நாகநாதன் தந்துள்ளார். இலக்கியம் ஒரு காலகட்டத்தின் கண்ணாடி எனின் சித்ராவின் சிறுகதைகள் அவ்வாறானபணியினைச் செய்கின்றன.கலாபூர்வமெனும் போது இச் சிறுகதைகள் அடிபட்டுப் போனாலும் சமுகவியலாவணமாக இவை மிளிர்கின்றன.
ஒரு போராளியின் காதலி காத்திருக்கிறாள்,பெற்றமனம், அடம்பன் கொடியும் புத்தாண்டு வெடியும்,மனிதம் இன்னும் மரணிக்கவில்லை,வேதனையின் சுவடுகள், கிராமத்து மண்கள் சிவக்கின்றன, தலைமுறைகள் முதலிய சிறுகதைகள் இந்திய அமைதிப்படைக்காலத்துக் கிழக்கிலங்கையையும் ஆயுதக்கலாசாரத்தின் அட்டூழியங்களையும் சித்தரிக்கின்றன. போராளி ஒருவனின் வருகைக்காக காத்திருந்த அவன் காதலியின் உணர்வுகளை முதற் சிறுகதை சுட்டுகிறது. பெற்றமனம் அற்புதமான கருக் கொண்ட சிறுகதை. ஒரு மகன் விடுதலைப்புலியமைப்பிலும் மற்ற மகன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிலும் உள்ளனர். ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தூக்கிய நிலையையும் ,இடையில் பெற்றமனம் படும் அவஸ்தையையும் பெற்றமனம்சித்தரிக்கின்றது.அத்தாய் கூறுகின்றாள் “வேண்டாம் இந்தபகை நீயும் அவனும் என் வயிற்றில் பிறந்தவர்கள்.இரண்டு பேரும்ஒரு நோக்கதிற்காகப் போனனீங்கள் இப்ப நீங்கள் இரண்டு பேரும் எதிரிகள். உண்மையான எதிரி நின்று புதினம் பார்க்கின்றான். உங்கள் பலவீனத்தினைப் பயன்படுத்துகின்றான்.” இதேமாதிரி ஓராயிரம் தாய்மார்கள் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.வெகு துணிச்சலாக சித்ரா பெற்றமனதை எழுதியுள்ளார். “கிராமத்து மண்கள் சிவக்கின்றன” என்ற சிறுகதையில் காதலன் விட்டுச் சென்ற போராட்டத்தினை காதலி முன்னெடுக்கிறாள்.
முற்போக்கு இலக்கிய கால (1950-1960) ச் சுலோகக் கதையாகவே இச் சிறுகதையுள்ளது. அங்கு வர்க்கமும் சாதியமும்,இங்கு இனவொடுக்கலும் போரும் “மனிதம் இன்னும் மரணிக்கவில்லை”யில் ஜே.வி.பி எனக் காமினியை இலங்கை இராணுவம் தேடுகிறது.தனது மகனை காப்பாற்றி உதவுமாறு தமிழ் குடும்பம் ஒன்றிடம் சிங்களத் தந்தை யாசிக்கிறார்.இது. கிழக்கிலங்கையில் நிகழ்ந்த கதையே.அதில் ஒரு பாத்திரம் கூறுகிறது “சில்வா இலங்கை என்ற ஒரு நாடு உலகப்படத்தில் இருந்து அழியும் வரை இந்தப் பூசல்களும் தொடரும். ஏனென்றால் இதுவரை ஆண்ட இனம் விதைத்ததெல்லாம் துவேச விதைதான். வளரும் சமுதாயத்தை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் “ஒரு கலைஞனின் சாப மொழி யாக இது அமைந்துவிட்டது. .சித்ரா நாகநாதனின் சிறுகதைகள் சிறுமையை, வறுமையை, வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமல்லாமல் அந்நியர்களின் (IPKLF) சுரண்டலை,நாட்டின் பொருளாதார சீரழிவை, கலப்புமணத்தின் முக்கியத்துவத் தை,மத சுதந்திரத்தின் அவசியத்தை, தமிழீழப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை,அரசின் மனித உரிமை மீறல்களை,இயக்க மோதல்களின் அழிவினை, ஒற்றுமையின் அவசியத்தை,அலசி ஆராய்கின்றன. 
சித்ரா நாகநாதன் பெண்ணிய கருத்துக்களை வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.தமிழீழ போராட்டத்தின் பலத்தையும்,பலவீனத்தையும், துணிச்சலாக சுட்டிக் காட்டி எழுதிய முதற் படைப்பாளி .சித்ரா நாகநாதனே என்பேன்..சமுகத்துக் குரிய செய்தி அவரின் சிறுகதைகளில் குவிமையமாக விருப்பதால், கலைப் படைப்பு என்ற நோக்கு வலுவிழந்து விடுகிறது.

No comments: