-ரங்கநாயகம்மா (ஆங்கிலம்) தமிழில் கொற்றவை-
‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல் ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதவில்லை தான்; இருப்பினும், அவரது எழுத்துக்களில், இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும், மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் மார்க்ஸ் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார். இந்த அவதானிப்புகள் மூலம், சாதி கருத்தியல்களையும், அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ளவியலும்.
உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோ) மக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இந்தியாவில், அத்தகைய எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்தியாவுக்கல்ல, ஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது மேலும் அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.
