Thursday, February 18, 2021

கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம்..

ஏற்க மறுக்கும் உன் இறப்பின் செய்தி . சிவப்பாக தோன்றி செம் மஞ்சளாய் நின்று மறைந்தார் கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம். விழி சொரிந்து அஞ்சலிக்கிறோம்.  

கவிஞர், நாடகக் கலைஞர்,  நாடக ஆசிரியர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொலைக்காட்சிப் பிரபலம் என புகழிடச் சூழலில் நன்கறியப்பட்ட யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வண்ணைத்தெய்வம் எங்கள் கன்பொல்லை கிராமத்தின் நன்கறியப்பட்ட நண்பர். அந்நாட்களில் இலங்கையில்  இடதுசாரிய அரசியலுடன் தன்னை அடையாளப்படுத்தியவர் பின்னாளில் புகழிடச் சூழலில் தமிழ்தேசிய அரசியலுடன் தன்னை நிலைப்படுத்தி தனது கலைப்பயணத்தினை தொடர்ந்தவர். இவரால்  கொண்டு வரப்பட்ட "காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்"  எனும்  சிறப்பு நூலினை எங்கள்  கிராமத்துக்  கலைஞர்  கே.எஸ்.இரத்தினம் அவர்களுக்கு காணிக்கை செய்திருந்தார். அந்நூலில்  தனது கலையுலக வாழ்வின் குரு எங்கள் கிராமத்தினைச் சேர்ந்த  கே.எஸ். இரத்தினம் அவர்கள் என பதிவு செய்துள்ளார்.  எங்கள் கிராமத்தின்  கனுவில் சனசமூக நிலையம் ஒரு காலத்தில் ரஷ்ய சார்பு, சீன சார்பு என இரண்டாக பிரிந்து செயற்பட்டபோது நாடக மன்றமும் இரண்டாக பிரிந்து செய்யற்பட்டன. சீனசார்பு கலைமகள் கலாமன்றம் எனும் பெயரிலும் ரஷ்ய சார்பு ஜெயசூரியன் கலாமன்றம் எனும் பெயரிலும் பிரிந்து  செய்யற்பட்டன. 1978 ஆம் ஆண்டளவில் சீன சார்பு கம்யூனிஸ்ட்கள் சர்வதேச  ரீதியில் திரும்பவும் இரண்டாகப்  பிரிந்தபோது இலங்கையில் என்.சண்முகதாசன்  தலைமையில்
ஒரு பகுதியனரும், கே.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் இன்னொரு பகுதியினருமாக பிரிந்தபோது ஊரிலும் அப்பிரிவு  ஏற்பட்டது. அத்தோடு சீனசார்பு கலைமகள் நாடகமன்றும் ஸ்தம்பித்துப் போய்விட்டது. அதன் பின் கே.எஸ்.இரத்தினம் அவர்களும் ச.நவரத்தினம் அவர்களும் இணைந்து கரவை நவரசகலாலயம் எனும் பெயரில் பொதுவாக ஒரு நாடகமன்றினை உருவாக்கினார்கள். அதில்  நானும்  அங்கம் வகித்திருந்தேன்.  நவரசகலாலயம் இலங்கையில் பலபகுதியிலும் நாடகங்களை அரங்கேற்றியது.  அதில் அதிகப் படியான மேடையேறிய "மாலிக்கபூர் "வெற்றித்திருநகர்  இந்த  இரண்டு அரச நாடகங்களையும் எழுதி வசனகர்த்தாவாகவும் செயல்ப்பட்டவர் கலைக் காவலர்  வண்ணைத்தெய்வம் அவர்களே. கலைக்காவலர் வண்ணை அவர்கள் காலமாகிப்  போயிருக்கும்  இத் தருணத்தில் அவரோடொத்த மறைந்தொரு
கலை வரலாற்றினை நினைவூட்டக் கிடைத்தது.
 எங்கள்  கிராமத்தில் கலை இருக்கும் வரை சிவப்பாகித் தோன்றி செம்மஞ்சளாய் நின்ற வண்ணையின்  நாமம் நிலைத்து  வாழும். .

No comments: