Wednesday, January 04, 2017

துட்டகைமுணுவின் அவதாரம்

- என்.சரவணன் -


சிங்களப் புனைகதை காவியங்களை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களாகவும், மேடை நாடகங்களாகவும் உருவாக்கி ஜனரஞ்சகப்படுத்தி, இனவாத புனைவேற்றி, பரப்பி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

போர் முடிவுற்றதன் பின்னர் அதுவும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் இந்த போக்கு தீவிரம் பெற்றிருப்பதை பல உதாரணங்களின் மூலம் எடுத்துக் காட்டலாம்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடென்று மீள மீள புனைந்து நிறுவுவது என்பது பேரினவாத நிகழ்ச்சிநிரலின் தலையாய திட்டம். தவிர்க்கமுடியாத வேலைத்திட்டமும் கூட. ஆயுதப் போரின் மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை கருத்தியல் ரீதியிலும் தோற்கடிக்கும் தேவை நெடுங்காலமாக இருக்கிறது. போரின் பின்னரும் அந்த தேவை பேரினவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது. அதை அரச கட்டமைப்பு நேரடியாக செய்ய வேண்டியதில்லை. நிறுவனமயப்பட்ட பேரினவாத அமைப்புமுறை அந்த காரியத்தை செவ்வனே நிறைவேற்றும் வலிமையும், வலிமையான அனுசரணையும் கொண்டிருக்கிறது. இதனை நுகர்வதற்காகவே செயற்கையான “பேரினவாத இரசனை” வேகுஜனமட்டதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே சந்தையையும் உற்பத்தி செய்திருக்கிறது.

“அந்த சந்தை போதுமானதில்லை சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும், இதனைக் காணவேண்டும், உதவி செய்யவேண்டும், பரப்பவேண்டும் அன்று இந்தியாவில் இருந்து சோழர்கள் படையெடுத்து வந்து நம்மை ஆக்கிரமித்து ஆட்சி செய்தார்கள் ஆனால் இன்றோ இந்தியாவில் இருந்து இந்தி தொலைகாட்சி நாடகங்கள் வாயிலாக நம்மை சுற்றிவளைத்து ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே அதனைக் கைவிடவேண்டும். நமது சொந்த சிங்கள நிகழ்சிகளை மட்டும் பாருங்கள்” என்றார் “கெமுனு மாரஜ” (துட்டகைமுனு மகாராஜா) தொலைக்காட்சித் தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க.

கடந்த சில வருடங்களாக மகாபாரதக் கதைகளும், இராமாயணக் கதைகளும் இந்தி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு தொடராக காண்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் பாதிப்பே சிங்கள இதிகாசங்களையும் அதுபோன்றே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சி.

பன்முக வழிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனு – எல்லாளன் போரையும் பரப்பும் பணிகள் சமீப காலமாக அதிகமாகவே காண முடிகிறது. துட்டகைமுனுவின் இந்த புத்துயிர்ப்பு இன்றைய புதிய அரசியல் அவதாரமாகவும், அஸ்திரமாகவும், வடிவமாகவுமே காண முடிகிறது.

தமிழர்கள் வந்தேறு குடிகள், அன்னியர்கள், கள்ளத் தோணிகள், ஆக்கிரமிப்பாளர்கள், பௌத்த மதத்தை அழித்து இந்து மதத்தை நிறுவியவர்கள். பௌத்த விகாரைகளை அழித்தொழித்தவர்கள் என்றெல்லாம் புனைவது சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்கு மிகவும் அவசியமானது. அதனை திரும்பத் திரும்ப பல்வேறு வடிவங்களில் புனைவதும், நிறுவுவதும், நம்பவைப்பதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு பலம் சேர்ப்பவை.

அதுமட்டுமன்றி மாறாக இப்பேற்பட்ட தமிழர்களை எதிர்த்து நின்றவர்கள் சிங்களவர்கள், பௌத்தர்கள், தேச பக்தர்கள், மண்ணின் மைந்தர்கள், மா வீரர்கள், நல்லவர்கள், மனிதாபிமானமுள்ளவர்கள் என்றெல்லாம் இந்த கதைகளின் வாயிலாக புனைவதும், நிறுவுவதும் அவர்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.


இலங்கையின் பேரினவாத வளர்ச்சிமுறையை நோக்கினால் அது தன்னை பலப்படுத்தவும் வளப்படுத்தவும், நெறிப்படுத்தவும், வியாபிக்கவும், உறுதியாக நிலைநிறுத்தவும் மேற்கொண்டு வந்த பல வழிகளைக் காண முடியும். இன்று அப்பேரினவாதத்துக்கு உறுதியான ஒரு அரசு இருக்கிறது. இன்று நன்றாக நிருவனமயப்பட்டிருக்கின்ற பேரினவாதத்துக்கு எந்த தனி மனிதரின் துணையோ, தனி அமைப்பின் துணையோ நிரந்தரமாக தேவையில்லை. இன்று நிலைபெற்றுள்ள பேரினவாத சித்தாந்தத்துக்கு மாறி மாறி, தலைவர்களும், அமைப்புகளும் வந்து போவார்கள். அது போல அந்தந்த காலத்துக்கு தேவையான நிகழ்ச்சிநிரலை அந்தந்த சக்திகள் தலைமையேற்று அடுத்த சக்திகளிடம் கைமாற்றி சென்று விடும். அல்லது புதிய சக்திகள் கையேற்றுக் கொள்ளும். அடுத்த நிலைக்கு அதைக் கொண்டு சேர்த்து விடும்.

அரச இயந்திரத்தின் சகல அங்கங்கள் மாத்திரமல்ல, சிவில் அமைப்புகள், சிவில் பண்பாட்டு முறை, நடத்தை என ஒன்றுவிடாமல் நிறுவனமயப்படுத்தியிருக்கிறது. அப்பேர்பட்ட சிங்கள பௌத்தத்தின் சித்தாந்த பலத்துக்கு துணையாக அது வைத்திருக்கும் முக்கிய ஆயுதம் தான் “மகாவம்சம்” என்கிற "புனித" சிங்கள வரலாற்று காவியம். எப்படி இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தும் ஆயுதமாக கற்பனாபூர்வமான புனைவுப் புனித காவியமான இராமாயணத்தை பயன்படுத்திவருகிறதோ, அது போல இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதமும் தமது உண்மையான வரலாறு என்பது புனைவுக் காவியமான “மகாவம்சம்” தான் என்று நம்புகிறது. தமிழின விரோதப் பிரசாரங்களுக்கு பூடகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வரலாற்று ஆவணம் மகாவம்சம்.

அதனை எழுதிய மகாநாம தேரர் கூட அவருக்கு முந்திய 6 நூற்றாண்டு கால வரலாற்றையும் சேர்த்து எழுதுகிறார் என்றால் அவருக்கு முன்னர் எழுதப்பட்ட தீபவம்சம் என்கிற வரலாற்று நூலைத் தழுவியே எழுதினாலும் கூட மக்களின் வாய்மொழி வரலாறுகளை கேட்டுணர்ந்தே தான் எழுதியதாகவே மகாவம்சத்தில் குறிப்பிடுகிறார். மகாநாம தேரர் இருந்த காலத்தில் வரலாற்றை ஆய்வு ரீதியாக எழுதும் புலமையும் அவருக்கு இருக்கவில்லை, அதற்கான வசதிகளும் அன்று இருக்கவில்லை. இல்லையென்றால்  சிங்கத்துக்குப் பிறந்தவர்களே சிங்களவர்கள் என்று சாரப்பட அவர் எழுதியிருக்கமாட்டார்.

இந்த பின்னணியில் வைத்தே மகாவம்சத்தை நாம் காணவேண்டியிருக்கிறது. இலங்கையின் சிங்கள பௌத்த பண்பாட்டு வரலாறு என்பது “மகாவம்ச” புனைவுகளால் கட்டப்பட்டது என்பதை எவரும் அறிவர்.

மகாவம்சத்துக்கு அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு சிறந்த உதாரணம் 1939இல் நடந்த கலவரம். ஜீ. ஜீ.பொன்னம்பலம் மகாவம்சம் பற்றியும் அதில் உள்ள சிங்கள கதாநாயக பாத்திரங்கள் பல தமிழர்களே என்று கூறியதால் இலங்கையில் ஒரு கலவரமே ஏற்பட்டது. அதுவே இலங்கையில் முதலாவது இனக் கலவரமாகக் கொள்ளப்படுகிறது.

“காமினி அபய” துஷ்ட காமினி / துட்டகாமினி – துட்டுகெமுனு போன்ற பெயர்களால் அழைக்கப்படும் துட்டகைமுனு சிங்களவர்களின் தலையாய வரலாற்று நாயகன். பிரதான காவியத் தலைவன். தமிழர்களுக்கு எதிரான குறியீடாக ஆக்கப்பட்டிருப்பவன். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் “கெமுனு பலகாய” என்கிற படைப்பிரிவு இலங்கையின் இராணுவத்தில் உருவாக்கப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது.  கெமுனு பலகாய (கெமுனு படை) என்கிற பெயரில் இனவாத அமைப்புகள் கூட இருக்கிறது. அதன் இணையத்தளத்தையும் முகநூல் பக்கத்தையும் கூட நீங்கள் காணலாம்.

Maharaja Gemunu by maukp on Scribd

“மகாரஜ கெமுனு”
ஜயந்த சந்திரசிறி “மகாரஜ கெமுனு” எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு திவய்ன பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்ட இந்த கதை பின்னர் 277 பக்கங்களில் நூலாக வெளியிடப்பட்டு பின்னர் அதையே திரைப்படமாக அதே நூலாசிரியரால் உருவானது. ஜயந்த சந்திரசிறி ஏற்கெனவே பல பிரபல தொலைக்காட்சி நாடகங்களையும், திரைப்படங்களையும் இயக்கிய அனுபவமுள்ளவர். ஆனால் தற்போதைய இனவாத சந்தையை சரியாக இனங்கண்டு தருணம் பார்த்து இந்த திரைப்படத்தை இயக்கியிருகிறார் என்றே கூற வேண்டும். நூலுக்கான அணிந்துரையை எழுதியிருப்பவர் இலங்கையின் பேர்பெற்ற இனவாதியாக அறியப்பட்ட குணதாச அமரசேகர. பேராசிரியர் நளின் டி சில்வா இத் திரைப்படம் குறித்து தனது கட்டுரைகளுக்கு ஊடாகவும், விரிவுரை, தொலைகாட்சி உரைகளுக்கு ஊடாகவும் வழங்கியிருக்கிற சான்றிதழே போதும் இதன் இனவாத உள்ளடக்கத்தை அறிந்துகொள்ள.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. குணதாச அமரசேகர, விமல் வீரவங்ச போன்றோர் பிரதம விருந்தினர்கள். அந்த நிகழ்வு குறித்து பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளிவந்த படங்களும் செய்திகளும் இன்னமும் பார்வையிடலாம்.

இந்த நூலாசிரியர் அத்திரைப்படத்தை அப்படியே திரைப்படாமாக வெளிகொண்டர்ந்தார். பரபரப்பான விளம்பரங்களுடன் periya எதிர்பார்ப்புகளை உண்டுபண்ணி இந்த திரைப்படத்துக்கு பெரிய விளம்பரங்களுடடனும் எதிர்பார்ப்புடனும் வெளிவந்தது.



திரைப்படத்தில் தமிழர்களுடன் யுத்தம் செய்யக் கோரி எல்லாளன் தனது தகப்பனை கேட்டுக்கொண்ட போதும் அதை மறுத்த தகப்பன் காவந்திஸ்ஸவுக்கு பெண்களின் அலங்கராப் பொருட்களை அனுப்பி அவமானப்படுத்தி விட்டு வெளியேறுகிறான். ஆத்திரமுற்ற தந்தை காவந்திஸ்ஸ காமினிக்கு “துஷ்ட காமினி” (துட்டகைமுனு) என்று அழைக்கிறார்.  தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் சாதாரண விவசாய குடும்பத்தில் இணைந்து விவசாயம் செய்து கொடு அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டு தன்னை யுத்தத்துக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறான். தருணம் வந்த போது எல்லாளனை அரச பதவியேற்கும் படி அரன்மனையிலிருந்து ஊர்வலமாக வந்தவர்கள் சாதாரண விவசாயி தொற்றத்திலிருந்த கெமுனுவை முட்டிபோட்டு கேட்டுக்கொள்ளும் காட்சி உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.



“கெமுனு மாரஜ”
“ஹிரு” தொலைக்காட்சிச் சேவையில் வார இறுதி நாட்களில் இரவு 7.30க்கு தொடராக தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்  “கெமுனு மாரஜ”. துட்டகைமுனுவின் உருவாக்கம், வளர்ச்சி, சேவை எல்லாளனின் கொடுங்கோன்மை எல்லாளனுடனான போர் என அத் தொடர் பரபரப்பாக தொடர்கிறது. பிரமாண்டமாக எடுக்கப்பட்சிறந்த தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக காண்பிக்கப்படுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் இதே உள்ளடக்கத்தோடு வெளியான “மகாராஜ கெமுனு” என்கிற திரைப்படத்தில் துட்டகைமுனுவின் தகப்பன் காவன்திஸ்ஸவாக நடித்த சிறியந்த மென்டிஸ் இந்த தொடரில் எல்லாளனாக நடித்துள்ளார். விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அரியாசனத்தில் வில்லத்தனமாக வீற்றிருப்பார்.



அதேவேளை துட்டகைமுனு வீரத்துடனும், சாந்தமான – ராஜதந்திரத்துடனும், மனிதாபிமானத்துடனும் இருப்பதாக காட்டப்படுகிறது. அதே மகாவம்சத்தில் எல்லாளன் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்ற நல்ல பக்கங்கள் கூட போதுமான அளவு காண்பிக்கப்படுவதில்லை. டெசம்பர் 25உடம் அது 20 அங்கங்களைத் தொட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் இயக்குனர் சரித்த அபேசிங்க வாரத்துக்கு பலமுறை முகநூலில் நேரடி வீடியோமூலம் வாரத்துக்கு பல முறை இந்த தொடர் குறித்த கருத்துக்களை ஆயிரக்கனக்காநோருடன் பரிமாறி வருகிறார். சிங்கள பௌத்த பூமி அந்நியரால் பறிபோகும் இந்த காலகட்டத்த்தில் நீங்கள் இந்த தொடரைக் காண்பது அவசியம் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.



“கஞ்சாயுத” விளையாட்டு
மகாவம்சத்தின் பாதிப்பின் விளைவாக சிங்கள இளம் தலைமுறையினர் சமீபத்தில் உருவாக்கிய ஒரு கணினி விளையாட்டு இரு உலக அளவில் விளம்பரபடுத்தப்பட்டு வருகிறது. முப்பரிமாண முறையில் மிகவும் அதி தொழில்நுட்ப கணினி அறிவுடன் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விளையாட்டுக்கு அவர்கள் வைத்திருக்கின்ற பெயர் “கஞ்சாயுத” (Kanchayudha). உலகில் பன்னாட்டு நிறுவனங்கள் பல வெவ்வேறு மொழிகளில் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை கோரியிருக்கின்றன என்று அதனைத் தயாரித்த அணியின் தலைவர் சமீரா பிரசாத் ஜயசிங்க அறிவித்திருந்தார். MacOS, Playstation 4, Xbox, Android போன்ற இயங்கு தளங்களில் இயனகக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருகிறது. கூடிய இன்னும் ஒரு சில வாரங்களில் அது முழுமையாக பாவனைக்கு வருகிறது. இலங்கை இளைஞர்களின் சாதனையாக இது ஊடகங்களிள் விளம்பரப்படுத்தப்பட்டாலும். அதன் அரசியல் சமூக விளைவு அவ்வளவு குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

இந்த வீடியோ கேமின் கதாநாயகன் நந்தமித்திர. அதாவது எல்லாளனுடனான சண்டையில் துட்டகைமுனுவுக்கு பக்கபலமாக இருந்த பிரதான தளபதிப் பாத்திரம். சிங்களத்தில் “யசமகா யோதயோ” என்பது எல்லாளனின் 10 இராட்சத தளபதிகளைக் குறிக்கிறது. அந்த இராட்சதர்களில் ஒருவன் தான் நந்தமித்திர. அவர்கள் பற்றி ஏராளமான சாகசக் கதைகள் மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக எல்லாளனின் படைகளை அழிப்பதில் அவர்கள் கொண்ட இராட்சத குரூரத்தனம் குறித்த தகவல்கள் கவனிக்கத்தக்கவை.

கேள்வி என்னவென்றால் இந்த விளையாட்டின் மூலம் கதாநாயகன் நந்தமித்திர இலக்கு வைத்து அழிப்பது யாரை. தமிழர்களையும், தமிழர் படையையும் அல்லவா. எல்லாளனின் படையில் உள்ள முக்கிய தளபதிகளைத் தேடிக் கொல்லும் கதையே இந்த கேமின் இலக்காக இருக்கிறது. எல்லானின் படையில் உள்ள பல மகாவம்ச பாத்திரங்கள் இதில் உள்ளன. இத்தனை காலம் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்திய தமிழர் விரோத மகாவம்ச உணர்சியூட்டுதல் இப்போது சிறுவர்களுக்கு நேரடியாக இந்த கேமின் மூலம் கொடுக்கப்படப்போகிறது. அவர்களின் கைகளில் கிடைக்கும் தொழில் நுட்ப சாதனங்களுக்கூடாக தமிழர் படையை ஆக்ரோஷமாக துவம்சம் செய்யும் மன நிலையைத் தான் இந்த கேம்கள் கொடுக்கப் போகின்றன.



“சீ ரஜ”
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 8.30 க்கு "சீ ரஜ" (The Lion King) என்கிற பெயரின்  ஒரு தொலைகாட்சி தொடர் சுவர்ணவாகினி சானலில் ஒளிபரப்பட்டு வருகிறது. சிகிரிய காலத்துக் கதை. மன்னர் தாதுசேனனை  (பதவிக் காலம் கி.பி. 463 - 479) கொன்றுவிட்டு ஆட்சியேறினான் மகன் காசியப்பன். மன்னரின் இன்னொரு மனைவியின் மகனான பட்டத்து இளவரசன் முகலன் தப்பி தமிழ்நாடு சென்று மீண்டும் அங்கிருந்து தமிழ் அரசர்களின் துணையுடன் படையெடுத்து வந்ததும் தன்னை வாளால் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான். முகலனிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கட்டப்பட்டதே சிகிரிய மலையிலிருக்கும் கோட்டை. அதைக் கட்டியது தாதுசேனனா, காசியப்பனா என்கிற குழப்பம் இன்னமும் நீடிகிறது.

இந்தியாவிலிருந்து படையெடுத்த பாண்டு அரசரும் அவரது பிள்ளைகளும் ஆட்சிபுரிந்த போது அவர்களைத் தோற்கடித்த சிங்கள அரசனாக தாதுசேனனை முன்னிறுத்துகிறது மகாவம்சம். தாதுசேனனின் பிறப்பையறிந்த பாண்டு அரசன், அவனை அழித்தொழிப்பதற்காக பல கிராமங்களை துவம்சம் செய்கிறான்.

அரசனை “பாண்டு” என்று அழைப்பதால் அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற போதும் சிங்கள வரலாற்று நூல்களான ராஜாவலிய, பூஜாவலிய போன்றவை அவர்களை சோழர்கள் என்றே குறிப்பிடுகின்றன. சோழர்களை சிங்களத்தில் “சொலின்” என்றே அழைப்பார்கள். மோசமான ஆக்கிரமிப்பாளர்களாக வரலாறு நெடுகிலும் அவர்களைப் பற்றி குரிப்பிடப்படுகின்றது. அப்பேர்பட்ட தமிழரை ஐந்தாம் நூற்றாண்டில் தோற்கடித்த அரசனாக தாதுசேனனை முன்னிறுத்துவதே இந்த தொலைக்காட்சித் தொடரின் மையம். டிசம்பர் மாதத்தோடு 40 அங்கங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இதில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. சோழ மன்னனிடம் இருந்து தாதுசேனனை பாதுகாத்து, வளர்த்தவர் தான் மகாநாம தேரர் என்றும் மகாவம்சத்தை எழுதிய அதே மகாநாம தேரர் தான் அவர் என்றும் நிறுவ முயற்சிக்கிறார் இதன் திரைக்கதையாசிரியர் ஜெக்சன் அன்ரனி. இதன் இயக்குனரும் ஜெக்சன் அன்ரனி தான். அதுமட்டுமல்ல தாதுசேனனின் தாயாரின் சகோதரர் தான் மகாநாம தேரர் என்றும், ஆகவே தாதுசேனனின் மாமனார் அவர் என்கிறார் அவர்.

பிணத்தை எரிக்கும் முன் அதைச் சுற்றிச் சுற்றி சோழர்களை சபித்து ஒப்பாரிப் புலம்பும் ஆக்ரோஷமான பெண்ணின் பாத்திரம், அந்நிய சோழர்களை எதிர்த்து முரசறைகையில் காண்பிக்கப்படும் மக்கள் எதிர்ப்பு உணர்ச்சியும் அவர்களின் கோஷங்களும், சிங்களத்தனத்தின் வீரப் பெருமிதமாக காண்பிக்கப்படுகின்றன.






குருகே பார்க்
ஜா எல பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் “குருகே பார்க்” எனப்படும் பொழுதுபோக்குப் பூங்கா சிறுவர்களைக் கவரும் பல விளையாட்டுக்களைக் கொண்ட ஒரு மையம். ஏராளமான பாடசாலை சிறார்களைக் கவர்வதற்காக அவர்கள் மகாவம்சக் கதைகளில் குறிப்பான சிலவற்றை சிலைகளாகவும், ஓவியங்களாகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருகிறார்கள். துட்டகைமுனு – எல்லாளன் கதை அதில் முக்கியமானது. எப்போதும் போல அங்கும் எல்லாளனும், அவனது படையினரும் கருப்பாகவும் சிங்களவர்கள் வெள்ளையாகவும் காட்டப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களை சித்திரிக்கும் குறியீடுகளாக நெற்றியில் விபூதி, மீசை ஆகியவற்றுடன் கறுப்புத் தோலைக் காண்பிக்கும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருவதை அவதானிக்கலாம்.



கண்டி மன்னன் வீரனில்லையா
இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்னர் “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. கண்டி அரசவையில் அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை 1815 இல் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்த எஹெலபொலவின் குடும்பத்தை பகிரங்கமாக மரண தண்டனை நிறைவேற்றுவதாக எடுக்கப்பட்ட திரைப்படம் அது. அத் திரைப்படத்தில் அரசன் ராஜசிங்கன் மோசமான பெண் பித்தனாகவும், குடி காரனாகவும், தோற்றத்தில் ஒரு வில்லனைப் போலவும் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

1818 ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சியை இலங்கை விடுதலைப் போராக புனைந்து வரும் சிங்கள வரலாறு அந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய கெப்பட்டிபொல, எஹெலபொல ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு கண்டி அரசனைக் காட்டிக்கொடுத்து பதவியாசைக்காக இலங்கையை ஆங்கிலேயர்களுக்கு விற்றவர்கள் என்பதை மறைத்தே வந்துள்ளது. ஆட்சியேறிய ஆங்கிலேயர்களால் தாம் ஏமாற்றப்பட்டதாலேயே ஆங்கிலேயர்களை எதிர்க்க கிளர்ச்சி தொடங்கியவர்கள் அவர்கள்.

அதுமட்டுமன்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்த உண்மை வீரன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தான். ஆனால் சிங்கள வரலாறு ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை வீரனாக போற்றுவதில்லை. அதேவேளை கெப்பட்டிபொல, எஹெலபொல ஆகியோரை தமது வரலாற்று வீரனாக மெச்சும் கோமாளித்தனம் நிகழ்வது தற்செயல் அல்ல. ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்கிற தமிழ் மன்னனை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இறுதி அரசன். அவன் தமிழன் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்வதில் உள்ள கஷ்டத்தை வேறென்னவென்று சொல்வது. இலங்கையில் தமிழ் அரசர்களின் வரலாறைச் சொல்லும் இத்தகைய சினிமாப் படைப்புகளைத் தான் தமிழர்கள் வெளிக்கொணரக் கூடிய அரசியல் சூழல் தான் இருக்கிறதா.



பேராசிரியர் சந்திர விக்கிரமகமகே திருத்திய "மகாவம்சம்" பதிப்பு கடந்த ஜூன் மாதம் 14 அன்று பிரதமர் ரணிலிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் ரணில் கூறினார் "மகாவம்சம் இன்றேல் இந்தியாவுக்கும் வரலாறு இல்லை" என்று.

மகாவம்ச மனோநிலையால் கோலோச்சப்படுவதே இலங்கை ஆட்சி என்றால் அது மிகையில்லை. மகாவம்ச சித்தாந்தம் என்பது இன்றைய இனப்பிரச்சினையின் கொதிநிலைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று.

நன்றி: தினக்குரல் 01.01.2017

No comments: