Showing posts with label -கரவைதாசன்- Yoga master. Show all posts
Showing posts with label -கரவைதாசன்- Yoga master. Show all posts

Tuesday, September 30, 2025

எங்கள் தோழர் யோகா மாஸ்டர்




-கரவைதாசன்-

எங்கள் தோழர் பற்றிய குறிப்பு:-

மக்கள் எனும் கடலில் கம்யூஸ்ட்டுக்கள் மீனாக நீந்தவேண்டும். தொடர்ச்சியில் யோகாமாஸ்ரர்....

யார் இவர் அவரோ? அவரே தான் தோழர் "சைவம்", என நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தில் சீனசார்புகம்யூனிசத் தோழர்கள் கா. சிவபாதம், கே.எஸ். இரத்தினம், ஆ.சிவகுரு, வெ.பரமகுரு, கரவை அமுதா ஆ.சுந்தரம்,ஆ.தங்கராசா எனக் குறிப்பிட வல்லாளர்களால் விளிக்க கேள்விப்பட்ட அவர்தான் இந்த ஆளுமை தோழர் ஏ.ஜி. யோகராஜா அவர்கள். பின்னாளில் புகலிடத்தில் இவர் மனிதம்குழு யோகராஜா மாஸ்டர் என எனக்கு அறிமுகமானார்.

மாற்று அரசியல் சிந்தனை, புதியன புனையும் இதழியல், நாடகம், இலக்கியம், புதிய பண்பாட்டிற்கான செயற்பாடு அந்தோனியோ கிராம்சியில் தொடங்கி அமைப்பியல்,பின்நவீனத்துவம் என தெரிதா வரையிலான பரவலான வாசிப்பு வாசித்தவற்றை உரையாடலுக்கு உட்படுத்தும் உயர்ந்த இயக்கம் இத்தனையும் சிறக்க தன்னகத்தினிலே கொண்ட சிறந்த ஆளுமை யோகாமாஸ்ரர்.

யோகா மாஸ்ரரின் இவ்வாளுமைச் செழுமை அறுபதுகளில் வட அல்வாயில் எஸ். எவ். போஜியா மாஸ்ரர் அவர்களின் முடிதிருத்தும் கடை ஒரு கம்யூனிச கட்சிக் காரியாலயம் போலவும் பல்துறை வசிகசாலைபோலவும் இயங்கிய காலத்தினிலேயே தொடங்கிற்று பின் எழுபதுகளில் அல்வாயைச் சேர்ந்த சீன சார்பு கம்யூனிஸ்ட் தோழர் செல்லையா அவர்களின் தோழமையில் ஊக்கம் பெற்று பரிமானம் கண்டது.

அந்நாட்களில் சிவபாதம், எட்வேட், சிவரத்தினம், காத்தலிங்கம், ஜெயபாலு அருட்செல்வம் ஆகியோருடன் சேர்த்து அயல் கிராமத்துத் தோழர்களான எழுத்தாளர் நந்தினி சேவையர், வயல் நவம், ஜெயநிதி, ரஞ்சிதராசா ஆகியோருடன் இணைத்து கம்யூனிஸ வாலிபசங்கத்தில் இவருக்கும் அங்கத்துவம் கிடைத்தது.

அதன் இணைப்பில் வட அல்வை பல நோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை பொதுமைப்படுத்தும் முயற்சியில் தோழர்களுடன் சேர்ந்து பெரும் பங்காற்றினார். அதில் வெற்றியும் கண்டார்கள், தொடர்ச்சியில் குருத்து இலக்கிய வட்டம், அல்வாய் யுவசக்தி விளையாட்டுக் கழகம் என பரந்து செயற்பட்ட தோழர்

மத்தொனி இரத்தினம், நெல்லியடி சிவராசா, நெல்லியடி சிவம் தோழர்களுடன் கன்பொல்லை கிராமத்து சாந்தி இல்லம் கே.எஸ். இரத்தினம் வீட்டுக்கு தங்களது கட்சி நடவடிக்கைகளுக்காக அடிக்கடி வந்து போவதை எனது கடுக் கண்ட வயதினில் நான் கண்டு வந்திருக்கின்றேன்.

கம்யூஸ்ட்டுக்கள் மக்கள் எனும் கடலில் மீனாக நீந்தவேண்டும். அதன் தொடர்ச்சியில் இயங்கி வரும் யோகாமாஸ்ரர் மாற்று சிந்தனைப் போக்கில் மனிதம் குழுவில் ஒரு முக்கியமான செயற்பாட்டாளராக செயற்பட்டதும் புலம்பெயர் நாடக எழுத்துருக்கள், எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! போன்ற சிந்தனைக்குரிய நூற்களை எழுதியிருப்பதுவும் எமக்குக் கிடைத்த கிடைப்பனவே. எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! எனும் சமூக சமத்துவம் அடுத்தகட்ட நகர்வு குறித்த முன் வரைபில் கையாளப்பட்டுள்ள மொழி அவரது பின் நவீனத்துவ வாசிப்பின் போக்கினை சாற்றி நிற்கின்றது தொடர்ந்து புதியன கற்றுக் கொண்டு உங்கள் அனுபவங்களையும் சேர்த்து பொருண்மைப் பார்வையில் இன்னும் நூல்கள் யோகாமாஸ்ரர் எழுத வேண்டும்.

நீடு வாழ்க தோழர் ....