Sunday, December 15, 2019

-குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை.


தமிழில் : ஜி. குப்புசாமி 

மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே:
இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளலாம். ஓர் சோதனைக் கூடத்தில் பயன்படுத்தப்படும் வெள்ளெலிக்கு – அங்கே புகழாரம் சூட்டப்படுகிறது.

அந்த எலிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ‘அப்பாடா, கடைசியில் தரப்பட்டதே’ என்று ஒருவர் சொல்லலாம். அதன் பெயர் பல வருடங்களாக பட்டியலில் இருந்து வருகிறது. இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்த இலட்சக்கணக்கான சோதனைக்கூட விலங்குகளிலில் – கினிப்பன்றியிலிருந்து ரீஸஸ் குரங்குவரை – வெள்ளை ரோமமும், சிவப்புக் கண்களும் கொண்ட இந்த எலி இறுதியில் உரிய கெளவரத்தைப் பெறுகிறது. எனது நாவலில் கதை சொல்லியின் அபிப்பிராயத்தின் படி, நோபல் பரிசிற்குகந்த மருத்துவ ஆராய்ச்சியிலும், மரபணு ஆராய்ச்சியிலும் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரித்து வைத்த ‘வாட்ஸன்’ மற்றும் ‘க்ரிக்கின்’ ஆய்வுகளிலும் மற்றெந்த பிராணிகளை விடவும் இந்த வெள்ளெலிகளே உபயோகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற உதவியிருக்கின்றன. இதற்குப் பிறகே சோளத்திலும் மற்ற காய்கறிகளிலும், இதர சோதனைக்கூட விலங்களிலும் படிபடியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட சட்டபூர்வமான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனாலேயே, இந்நாவல் முடிவிற்கு வரும்போது மனிதகுலத்தின் இறுதிநாட்களில் உருவான ‘வாட்ஸன் க்ரிக்குகள்’ எனப்படும் ‘எலிமனிதர்கள்’ இவ்வுலகை கோலோச்சத் துவங்குகின்றனர். இவர்களிடம் மனித, விலங்கினத்தின் இரு நற்பண்புகளும் கலந்திருக்கின்றன. மனிதர்களிடம் பெரும்பான்மையாக எலியும், எலியிடம் பெரும்பான்மையாக மனிதனும் இருக்கின்றனர். உலகம் இக்கலப்பின் மூலம் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்கிறது. மாபெரும் அண்ட வெடிப்பிற்குப் பின் வெறும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ஈக்களும் ஒருசில மீன், தவளை முட்டைகளுமே எஞ்சியிருக்கின்றன. அதனால், இக்களேபரத்திலிருந்து மீண்டும், ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர, ஆச்சரியகரமாக பிழைத்திருக்கும் இந்த ‘வாட்ஸன் க்ரிக்குகள்’தான் அனைத்திற்கும் தலைமையேற்க வேண்டியிருக்கிறது.

Tuesday, November 26, 2019

எங்கள் தோழர் சண்முகம் வல்லி காலமானார் ..

-கரவைதாசன்- 
தோழர் முறிகண்டி என அறியப்பட்ட எங்கள் தோழர் சண்முகம் வல்லி அவர்கள் தனது அறுபத்தி ஒன்பதாவது வயதில்   காலமாகிவிட்டார். என்ற செய்தி மிகுந்த துயரத்தினை வரவழைத்து நிற்கின்றது. 

இலங்கைத்தீவினில் இனவாதமே அரசியலின் மூலதனமாக போயுள்ள சூழலின் இடையே, அறுபதுகளில் கார்ல்மாக்சின் மூலதனத்தினை செவிவழியே உள்வாங்கிக்கொண்டு பொதுவுடைமைச்  சமுதாயத்தின் முதல் படி சோஷலிச சமூகமே எனும் அரசியல் பட்டறிவில் வடபகுதியின் கன்பொல்லைக் கிராமத்தில் சமத்துவத்துக்கான போராட்டத்தில் தனது ஆற்றல் மிகு கரத்தில் ஆயுதம்  ஏந்தி மாற்றம் வேண்டி நின்றவர்  எங்கள் தோழர். 

1966களில் தொடங்கிய போராட்டம் 1971வரை நடைபெற்றது. அன்று தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் தலைமறைவாக வாழவேண்டிய சூழல். தலைமறைவில் ஒருநாள், அப்போது அவர் வாழ்ந்த வீடு ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் மைதானத்தினை ஒட்டியிருந்தது ஒரு மாலை வேளை போலீஸ்காரர்கள்  அவரை கைது செய்ய சூழ்ந்து கொண்டார்கள். ஒரு சாஜனும் இரண்டு கான்ஸ்சடுபிளுமென மூவர் அவரை  சூழ்ந்து நின்றனர். வேறு வழியின்றி மூவரையும் அடித்து சாய்த்து விட்டு தப்பித்துக் கொண்டார். அவ்வழக்கு உட்பட சிவானந்தன் எனும் சாதிவெறியனை நெல்லியடிச் சந்தியில் வைத்து  தாக்கியது, சாதியம் பேசிய வல்லிபுரம் அவர்களின் மஹாத்மா சினிமா தியேட்டரினை சேதப்படுத்தியது, நெல்லியடி தேனீர்க்கடைப்   பிரவேசம், ஆனையிறவில் வைத்து சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது, கொடிகாமத்திலும் சாவாகச்சேரியிலும் சாதிவெறியர்களின் வாகனங்களைத் தாக்கி  திருப்பிவிட்டது என  இவர் மீதும் இவரது தோழர்கள் மீதும் எட்டு வழக்குகள் போடப்பட்டிருந்தன. 1) முத்தன் தவராசா. 2)ஆழ்வான் சிவகுரு. 3)நல்லதம்பி இளையதம்பி. 4)இராசன் மார்க்கண்டன். 5)  சண்முகம் வல்லி. 6)பசுவர் செல்வராசா. 7)வேலுப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை என எழு பேர் மீது   கைக்குண்டு தயாரித்து தாக்கிய வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இவர் ஐந்தாம் எதிரியாக அடையாளம் காணப்பட்டார். 

வடமராட்ச்சிப் பகுதியில் நெல்லியடி, மந்திகை, பருத்தித்துறை போன்ற நகரங்களில் இரட்டை குவளை முறை ஒழிக்கபட்டு பொதுஇடங்களில் இன்று சமத்துவம் பேணப்பாடுகின்றதென்றால் இவர்   சிந்திய இரத்தமும் வேர்வையும் கூட ஆகுதியாகிப் போயிருக்கின்றது. அவரது குடும்பத்தின் துயரில் பங்குகொண்டு தோழருக்கு செங்கொடியினை தாழ்த்தி கனத்த இதயத்துடன் அஞ்சலிகள். 


சி.கா. செந்திவேல் 76 அநுபவப்பகிர்வு...

-கரவைதாசன்-

தோழர்களும் நண்பர்களும் கூடுங்கள்! பயணத்தின் பகிர்வில்.....

கன்பொல்லையில் சமத்துவத்துக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தோழர் அடிக்கடி கிராமத்துக்கு வருவார், சிலவேளையில் பொழுது சாய்ந்துவிட்டால் இரவு தங்கி நின்று செல்வார். அப்போது கிராமத்தின் சனசமூக நிலையம் கனுவில் சனசமூக நிலையம் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டு முதலியார் கோவிலடியில் இயங்கி வந்தது. இரண்டு பெரிய வாங்கில்களும் ஒரு பெரிய வாசிப்பு மேசையும் அங்கிருந்தது. அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் தான் தோழர் தூங்குவார். அநேகமாக அப்போராட்ட காலத்தில் ஆண்கள் யாருமே வீடுகளில் தூங்குவது இல்லை அங்கிருந்த கோவில்களிலும் ஸ்ரீ நாரதா பாடசாலையிலும் பூவரசமரங்கள் குடைபிடித்து நின்ற இருண்ட ஒழுங்கைகளிலும் ஆண்கள் இரவிரவாக விழித்திருப்பார்கள். வாசிகசாலை கிராமத்தின் நடுப்பகுதியிலும் போலிஸ் வாகனம் உள்வரமுடியாத ஒழுங்கையுடன் அமைந்திருந்ததாலும் அங்கே தான் ஊருக்கு வரும் தோழர்களை தங்கவைப்பார்கள். காலையில் ஒரு குண்டுசீனிப்பாணும் தேனீரும் அல்லது இரண்டு தோசையும் தேனீரும் பாடசாலை வளவில் எல்லோருக்கும் போல் தோழருக்கும் கிடைக்கும் மதியம் யராவது ஒரு முக்கிய தோழர் ஒருவரின் வீட்டில் உணவருந்துவார். பின் நெல்லியடித் தோழர்கள் அவரை வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அந்நாட்களில் தோழருக்கும் எனது தந்தையார் தவத்தாருக்கும் இடையில் நடந்த சம்பாசனைகளின் அநுபவங்களை கடிதவாயிலாக எனக்கு எழுதியுள்ளார். அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.

Monday, October 14, 2019

புத்தகங்கள் பறப்பைத் தருகின்றன...

-கரவைதாசன்-

நான் தனியாகவில்லை, புத்தகங்கள் என் தோழன். அவை எனக்கு பறப்பைத் தருகின்றன. புத்தகங்களை கொண்டாடினால் நீ என் தோழன் என் உறவு எல்லாம். 

" ஒரு வயோதிபன் மறையும்போது ஒரு நூலகம் மறைகிறது" என்கின்ற பிரக்ஞை ஆபிரிக்க மக்களிடம் இருக்கின்றது, எனில் அவர்களிடம் அந்த வழக்காற்றுமொழி  இன்றும் வாழ்கின்றது என எழுத்தாளர் சினுவா அச்சுவா பறைகிறார்.

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள் கடந்தகாலம் மற்றும் தேசியம் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்" என கவிஞர் பாபிலே நெருடே பறைகிறார். 

தொல்காப்பியம் குறைந்தது மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்கின்ற பறைதல் தமிழர்களிடம் இருக்கின்றது. சிங்கத்திடம் இருந்து வந்தவர்கள் நாம்  என கூச்சத்துடன்  உரைக்கிடினும்  மகாவம்சம் எனும் நூலினை இலங்கையின் வரலாற்று நூல் என  பறைகின்ற போக்கு சிங்கள மக்களிடம் இருக்கின்றது. 

டன் எனும் ஒரு கிழவன் மலைக்குகை ஒன்றிலிருந்து டெனிஸ் மொழியின் இலக்கணத்தினை வகுத்தான் என்று பறைதல் டெனிஸ் மக்களிடம் இருக்கின்றது. 

இப்படியாக மனித சமூகம் நூலினை நேசிப்பதால் பல விடயதானங்களை தெரிந்துகொள்ளவும் சில விடயதானங்களை அறிந்துகொள்ளவும் வழியாகின்றன

நூல்கள் தங்களின் சிறந்த தோழன் என நான் வாழுகின்ற வயன் நகரத்து மக்கள் கடந்த 01.10.19 அன்று  டென்மார்க்கினிலே வாழ்கின்ற சகல இன மக்களுக்கும்  பிரசங்கித்துள்ளார்கள். நூல்களின் நேசர்களுக்கு அன்று பொன்னான நாள். சுமார் பதின்நான்கு வருடங்களுக்கு முன்பாக றீப (Ribe) மற்றும் தெற்குஜூலன்ட் (Sønderjylland ) மாவட்டங்கள் கலாசார மண்டபம் ஒன்று கட்டுவத்துக்கு ஒதுக்கிய 32.6 மில்லியன் குறோணர்களை மூலதனமாக வைத்து 29 மீற்றர் உயரம் 7500 சதுர அடி பரப்பளவினையும் கொண்ட டென்மார்க்கின் புதியதும் நவீனத்துவதுமான நூலகம் மக்கள் பாவனைக்காக அன்றைய தினம் பி.ப.4.00 மணிக்கு வயன் நகர மேயர் ஈகோன் வ்பிராயர் (Egon Fræhr) அவர்களின் பிரதமஉரையுடன் திறந்து வைக்கப்பட்டது. அவரைத்தொடர்ந்து. கட்டடத் தொகுதியின் பகுதி உரிமையாளர் Morten Oxlund, பிரதம நூலகர்Kasper Østergaar Grønkjær, சிறப்புவிருந்தினர் Jacob Steglmann உரையாற்றினார்கள். மாலை 7.00 மணி கடந்தும் நிகழ்சிகள் நடந்தன. 

ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மின்னஞ்சல்  ஊடாக கிடைத்தது. உண்மையில் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கே தொடங்கியிருந்தது. அங்கே நூலகர் மேற்றவும் நூலகர் ஹன்னேயும்  பத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவை 

Tysklandsarbejderen Frederiks valg.
Katte øje
Høstkarl i himlen
Dansk,Dænsk,Darnsk
Hungerhjerte
Vinter
Mit navn er Lucy Barton
Lone star 
Insekternes Planet
Hjertebank 
 நூல்கள் பற்றிய அவர்களது அறிமுக உரைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அஸ்கோ  உயர் நிலைக்கல்லூரியின் முதல்வர், முன்னாள் நகரசபை மேயர் எனது முன்னாள் வரலாற்று விவுரையாளர் ஹான்ஸ் ஜோர்ன், அரசியலாளர்கள் நண்பர்கள்  என பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது அன்றைய நாள் எங்கள் எல்லோர்க்கும் கொண்டாட்டமான நாளாக கழிந்தது . 

Thursday, October 10, 2019

அசுரன் திரைப்படம்

கிளர்த்திய நினைவுகள்...... 

-கரவைதாசன்-



சென்ற சனிக்கிழமை 05.10.19 வம்றுப் தியேட்டரில் "அசுரன்" திரைப்படம் பார்க்க கிடைத்தது. பூமணியின் வெக்கை நாவலின் கதைக்கருவினை இயக்குனர் வெற்றிமாறனும் அவரது குழுவினரும் திரையில் பேசுபொருள்
ஆக்கியிருந்தனர்.

நடிகர் தனுஷ் தொடக்கம் பசுபதிவரை நடிகர்கள் அப்பாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள். 

திரைக்கு வெளிச்சம் பாச்சியபோது பூமணியின் கதா பாத்திரங்கள் விம்பமாக  துலாம்பரமாக தெரிந்தன, இல்லை வாழ்ந்தன. ஆரவாரமில்லாமல் எரிச்சலுட்டாத இசை. கிராமங்களை அச்சொட்டாக உருவகப்படுத்தியிருந்த கலை,  பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார் வெற்றிமாறன். தொகுப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. சண்டைக்காட்சியில் சில சினிமாத்தனங்கள் இருந்தன வர்த்தக நோக்கில் அவை தவிர்க்க முடியாதவை. அதனிடையும் தனுஷ் தன் நடிப்பாற்றலை தெறிக்கவிட்டுள்ளார். 

தனுசும் அவரது சின்ன மகனும் போலீசிடம் அகப்பாடாமல் காட்டையண்டிய நீர்நிலைக்கூடாக பதுங்கிப் பதுங்கி செல்வதுடன் படம் தொடங்குகிறது. நீரில் நனையாமல்  கையில் வைத்திருக்கும் பைகளை அவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள். உருண்டை கவனம் எனும் கதையாடல் அவர்களுக்கிடையில் நடக்கின்றது. பார்வையாளர்களுக்கு பின்பு தான் தெரிய வரும் உருண்டை என்பது தனுஷின் மகனால் தயாரிக்கப்பட்ட  கைக்குண்டுகள் என . 

விரியும் கதையும் கதை காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் என் நினைவுகளை கிளர்த்தி என்னை நிலைகுலைய வைத்துவிட்டன. ஆனையிறவு உப்பளம் , குறிஞ்சாத்தீவு  அதையொட்டிய சிறு பத்தைக் காடுகள் அதே மணல்தரை அதை தெரிந்தவர்களுக்கு படம் காட்சிப் படுத்தப்பட்ட இடங்களை ஒத்துப் போவதை அவதானிப்பர்.  மட்டுமன்றி ஓலைகளால் வேயப்பட்ட வீடுகள் திரைப்படத்தில் காட்டப்பட்ட கிராம மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, சொந்தமாக  தயாரிக்கப்பட்ட குண்டு  என்பன நான் வாழ்ந்த கன்பொல்லைக் கிராமத்தினையும் அறுபதுகளில் அவர்கள் நடத்திய சாதியத்துக்கு எதிரான போராட்டங்களையும் நினைவுக்கு கொண்டுவந்தன. இன்று கன்பொல்லையில் ஒரு ஓலைவீடுகூட இல்லை என்பது வேறு கதை. 

தனுஷின் பாத்திரம் கன்பொல்லைக்கிராமத்தின் சமத்துவத்துக்கான முன்னணிப் போராளிகள் மு.தவராசா, ஆ.சிவகுரு, இ .மார்கண்டன், ப.செல்வராசா, ந.இளையதம்பி, ச.வல்லி, வே.கிருஸ்ணபிள்ளை சி.காசியன் யாவரையும் ஒத்துப் போவதை நான் உணர்ந்தேன்.  

ஆயினும் திரைப்படத்தின் இயங்கு நிலை எனது ஒரு பத்து வயது காலத்துக்கு என்னை   பின்னோக்கி சரித்தது. தனுஷ் எனது தகப்பனார் தவத்தாராகவே (மு.தவராசா ) எனக்குத் தெரிந்தார். 1966 தொடக்கம் 1971 வரை சவாகச்சேரி, கொடிகாமம், பலாலி, தையிட்டி, ஆனையிறவு, எழுதுமட்டுவாள், சங்கானை, வன்னி  என அவர் தலைமறைவாக வாழ்ந்த  இடங்களையும் அந்த வாழ்வையும்  எனக்கு நினைவு மீட்டின. 

அப்போது அவருக்கு அக்கா, நான், தங்கை என மூன்று பிள்ளைகள் இருந்தோம். தலைமறைவான இடங்களுக்கு  ஆண் பிள்ளையான என்னை மட்டும் அழைத்துப் பார்ப்பார்.  அவரது மூத்த சகோதரர் அபிமன்யு அவரிடம் என்னை அழைத்துச் செல்வார். 

ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளம் அவர் அதிக காலம் தலைமறைவாக இருந்தவிடம் அங்கு அவரது உறவினர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். நான் ஐயாவை பார்க்கப் போகும்போது இயக்கச்சியிலேயே  பஸ்சிலிருந்து  இறங்கிவிடுவோம் . அங்கு  எங்களை அழைத்துச் செல்ல நடராசா மாமா, லக்குணம் மாமா அல்லது செல்வநாயகம் அத்தான், அல்லது சின்னராசா அத்தான்  அநேகமாக வந்து நிற்பார்கள். காட்டு வழியால் எங்களை அழைத்துச் செல்வார்கள்.  அந்த நிலச்சாயல் அப்படியே திரைப்படத்தில் ஒட்டியிருந்தது. செய்தியறிந்த போலிஸ் ஒரு தடவை நடராசா மாமாவை பிடித்து நையப்புடைத்தார்கள் அப்போதும் அவர் மறைவிடத்தினை காட்டிக்கொடுக்கவில்லை. திரைப்படத்தில்  இந்த ஒத்துப் போன பாங்குகள் தொண்டையை  அடைத்து கண்ணீரை வரவழைத்தன.

தமிழ்திரையுலக இயக்குநர்கள் கற்பனைகளை புனைந்து சினிமா ரசிகர்களை உணர்வு  தொற்றுதலுக்குள்  ஆட்படுத்தி வைத்திருக்கின்றனர். அந்த வாலாயத்துள்ளும்  சில செய்திகளை வைத்திருக்கும் வெற்றிமாறனை பாராட்டாமல்  இருக்கமுடியவில்லை. கல்வியும் ஒரு சிறந்த ஆயுதம் தான். (இதனை அடைய நாம் பெளத்தத்தில் சேர வேண்டியிருந்தது. என்பது எங்கள் கதை.) என் நினைவுகளைக்   கிளர்த்திய படம். நன்றி வெற்றிமாறன்.....
















Monday, September 02, 2019

எங்கள் தோழர் தங்கராசா அண்ணா

-கரவைதாசன்- 
தோழர் தங்கராசா அவர்களின் நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது ?
ஒவ்வொன்றாக அவரது தோழர்கள் வே.பரமகுரு, கே.எஸ்.இரத்தினம், சீ .செல்லக்கிளி, ஆ.சுந்தரம் என இன்னும் பலர்  அந்த மண்ணில் உதிர்ந்தபோதும் ஒற்றைப் பனைமரமாக அந்தக் கிராமத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தனித்துவமிக்க தோழராக அவர் வலம் வந்தார். கோட்பாட்டு ரீதியில் தனது கட்சியின் கோட்ப்பாடுகளுடன் அவர்  தன்னை அடையாளப்படுத்தியபோதும். சமூகத்தில் தானும் ஒருவராக தன்னை இணைத்துக்கொண்டு அவர் தோப்பாகவே வாழ்ந்தார். ஒரு சோஷலிசவாதிக்குரிய அரிய பண்புகளுடன்  கிராமத்தில் எரிந்துகொண்டிருக்கும் எந்த  முதற் பிரச்சினையிலும் சிநேகமாக   தீர்வு தேடும் ஒருவராக அவரை நான் அடையாளம் கண்டேன்.  அது கோவிலோ , சுடுகாடோ, கழகங்களோ அல்லது பாடசாலையோ பொதுச் செயற்பாடுகளில் பகை முரண்பாடுகளை களைந்து சினேகா முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை  இளைஞர்  மத்தியில் பேசு பொருளாக்கி  ஐக்கியத்தினை  வலியுறுத்தும் நல்ல முன்னோடியாக அவரைக் கண்டேன். அவர் இல்லாத கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சியில்  எனது நம்பிக்கைகளில் நான் பயம் கொண்டுள்ளேன்.

Thursday, August 22, 2019

Monday, June 10, 2019

கன்பொல்லைக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை



-கரவைதாசன்-

கன்பொல்லைக் கிராமத்துக்கு ஏன் இலங்கை இராணுவம் தண்ணீர் கொண்டு வந்து தருகிறது­­? இதற்கு ஏன் தவம் அறக்கட்டளை அனுசரணை வழங்கியது?

கன்பொல்லைக் கிராமத்தில் பல்வேறு குறைபாடுகள் இன்றும் காணப்படுகிறது. அவற்றில் குடிநீர்ப் பிரச்சினை இன்று முதன்மை பிரச்சினையாகவுள்ளது . கடந்த ஏப்ரல் மாதம் நெல்லியடி பிரதேச சபையிலிருந்து கிராமத்தில் கிராமத்தின் அபிவிருத்தி என்னும் பெயரில் கிராமத்திலுள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத பொதுநிறுவனங்கள் அழைத்து கலந்துரையாடப்பட்டது . அனைவரும் ஒருமித்த குரலில் குடிநீர்ப் பிரச்சினையினை முதன்மை பிரச்சினையாக முன்மொழிந்துள்ளனர் . அதனை கவனத்தில் எடுப்பதாக உறுதி அளித்தவர்கள், அசமந்தப் போக்காக நடந்துள்ளனர் . ஏற்கெனவே மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தாங்கி பிரதேச சபையிடம் இருக்கின்றது, ஆகவே இன்னுமொரு தாங்கியை கிராமத்தவர்கள் தங்களது முயற்சியில் சேகரித்துக்கொண்டால் இரண்டு தாங்கியிலும் தாங்கள் தண்ணீர் வழங்குவதாக கூறி வந்துள்ளனர் .இதற்கிடையில் மாதிரிக்கிராமத்தில் பாவனையில் வைக்கப்பட்டிருந்த 500லீட்டர் கொள்ளவு கொண்ட அந்த தாங்கியையும் அவர்கள் அப்புறப்படுத்திவிட்டார்களாம். இந்த விடயத்தினை எனது கவனத்துக்கு கிராமத்தின் முன்னேற்றச்சங்க செயலாளர் வெ.யோகராசா கொண்டு வந்தார். கூடவே ஏன் எங்களது அறக்கட்டளை ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக வாங்கித்தரக் கூடாது எனவும் வினாவினார். முதலில் மறுத்த நான் அவரின் வைப்புறுத்தலின் பேரில் வாங்கிக்கொடுக்க சம்மதித்தேன்.அதன் பிரகாரம் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியை எனது தந்தையாரின் நினைவாக தவம் அறக்கட்டளையினால் வாங்கிக்கொடுத்தோம் . அந்த தாங்கி ஸ்ரீ நாரதா வீதியில் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியில் அவர்களிடமுள்ள தாங்கியிலும் எங்களால் வழங்கப்பட்ட தாங்கியிலும் குடி நீர் வழங்கும் படி பலமுறை கேட்டபோதும், பிரதேச சபையினரிடம் அசமந்தப் போக்கே காணப்பட்டதாக எனக்கு எட்டியது .இது விடயமாக நான் எனது நண்பர்களுடன் கதைத்து வடமாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி கெட்டியாராச்சி தர்சன அவர்களுடன் கலந்து கதைத்தோம். அவர் எங்களிடம் அக்கறையோடு இந்த விடயத்தினை கேட்டறிந்தார். தாங்கள் 15,000 லீற்றர் குடிநீரினை கிழமைக்கு இரண்டு தடவை தந்து உதவுவதாக வாக்குத் தந்தார். அதன் அடிப்படையில் மேலும் இரண்டாயிரம் லீற்றர்கள் கொள்ளக்கூடிய இரண்டு தாங்கிகளை வாங்கி மாதிரிக் கிராமத்தில் கிராமமுன்னேற்ற சங்கத்துக்கு முன்பாக ஒன்றும் நாரதாவீதியில் ஒன்றும் விகாரைக் காணிக்கு முன்பாக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒன்றும் தாங்கிகளின் பாதுகாப்பு கருதி எங்களுக்கு தெரிந்தவர்களின் வளவுகளில் தாங்கிகளினை வைத்து விட்டு தண்ணீர் வடி குழாயினை பொதுவெளியில் சகலரும் பாவிக்கும் படியாக வெளியே வைத்தோம். இதுதான் நடந்த கதை. மேலதிகமாக எந்த பொது நிறுவனமும் தாங்கிகளை வாங்கி கிராமத்தில் வைத்தால் இராணுவம் தொடர்ந்து குடிநீர் வழங்கி உதவும் . தவம் அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட மூன்று தாங்கிகளும் எங்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டது. நாங்களே உதவும் கரங்கள் பணவிடயத்தில் எங்களுக்கு வேறு உதவும் கரம் இல்லை . பொது சேவை என்பது
" வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளயாருக்கு அடிப்பதல்ல! " இந்த வார்த்தை எங்களுக்குப் பொருந்தாது. நாம் எமக்கு நாமே வகுத்த பொது வழியில் பொறுப்புடன் இயங்கி வருகிறோம். நாம் நல்ல நண்பர்களுடன் கலந்தாலோசித்து முயற்சித்து குடிநீரினை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளோம் .குடி நீர் எல்லோருக்கும் பொதுவானது அதனை எல்லோரும் பெற்று பயனடைவீர். இந்த விடயத்தில் கிராமத்துக்கு இரண்டு தடைவையாக நேரில் வந்து நிலைமையினை அவதானித்து உதவிய மதிப்புக்குரிய Dr.சி.மோகன் அவர்களை நான் பெரிதும் கெளரவப்படுத்துகின்றேன் . நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சமயப் போதகர்களையும் பெரிதும் மதித்து கெளரவப்படுத்துகின்றேன் . அசமந்தப்போக்கோடு நடக்கும் அரசியல் சக்திகளை கேட்க வக்கத்தவர்கள் . அவர்கள் போடும் எலும்புத்துண்டுக்காக எங்களை குறை கூற முயற்சிக்க வேண்டாம். இதற்குள் சாதியரீதியான புறக்கணிப்பு இருப்பதான சந்தேகம் எமக்கு இருக்கிறது. மற்றையது புகலிடத்தில் சாட மாடையாக எங்களை சாடுகிறவேலையை விட்டுவிடவும் . இல்லையேல் உங்களை யாரென பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டி வரும்! நாகரீகம் கருதி இப்போது விட்டு விடுகிறேன்.
ஆனால் நாம் எமது பொது சேவையில் தொடர்ந்தும் மானிட நேசிப்புடன் வழிகொள்வோம்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்.

- எம். ஏ. சி. இக்பால்-
இந்தக் கட்டுரை 2002 -ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் 25 -வது ஆண்டு நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரையை வரைந்த எம். ஏ. சி. இக்பால் அவர்களுக்கு நன்றிகள். 2019ம் ஆண்டு ஜூன் 25
மு. கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் மு. கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும், சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே.
அன்னார் காலமாகி பல வருடங்கள் கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள், நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது அரசியல் பணி என்றால் அது மிகையாகாது.
யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் அமரர் கார்த்திகேசன் அவர்கள். பிரபுத்துவ கலை கலாச்சார ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் பல கொடூர கஷ்டங்களை எதிர்கொண்ட கார்த்திகேசன் அவர்கள், அதனை அவரது தோழர்களான காலஞ்சென்ற வைத்திலிங்கம் மாஸ்டர், அரியரட்ணம் மாஸ்டர், M.C. சுப்பிரமணியம், கே. டானியல், சுபைர் இளங்கீரன் போன்றவர்களின் உதவியுடன் துணிவுடன் எதிர்கொண்டு மார்க்ஸிஸ லெனினிஸ கொள்கையைப் பரப்புவதில் முன்னின்று உழைத்தார்.
அதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற கார்த்திகேசன் அவர்கள் 1955 -ம் ஆண்டு இடம் பெற்ற யாழ். மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சாதி, மத பேதங்களுக்கு எதிராக செயற்பட்ட கார்த்திகேசன் அவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.