Saturday, March 26, 2011

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

 -முல்லை அமுதன்-

ஈழத்து  சிறுகதைகளின்  மீதான  பார்வை  தமிழக  விமர்சகரிடையே  பரவலாக தென்படவிலையோ  என்பதான  ஆதங்கம்  எம்மிடையே  இருப்பதை  மறுக்க முடியாது. விமர்சகர்களின்  வாசனைத்  தளம்  பலரை  உள் வாங்காமல்  இருந்திருக்கலாம். விமர்சகர்களும்  தங்கள்  பரப்பை  விட்டு  வெளி வரத்  தயாராகவும்  இல்லை.
ஈழத்து  விமர்சகர்கள்  முன்வைத்த  சிறுகதைகள்  பல  தளங்களிலும்  பேசப்படாமல்  போயும் இருக்கலாம். மேலும்  அவ்வாறான  சிறுகதைகளின்  ஆசிரியர்களால்  மீண்டும்  எழுதாமல் போனதுவும்  நமது  துரஷ்டமுமாகும்.
குறிப்பாக  திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார்  போன்றோரிடமிருந்து  சிறுகதைகள் பேசும்  படியாக  வரவில்லை. கோ.றஞ்சகுமாரின்   'மோகவாசல்'  தொகுப்பு  மீள்பிரசுரம் பெற்றிருந்தாலும்  அதில்  அவரின்  தொடர்ச்சியான  வளர்ச்சியைத்  தெரிந்து  கொள்ள வாய்ப்பில்லாமல்  போய்விட்டது.
அதற்காக  வேறு  யாரும்  எழுதவில்லை  என்பதல்ல. சிறுகதைகளை  கனதியாக  எழுதுகிற பலரும்  இருக்கிறார்கள்  தான்.
தமிழ்க்  கதைஞர்வட்டம்   காலாண்டுகளில்  வெளிவந்த  சிறுகதைகளைத்   தேர்ந்தெடுத்து சிறப்புச்   செய்வதும்,  ஞானம்  சஞ்சிகையூடாக  சிறுகதைப் போட்டிகள்  நடாத்தப்  பட்டும் வருவது  நல்ல  பயனைத்  தந்துள்ளதை  மறுக்க  முடியாது.  இங்கிலாந்திலிருந்து 'பூபாளராகங்கள்'  நிர்வாகிகளால்  வருடா வருடம்  நடத்தப்பட்ட  சிறுகதைகள்  பலவற்றைச்  சொல்லி  நின்றன.  'புதினம்' பத்திரிகையினால்  நடாத்தப்பட்ட  சிறுகதைப்  போட்டியில் அதிகமாக  நல்ல  சிறுகதைகளே  வந்து  பரிசுக்குழுவினரை  வியக்கவும்  வைத்தது.
அலை     பிறகு  சிறுகதைகளுக்குப்  பிறகு  நல்ல  சஞ்சிகையாக  நாம்  பார்த்த  'மூன்றாவது மனிதன்'  இதழ்   கணிசமான   சிறுகதைகளைத்   தந்தது   எனலாம்.
சிரித்திரன்,  மல்லிகை,  தீர்த்தக்கரை,  புதுசு, நந்தலாலா, தாயகம், நான், செம்பருத்தி, ரோஜாமலர், விடிவு, துயரி, சரிநிகர், ஓலை, அகல், பெண், சிறகுகள், போது, சமாதானம், கீறல், கொழுந்து,  நதி, விவேகி,  கலைச்செல்வி,  கிருதயுகம்,  பூரனி,  மருதம்,  மறுமலர்ச்சி,   கண்,  கலைக்குரிசில்,  மாற்றம்,  வசந்தம்,  புத்தொளி, யாழ்,   முத்தூர் முரசு,  தாரகை,  வெளிச்சம்,  பூவரசு,  படிகள், ஜீவநதி,  கிருதயுகம், அம்பலம்,  புதிய தரிசனம், அஞ்சலி, அகிலம், இருக்கிறம், வியூகம்,  நதி,  தோழி, உதயம்,  உள்ளம், கனவு, செங்கதிர்,  கிழக்கொளி, குமரன், திருப்பம், திசை புதிது, பூங்காவனம்,  பெருவெளி,  புதுமை இலக்கியம் ,மறுகா, மலர், நவரோஜா, கலைமுகம், ஞானம், நங்கூரம், சமர்,  வாகை,  மேகம், வசந்தம் ,அஞ்சலி , ஏகலைவன்,   திசைபுதிது,  புதிய உலகம்,   பிரியநிலா, தொடர்பு,  தொன்டன்,  இப்படிப்  பல  சஞ்சிகைகளும்,  தினகரன், சுடர்,  வீரகேசரி, தினக்குரல், தினச்சுடர், சங்கமம், ஈழநாடு,  ஈழமுரசு. நமது ஈழநாடு, ஈழநாதம் , உதயன், சஞ்சீவி,  திசை,  ஈழமணி,   ஈழகேசரி,  சுதந்திரன்   எனப்  பல  பத்திரிகைககளும்  சிறுகதைகளை  பிரசுரித்து   வளம்  தந்தன  எனலாம்.
புலம்பெயர்  சஞ்சிகைகளாக  அ.ஆ.இ,  ஈழகேசரி, அம்மா,   கமலம்,  கலப்பை, ஆதவன்  எக்ஸில்,   காலம்,   மண்வாசம்,  நான்காவது பரிமாணம்,  உயிர்நிழல்,  உயிர்மெய்,  தமிழ் உலகம், தமிழர் தகவல், அலை ஓசை, மண், காகம், கற்பகம், மேகம்,  இனி, கலைவிளக்கு, கலைஓசை, இலண்டன் , சுடரொளி   புலம், தேடல்,  பாலம்,  பூவரசு,  அக்னிக்குஞ்சு, மரபு, சுவடுகள்,  மௌனம்,  ஓசை,  காற்றுவெளி, கதலி,  கண்,  இளைஞன், ஆனந்தி,
,பத்திரிகைகளாக  புதினம்,  தாய்வீடு,  வடலி, தமிழர் செந்தாமரை, நிருபம்,  பாரிஸ்முரசு, நிலவரம்,  தமிழன்   வழிகாட்டி,  உதயன், ஈழநாடு  (பாரிஸ்,கனடா)
கூடவே,
பிரதேச  மட்டத்திலான  இலக்கிய-சாகித்திய விழா மலர்கள், கல்லூரி-பாடசாலை-பல்கலைக்கழக  விழா மலர்கள்,  தனியான- கழக  தொகுப்புக்கள்  என  வெளி வந்த  சிறுகதைகள்   அதிகம்  பேசின  எனலாம். அண்ணளவாக ஆயிரக்கணக்கில்  வெளிவந்தாலும்  அரசியல், இனமுரண்பாடுகளினால்  பலரிடம்   சென்று   சேர  வாய்ப்பில்லாமல்  இருந்திருக்கலாம்.
தனிமனித   துயரம்,  அரசியல்  சித்தாந்தம்,  இடபெயர்வு,  இனநெருக்கடி,  வறுமை,  காதல், வர்க்க முரண்பாடு,  சீதனக்  கொடுமை   எனப்  பலவற்றை  அழகாகவும்  ஆணித்தரமாகவும்  சொன்ன  சிறுகதைகள்   ஏராளம்.
இருள்வெளி,   பத்மநாப ஐய ர்   தொகுத்த    தொகுப்புக்கள்,   தேனகம்,   இளந்தளிர்,  விடுதலைபுலிகள்   தொகுத்த    முத்தமிழ்   விழா   மலர்கள்,  புலிகளின் குரல்  வானொலியினர்   தொகுத்த   தொகுத்த  மலர்   இப்படி   பலதையும்  சொல்லலாம். எல்லாவற்றையும்   ஒரு   சேர பார்த்து   இதுவரை   நல்ல   விமர்சனத்தை  வைக்கவில்லை. இதுவே  பல  அசௌகரியங்களை நமக்கு  ஏற்படுத்தி  இருக்கிறது.
புலம்  பெயர்ந்த  எழுத்தாளர்களில்  பொ.கருணாகரமூர்த்தி, விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், அ.முத்துலிங்கம், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ்   போன்றவர்களின்   சிறுகதைகள்   அதிகம்  பேசப்பட்டன.  எனினும்   'மண்' சிவராஜா, இந்துமகேஷ்,  வண்ணைதெய்வம்,  தேவகாந்தன்,  எம்,ரி.செல்வராஜா, கல்லாறு.சதீஷ், தமிழ்ப்பிரியா, களவாஞ்சிக்குடி.யோகன்,   லெ.முருகபூபதி,  அருண்.விஜயராணி,  குரு அரவிந்தன், மா.கி.கிரிஸ்டியன், த.சு.மணியம்,  கௌசல்யா.சொர்ணலிங்கம்,  சாந்தினி.வரதராஜன், அகில், வி.ரி.இளங்கோவன், ஹேமா, ராகினி.பாஸ்கரன்,  ரமேஷ் சிவரூபன், நவஜோதி. யோகரத்தினம்,  இரா.தணிகாசலம்,  ந.கிருஷ்ணசிங்கம், விக்கி.நவரத்தினம், சந்திரா.ரவீந்திரன், சந்திரவதனா.செல்வகுமாரன்,  சாந்தி.ரமேஷ் வவுனியன்,  விக்னா.பாகியநாதன் போன்ற  பலரின்   சிறுகதைகளையும்  கவனத்தில்   கொள்ள வேண்டும்.
கதைக்களம், பாத்திரத்  தேர்ந்தெடுப்பு, மொழியின்  ஆளுமை வளம்  சற்று  தூக்கலாகவே கதைகளில்  தென்படுவதை  உணரலாம். 83இன்  பின்னரான  சிறுகதை  எழுத்தாளர்களின் வருகை  அபரிமிதமானதாகவே  உள்ளது. வாய்ப்பும்  அவர்களுக்கு  அமைந்திருக்கிறது.
மென்போக்குக்  கொண்ட  கதையாளர்களாக  நாம்  நினைத்திருக்கும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம்  இவர்களுக்குப்   பிற்பாடு  கல்வியாளர்களாக  முகிழ்த்த பவானி.ஆழ்வாப்பிள்ளை, செம்பியன்.செல்வன், செ.யோகநாதன், நவசோதி, செங்கைஆழியான், யோ.பெனடிக்பாலன், சொக்கன்  என்று  பலரைப்  பட்டியல்  இடலாம். பிறகு  சாதி, மனித முரண்பாடுகள், வர்க்கம்  சார்ந்து  எழுத முற்பட்ட  டானியல் ,என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, தெணியான், அகஸ்தியர், இ.நாகராஜன், மயிலிட்டி.ராஜதுரை,  ஞானரதன், நந்தி, சொக்கன், அ.யேசுராஜா,  டானியல்.அன்ரனி, மதிவாணன் (ரத்தினசபாபதி) வை.அஹ்மத்,  மதுபாலன்  என்று  பலரும் அடங்குவர்.
 எஸ்.பொ. தனித்தே  நின்றார்.
ஈழத்தில்  தொகுக்கப்பட்ட  தொகுப்புக்களில்  கலை ஒளி  முத்தையாபிள்ளை ஞாபகார்த்த  போட்டிச்  சிறுகதைகளின்  தொகுப்பு, அகஸ்தியர்  நினைவுச் சிறுகதைப் போட்டிச்  சிறுகதைகளின் (2001)  தொகுப்பு, செல்வகுமார்  தொகுத்து  மணிமேகலைப்  பிரசுரம் வெளியிட்ட  இரு  தொகுதிகள், செங்கை ஆழியான் தொகுத்த   மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழநாடு  சிறுகதைகள், சுதந்திரன்  சிறுகதைகள்,  மல்லிகைச்  சிறுகதைகள், ஞானம் போட்டிச்  சிறுகதைகள்  மலையகச்  சிறுகதைகளின்  தொகுப்பு  இப்படிப்  பலதை உதாரணம்  காட்டலாம்.
இலங்கைக்  கலைகழகம்  1998  இல் வெளியிட்ட  'சுதந்திர  இலங்கையின்  தமிழ்ச் சிறுகதைகள்'  நல்லதொரு  தொகுப்பு.  செங்கைஆழியான்  அண்மையில் தொகுத்த 'முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் (2010)  நல்லதொரு  தொகுப்பாகும்.
செ.யோகநாதன்  தொகுத்த  இரண்டு  தொகுப்புகள் (வெள்ளிப் பாதரசம், தோட்டக்காட்டினிலே)   எஸ்.பொ.  தொகுத்த  'பனியும் பனையும்  நல்ல  தொகுப்பாக இன்றும்  பேசப்  படுகின்றன.
மு.நித்தியானந்தன்  வைகறை  வெளியிட்டகத்தின்(1980)  மூலம்  மலையக  எழுத்தாளர்களின் கதைத்  தொகுப்பை  வெளி யிட்டிருந்தார். மாத்தளை  தமிழ்  எழுத்தாளர்  ஒன்றியம்  80 களில்  'தோட்டக் காட்டினிலே'  தொகுப்பையும், ஐரோப்பிய  தமிழ்  எழுத்தாளர்  ஒன்றியம் 89இல்  'தேசம் தாண்டிய நதிகள்' போன்ற தொகுப்புகளும், நெதர்லாந்திலிருந்து  வெளிவந்த  அ.ஆ.இ  தொகுத்த (1993)  சிறுகதைகளும்,  கனடாவிலிருந்த  கே.நவம்  தொகுத்த 'உள்ளும்  புறமும்'  தொகுப்பும்(1991)  கனடா  தமிழ்  எழுத்தாளர்  இணையம் வெளியிட்ட 'அரும்பு'  (2000)தொகுப்பும் வன்னியில்  கப்டன். வானதி  வெளியீடுகளும்  வீரகேசரி  பவள  விழா சிறுகதைக்  களஞ்சியம்  தொகுப்பும்,  இரத்தின வேலோன்  தொகுத்த  புலோலியூர் சொல்லும்  கதைகள் (2002)  தொகுப்பும், துரைவி  வெளியீடுகளும்   (1997) எமக்குத்  தந்த  கதைகளை  சற்றும்   குறைத்து  மதிப்பிட  முடியாது.( துரைவியின் மறைவு ஈழத்து எழுத்தாளர்களுக்கு பாரிய இழப்பாகும்)
கலைச்செல்வி. சிற்பி  தொகுத்த  ஈழத்துச் சிறுகதைகள்-(1958)  தொகுப்பையும்  மறக்க முடியாது. மன  உணர்வுகளைத்  தட்டி  எழுப்பும்  வகையில்  அமைந்த   கதைகள்  அடங்கிய  தொகுதியாகும்.  ஆங்காங்கே  நண்பர்கள்  இணைந்தும்  தனித்தும்  (லெ.முருகபூபதி, ஓ.கே.குணநாதன், புரட்சிபாலன்  எனப் பலர்)  சிறுகதைத் தொகுப்புகளை  வெளியிட்டு  வருவது  குறிப்பிடத்தக்கது.
இவற்றை  தொகுத்து  நோக்கின்  ஈழத்தின்  சிறுகதைகளின்  தன்மை  பற்றி  உணர  முடியும்.
கதைக்களம்,  கதைக்கரு, பாத்திரச்  சேர்க்கை  சிறுகதையைத்  தீர்மானிக்கின்றன. அளவில்  அல்லது  பக்கங்களின்  வரையறை  இல்லை. எனினும்  பொதுவான  சிறுகதைப் பண்புகளைக்  கொண்டிருப்பின்  வாசகரின்  கணிப்பைப்  பெறும்.
இங்குள்ள  பிரச்சனை  என்னவெனில்  விமர்சகர்களின்  பார்வையில்  படாதவைகள்  தரம்  பிரிக்கப்  படமாட்டாதா  என்பதே  பலரின்  வருத்தமுமாகும்.  புதியவர்களின் மழுங்கடிக்கும்   முயற்சியும்   இடம் பெறக்கூடாது.
தற்போது  கவிதை  போல  சிறுகதைகள்  எழுதுபவர்களின்  எண்ணிக்கை  சற்று அதிகம். இழப்புகளை  அதிகம்  சந்திக்கிறார்கள்(காதல் உட்பட). படித்த  மலையக  வாலிபர்களின் வருகை  அவர்களின்  பிரச்சினைகளை   லாவகமாக  சொல்லி  பலரிடம்  கொண்டு செல்கிறார்கள்.  புலிகளின்  கட்டுப்பாட்டில்  இருந்த  வன்னியில்  பல  சிறுகதைகள் வெளி வந்தன.  தாமரைச்  செல்வி, முல்லைக் கோணேஸ், இணுவையூர். சிதம்பர. திருச்செந்திநாதன்,  ஆதிலட்சுமி.  சிவகுமார்,   மலைமகள், மலரன்னை  எனப்  பலர்  குறிப்பிடத்  தக்கவர்கள்.
வெளிச்சம்  சஞ்சிகை   கணிசமான  பங்களிப்பைச்  செய்திருந்தது. வெளிச்சம்  சிறுகதைகளின் தொகுப்பு  (1996)தமிழ்நாட்டிலும்  மீள்பிரசுரம்  கண்டது.  அதைப்  போலவே ஈழத்து   இலக்கியத்தின்  பால்  அதிக  அக்கறை  கொண்ட  கலாச்சார  உத்தியோகத்தர்களின்   முன்னெடுப்புகளால்  மாவட்ட  பிரதேச சபைகள், வடக்கு  கிழக்கு மாகாண  கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை  அமைச்சு,  மட்டக்களப்பு  எழுத்தாளர்  ஊக்குவிப்பு  மையம், யாழ்  இலக்கியவட்டம், தேசிய  கலை  இலக்கியப்  பேரவை, முற்போக்கு  கலை இலக்கியப்பேரவை  என  பல  அமைப்புகள்  சிறுகதை  ஆர்வலர்களின்   ஆவலைப்   பூர்த்தி  செய்து   வருகின்றனர். அவுஸ்திரேலியா/விக்டோரியா  இலங்கைத்  தமிழச்  சங்கம் (1996) வெளியிட்ட 'புலம்பெயர்ந்த பூக்கள்' போட்டிச்  சிறுகதைகள்  அடங்கிய  தொகுதியில்  பலரும் எழுதியுள்ளனர்.
உதய தாரகையின்  ஆசிரியர்  ஆர்னோல்ட்.சதாசிவம்பிள்ளையின் (1875) சிறுகதைகளுடன் ஈழத்துச்  சிறுகதை  முயற்சிகள்  ஆரம்பித்தன  எனக் கொண்டாலும்  இலங்கையர்கோன்  போன்றோரே  தொடர்ச்சியாக  எழுதி  பலரைத்  திரும்பிப்  பார்க்க  வைத்தனர்  என்பர் அறிஞர்கள். அவர்களின்  கல்வியும்  அக,புற அறிவு  ஜீவிகளின்  தொடர்புமே எழுத வைத்தது. தற்போது  போல  எழுத்தில்  தீவிரம்  இல்லை. நவீன  பரிச்சயமும் இல்லாததினால்  தங்களை  வளர்த்துக் கொள்ளும்  வட்டம்  சிறியதாகவே  இருந்தது.
காவலூர்.ஜெகநாதன், தமிழ்ப்ரியா, தாமரைச் செல்வி, வடகோவை  வரதராஜன், ஐ.சாந்தன், செங்கை ஆழியான், செ.யோகநாதன், சோ.இராமேஸ்வரன்,  தி.ஞானசேகரன், தெளிவத்தை.ஜோசேப்  அதிக  சிறுகதைகளை  எழுதுள்ளனர்.
சோபாஷக்தி, விமல்.குழந்தைவேல், பொ.கருணாகரமூர்த்தி, இராஜேஸ்வரி.பாலசுப்ரமணியம், இரவி.அருணாசலம், குமார்.மூர்த்தி, தேவகாந்தன் புலம்பெயர்  வாழ்வியல்  பிறழ்வுகள், சமூக  சிந்தனை  இன்னோரன்ன  பிற  சம்பவங்களை கருவாகக்  கொண்டு  எழுதுபவர்கள். அகில்  சில  போட்டி  கதைகள்  எழுதி  உள்ளார். லெ.முருகபூபதி, வ.ந.கிரிதரன், களவாஞ்சிகுடி.யோகன்  போன்றோர்  வாசகர்  மனதைத் தொடும்  படி  எழுதி  வருகின்றனர். இப்படி  பலரை  உதாரணம்   காட்டலாம்.
நிறைவாக,
ஈழத்துக்  கவிதைகள்  போல  சிறுகதைகளும்  சிறந்த  முறையில்  வளர்ந்து  வருவது கண்கூடு.  ஈழத்துச்  சிறுகதைகளை  தேர்ந்தெடுத்து  முழுமையான  தொகுப்பாக்கும் பட்சத்திலும்,  அவற்றை  பிற  மொழிகளில்  மொழி  பெயர்ப்பதன்  ஊடாகவும்  புற வெளிச்சங்களையும்  உள்வாங்க  முடியும்.  திரு.பத்மநாப ஐயர், பேராசிரியர். செல்வா.கனகநாயகம்  போன்றோர்  ஆத்மார்த்தமாக  சில  தொகுப்பு , மொழிபெயர்ப்பு முயற்சிகளில்  ஈடுபடுகிறர்கள். இது  வரை  இவை  தான்  ஈழத்து  சிறுகதைகள் என  சிலரை  மட்டுமே  குறிப்பிடுகின்ற  தமிழக  விமர்சகர்களைத்  தொடவும் செய்யலாம். தனியே  வரப்பெற்றோம்  என்று  போடுவதற்காக  மட்டுமில்லாமல்  காத்திரமான விமர்சனங்களுக்ககாவும்  இரண்டு  பிரதிகளை  பெற  இனிமேலாவது  சஞ்சிகைகள், பத்திரிகைகள்  முயலவேண்டும். இவை  எதிர்லாலத்தில்  நல்ல  பயனை  நம்மவர்க்குப் பெற்றுத் தரும்
கூடவே,
நமக்கிடையேயான  தடைகள்  எதுவென  உணர்ந்து  அவற்றை  உடைத்தபடி முன்னேற நமது  படைப்பாளர்கள்  நகரவேண்டும்.  அதுவே  ஆரோக்கியமான  தடத்தை  பதிக்கும்  என நம்பலாம்.

Sivananthan Muthulingam Muthali இந்த எழுத்தாளர்கள் எல்லோரும் இலங்கையில் அரசுக்கெதிரான கருத்துக்களை விதைப்பதில் தீவிரம் காட்டினார்கள். புலிகளால் செய்யப்பட்ட கொடூரங்கள் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. இந்த எழுத்தாளர்களும், பத்திரிகைகளும் இன்னமும் பிரபாகரன் சாகவில்லை என்ற மாயையை சிருஷ்டிப்பதில் ஆர்வப்படுகிறார்கள். புலிகளினால் குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்கள் பற்றி எந்த ஒரு கதையும் அல்லது செய்தியும் வெளி வந்ததாகத் தெரியவில்லை. அதன் மூலம் புலிகள் "தர்மிஷ்ட" ஆட்சி நடத்தினார்கள் என்றுதான் 100 வருடங்களுக்குப் பின்னர் ஆய்வாளர்கள் அலை மோதுவார்கள்.

1 comment:

karavaithasan said...
This comment has been removed by the author.