Thursday, June 09, 2022

அருட்திரு.கீத பொன்கலன்

 


-மல்லியப்புசந்தி திலகர் -

தான் ஒரு மதகுருவானபோதும், மலையகத்தவர் அல்லாதபோதும் மலையக மக்கள் குறித்த அக்கறையாளராகவும் ஆய்வாளராகவம் திகழ்ந்த அருட்திரு.கீத பொன்கலனின் மறைவு மலையக அரசியல், சமூக ஆய்வுப்பரப்பில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மதத்தைக் கடந்து மலையகத்தை நேசித்த சிந்தனையாளர். அன்னாருக்கு மலையக மக்கள் சார்பில் எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


பண்டாரவளை லியோ மார்கா ஆச்சிரமத்தைச் சேர்ந்த அருட்தந்தை கீத பொன்கலன் திருகோணமலை கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி மரணமானார். இவரது இழப்பு குறித்து அனுதாபச் செய்தியொன்றை வெளிளியட்டிருக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு ஆரம்ப கல்வியை கற்று, கண்டி குருநிலைக்கல்லூரியில் மறையியல் பட்டம்பெற்று பின்னர் பெல்ஜியம் லுவேன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம் பெற்றவரான சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் மதகுருவாக மலையகப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக வாழ்ந்தவர். இதனால் மலையக மக்கள் தொடர்பான பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மலையக மக்களின் கல்வி முன்னேற்றம் கருதியும் தொழில்நுட்ப கல்வி, ஆசிரியப்பயிற்சி என பல்வேறு செயற்றிட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர். பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகளை தனது ஆய்வின் மூலம் எழுதி வந்தார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் புலமையாளரான இவர் எழுதிய நூல்கள் பல்வேறு விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகளை; கொண்டதாக அமைந்துள்ளமை சிறப்பு. ‘மலையகத்தமிழரும் அரசியலும்’ எனும் இவரது நூல் காலனித்துவ காலம் முதல் 1990 கள் வரையான மலையக மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வு செய்துள்ள வரலாற்று ஆவணமாகும். 

தனியே ஆய்வாளராக மாத்திரமல்லாது மலையக சிவில் சமூகங்களுடன் கலந்துரையாடல்கள் சந்திப்புகளில் பங்குபற்றி வந்த இவர் மலையக மக்களின் சுபீட்சத்துக்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மலையகப் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பத்து ஆண்டு திட்டத்தயாரிப்புகளின் போதும் இப்போது முன்வைக்கப்படவுள்ள ஐந்து ஆண்டு திட்டத் தயாரிப்புகளின்போதும் தனது கருத்துக்கள் மூலம் பங்களிப்பு செய்தவர். ‘பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவகம்’ (Trust) குறித்த அவரது ஆங்கில ஆய்வு நூல் மலையக மக்களுக்கான தனியான அதிகார சபை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

மலையகப் பூர்விகம் அல்லாதவர்கள் மலையக இலக்கியத்திற்கு அதிகளவு பங்களிப்பு செய்திருக்கும்போதும் கூட ஆய்வு மற்றும் செயற்பாட்டு பக்கங்களில் மிகக்குறைந்தளவினரே பங்களிப்பு நல்கியுள்ளனர். அந்த வகையில் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை, பாலசிங்கம், ஞானமுத்து போன்றவர்களின் வரிசையில் மலையக மக்களுடன் தொடர்புடைய ஆய்வு முயற்சிகளில் பங்கேற்ற பெருமை அருட்திரு.கீத பொன்கலன் அவர்களுக்கு உண்டு. மலையக தேசியம் குறித்த தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்த அன்னாரின் மறைவு மலையக ஆய்வு முயற்சிகளில் ஏற்பட்ட ஓர் இழப்பாகும். அன்னாரின் இழப்புக்கு மலையக மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். 

நன்றி: நமது மலையகம் 

No comments: