Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

எரிபாதையின் இடைநடுவே "சாதனா" என்னும் முற்போக்கு வார இதழையும் வெளிக்கொண்டு வந்தார். கூடவே  தன்னம்பிக்கை  முற்போக்கு சிந்தனை நிறைந்த நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஈழத்தினிலே  கடவுள் மறுப்பாளர்களான கம்யுனிஸ்டுகள் அறுபதுகளில் சமஉரிமைக்காக கோவில்களில் ஆலயப் பிரவேச போரட்டங்களினை நடாத்தியதுபோல். கடவுள் மறுப்பாளரான நரேந்திர தபோல்கர் அவர்கள் 2000ம் ஆண்டில் மகாராஸ்டிர அகமது நகரில் உள்ள சின்ன ஷானி சின்கானபூர் கோவில் பெண்கள் அனுமதி மறுப்புக்கு எதிராக போராடி வெற்றி கண்டார்.

சமூக செயற்பாட்டின் வழியில் "பரிவர்த்தன்" என்ற அமைப்பினை தொடக்கி அம்மையத்தினுடே  போதை அடிமைகள் பலரினை போதை அடிமைப் பிடியிலிருந்து விடுவித்தார்.

அரசியல் செயல்ப்பாட்டின் வழியில் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் சாதியத்தீர்ப்புக்களையும் சாதியின் பேரில் நடக்கும் கவுரவக் கொலைகளையும் தொடர்ச்சியாக எதிர்த்தும்  அவ் முட்டாள்தனங்களையும் பகிரங்கப்படுத்தியும் வந்தார்.

அடிப்படையில் மூட நம்பிக்கை மற்றும் மாய மந்திரங்களுக்கு எதிராக சட்டசபையில் மசோதா கொண்டு வரவேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தார். மூடநம்பிக்கைக்கு எதிரான மசோதா கொண்டு வரப்படும் என்று மகாராஷ்டிர அரசு உறுதி அளித்த சில நாட்களில் தபோல்கர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: