Saturday, October 12, 2013

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறிவரும் வடமாகாணம்

வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதும், அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகளவான தெற்கைச் சேர்ந்த ஆண்கள் வடக்கை நோக்கி நகர்ந்துள்ளதும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட களம் அமைத்துக் கொடுள்ளது என பாலியல் தொழிலாளர் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவி விசாக தர்மதாச தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவைத் தொடர்ந்து அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் வடக்கை நோக்கிச் சென்று தங்களது சொந்தங்களை பார்வையிட்டு வருவதாகவும் இதுவும் வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சூடுபிடிக்க மற்றுமொரு ஏதுவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான ஜாதி மற்றும் வகுப்புக் கலாச்சாரத்தை கொண்டமைந்த வடக்கில் பாலியல் தொழில் தீண்டத் தகாத விடயமாக காணப்பட்டு வந்தது.

எனினும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அதிகளவான ஆண்களை குடும்பங்கள் இழக்க நேரிட்டதனால் சமூக கலாச்சார கட்டுப்பாடுகள் களையப்பட்டு, பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

கல்வி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை மாறி இன்று பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இன்னமும் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் விவகாரத்தை சமூக் காரணிகளுக்காக தொடர்ந்தும் மூடி மறைப்பது பொருத்தமாகாது என மன்னார் மகளிர் அபிவிருத்தி மையத்தின் ஸ்தாபகர் செரீன் தாருர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான வருமான வழிகளை அமைத்துக்கொடுப்பதன் மூலம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதனை தடுக்க முடியும் என யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையத்தின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வேறும் தொழிலில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வேறு வழிகிடையாது என தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாதுகாப்பான பாலுறவு தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

GTN

No comments: