Thursday, October 28, 2010

ஸ்ரீநகரிலிருந்து அருத்தி ராயின் அறிக்கை :

அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவசமா? 
-அருந்ததி ராய்-
                                                  
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்' இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 26, 2010

Tuesday, October 26, 2010

பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள்,  ஹ்யூஸ்டன்,
  
டெக்சாஸ் நகரில் விருந்துபசாரம் ஒன்றில்  கலந்து கொண்டபோது,  

பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட  
 
வரவேற்புரை

 
- தமிழில்: ந. சுசீந்திரன் -  
 

ஜார்ஜ் வில்லி அவர்கள் இலங்கையில் வடமராச்சியில் 

பருத்தித்துறையை  பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது 

அமெரிக்காவில் கிளரி கிளிங்டன் அவர்களின் அமைச்சில் குடிவரவு 

பகுதியில் உத்தியோகப் பற்ற் ஆலோசகராக கடமை ஆற்றி வருகிறார்.   


மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் "இது இலங்கையோ?" என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.
நான் இலங்கையில் பிறந்தவன். என்  தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான், என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு  கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த  ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும்  நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும்  அன்னசத்திரங்களில்  கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள் தோத்திர பஜனைகள் கேட்டும்  மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும்  சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும்  திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணிசெய்துமிருகிக்கிறேன்.
ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை  அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது. அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்களோ துட்ட காமினியின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட காமினி எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் ஐக்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட காமினி இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான். எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும்  நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க  வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம்  தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற   25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்ஷ என்ற பெயருடைய மாவீரன்  என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட காமினி என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும்ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகாமினியின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ  அல்லாது  நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும்  தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம்தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமகனாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது  அவர்களது மொழியினை         மதித்து நடவுங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும்  கலாசாரங்கள் மிகச் சிலவேநீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில்  நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது. படைநடத்திச்சென்று சமராடி  ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது  நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாரளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. வாளோடும் துப்பாக்கியோடும் இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள உங்களால் முடியாதுமனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை.         பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே  பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.என்று தம்மபதத்தில் புத்தர் சொல்லியிருக்கின்றார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது,   நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை  என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!      
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!  
கிழே, அதன் ஒலி ஒளி வடிவம் ஆங்கிலத்தில் உள்ளது . 

Sunday, October 24, 2010

அரசியல் அமைப்பு சட்டத்தின் 18 ம் திருத்தம்: அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே !

Sri Lankan constitution and democratic rights-S. G. Punchihewa-

இலங்கையில் பலரும் அறிந்த எழுத்தாளர், கவிஞர், மனித உரிமைகள் ஆர்வலர். 2005 ம் ஆண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்திற்கு நியமிக்கப்பட்டார். அரசமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று அந்த நியமனத்தை செய்ய வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, திரு. புஞ்சிஹேவ அந்த பதவியை ஏற்க மறுத்து விட்டார். இன்று இலங்கையில் பகிரங்கமாக மாற்றுக் கருத்துகளுக்காக குரல் கொடுக்கும் மிகச் சில நபர்களில் ஒருவர்.
சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம். Text Color
 
ஜனாதிபதி எவ்வளவு சக்தி வாய்ந்தவர்?1990 ல், யு.என்.பி. ஆட்சியில் இருந்த போது, கானாமல்போவதற்கும், கொலைகளுக்கும் எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. ரிசார்ட் டி சொய்சா என்ற எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும் காணாமல் போன சம்பவத்தை குறிப்பிடலாம். பின்னர் அவரது பிணம் மொரட்டுவ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவசரகால நிலைப் பிரகாரம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தன. தடையை மீறி கருத்தரங்குகளும், சந்திப்புகளும் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து இரண்டு பேர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். "ரிசார்ட் சொய்சாவுக்கு என்ன நடந்தது?" அன்றைய ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பிய அந்த இருவரில் ஒருவர் மகிந்த ராஜபக்ச, மற்றவர் எமது நண்பரான பிரகீத் எக்னேக்ளிகொட. இன்று "பிரகீத்துக்கு என்ன நடந்தது?" என்ற அதே போன்ற கேள்வியை மகிந்த ராஜபக்சவிடமும் எழுப்ப வேண்டிய சோகமான முரண்நகை தோன்றியுள்ளது.



அரசியல் அமைப்பு சட்டத்தின் 18 ம் திருத்தம், பதவிக் காலத்திற்கு இருந்த வரையறையை நீக்கியுள்ளது. தற்போது அவர் தெரிவானால் நிரந்தரமாக (6 வருட தவணைகள்) பதவியில் நிலைக்கலாம். 18 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், சுதந்திரமான ஆணையகத்தினால் தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது. மாறாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியே தீர்மானிப்பார். ஏனென்றால் ஆணையகத்தின் உறுப்பினர்களை அவரே நியமிக்கிறார். ஆணையகம் தேர்தல்களை நடத்துகின்றது. தேர்தல்களை நடத்துவதற்கு காவல்துறையின் சேவை அவசியம். போலிஸ் தலைமை அதிகாரியையும் அவரே நியமிப்பார். அரசாங்க ஊழியர்கள் அநேகமாக எல்லா தேர்தல் கடமைகளையும் முன்னெடுப்பார்கள். ஆனால் பொதுநல சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியாலேயே நியமிக்கப்படுகின்றனர். யாராவது சுதந்திரமான, நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியுமா? அப்படி ஒன்று இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.


தலைமை நீதியரசரையும், உச்ச நீதிமன்ற நீதிபதியையும், அரச சட்டத்தரணியையும் அவரே தீர்மானிக்கிறார். அதனோடு அவர் தன்னை பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் நியமித்துக் கொள்கிறார். தேர்தல்களில் பெருமளவு பணத்தை செலவழிக்கிறார். எந்த திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவரே தீர்மானிக்கிறார். கடைசி மாகாண சபை தேர்தல்கள் எல்லாம் ஒரே நாளில் நடத்துவதற்கு பதிலாக, தனித்தனியாக நடத்தப்பட்டன.


அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் சில:
70 (1): ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, ஒத்தி வைப்பதற்கு, அல்லது கலைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம்.
70 (1a) பொதுத் தேர்தல் நடந்த திகதியில் இருந்து ஒரு வருட காலம் முடியும் வரையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காமல் வைத்திருக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது.
31 (3) A (a) (1): தற்போதைய பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி எந்நேரமும் அடுத்த தவணைக்கான தேர்தலை அறிவிக்கலாம்.


அவர் தனது அதிகாரத்தை பிரயோகிக்கும் காலத்தில் இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகம், சட்ட மீறல், அல்லது தவறிழைப்பதற்கு எதிராக மக்களுக்கு எந்தவொரு சட்ட ரீதியான பரிகாரமும் கிடையாது. ஏனென்றால் (35) வது ஷரத்தின் பிரகாரம் அவர் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவராவார்.


அரச ஊடகம் என்றாலென்ன, தனியார் ஊடகம் என்றாலென்ன, அனைத்து ஊடகங்களும் அவரது கட்டுப்பாட்டின் கீழே வருகின்றன. அரச ஊடகம் நேரடியாக அவரது செல்வாக்கின் கீழே உள்ளது. தனியார் ஊடகம் தனது சொத்துகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அரச பரப்புரைகளுடன் ஒத்துப் போகின்றன. ஊடக பிரச்சாரம், பதாகைகள், விளம்பர தட்டிகள் எல்லாம், மக்களின் மனதில் ஜனாதிபதியின் மேலான மதிப்பை அதிகரிப்பதற்காக பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாபெரும் ஆட்சியாளர் பற்றிய சித்திரம் காட்சிப் படுத்தப் படுகின்றது.


மக்கள் திரளின் முன்னால் பேசப் போகும் போதெல்லாம், ஒரு குழந்தையை கையில் ஏந்திய பெண்ணை திடீரெனக் காண்கிறார். மாமனிதர் அந்தக் குழந்தையை வாங்கி தூக்கிப் பிடிக்கிறார், சிரிப்பூட்டுகிறார், தாயுடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார். ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை படம்பிடித்துக் காட்ட தயாராக இருக்கின்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகும்.


உரிமை மீறல்களை எதிர்த்து மக்கள் போராடும் பொழுது, அது "தேசத்தின் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டு, ER அல்லது PTA சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது எப்போதும் அதிகாரத்தை கொண்டிருப்பவரின் மொழியிலேயே வரையறுக்கப்படும். அவர்கள் தேசத்தின் பிரஜைகள். அவர்கள் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு. இந்த அமைப்பை அலட்சியப் படுத்தும் அனைவரும், அதனால் பயனடைபவர்களே ஆவர்.


பன்னிரண்டு பாராளுமன்ற குழுக்கள் உள்ளன. அவற்றில் இரண்டு:
* பொதுநல அமைப்புகளுக்கான குழு

* பொதுநல நிதிகளுக்கான குழு.


இந்தக் குழுக்கள் அரசாங்கத்தின் செலவுகளை மேற்பார்வையிடலாம். கணக்கு நிலுவைகளை சரிபார்ப்பதற்கான இந்தக் குழுவின் தலைவரை எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு செய்வதே சம்பிரதாயமாகும். தற்போது அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே எந்த கையாடலும் அம்பலமாகலாம்.


பாராளுமன்றம் மேற்பார்வையிடும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. ஆணைக்குழுக்களாலும், விவாதங்களாலும், கூட்டங்களாலும், கேள்விகளாலும் அந்த அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன.
எமது சுதந்திரத்தின் அடிப்படை
எமது நாட்டின் நிலை என்ன? நாம் எமது தசைகளுக்கு உணவூட்டும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். எமது உடலைப் பாதுகாப்பது எப்படி? சுகாதார அமைச்சினால் காக்கப்படும் நோய்கள் அவை.

ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே நாம் நினைக்க வேண்டும். நாம் பெறும் கல்வியின் அடிப்படை என்ன? அடிமையாகும் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள். சட்டம் என்பது காகிதத்தில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே. நீதியான தீர்ப்பு என்பது சட்டபூர்வ எந்திரன்களால் உச்சரிக்கப்படும் ஒரு தொகுதி சொற்கள். தேசபக்தி இனவாதிகளின் மூர்க்கமாகி விட்டது. அரசியல் பயிற்சியின் விளைவு என்ன? சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து சாக்கடையாக மாறி வருகின்றது. தற்போது அவர்கள் எமது இறுதிப் பொக்கிஷமான ஆன்மாக்களை திருடுகிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் சுதந்திரத்தின் அடிப்படை என்ன? ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் சுதந்திரமாக சுடலாம். குற்றவாளிகளை அம்பலப் படுத்துபவர்கள் பட்டப் பகலில் கொலை செய்யப்படுவார்கள். போலிஸ் அதன் பிறகு என்ன செய்யும்? கொலையானது ஒரு இனத்தெரியாத நபரினால் செய்யப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக, தகவல்களைத் தேடுவார்கள். இறந்தவனின் மரணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்.

ஒரு பிரஜையின் கடமை என்ன? நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட்டு, அரச ஊடகம் சொல்வதை நம்ப வேண்டும்.

ஒருவர் கேட்கக் கூடாத கேள்விகள் இவை:
- யார், எப்படி கொலை செய்தார்கள்?
- கடத்தல் புரியும் படைகளை அனுப்புவது யார்?
- கொலை செய்யும் துப்பாக்கிகளை யார் வைத்திருக்கின்றனர்?
-உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கொலைகள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுவது எவ்வாறு சாத்தியமாகின்றது?



சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம்.

வடக்கில் அவர்கள் கூறும் வெற்றியானது, திரைமறைவில் முழு நாட்டிற்குமான அடக்குமுறையாக உள்ளது. இந்த நிலைமை குறித்து நீங்கள் பேசினால், அது அந்நிய நாட்டு சாதியாகவோ, அல்லது புலிகளின் குரலாகவோ மாசு கற்பிக்கப்படலாம். இந்த தேசத்தில் இரண்டு வகையான மக்கள் மட்டுமே உள்ளனர். ஜனாதிபதி அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்: "இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு பிரிவினர். மற்றவர்கள் துரோகிகள்." இந்த நாட்டை நேசிப்பவராயின் நீங்கள் ஒன்றில் அடங்கிப் போக வேண்டும், அல்லது மௌனமாக இருக்க வேண்டும். அதிகாரத்திற்கான பேராசை இந்த நாட்டில் சட்டமாகி விட்ட மோசமான தருணம் இது. அதனால் வடக்கில் இருந்து தெற்கு வரை தெளிவை விருத்தி செய்வது பயங்கரமான கனவாக இருக்கும். மக்கள் போராட்டம் மட்டுமே இந்த நிலையை மாற்றும்.

ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலம் ஆரம்பமான போது எடுத்த உறுதிமொழி இது. நவம்பரில் இரண்டாவது தடவை அதே உறுதிமொழியை எடுக்கலாம்.
"நான்,... மனப்பூர்வமாக உறுதியாக அறிவிக்கிறேன்: நான் விசுவாசத்துடன் இந்த கடமையை நிறைவேற்றுவேன்.... இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம்.... இலங்கை குடியரசுக்கு நான் விசுவாசமாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் நிர்ணய சட்டத்தை பாதுகாப்பதற்கு முடிந்த அளவு பாடுபடுவேன். "

அது ஒரு உரையாக இருந்த போதிலும், வித்தியாசமாக அர்த்தப்படலாம். இதுவரை காலமும் அவரது செயல்களில் இருந்து உண்மையான அர்த்தத்தை பிரித்தறியலாம். யுத்தத்தை தவிர, அவர் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. அவர் செய்தவை எல்லாம் சட்டத்திற்கு மாறானவை.

"நான், ... மனப்பூர்வமாக உறுதியுடன் அறிவிக்கிறேன்: நான் ஜனாதிபதிக்குரிய கடமைகளை நிறைவேற்ற மாட்டேன். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும், சட்டத்தின் படியும் நடக்க மாட்டேன். இலங்கை குடியரசுக்கு விசுவாசமாக இருக்க மாட்டேன். எனது குடும்பத்திற்கு விசுவாசமாக முடிந்த அளவு பாடுபடுவேன். சட்டத்தை மீறுவதுடன் அராஜகத்தை தூக்கிப் பிடிப்பேன். கொள்ளைக்காரர்களின் உரிமைகளுக்காக பாடுபடுவேன். நான் இத்தனை காலமும் செய்தவற்றை தொடருவேன் என உறுதி கூறுகின்றேன். "அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாக கூறினார். அதைச் செய்வதற்குப் பதிலாக, இன்னும் அதிக அதிகாரங்களை திரட்டிக் கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகி விட்டார்.

மக்கள் போராட்டம் மட்டுமே நிலைமையை மாற்றும். அது நடக்கலாம்!
 
 (அண்மையை உரைகளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.)
(ஆங்கில மூலப்பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)

“கமலாதாஸ்” என்னும் எழுத்து

கவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து


- செந்தமிழ்மாரி(இந்தியா)
கவிதைகள் எழுதுவது என்பது ஒரு தவத்தைப் போன்றது. ஒரு அறிஞர் சொல்கிறார் குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் வாழ்வு இனிமையாக இருக்கிறது என்று. அதைப்போல காண முடியாத அல்லது எண்ண முடியாத பாதையைக் கண்டடைந்து அதில் ஊறித் திளைக்கும் கவிஞர்களுக்கு வாழ்வு பெரும் அர்த்தத்துடன்தான் விளங்குகிறது. அன்று முதல் இன்றுவரை கவிதையைக் கண்டடைந்தவர்கள் ஏராளம் பேர்.பெரிதும் அறியப்பட்டவர்கள் ஆண்பாற் புலவர்களே. தொடக்க காலம் முதலே பெண் கவிஞர்கள் உருவாவதை இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதை நாம் அறியும் சங்ககாலக் கவிதை தொடங்கி அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி மிகுந்த சிரமங்களுக்கிடையில்  சங்ககால பெண் கவிஞர்களான காரைக்காலம்மையார், வெள்ளிவீதியார், ஒளவையார், ஆண்டாள் போன்ற ஒரு சிலர் மட்டுமே அறியப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பெண்களின் எழுத்தையே அதிகமாகக் காண முடிந்தது. அதிலும் 1990க்குப் பிறகான காலத்தில்தான் பெண் கவிஞர்களின் வரவு அதிகரித்ததன என்று கூறலாம். அப்படி வந்த கவிஞர்களும் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளோடு இறைவனையும், அழகையும் வர்ணித்தே கவிதையெழுதினர். புதுமைக் கவிஞர்களுக்கு பிறகு பின் நவீனத்துவ காலக் கவிஞர்கள் 1990களின் கடைசியில் வந்து, இன்றைக்கு ஆண் கவிஞர்களின் எண்ணிக்கையோடு மட்டுமல்ல கவிதைத் திறனோடும் போட்டி போடும் அளவுக்கு அவர்களின் நிலை வளர்ந்துள்ளது. ஒரு பெண் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கும் என்பதைப் போல்தான் பெண் கவிஞர்களின் வரவு எதிர்கால சந்ததியினருக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் அவர்களின் ஆளுமைத்திறனும் சுதந்திரங்களை அடையும் குணங்களும் வித்திடுகிறது.
எனவே இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. இன்று அவர்கள் பல பொருள்களில் தனிமனித சுதந்திரம், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகள், பெண் உடலின் மீது செலுத்தும் ஆதிக்கம், மனதிலேற்படுத்தும் ஆதிக்கங்கள் போன்றவற்றைத் தகர்த்து கவிதை புனைந்து வருகின்றனர். இருந்தாலும் ஆண் கவிஞர்களின் உடல் சார்ந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இச்சையூறும் இச்சமூகம் பெண்களின் உணர்வுகளை, உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கிக் கொணரும்போது மறுக்கும் நிலைதான் நீடிக்கிறது. இது இச்சமூகம் வளர்வதற்கான சூழல்தானா என்ற கேள்வியை எழுப்பத் தவறியதில்லை. இருப்பினும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகக் கவிதை மூலம் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  
எத்தகைய அடக்குதல்கள் வந்தாலும் பெண்கவிகள் அவர்களுக்கான பங்களிப்பை கவிதைகளால் மட்டுமல்ல பெண் சுதந்திரம், பெண்களின் தனித்த வளர்ச்சி, தனித்த ஆளுமை இன்னும் பிறவற்றால் இந்தச் சமூகத்தில் தங்களாலான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள். அத்தகைய பெண் கவிஞர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்த ‘கவியாளுமைகள் ‘
 கமலாதாஸ் என்னும் எழுத்து  
 senthamzmari6கமலாதாஸ் இன்று மரணமடைந்துவிட்டாலும் அவர் எழுதிய எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தும் சமூக அளவீடுகள், மதிப்பீடுகளை மறுத்தும் கேள்வ 
கேட்கவும் செய்யும் காத்திரமான படைப்புக்களாகவே இருந்துவருகின்றன. இவர் வாழும் காலத்திலேயே பலவிதமான விமர்சனங்களால் அலைக்கழிக்கப்பட்டும், இறப்புக்குப் பின்னரும் பலவிதமான விமர்சனங்களுக்கும் ஆட்பட்டார். இருந்தும் அவர் வாழும்வரை இழக்கமுடியாத எழுத்தாகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.
1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள், கேரளத்திலுள்ள திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மலையாள பத்திரிகையான மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், உலகெங்கும் கவிதையால் அறியப்பட்ட கவிஞர்
பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர். கருவிலேயே கவிதையைக் கண்டடைந்தவர். அதனால்தான் கவிதையில் இவ்வளவு ஜொலிக்க முடிந்ததோ? சிறுவயதில் ஆமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட கமலாதாஸ் மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸாகவும் பெரிதும் அவருடைய எழுத்துக்களால் அறியப்பட்டவர்.
senthamzmari2
தன்னுடைய 14ஆம் வயதில் மாதவ தாஸுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. எழுத ஆரம்பித்தபோது அவரது கணவர் அதற்கு பெரும் உதவியாக இருந்தார் என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பான ‘சம்மர் இன் கல்கத்தா’ (Summer in Calcutta) என்ற ஆங்கில நூல் ஆசியாவுக்கான கவிதைப் பரிசினை பெற்றதே அவருடைய எழுத்தின் வீர்யத்துக்கு உதாரணம். அந்தப் பரிசு வழங்கப்பட்டபோது அவருக்கு வயது 31 (1965ஆம் ஆண்டு).
1976ஆம் ஆண்டு வெளியான இவருடைய ‘என் கதை’ என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானது. இந்தப் புத்தகம் கற்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் நமது ஆச்சாரவாதிகளால் மிகையான பாலியலைப் பேசியதாகவும் கண்டனம் எழுப்பப்பட்டாலும் வெகுசன வாசகர்களால் வாசிக்கப்படும் குமுதம் வார இதழில் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றதே அந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.
ஆச்சாரவாதிகளால் அந்நூலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது அவரிடம் ‘என் கதையைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…’ என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, ‘அதிர்ந்து போனதுபோல பாசாங்கு செய்தனர்’ என்று துணிச்சலாகக் கூறி அனைவரையும் திணறடித்தார். அந்த பதில் அவரது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்த பதிலாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். இதிலிருந்து ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டினார்.
எழுதுவதைப் பற்றிப் பேசும்போது “என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்
senthamzmari1“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்.
  • ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த  அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.
  • 1999ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் தனிமையில் வெகுகாலம் இருந்தபோது அன்பைத் தேடி சந்தித்த நபரின் அன்பைத் தேடியே மதம் மாறியதாகக் கூறினார். அந்த நபர் தன்னளவுக்கு துணிச்சலற்றவராக இருந்தது தெரிந்தும் அந்த மதத்திலேயே கடைசிவரையிலும் நீடித்தார். அன்பில்லாத மதங்களின் தன்மைகள் சலித்துப்போய் ‘கிருஷ்ணராக இருக்கட்டும், இஸ்லாத் ஆக இருக்கட்டும் எல்லாக் கடவுளும் ஒன்றே’, ‘மனித அன்பு ஒன்றே சிறந்தது‘ என்றும் உணர்ந்து அறிவித்தார்.
senthamzmari3
1984ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களோடு இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆசியாவுக்கான கவிதைப் பரிசு, கென்ட் அவார்டு, அசான் உலகப் பரிசு, எழுத்தச்சன் புரஸ்கரம் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இவரது எழுத்துக்கள் பெற்றிருக்கிறது.
கமலாதாஸ் என்னும் அந்த எழுத்து ஒரு கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்லமல் ஒரு தேர்ந்த ஓவியருமாகயிருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்ணின் அடுத்தகட்ட அல்லது தன்னுணர்வை நோக்கிப் பயணிப்பதை தெள்ளன விளக்குவதாகவும் மிகுந்த அழகியலோடும் அறியப்பட்டது. அதேபோல் ஆண்சார்ந்த ஓவியங்களையும் தீட்டியுமுள்ளார்.
அதில் ஓர் ஓவியத்துடன் அவர்,
senthamzmari4
எழுதியுள்ள படைப்புக்கள்…
English
1964: The Sirens (Asian Poetry Prize winner)
1965: Summer in Calcutta (poetry; Kent’s Award winner)
1967: The Descendants (poetry)
1973: The Old Playhouse and Other Poems (poetry)
1976: My Story (autobiography)
1977: Alphabet of Lust (novel)
1985: The Anamalai Poems (poetry)
1992: Padmavati the Harlot and Other Stories (collection of short stories)
1996: Only the Soul Knows How to Sing (poetry)
2001: Yaa Allah (collection of poems)
Malayalam
1964: Pakshiyude Manam (short stories)
1966: Naricheerukal Parakkumbol (short stories)
1968: Thanuppu (short story, Sahitya Academi award)
1987: Balyakala Smaranakal (Childhood Memories)
1989: Varshangalkku Mumbu (Years Before)
1990: Palayan (novel)
1991: Neypayasam (short story)
1992: Dayarikkurippukal (novel)
1994: Neermathalam Pootha Kalam (novel,
Vayalar Award)
1996: Chekkerunna Pakshikal (short stories)
1998: Nashtapetta Neelambari (short stories)
2005: Chandana Marangal (Novel)
2005: Madhavikkuttiyude Unmakkadhakal (short stories)2x
2005: Vandikkalakal (novel)
தொடர்ந்து இயங்கி வந்த அவரது எழுத்தாளுமை கடந்த மே மாதம் 31ஆம் தேதி, எழுபத்தைந்தாவது வயதில் புனே மருத்துவமனையில் ஓய்ந்தது. இலக்கிய உலகத்துக்கே ஓர் இழக்கக் கூடாத இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கும்.
 
கமலாதாஸ் கவிதை…
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்

அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச் சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்
‘ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.’
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும்சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனதுநம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின்பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடிவளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச்சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக்கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாதகாத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் “யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள்நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று. 

நன்றி : ஊடறு 

Friday, October 22, 2010

அறிவித்தல்

நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

 புத்தகக் கண்காட்சியும் 

நூலறிமுகமும்

-வி.ரி. இளங்கோவன் -கலையரசன் -
 டென்மார்க் நாட்டில்  கவிஞர் முல்லையூரான் அரங்கில்   ஒரே மேடையில் ஐந்து நூல்களின் அறிமுக விழாவும், புத்தகக் கண்காட்சியும் சிறப்புற நடைபெற்றன.
Book_Launchடென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் டெனிஸ் / தமிழ் சமூக கலாசார இலக்கிய  இதழ்  ‘இனி” சஞ்சிகை - இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் ஒழுங்குசெய்யப்பட்ட இவ்விழா டென்மார்க் வயன்  நகரில் கடந்த ஞாயிறு (10 - 10 - 2010) சிறப்புற நடைபெற்றது.
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் (தமிழ், முஸ்லீம்) குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர்.
புத்தகக் கண்காட்சியை வி. ரி. இளங்கோவன் ஆரம்பித்துவைத்தார். இலங்கை எழுத்தாளர்கள் பலரின் நூல்களும், சஞ்சிகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இவ்விழாவில், ஜீவகுமாரன் எழுதிய ”யாவும் கற்பனை அல்ல”, கலையரசன் எழுதிய ”ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, த. துரைசிங்கம் எழுதிய ”தமிழ் இலக்கியக் களஞ்சியம்”, வேதா இலங்காதிலகம் எழுதிய ”உணர்வுப் பூக்கள்”, வி. ரி. இளங்கோவனின் சிறுகதைத் தொகுப்பான ”இளங்கோவன் கதைகள்” ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.
எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், கலையரசன், ‘எதுவரை” ஆசிரியர் பௌசர், கரவைதாசன், ‘சஞ்சீவி” முரளிதாஸ், கொக்குவில் கோபாலன், வேதா இலங்காதிலகம், இலங்காதிலகம், சரஸ்வதி கோபால், திருரவிச்சந்திரன், எம். சி. லோகநாதன், வேலணையூர் பொன்னண்ணா, லிங்கதாசன், உளவியல் நிபுணர் சிறிகதிர்காமநாதன் ஆகியோர் விழாவின் நிகழ்வுகளில் உரைநிகழ்த்தினர்.
நடிக விநோதன் த. யோகராசா தலைமையில் ”மெல்லத் தமிழ் இனி…” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது கவிஅரங்கில்  கவிஞர்கள் அம்பிகுலம், இணுவையூர்  சக்திதாசன்,வேலணையூர் பொன் அண்ணா, எம்.சி.லோகநாதன், கரன்,கவிதாயினி சுஜிகா ஆகியோர் பங்குகொண்டனர் . தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் வி. ரி. இளங்கோவன் ”சிறப்புக் கவிதை” வழங்கினார்.
குறிப்பிட்டபடி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய விழா இரவு 11 மணிவரை நடைபெற்றபோதிலும் மண்டபம் நிறைந்த மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Audienceடென்மார்க் நாட்டின் பல நகரங்களிலிருந்தும், பிரான்ஸ், நெதர்லாந்து, பிரித்தானியா நாடுகளிலிருந்தும் படைப்பாளிகள், இலக்கிய ரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள் எதுவும் இடம்பெறாது, ஓர் முன்மாதிரியான இலக்கிய நிகழ்வாகவும், பெண்கள் அதிகளவில் நிகழ்ச்சிகள் முடியம்வரை கலந்துகொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்று இலக்கிய அமைப்புகளின் ஆதரவுடன் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டிருப்பினும், நிகழ்வுகளை சிறப்புற ஒழுங்கமைத்து, சகல வசதிகளையும் ஏற்படுத்தி, விழாவினை மெச்சத்தக்கவகையில் நடாத்திமுடித்திட முன்னின்று அயராதுழைத்த  ஒருங்கிணைப்பாளர், ‘இனி” சஞ்சிகை - இணையத்தள வாசகர் வட்டம்  .அனைவரினதும் பாராட்டுக்களுக்கும் உரித்தானார்கள்   .
 BookReviewPanel
டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் - சில குறிப்புகள் : கலையரசன்
அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் “இனி” அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.
Kalaiyarasanகலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்.” என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.
டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். “நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு” போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.
Fouzerஇரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். “சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.” என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.
இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். “சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை.” என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், “ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன.” இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், “சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன.” என்றார்.
கலையரசன் தனது உரையில், “ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொள்ளலாம்.” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.
Dark_Europe
ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இன்னும் வரும் ......

Wednesday, October 20, 2010

வெளியிடப்படாமல் போன முன்னுரை

எல்லோர்க்கும் பெய்யும் மழை

-சேரன்-
’தாமதமாக வந்தவன்/நிலையருகில் நிற்கின்றேன்’-என எழுதிச் செல்கிறார் ரவிக்குமார். இந்தத் தொகுதியிலுள்ள இருபத்தைந்தாவது கவிதை அது. எனனுடைய இருபத்தைந்தாவது வயதில், ‘காற்றில் கரைந்து சென்று விட்ட என்னுடைய கால் நூற்றாண்டுக் கவிதை வாழ்வு பற்றி நெடுங்கவிதைச் சுய புராணம் ஒன்றை முன்பொருதரம் எழுத ஆரம்பித்தாலும், பின்னர், வெட்கம் காரணமாக அதனை நிறுத்திவிட்டேன். கவிதையைப் பொறுத்தவரையில் முன்பு வந்தவர், தாமதமாக வந்தவர் என்பதிலெல்லாம் பெரிய திணை மயக்கங்கள் இருக்கத் தேவையில்லை. அகத்தில் தொடர்ந்தும் எரிகிற கவிதை வேட்கை, சீரிய முறையில் தன்னைத் தொடர்ச்சியாகக் கவிதைகளாக வெளியே படைத்தளித்து வருகிறதா என்பதே நமது கவனிப்புக்கு உரிய கேள்வியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
நீண்டகாலமாகத் தீவிரமான இலக்கிய வாசகர்களாகவும் உபாசகர்களாகவும் இருந்து வந்த பல நண்பர்கள் கவிஞர்களாகவும் நாவலாசிரியர்களாகவும் திடீரென மாறிவிடுகிற மந்திர வனப்பை நான் முன்னரும் சந்தித்திருக்கிறேன், தாமதமாக வந்தாலும் சரி, முன்னவராக அமைந்தவரானாலும் சரி. ஏராளமான நல்ல கவிதைகளைத் தனது ரகசியப் பெட்டகங்களில் பூட்டி வைத்திருக்கின்ற பல நண்பர்களையும் நான் அறிவேன். கவிஞர்களைச் சூழ்ந்திருக்கும் மர்மங்களைவிட இந்த ரகசியப் பெட்டகங்களில் உறைந்திருக்கும் மர்மங்கள் அளப்பரிய ஆர்வத்தைத் தூண்டுபவை.
கடந்த ஆண்டு திடீர் திடீரென, இனிய தாக்குதல்கள் போலத் தனது கவிதைகளை ரவிக்குமார் அனுப்பி வைத்தபோது, இந்த ரகசியப் பெட்டகங்களின் எண்ணம் மறுபடியும் எழுந்தது. கடந்த ஆண்டு நமக்குப் பெருவலி எழுப்பிய ஆண்டு. ஊழியும் ஊழிக்குப் பின்பும் என நமது வாழ்வையும் கனவுகளையும் நிலத்தையும் ஈவிரக்கமற்றுச் சிதைத்த ஆண்டு. இந்தச் சிதைவிற்கு இந்தியாவும் அயல்நாடுகளும் அனைத்துலக சமூகமும் மட்டும்தான் பொறுப்பா அல்லது நாமும் நமது அரசியல் குறும்பார்வைகளும் காரணமா என்பதெல்லாம் காலங் கடந்த விவாதம். என்றாலும், அந்த நாட்களின் அவலம் இன்றைக்கும் மூளாத் தீ போல உள்ளே கனல்கிறது. முந்நூறு, நானூறு என நூற்றுக்கணக்கிலும் பின்னர் ஆயிரக்கணக்கிலும் மக்கள் கொல்லப்படுவது ஒவ்வொரு நாளும் மாறி மாறிக் கணினித் திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பதிவு செய்யப்பட்ட பித்துப் பிடித்த மனநிலையில் தெருத்தெருவாக எதிர்ப்புப் போராட்டங்களில் அலைக்கழிந்தபோது அவ்வப்போது மனதிற்கு ஒத்தடமாக அமைந்தவை கவிதைகள்தான்.
நண்பர் ரவிக்குமார் இடையிடையே தொலை பேசுவார். எனினும் அவருடைய கவிதைகள் அந்த நேரம் வாசிக்கத் கிடைத்தமை அற்புதமான மருந்தாக இருந்தன. நெய்தல் நிலத்துக்குரிய இரங்கலை அவருடைய கவிதைகள் வேறொரு உணர்வுத்தளத்தில் எழுப்பினாலும் நமது ஒட்டுமொத்தமான பேரிழப்புகளுக்கு எதிரொலியான இரங்கலையும் அவருடைய குரலுக்கூடாக நான் கேட்கிறேன். தாங்க முடியாத பெருவலியிலிருந்து என்னை விடுவித்து விடு’ என்று நான் திருப்பித் திருப்பி அரற்றிக் கொண்டிருந்தபோது, ‘என்னுடைய உயிரையாவது எடுத்துக்கொள், என்னுடைய காலத்தை எடுத்துக் கொள் என்று உணர்வுத் தோழமையுடன் ஒலிக்கிறது ரவிக்குமாரின் கவிதைக்குரல். கூட்டுப் பெருந்துயரின் நடுவிலும் தனிமையின் ஆவேசம் கிளர்த்தக்கூடிய நுண்ணுணர்வுகளை ரவிக்குமாரின் கவிதைகளில் இனம் காண முடிவது நிறைவு தருகிறது.

காதலா, காதலில் ஆழ்வதா அல்லது காதலை வாழ்வதா என்கிற கேள்விகளுக்கு அப்பால் சொற்களால் உருப்பெறாத கேவல்கள் வலியின் துணையுடன் கவிதைகளாக மின்னித் தெறிப்பதை ரவிக்குமார் காட்டுகிறார். எல்லாக் கவிகளும் எல்லா நேரமும் ஒரே பாடுபொருளைப் பற்றி எழுதுவதானால் அது காதலாகத்தான் இருக்க முடியும். அதற்கான காரணம் காதலின் நொய்ம்மையா அல்லது கவிகளின் நொய்ம்மையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அத்தனை கவிகளாலும் பாடல் பெற்ற பொருளாக இருந்தாலும் அதன் புதுமையும் உயிர்ப்பும் பெருகும் சிறகடிப்பும் காதலில் தங்கியிருப்பதல்ல, ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தில் தங்கியிருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
ரவிக்குமாரின் கவிதைகளில் பிறக்கின்ற நிழல் பறவைகளில் பறந்து செல்லும் குழந்தைகளும், தனிமையின் வெஞ்சினத்தில் நாம் எளிமையாகக் கடந்து விட முடிகிற மொழியின் எல்லைகளும், தம் குரலால் காற்றையும் மழையையும் தீண்டும் மரங்களும் துடிக்கும் நாவில் கிள்ளி வைக்கப்பட்ட இதயம் எழுதிய கவிதைகளாக மலர்கின்றன. தகிக்கும் வெய்யிலில் கானல் தொடரப் போய்க் கொண்டிருப்பது கவிதையா, கவிஞனா அல்லது நமது காலமா என்ற மந்திரக் கேள்வி புகைமூட்டத்துள் கலங்கலாகத் தெரிகிறது. அந்தக் கேள்விக்கு மறுமொழி நமக்கு ஒருபோதுமே கிடைக்கப் போவதில்லை.
( மழை மரம் தொகுப்புக்கு எழுதப்பட்டு வெளியிடப்படாமல் போன முன்னுரை)

       மழைமரம்
-       ரவிக்குமார் கவிதைகள்
-       க்ரியா வெளியீடு
-       விலை ரூ 65/-

Friday, October 15, 2010

நூல் அறிமுகம் "அகதிவாழ்க்கை"

"அகதி வாழ்க்கை" எனும் நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
 

இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அதற்கான அரசியல்-சமூக காரணி என்ன? அகதிகள் எவ்வாறான வழிகளில் ஐரோப்பிய நாடுகளை வந்தடைகின்றனர்? அவர்கள் அடைக்கலம் கோரும் நாடுகள் எவை? அடைக்கலம் கோரும் வரையிலான பயணப்பாதை என்ன? வழியில் எத்தகைய இன்னல்களை கடந்து வருகிறார்கள்? ஐரோப்பிய நாடுகளில் உள்ள அகதிகளுக்கான சட்டங்கள், அகதிகளை விசாரிக்கும் முறை எப்படி உள்ளது? அவர்களுக்கான வதிவிடப் பத்திரங்கள் எவை? தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? புலம் பெயர்ந்த நாடுகளில் வதிவிட அனுமதி கிடைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது? ஐரோப்பிய சமூகத்தில் அவர்களுக்கான இடம் என்ன? புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள்?

இது போன்ற பல அரிய தகவல்கள் அடங்கிய நூல். விலை: இந்திய ரூபாய் 100 ,- நூலை இணையத்தில் (online ) வாங்கலாம்.

https://www.nhm.in/shop/978-81-8493-477-9.html