அருந்ததி ராய்
தமிழாக்கம்: அந்திவண்ணன்
விலை ரூ.30 – மகஇக – திருச்சிக் கிளை வெளியீடு
அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதி பெரும் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை மூலத்தின் சுவையும், பொருளும் குன்றாமல் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டு திருச்சி மக்கள் கலை இலக்கியக் கழக வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதே கட்டுரையை வேறு இரு பதிப்பகங்களும் வெளியிட்டிருந்தாலும் அவற்றை விட இந்த மொழிபெயர்ப்பு தரமானது என்பதை வாசகர்கள் ஒப்பிட்டு அறியலாம்.
நூலிலிருந்து சில பகுதிகள்:
மண்டேலா முதல் ராக்பெல்லர் வரை, அன்னா ஹசாரே முதல் வேதாந்தா வரை… கார்ப்பரேட் நற்செய்தியின் இந்தப் புனிதப் பேராயர்கள் இனி எத்தனை காலம்தான் நமது எதிர்ப்பை எல்லாம் விலை பேசி வீழ்த்துவார்கள்?
இது தங்குமிடமா அல்லது இல்லமா? புதிய இந்தியாவின் கோவிலா அல்லது அதன் பேய்கள் உறையும் கிடங்கா? மர்மத்தையும், அரவமற்ற அச்சுறுத்தலையும் உமிழ்ந்தபடி, மும்பையின் அல்டமாண்ட் சாலையில் ஆன்டிலாவின் வருகை நிகழ்ந்த தருணம் முதல் எதுவும் முன்பு போல் இல்லை. “ இதோ வந்து விட்டோம், இதுதான் அது. நம் புதிய மன்னருக்கு உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள்” என்றார் என்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பர்.
ஆன்டிலா, இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானது. இருபத்தி ஏழு அடுக்கு மாடிகள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், ஒன்பது மின் தூக்கிகள் (லிஃப்டுகள்), தொங்கு தோட்டங்கள், நடன அரங்குகள், சீதோஷண அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கார்களை நிறுத்துவதற்கு மட்டும் ஆறு தளங்கள், பராமரிக்க அறுநூறு சிப்பந்திகள் என நீளுகின்ற, இதுகாறும் எவரும் கட்டியிராத ஊதாரிச் செலவினம் கொண்ட இந்தக் குடியிருப்பு பற்றி நான் ஏற்கெனவே படித்திருந்தேன். எனினும், இதோ என் கண்ணெதிரே 27 மாடிகள் உயரத்திற்கு உலோக வலையின் மீது ஒட்டப்பட்டு நெட்டுக்குத்தாக நிமிர்ந்து நிற்கும் புல்வெளியை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. அதில் திட்டுத்திட்டாய் புற்கள் உலர்ந்திருந்தன, கச்சிதமான செவ்வகங்களாக சில துண்டுகள் உதிர்ந்தும் இருந்தன. ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ என்ற கொள்கை வேலை செய்யவில்லை எனப் பளிச்சென்று தெரிகிறது! (முதலாளிகளிடமிருந்து செல்வம் மெல்லக் கசிந்து கீழிறங்கி மக்களுக்கு வந்து சேரும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் வாக்குறுதியை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.)
