Showing posts with label சாரு மஜூம்தார். Show all posts
Showing posts with label சாரு மஜூம்தார். Show all posts

Sunday, February 07, 2016

ஓர் புரட்சியாளரின் வாழ்க்கை பற்றிய குறிப்புரை

''நாங்கள் பட்டினியால் சாக மாட்டோம்... துப்பாக்கிக் குண்டுகளால் சாவோம்''

-சாரு மஜூம்தார்

(Tamil version of an article from ''Charu Mazumdar- The Man and His Legacy''- Liberation Publication)

தமிழில் :சி. மதிவாணன் 



(ஆகஸ்ட் 8, 2015ல் இதே பக்கத்தில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம்- புதிய வாசகர்களுக்கா)


சாரு மஜூம்தார் 1919ஆம் ஆண்டு வாரனாசியில் பிறந்தார். தேதி சரியாகத் தெரியவில்லை. அது ஜெய்த்திசியா என்ற வங்காள மாதம். ஆங்கிலக் கணக்குப்படி மே-ஜூன் மாதம். அவருக்கு 7 வயது இருக்கும்போது சிலிகுரியில் உள்ள அவரின் பெற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



சிலிகுரி என்ற ஊர் தற்போதைய மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் இருக்கிறது. சிலிகுரி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவரை ஆறாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவர் அங்கு மெட்ரிகுலேஷன் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் (தற்போது வங்கதேசத்தில் இருக்கும்) பாப்னாவில் உள்ள எட்வர்டு கல்லூரியில் 1937ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும் படிப்பை முடிக்காமலேயே சிலிகுரிக்கு வந்து சேர்ந்தார்.



அவர் பள்ளியில் படிக்கும்போதே தேசிய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். 1938ல் காங்கிரஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். அவரது தந்தை பிரேஷவர் மஜூம்தார் டார்ஜிலிங் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அவருடைய தாய் உமா சங்கரி தேவி மிகவும் முற்போக்கான பெண்மணி. அவர் மக்கள் இயக்கங்களையும் பல்வேறு நல்ல பணிகளையும் ஆதரித்து வந்தார். சாருவின் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது.