Friday, December 23, 2011

"மண்மறவா மனிதர்கள்" நூல் வெளியீட்டு விழா

 -இ .ஏகன்-

'எம் தாயகத்தில் அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய பதினேழு பேரின் ஒப்பரிய பணிகளை நினைவூட்டும் வகையில் 'மண் மறவா மனிதர்கள்' என்ற நூலினைப் பல்கலை வேந்தனாகத் திகழும் டாக்டர் வி. ரி. இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் அரும்பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளது.' இவ்வாறு கடந்த ஞாயிறு மாலை (11 - 12 - 2011) பாரிஸ் மாநகரில் 'மார்க்ஸ் டோர்மா'  தேவாலயக் கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் திரு. எஸ். கே. காசிலிங்கம் குறிப்பிட்டார்.


இந்நூலில் இடம்பெற்றுள்ள பணியாளர்கள் குறித்துப் பலர் உரையாற்றினர்.
'கம்யூனிஸ்ட் கட்சியினால் தான் வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவு ஒழிக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அதன் வெற்றிகளுக்கும் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர் தோழர் நா. சண்முகதாசனின் வழிகாட்டுதல்களும் ஒத்துழைப்பும் இருந்தன.

அந்த வழிகாட்டுதலின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது மனித உரிமைகளை நிலைநாட்ட முடிந்தது' என அரசியல், சமூக விடுதலைப் பணியாளர் திரு இ. யோகரட்ணம் குறிப்பிட்டார்.

'ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்து இயங்கிய மக்கள் எழுத்தாளர் கே. டானியல் தமது அனுபவங்களினூடாகத் தந்த இலக்கியப் படைப்புகள் அவருக்கு மகத்தான புகழைக் கொடுத்ததோடு வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றன. அன்றைய குடாநாட்டின் இருண்ட பகுதிகளையும் அங்கு இடம்பெற்ற கொடுமைகளையும் அவர் வெளிச்சம்போட்டுக் காட்டினார். தமிழக விமர்சகர்களாலும் விதந்தோதப்படுகின்ற உன்னதப் படைப்பாளியாக டானியல் திகழ்கிறார்' எனக் கலைஞர் காவலர் வண்ணை தெய்வம் குறிப்பிட்டார்.

'வடபகுதியின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகப் பூபாலசிங்கம் புத்தகசாலையும் பெயர் பெற்றுவிட்டது. யாழ் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்டபோது பூபாலசிங்கம் புத்தகசாலையும் எரிக்கப்பட்டது. அதன் பெருமையை, சேவையை அதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்கள் கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராயினும் அவர் சகல அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் என எல்லோருடனும் சகஜமாகப் பழகும் அற்புதமான மனிதராகவே விளங்கினார். பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்வரை நாடிவரும் அறிவுக்கூடமாக அப்புத்தகசாலையை அவர் வளர்த்தெடுத்தார்' என ஊடகவியலாளர் எஸ் . கே. இராஜென் குறிப்பிட்டார்.

'தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் சினிமா, வானொலி, மேடையெனக் கலைத்துறையில் உச்சத்தைத் தொட்டவர் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன். அவர் தான்தோன்றிக் கவிராயர். அவருடன் பழகுவதே சுகானுபவம். அந்த மாபெரம் கலைஞனுடன் பணியாற்றிய காலங்களை மறக்கமுடியாது. அவருடன் நன்கு பழகிய வி. ரி. இளங்கோவன் அவரை மறக்காமல் இன்றுவரை அவர் குறித்து மேடைதோறும் குறிப்பிடுவதோடு நூலிலும் பதிவுசெய்துள்ளமை பாராட்டுக்குரியது.' என மூத்த கலைஞர் 'அப்புக்குட்டி' இராஜகோபால் குறிப்பிட்டார்.

'ஆணாதிக்க சமுதாயத்தில், அன்று பெண்களின் உரிமைகளுக்காக, மேம்பாட்டுக்காக பாடுபட்ட பெரும் தலைவி வேதவல்லி கந்தையா. அன்றைய காலகட்டத்தில் வடபகுதியில் கம்யுனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து பெண்கள் பணிபுரிவது என்பது உண்மையில் துணிச்சல்மிக்க நடவடிக்கையாகும். இவர் தனது கணவருடன் சரிசமமாக மக்கள் சேவையில் தம்மை அர்ப்பணித்து, பெண்கள் முன்னேற்ற நடவடிக்கைகளிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தீவிரமாக இயங்கி மக்களின் அபிமானத்தைப் பெற்ற மாதரசியாவார்' என ஆசிரியர் திருமதி வாணி தியாகராசா குறிப்பிட்டார்.

'எல்லோருக்கும் இனிய மனிதனான ஆர். சிவகுருநாதன் 'தினகரன்' பத்திரிகையில் நாற்பது ஆண்டுகள்வரை தொடர்ந்து பணியாற்றியமை உண்மையில் சாதனை தான். எல்லோருடனும் அன்பாகப் பழகும் அவர் சட்டத்துறையிலும் நுழைந்ததோடு உழைக்கும் பத்திரிகையாளர்; சங்கம், கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஊடாகவும் பணியாற்றித் தமிழ், சிங்கள மக்களின் அபிமானத்தையும் அன்பையும் பெற்றார்' என மூத்த பத்திரிகையாளர் இரத்தினம் கந்தசாமி குறிப்பிட்டார்.

'இலங்கையெங்கும் பாராளுமன்றம் முதல் அரச பணிமனைகள், நீதிமன்றங்கள்வரை பணியாற்றும் பல்லாயிரம் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்களை அன்று உருவாக்கியதோடு, ஈழத்து வழக்குமொழி நடைக்கேற்ப குறியீடுகளையும் உருவாக்கி அதற்கான நூலினையும் வெளியிட்ட ஆசான் ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை சி. இராமலிங்கம்' என அவரது அரும்பணிகளை எடுத்துரைத்தார் அன்று அவரது மாணவராக விளங்கியவரும், இன்று பாரிஸில் பிரபல வர்த்தகராக விளங்கும் திரு எஸ். பாஸ்கரன்.

'மண் மறவா மனிதர்கள்' நூலில் இடம்பெற்றுள்ள பணியாளர்களான புங்குடுதீவு பெற்ற தமிழறிஞர்கள் வித்துவான் சி. ஆறுமுகம், வித்துவான் பொன். அ. கனகசபை, பண்டிதர் வி. வ. நல்லதம்பி, கலாநிதி க. சிவராமலிங்கம், மற்றும் சர்வோதயத் தொண்டர் க. திருநாவுக்கரசு, மக்கள் மனம் நிறைந்த உயர் நிர்வாகி சி. சடாட்சரசண்முகதாஸ், 'பாரதி நேசன்' வி. சின்னத்தம்பி, மருத்துவக்கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி, கவிஞர் சு. வில்வரத்தினம் ஆகியோர் குறித்தும் உரைகள் இடம்பெற்றன. திருவாளர்கள் சி. குமாரதாஸ் - நேசன், இலங்கையர் கனகசபை அரியரத்தினம் ஆகியோரும் உரையாற்றினர்.

நூலின் முதல்பிரதியைப் பொதுப்பணிகளுக்கு முன்னின்று உதவும் வர்த்தகர் திரு எஸ் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் நாட்டிலுள்ள தமிழிலக்கியப் படைப்பாளிகள், கலைஞர்கள், வாசகர்கள் என மண்டபம் நிறைந்து நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: